மனிதம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 5,929 
 

தாயை நீட்டிப் படுக்க வைத்து எல்லா வேலைகளையும் முடித்து நிமிர்ந்ததுமே ஊர் பெரிய மனுசன் கோபாலை அணுகி……

”தம்பி ! யார் யாருக்குச் சேதி சொல்லனும் ?” கேட்டார்.

”சொல்றேன்.!” சொன்ன கோபால் தன் கைபேசியை எடுத்து…. தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி வைத்தான்.

அருகில் இருந்து கவனித்த பெரியவர், ”தம்பி ! கடைசியாய் யாரோ ராகவன்ங்கிற ஒருத்தருக்குச் சேதி சொன்னீங்களே யார் அவர் ? ” கேட்டார்.

”அம்மாவோட முன்னாள் கணவர்!”

”தம்பீ…..ஈ!” துணுக்குற்றார்.

”அவர் வர்றாரோ மாட்டாரோ…நாலு வருசம் ஒன்னா குடும்பம் நடத்தி விவாகரத்தாகிப் பிரிஞ்சவங்க. சொல்லனும்ன்னு தோணிச்சி சொன்னேன்” சொன்னான்.

‘என்னே மனித நேயம் !’ அவருக்குள் வியப்பு வந்தது.

அதே சமயம் அவன் சேதி சொன்ன வீட்டில்…

”யார்கிட்;ட பேசினீங்க ? ” கணவரைக் கேட்டாள் காயத்ரி.

”தெ…தெரிஞ்ச பையன்…”

”ஏன் திடீர் முக வாட்டம். கெட்ட சேதியா ? ”

.”அ…ஆமாம்……..என் முன்னாள் மனைவி செத்துட்டாங்களாம்…..”

”போகனுமா ? ”

”குழப்பமா இருக்கு.”

”கிளம்புங்க போவோம்.!”

”’காயத்ரி!!” திடுக்கிட்டார்.

”அடுத்த சென்மம்ன்னு இருந்தா யார் எப்படியோ ? இந்த சென்மத்துல அந்தப் பையனுக்கு இவ்வளவு புத்திசாலித்தனம், மனிதாபிமானம் இருக்கும் போது…..நாமும் அப்படி இருக்கனும். என் மூத்தாளையும் அவ பெத்தப் பையனையும் பார்க்கனும.; கிளம்புங்க.” அவசரப்படுத்தி நகர்ந்தாள்.

ராகவன் சுறுசுறுப்பானார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *