புஷ்பா சொன்னதைக் கேட்டதும், கணவன் தேவராஜுக்கு ஆச்சர்யம்.
“ஆமாங்க! ஒரு மாதம் ஆல் இண்டியா டூர் போறோம். முன்னமே டூர் ஏஜெண்ட்கிட்டே நம்ம ரெண்டு பேருக்காக பணம் கட்டியிருக்கேன்.’
“புஷ்பா! என் தம்பி கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகலை! அதுக்குள் நாம டூர் போறதா?’
“அட ஆமாங்க! எல்லாம் எடுத்து வச்சிட்டேன். நாளை மறுநாள் ரெண்டு பேரும் புறப்படறோம். சரியா?’
தேவராஜ் ஒன்றும் புரியாமல் மையமாகத் தலையாட்டினான்.
ரயிலுக்காக தேவராஜும் புஷ்பாவும் காத்திருந்தார்கள். மனதில் இருந்த சந்தேகத்தை தேவராஜ் மனைவியிடம் கேட்டான். “புஷ்பா! இப்ப நாம டூர் போய்த்தான் ஆகணுமா?’
வெட்கத்துடன் சிரித்தாள் புஷ்பா. “நம்ம வீட்டிலே இருக்கிறது இரண்டே அறைதான்! ஒரு அறையிலே வயதான உங்க அம்மா, அப்பா இருக்காங்க. இரண்டாவதுல
நாம இருக்கோம். புதுசா கல்யாணமான உங்க தம்பியும், தம்பி பொண்டாட்டியும் எங்கே இருப்பாங்க?
இப்படி நாம டூர் வந்துட்டா, நம்ம அறையிலே அவங்க இருந்துக்குவாங்க. புதுசா கல்யாணமானவங்க…புரியுதுங்களா?’
“நல்லாவே புரியுது! நீ இப்படி செஞ்சதுக்குப் பதிலா அவங்களை ஹனிமூனுக்கு ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ அனுப்பி வச்சிருந்தா இன்னும் பெட்டரா இருந்திருக்கும். இல்லே?’
“அட! இது எனக்குத் தோணாமப் போச்சே!’ என்று வருத்தப்பட்டாள் புஷ்பா.
– ஜெ.எம். (திசெம்பர் 2013)