பொர்மாநெக்கும் தமிழ்ப் பெண்டிரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,256 
 

ஒரு வெள்ளைக்காரனுடன் ஒரே வீட்டில் குடியிருந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முந்தைய கதையைச் சொல்கிறேன்.

தஞ்சாவூர் மேல வீதியில் பாலோபா சந்தில் குடியிருந்தோம். தஞ்சாவூர் சந்துகள் பிரசித்தி பெற்றவை. புராதனத் தன்மைகொண்டவை. விசித்திரமான மராட்டியப் பெயர்களுடன் கூடிய தஞ்சாவூர் சந்துகளில், தலைமுறை தலைமுறையாக மனிதர்களும் மாடுகளும் வசித்து வருகிறார்கள். அழகான பெண்களும், அசிங்கமான சாக்கடைகளும், தண்ணென்ற குளிர்ச்சியும்கொண்ட எந்தச் சந்தில் நுழைந்தாலும் ஒரே மாதிரி தோற்றத்துடன் திகைப்பை உண்டு பண்ணும்.

வேடிக்கையாக ஒரு கதை சொல்வது உண்டு; சந்துக்கு வெளியே தெருவில் ஒரு மாமி கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அந்த வழியே ஓர் ஆசாமி கையில் ஒரு துண்டுப் பேப்பருடன் முகவரி விசாரித்து இருக்கிறார். மாமி கோலம் போடுவதை நிறுத்திவிட்டு அவருக்கு வழி சொல்லி அனுப்பியிருக்கிறார். அடுத்த வருடம். அதே தெரு. அதே சந்து. அதே மாமி கோலம் போடுகிறார். ஓர் ஆள் முகவரி கேட்டு துண்டுச் சீட்டை நீட்டினாராம். மாமி அமைதியாகக் கேட்டாராம்: ‘இன்னுமா அந்தச் சந்தைக் கண்டுபிடிக்க முடியல?’

அதற்காக, தஞ்சாவூர்ச் சந்துகளை இளக்காரமாக நினைத்துவிடாதீர்கள். பெரிய எழுத்தாளர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், கலைஞர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள். அதுசரி. வெள்ளைக்காரன் விஷயம் என்ன என்றுதானே கேட்கி றீர்கள்? கொஞ்சம் இருங்கள். ஒரு வாய் வெற்றிலை போட்டுக்கொண்டு வந்துவிடுகிறேன். வெற்றிலை போடாமல் கதை சொல்வதாவது?

அப்போது பல்கலைக்கழகத்தில் நான் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தேன். வெளிநாடுகளில் இருந்து ஆய்வின் நிமித்தமும், தமிழ் படிக்கவும், வெள்ளைக்காரர்கள் நிறையப் பேர் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுக்கும் பொறுப்பைத் துணைவேந்தர் (வாட் எ நேம்!) என்னிடம் ஒப்படைத்துவிடுவார்.

ஒருநாள். நல்ல வெயில். செக்கோஸ்லோவேகியாவில் இருந்து ஓர் இளைஞன் வந்து சேர்ந்தான். பால் வடியும் முகம். அப்படியே தக்காளிபோல் கன்றிப்போய் இருந்தது. துணைவேந்தரிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை.

“அவன் பெயர் யரசலாவ் பொர்மானெக். அவனுக்கு விடுதி வாழ்க்கை வேண்டாமாம். ஏதாவது ஒரு தமிழ்க் குடும்பத்துடன் வாடகை விருந்தாளியாகத் தங்கிக்கொள்ள விரும்புகிறான். பேசாமல் ஒரு பெரிய வீடாகப் பார்த்து, அவனை உன் வீட்டிலேயே தங்கவைத்துக்கொள்ளேன். ஒரு வருஷம்தானே…”

நான் தலையாட்டினேன். என் மனைவிக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. அய்யங் கடைத் தெரு அருகிலேயே ஒரு தனி வீடு கிடைத்தது. 500 ரூபாய் வாடகை. திண்ணை. திண்ணையை ஒட்டி ஒரு தனி அறை. பெரிய கூடம். இரண்டு படுக்கை அறைகள். ஸ்டோர் ரூம். பூஜை அறை. பின்புறம் கிணறு. திண்ணையை ஒட்டிய தனி அறையை பொர்மானெக் குக்கு ஒதுக்கிவிட்டோம்.

“ஒண்டிக்கட்டைதானே. அந்த ரூம் போதுங்க அவனுக்கு. அவன் 300 ரூபா கொடுக்கட்டும். நாம் 200 கொடுப்போம்” என்றாள் என் மனைவி.

“இது அநியாயம்” என்றேன். ஆனால், இதற்கு பொர்மானெக் மறு பேச்சு இன்றி ஒப்புக்கொண்டான். மீந்துபோன குழம்பு, சட்னி வகையறாக்கள், ஆறிய சாதம், கூட்டு எல்லாம் எடுத்துவைத்து பொர்மானெக் குக்குப் பரிமாறினாள்.

“எப்படி இருக்கு எங்கள் வீட்டுச் சமையல்?” என்று கேட்டாள் என் மனைவி. பொர்மானெக் படுகூர்மையானவன். என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி, “நான் ஒங்க வீட்டு தோத்தோ!” என்றானே பார்க்கலாம். என் மனைவி முகம் போன போக்கு!

பொர்மானெக்கின் அறை புத்தகங்களாலும் இசை ஆல்பங்களாலும் நிரம்பி வழிந்தது. அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவன் அறைக்குள் போய்விடுவான். அகநானூறு, புறநானூறு போன்ற பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து பெண் களைப்பற்றிய குறிப்புகள் சேகரிப்பான்.

“காக்கை பாடினியார் ஆணா, பெண்ணா?” என்று கேட்டான் ஒருநாள். காக்கையாவது… பாடுவ தாவது? எனக்கு என்ன தெரியும்?

வாசல் பக்கம் ஜன்னலைச் சாத்தியே வைத்திருந்தான். “குழந்தைகள் மட்டுமல்லாமல் சில சமயம் பெரியவர்கள்கூட அதன் வழியே எட்டிப் பார்க்கிறார்கள். எனக்குச் சங்கோஜமாக இருக்கிறது” என்றான். பிறருடைய அந்தரங்கத்தைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பது எங்களுடைய பிறவிக் குணம் என்று அவனிடம் எப்படிச் சொல்வது?

பொர்மானெக் வந்துவிட்டால், திண்ணைகளில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள் பேச்சை நிறுத்தி விட்டு, அவனையே பார்த்துக் குசுகுசுவென்றுபேசிக் கொள்வார்கள். பொர்மானெக் யாரையும் ஏறிட்டுக்கூடப் பார்க்க மாட்டான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்புடன் தன் அறைக்குள் புகுந்து கொள்வான். அங்கே அவனுக்காக பழந்தமிழ்ப் பெண்டிர் கூட்டம் காத்திருக்கும்.

“பழங்காலத்துத் தமிழ்ப் பெண் ஒருத்தி முறத்தால் புலியை விரட்டினாளாமே… முறம் எப்படி இருக்கும்? அது பயங்கரமான ஆயுதமா?” என்று கேட்டான். முறத்தைக் கொண்டுவந்து காட்டினேன். ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டான்.

“அடடே! இதைவைத்துப் புலியை எப்படி விரட்டி இருப்பாள்?”

“விரட்டியது முறம் அல்ல; அவள் வீரம்!” என்றேன்.

என் மனைவிக்குத்தான் கோபம். “ஐயோ! அது அழுக்கு முறம் ஆச்சே. அதைக் கொண்டுபோய் அவனிடம் காட்டினீர்களாக்கும். என்னைப்பற்றி என்ன நினைப்பான்?”

பீத்தோவனின் இசை சிம்பொனியை பொர்மானெக் எனக்கு, அறிமுகப்படுத்திவைத்தான். தியாகய்யரின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது ஏற்படும் அதே பரவசம் எனக்கு பீத்தோவனிடமும் கிடைத்தது. பொர்மானெக்கின் அறை எனக்குப் பொழுதுபோக்கு மட்டுமின்றி, மனைவியிடம் இருந்து தப்பிக்கும் உபாயமாகவும் மாறியது.

“எப்பப் பார்த்தாலும் என்ன அவன் ரூமிலேயே பழியாக் கிடக்கறீங்க? மியூஸிக் வால்யூமைக் குறைச்சுவெக்கச் சொல்லுங்க. ஒரே இரைச்சல்!”

இசை என்னை வேறு ஓர் உலகுக்கு இழுத்துச் சென்றது. அந்த உலகத்தில் ரேஷன் கடை இல்லை. அலுவலகம் இல்லை. சின்னக் கவலைகள் இல்லை. மனைவி இல்லை. ஒரே சமயத்தில் ஆயிரம் வயலின்கள் உச்சத்தைத் தொட்டன. பொர்மானெக் ஆட ஆரம்பித்து விட்டான். நானும் ஆட ஆரம்பித்திருந்தேன்.

திடீரென்று கதவை யாரோ இடிக்கும் சத்தம். கோபத்துடன் திறந்தேன். என் மனைவியின் கண்களில் பொறி பறந்தது.

“மணி என்ன தெரியுமா?” – அவள்.

“தெரியவேண்டியது இல்லை!” – நான்.

“உங்களுக்கு வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தூங்க வேண்டாமா? ராத்திரி ஒரு மணிக்கு இப்படி அவனோடு சேர்ந்துகொண்டு கூத்தடிக்கிறீர்களே. இது நியாயமா?”

சாதுவான நாய்க்குட்டி மாதிரி போய்ப் படுத்துக்கொண்டேன். பூட்டப்பட்ட அறைக்குள் இருந்து பூம் பூம் என்று இசையின் நீர்வீழ்ச்சி இடுக்கு வழியே கசிந்து வந்து என்னை நனைத்தது. என் மனைவிக்கு அவன் மீது எரிச்சல் அதிகமாகிக்கொண்டே வந்தது.

பொர்மானெக்குக்குப் புரிந்தது. ஆனால், ஏதோ பரீட்சைக்குப் படிப்பவன்போல் தமிழ்ப் புத்தகங்களை விழுந்து விழுந்து வாசித்துக்கொண்டு இருந்தான்.

“இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்து தமிழ் படிக் கறதுல உனக்கு என்ன பிரயோஜனம்?” என ஒருநாள் கேட்டேன்.

“உங்கள் நாட்டில்தான் படிப்புக்கும் வேலைக்கும் முடிச்சுப் போட்டுவைத்திருக்கிறீர்கள். எங்கள் ஊரில் மனசுக்குப் பிடிக்கிறதைப் படிப்போம். ஏதோ ஒரு வேலை. கொஞ்சம் பணம். கொஞ்சம் புத்தகம். நிறையப் பயணம். பணம் சேர்ந்ததும் மறுபடி ஊர் சுற்றக் கிளம்பிடுவோம்!”

ஒருநாள் சாயங்காலம். எங்கள் வீட்டில் எரிமலை வெடித்தது. “உங்க ஃப்ரெண்டால எனக்கு இன்னிக்கு மானம் போச்சு!” என்று குதித்தாள் என் மனைவி.

“என்னாச்சு சொல்லு?”

“பொர்மானெக் மத்தியானம் வீட்டுக்கு வரும்போது கூடவே ஒரு காதல் ஜோடியைக் கூட்டிக்கிட்டு வந்துட் டான். ரெண்டும் ஒண்ணோடு ஒண்ணா ஒட்டிக்கிட்டே வருதுங்க. அதுங்க ரெண்டும் நம்ம வீட்டுக்கு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு வாயைக் கவ்விட்டு அப்டியே… சீச்சீ… எவ்வளவு நேரம். சரிதான் விலகிடுச் சுங்கன்னு பார்த்தா, மறுபடியும் கட்டிப்பிடிச்சு… கண்றாவி. தெருவே வேடிக்கை பார்க்குது. வாயைப் பொத்திட்டுச் சிரிக்குதுங்க!”

“இலவசமா ஒரு சினிமா!” – நான் பாடினேன்.

“ஏங்க உங்களுக்கு வெட்கம், மானமே கிடையாதா?”

“பப்ளிக்ல சண்டை போடலாம். முத்தம் கொடுக்கக் கூடாதா? நாம வெளியில போகும்போது சில சமயம் நீ ரொம்ப அழகா இருப்பே. மஞ்சள் வெயில் காயும். எனக்கு உன்னை அப்படியே கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும்னு தோணும்!”

“சீ! வெட்கம் கெட்ட மனுஷன்.”

நினைத்தபோது எல்லாம் பறவைகள் முத்தம் கொடுத் துக்கொள்வது இல்லையா? மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஹிப்பக்கிரஸி? முத்தத்தைப் பாலியல் சமா சாரத்தோடு முடிச்சுப் போடுவது முட்டாள்தனம் அல்லவோ? ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கும் ஆணும் பெண்ணும் தங்களைக் கௌரவித்துக்கொள்ளும் உயர்ந்த செயல் அல்லவா அது?

“என்ன யோசனை?” என்று கேட்டான் பொர்மானெக். நடந்ததைச் சொன்னேன்.

“முத்தம் என்பது ஒரு மொழி. அதை எங்கு பேசினால் என்ன?” என்றான் சுருக்கமாக.

“கோபால்! உடுக்கை எங்கே கிடைக்கும்?” – என்று கேட்டான் ஒருநாள் பொர்மானெக். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

“என்னது… உடுக்கையா?”

“அதான்… உங்க சிவபெருமான் கையில் வைத்திருக்கிறாரே. அது அந்தக் கால இசைக் கருவியாம். நான் பார்க்க வேண்டும் அதை” அவன் கண்களில் ஆர்வம் பளபளத்தது.

“ரொம்பப் பழங்காலத்து இசைக் கருவி ஆச்சே அது. இப்ப கிடைப்பது கஷ்டம்” என்று மழுப்பி தட்டிக் கழித்துவிட்டேன்.

ஒரு வாரம் கழிந்திருக்கும். கூடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.

“கோபால்!” உற்சாகமாகக் கூவியபடியே உள்ளே நுழைந்தான் பொர்மானெக். நேராக நான் சாப்பிடும் இடத்துக்கே வந்துவிட்டான். என் மனைவி முகம் சுழித்தாள்.

“கோபால், இதோ பார்!” தன் கைப்பையில் இருந்து எதையோ வெளியே எடுத்தான்.

உடுக்கை. நிஜமான உடுக்கை!

“சாப்பிட்டுட்டு என் அறைக்கு வா.”

“கர்மம்! யாரோ பேய் விரட்டும் பூசாரிகிட்டேர்ந்து வாங்கி வந்திருப்பான்போல!” என்றாள் என் மனைவி.

நான் பொர்மானெக் அறைக்குள் நுழைந்தேன். அங்கே செக்கச் செவேல் என்று வெற்று உடம்போடு நின்றுகொண்டு இருந்தான் பொர்மானெக். இடுப்பில் புலித் தோல் மாதிரி வண்ணம் தீட்டிய துண்டு. காலில் சலங்கை. கையில் உடுக்கை.

ரெக்கார்ட் பிளேயரில் இருந்து பீத்தோவனின் அற்புதமான இசை பீறிடுகிறது.

“கோபால்! கவனி. எங்கள் இசையோடு உடுக்கை ஓசையும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சோதனை செய்யப் போகிறேன்.”

உடுக்கை ஒலித்தது. வயலின்கள் வீறிட்டன. கால் சலங்கை ஒலிக்க… பொர்மானெக் ஆடலானான். மெள்ள மெள்ள இசையின் ஸ்தாயி உயர உயர… அவன் ஆட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே போயிற்று. அவனுடைய தலைமுடி சுழன்றது. சிவனின் ஊழித் தாண்டவம்!

“தென்னாடுடைய சிவனே போற்றி!

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!” கை கூப்பி வணங்கினேன்.

கதவு இடிபடும் ஓசை. திறந்தேன். பத்ரகாளியாக என் மனைவி. அவளுக்குப் பின்னால் எதிர் வீட்டு, பக்கத்து வீட்டு மனிதர்கள்.

“குழந்தைகள் பரீட்சைக்குப் படிக்கிறாங்க. இங்கே என்ன கூத்தடிக்கிறீங்க. ஒண்ணு இந்த வீட்டுல அவன் இருக்கணும். இல்லேன்னா நான் இருக்கணும். சார், நீங்கள்லாம் போங்க… நான் கவனிச்சுக்கிறேன்!”

அவர்கள் வெளியேறினார்கள். என்ன நடந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது. என்ன உலகமடா இது. தினசரி ராத்திரி குடித்துவிட்டு வந்து பெண்டாட்டியை உதை உதை என்று உதைக்கிறான் ஒருத்தன். இந்தத் தெருவில் ஒரு பயல் அவனைக் கேட்டது கிடையாது. நாங்கள் இசை கேட்பது இடைஞ்சலாகப் போய்விட்டதா?

பொர்மானெக் பிடிவாதம் பிடித்தான். விடுதி வேண்டாமாம். நல்ல வேளை. அரண்மனையின் ஒரு பகுதியில் சிதிலம் அடைந்த பழைய கட்டடத்தில் ஓர் அறை இருந்தது. அது மன்னர் பரம்பரையின் நிர்வாகத்தில் இருந்தது. கேட்டதும் கொடுத்துவிட்டார்கள். பகலில்கூட இருட்டாக இருந்த அந்த அறைக்குக் குடிபெயர்ந்தான் பொர்மானெக். உடைந்த பல்லக்குகள். நூலாம்படை தொங்கும் பழங் கால ஓவியங்கள் மாட்டிய சுவர்கள். அங்கே நிலவிய அமைதியில் காலம் நகராமல் நின்றுபோயிருந்தது.

“ஆஹா… பிரமாதம்!” என்றான் பொர்மானெக்.

அங்கே இருந்த வாட்ச்மேன் என் காதில் கிசுகிசுத்தான். “சார்! செத்துப்போன ராஜா, ராணிகளோட ஆவிங்க எல்லாம் இங்கேதான் அலையுது!” நான் பொர்மானெக்கைப் பார்க்கப் போவதைக் குறைத்துக் கொண்டேன்.

பொர்மானெக்கைப் பார்த்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நானும் என் மனைவியும் ஷாப்பிங் போய்விட்டு கீழ ராஜ வீதியில் இருந்த டாக்டர் நரேந்திரன் கிளினிக் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தோம்.

போகிற வழியில் தஞ்சை பிரகாஷ் கடையில் ஒரே சிரிப்பு. கூத்து. சுந்தர்ஜி, முத்து, விச்சு, செல்லத்துரை, கவிஜீவன்… நடுநாயகமாக பொர்மானெக்.

எங்களைப் பார்த்து எழுந்து வந்தான்.

“எப்படி இருக்கீங்க?” – என் மனைவியைப் பார்த்து மழலைக் குரலில் கேட்டான்.

என் மனைவி அவனைப் பார்த்துச் சிநேகிதமாகச் சிரித்தாள்.

“நீங்க எப்படி இருக்கீங்க பொர்மானெக்? ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்க!” என்றாள்.

அவள் கண்கள் கலங்கிவிட்டன.

பொர்மானெக்கின் விழிகள் வியப்பால் விரிந்தன. துரத்தாத குறையாக பொர்மானெக்கை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டு என்ன உருக்கம்!

என்னை நெருங்கிக் காது அருகே கிசுகிசுத்தான்.

“இந்திய மனைவிகள்பற்றிய ஆய்வுக்கு எனக்கு விஷயம் கிடைத்துவிட்டது!”

– ஜூன் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *