பூங்காவை ஒட்டியிருந்த வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 2,015 
 

‘காந்தி பூங்கா’, அவன் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருந்தது. ராஜாஜி தெரு, பட்டேல் தெரு, நேதாஜி தெரு, இந்த மூன்றையும் கடந்தால் அந்தப் பூங்காவை அடைந்துவிடலாம். இதில் பட்டேல் தெரு மட்டும் மிக சிறியது. அதில், வலது புறம் மூன்று வீடுகள், இடது புறம் மூன்று வீடுகள் என்று மொத்தம் ஆறு வீடுகள் தான் இருந்தன. இப்போது ஒரு வீட்டை இடித்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டிக் கொண்டிருப்பதால் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஆனாலும் அதை தெரு என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி இருந்தாலும் அதை குறுக்குத் தெரு என்றோ, ஒரு தெருவின் பகுதி என்றோ சொல்வதுதானே சரியாக இருக்கும்! பெரிய தலைவர்களின் பெயரை எப்படி குறுக்குத் தெருவிற்கு வைப்பது என்று பெயர் வைத்தவர்கள் யோசித்திருக்கக் கூடும். அதனால் அதை ‘பட்டேல் தெரு’ என்றே விட்டுவிட்டனர் போல. ஆனால், ஏன் எங்கோ பிறந்த ஒரு தலைவரின் பெயரை இங்கே இந்த சிறு தெருவிற்கு வைத்திருக்கிறார்கள்? தமிழகத்திற்கு வெளியே தான் பயணப்பட்ட ஊரில் தமிழ் தலைவர்களின் பெயரில் எந்த தெருவும் இருந்ததாக கண்டதில்லையே! இப்படியெல்லாம் அந்த தெருவை கடக்கும் ஒவ்வொரு முறையும் அவன் எண்ணுவான். இதை வெளியே சொன்னால் தன்னை பிரிவினைவாதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியே எதுவும் சொல்லமாட்டான்.

ஆனாலும் தனக்கு ஏன் இத்தகைய தேவையில்லாத கேள்விகளும் சிந்தனைகளும் அடிக்கடி வருகின்றன என்று யோசித்துக் கொண்டே இருப்பான். அந்த கேள்விக்கு மட்டும் அவனுக்கு பதில் கிடைத்தபாடில்லை. இதை அவனால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் பயம் வருகிறது. பயம் கொள்ளும் அளவிற்கு பெரிய பிரச்சனை இல்லை என்று யாரவது எண்ணக் கூடும். அவர்கள் அவன் பிரச்சனையின் வீரியத்தைப் புரிந்துகொண்டால் அப்படி எண்ணமாட்டார்கள். அவனால் தன் மனதை எவ்வளவு முயன்றும் ஒருநிலைப் படுத்த முடியவில்லை. ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மனதளவில் நிலைத்து இருக்க முடியவில்லை. மனதில் தான் எவ்வளவு தேவையில்லாத சிந்தனைகள்! கவனச் சிதறல்கள்!

ரயிலில் செல்லும்போது, பல்லாவரம் என்ற பலகையை பார்த்தால் கூட, பல்லாவரம், பல்லவபுரம், பல்லவர்கள், நரசிம்மவர்ம பல்லவன், என்று தொடர்ச்சியாக சிந்தனை ரயிலை விட வேகமாக எங்கோ பயணிக்கிறது. நிறைய படிப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று நண்பன் ஒருவன் சொல்ல, புத்தகங்கள் படிப்பதையே நிறுத்திக் கொண்டான். ஆனால் சிந்தனை முன்னைவிட அடர்த்தியாக மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதை அப்படியே அதன் போக்கில் விட்டுவிடலாம். ஆனால் உடம்புதான் சோர்ந்து போகிறது.

அம்மா, ‘மீன் மாத்திரை’ சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பாள். சாப்பிட்டுப் பார்த்தும் ஒன்றும் சரியாகவில்லை.

“சொங்கிப் பயலே, உன் வயசுல நான் எப்டி இருந்தேன் தெரியுமா!” அப்பா முரட்டுத்தனமாக தான் பேசுவார். அவர் போலீசில் இருந்தவர்.

“முட்டைய உடச்சி குடி” என்பார்.

இது உடல் சார்ந்த பிரச்சனை அல்ல என்பதையும், அதிக சிந்தனை உடலை வருத்தி எடுத்துவிடும் என்பதையும் அவன் கூகிளில் படித்திருந்தான். அதற்காகவே மனதை சகஜமாக வைத்திருக்கப் பிரயத்தனப் பட்டான். ஒழுங்காக நடைப்பயிற்சி செய்வதுதான் இதற்கெல்லாம் தீர்வு என்று மருத்துவர் சொன்னார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இடது கை வலிப்பதாக மருத்தவரிடம் சொன்ன போது, அவர் ஏதேதோ பெரிய ‘டெஸ்ட்கள்’ எடுத்து ஒரு பெரிய இருதய நிபுணரை சந்திக்கச் சொன்னார்.

“என்ன வேலை ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கோ?” அந்த வயதான இருதய நிபுணர் செயற்கையாக புன்னகை செய்துகொண்டே கேட்டார்.

ஆம்! வேலை என்னவோ மனம் உடல் எல்லாவற்றையும் அழுத்துகிறது. வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருந்த காலத்திலும் அப்படிதான் மன அழுத்தம் இருந்தது. இப்போது வேலைக் கிடைத்து கையில் கொஞ்சம் காசு இருக்கும் போதும் மன அழுத்தம் இருக்கிறது. இந்த கணக்கு என்ன என்பதை அவனால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை.

“டாக்கி கார்டியா.” அவனுடைய ECG ரிப்போர்ட்டை பார்த்த மருத்தவர் சொன்னார்.

“உங்க இதயம் கொஞ்சம் வேகமாக துடிக்குது. இந்த வயசுலேயே இப்படினா ப்யூச்சர்ல பிரச்சனைதான். சரியா தூங்குறீங்களா இல்லையா?”

“மனசும் ரொம்ப வேகமாக தான் சார் இருக்கு” என்று சொல்ல நினைத்தான். அப்படி சொன்னால் அவர் ஏதாவது மனநல நிபுணரை பார்க்கச் சொல்லிவிடுவாரோ என்று தயங்கி சொல்லாமல் விழுங்கிவிட்டான்.

“ரொம்ப யோசிக்காதிங்க. ரிலாக்ஸ். ஸ்ட்ரெஸ் இருந்தாலே உடம்பு வீக் ஆகிடும். மனசுல இருக்குற அழுத்தத்த உடம்பு சரி செய்ய பார்க்கும். முடியலனா சோர்வாகிடும். தொடர்ந்து வாக்கிங் போங்க. சரியாகிடும்” என்றார்.

மன அழுத்தத்தை குறைக்கும் நம்பிக்கையில் தான், அவன் தினமும் காலையில் அந்த பூங்காவை சுற்றி வந்தான். இல்லையேல் அந்த நேரத்தில் அலாரத்தை அணைத்து விட்டு தூங்கி ஏழரை மணி வாக்கில் எழுந்து வேகவேகமாக கிளம்பி ஓடிச்சென்று எட்டுமணி ரயிலை பிடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தான். அலுவலகம் மயிலாப்பூரில் இருந்தது. வீடோ தாம்பரத்தில். எட்டுமணிக்கு வண்டி ஏறினால் தான் ஒன்பது நார்ப்பத்தைந்து மணிக்குள் செல்ல முடியும். ஐந்து நிமிடம் தாமதமாக சென்றால், அவனுடைய பொதுமேலாளர் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். பள்ளிக்கூடமே தேவலாம் என்ற அளவில் தான் அலுவலகமும் அங்கே இருந்த மனிதர்களும் இருந்தார்கள். அவனுடைய உடனடி மேலாளார், பொது மேலாளர் சொன்னால் மாடியிலிருந்து கூட குதித்து விடுவார். அவர் ஒரு வடநாட்டவர். தமிழ் சுத்தமாக வராது. பொது மேலாளர் தஞ்சாவூர்காரர். ஆனால் இருவரும் தத்தம் இருத்தலை நிலைநிறுத்திக் கொள்ள நிர்வாகத்திற்கு விசுவாசம் என்ற போர்வையில் அடிமைகளாக இருந்தனர். அந்த அடிமைத்தனம்தான் அவர்களை இணைத்துவைத்திருந்தது.

ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் ஏழு மணி வரை அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பார்கள். இவனும் வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்தான். அவனுடைய மேலாளர் ஐந்து மணிவரை எந்த வேலையும் செய்யாமல் காலம் கடத்திவிட்டு, ஐந்து மணிக்கு பின்பு கோப்புகளை எடுத்துப் புரட்டுவார். குறிப்பாக பொது மேலாளர் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் வேலை செய்வது போல் பாவனை செய்வார். அதற்கு முன்பே இவன் எல்லா வேலைகளையும் செய்து முடித்திருப்பான். ஆனால் பெயரை இவனுடைய மேலாளர் தட்டிச் சென்று விடுவார்.

மன உளைச்சலில் தன் இதயம் வெடித்தால் தன் மேலாளரும் பொது மேலாலரும்தான் காரணம் என்று எழுதி வைத்திட நினைத்தான். ஆனால் மருத்துவர் எல்லாம் சாரியாகிவிடும் என்ற சொன்னதால், நம்பிக்கையோடு அவன் தினமும் காலையில் பூங்காவை சுற்றி வந்தான். அன்று அவன் பூங்காவை அடைந்த போது மணி சரியாக ஆறரை. ஆனாலும் சற்றே கூடுதலாக உடம்பை நடுங்க வைக்கும் குளிர். அந்த குளிரை பொருட்படுத்தாமல் நான்கு பேர் பூங்காவின் வாசலில் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் இவனை சட்டை செய்யவில்லை.

மாசி மாதம் முடியும் தருவாயிலும் இவ்வளவு குளிர் ஆச்சர்யம்தான். பள்ளியில் படித்த போது பருவம் தப்பாமல் எல்லாம் நடந்தது. இப்போது எப்போது மழை வருகிறது எப்போது வெயில் அடிக்கிறது என்று எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. எல்லாம் மாறிக்கொண்டே வருகிறது. தான் மட்டும் மாறுவதாக தெரியவில்லை. ஐயோ! மீண்டும் சிந்தனை. இதை சரி செய்ய வேண்டும். பூங்காவில் எழுதியிருக்கும் வாசகங்களை படிக்கத் தொடங்கினான்

‘சோற்றுக் கற்றாளைச்சாறு கால் வலியை நீக்கும்’ அதை நிதானமாக படித்தான். இதுவும் மருத்துவர் சொன்ன அறிவுரை தான். எப்போதெல்லாம் மனதை தேவையில்லா சிந்தனைகள் ஆக்கிரமிக்கிறதோ, எப்போதல்லாம் மனம் நிலையற்று ஓடுகிறதோ, அப்போதெல்லாம் நூறிலிருந்து ஒன்றுவரை தலைகீழாக எண்ணிடச் சொன்னார். இல்லை, ஏதாவது வார்த்தைகளிலோ பொருளிலோ மனதை நிறுத்தச் சொன்னார்.

“இல்லனா உங்க கண்ல படுற வார்த்தைய, வாக்கியத்த திரும்பி திரும்பி சொல்லுங்க. மனம் சாந்தாமகிடும்”

‘சோற்றுக் கற்றாளைச் சாறு கால் வலியை நீக்கும்’ தனக்குதானே இரண்டு மூன்று முறை மனதினுள் சொல்லிக் கொண்டே பூங்காவை சுற்றி வந்தான்.

“சோறுதான தின்ற?” இப்படி ஒரு குரல் நாராசமாக ஒலிக்க அவன் கவனம் சிதறியது. அங்கேயே நின்றான். சப்தம் இடது புறத்தில் பூங்காவை ஒட்டியிருந்த வீட்டிலிருந்து வந்தது.

பூங்காவை சுற்றி நான்கு புறமும் இரும்பு கம்பிகளாலான மதில். அது அவனை விட இரண்டு மடங்கு உயரத்தில் இருந்தது. பூங்காவின் இடது புறம் வரிசையாக வீடுகள். பின்புறம் புதர் மண்டி கிடக்க, மற்ற இரண்டு புறமும் சாலைகள். பூங்கா மேடாக அமைந்திருந்தது. அங்கே நின்று பார்த்தால் அந்த வீடுகள் பள்ளத்தாக்கில் இருப்பது போல் தெரிந்தன. வரிசையில் அமைந்த அந்த வீடுகளின் வாசல் பூங்காவின் இடது மதிலை பார்த்து அமைந்திருந்தது. பூங்காவை ஒட்டியிருந்த ஒத்தையடிப் பாதை அந்த வீடுகளுக்கான பொதுப்பாதையாக மாறியிருந்தது.

அந்த வீடுகள் எல்லாம் பெரும்பாலும் ஒற்றை அறைக் கொண்ட வீடுகளாகதான் இருந்தன. ஆனால் சிறு வீட்டிலேயே நிறைய பேர் வசித்தனர். அங்கே வசித்த அனைவரும் பூங்காவின் இரும்பு கம்பிகளின் மேல் துணிகளை உலர்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இரும்பு கம்பிகளுக்கும் அதில் காயப் போடப்பட்டிருந்த துணிகளுக்குமிடையே இருந்த இடைவெளியில் தான் வீடுகளை கவனிக்க முடியும்.

அங்கே ஒரு பெரிய பச்சை புடவையும் அதன் மேல ஒரு சுடிதாரும் காய்ந்தது. புடவைக்கு பின்னால் ஒரு உருவம் தெரிந்தது. மெதுவாக அந்த புடவையை நகர்த்தி பார்த்தான். ஒரு தடியன் நின்றுகொண்டிருந்தான். அவன் வீட்டின் வாசலைப் பார்த்து நின்றுகொண்டிருந்ததால் அவனுடைய தலை மட்டும் தெரிந்தது. அவன் மஞ்சள் டி-ஷர்ட், கட்டம்போட்ட லுங்கி அணிந்திருந்தான். அவனுடைய டி-ஷர்ட் முதுகில் ஒரு அரசியல் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

“உன்னதாண்டி….” அவன் மீண்டும் கத்தினான். வீட்டின் நிலைவாசற்ப்படியில் ஒரு நடுத்தர வயது பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தான். மதில் முழுக்க வரிசையாக துணிகள் இருந்ததால், கீழே நிற்பவர்கள் உன்னிப்பாக கவனித்தாலொழிய பூங்காவில் ஒருவன் நின்று தங்களைப் பார்ப்பது தெரியாது.

அருகாமையில் காலடி ஓசை கேட்டது. திரும்பினான். பூங்காவில் நடைப்பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு நடுத்தர வயதுகாரரும் அவரின் மகளும் இவனை நோக்கி வருவதை கவனித்தான். இவன் புடவையிலிருந்து கையை எடுத்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் கிழக்கு பக்கம் திரும்பி சூரியனை பார்த்து வணக்கம் வைத்தான். யாரவது பார்த்தால் இவன் சூர்ய நமஸ்காரம் செய்கிறான் என்று நினைத்துக் கொள்ள வேண்டுமாம். அந்த தந்தை பேசிக்கொண்டே வந்தார். அந்த மகள் தன் செல்போனை அவ்வப்போது பார்த்துக்கொண்டு, தந்தை பேசுவதை வேறுவழியில்லாமல் கேட்பதைப் போன்ற முகபாவங்களை வெளிப்படுத்திக் கொண்டு நடந்து வந்தாள். அந்த தந்தையும் மகளும் சென்றபின் மீண்டும் வீட்டை நோக்கினான்.

தடியன் தொடர்ந்து உரக்க பேசினான். எல்லாம் காலையில் கேட்க அவசியமற்ற சற்றே ஆபாசமான வசை மொழிகள். அவன் வரிசையாக பேசினான். ஏதோ மனப்பாடம் செய்துவிட்டு ஒப்பிப்பதைப் போல் கெட்ட வார்த்தைகளை கொட்டினான். அவனுடையது கட்டையான குரல். கத்திகத்தி தேய்ந்து போனது போல் இடையிடையே அவன் பேசிய வார்த்தைகள் முழுவதுமாக புரியவில்லை.

“ரொம்ப பேசாதீங்க…” உள்ளிருந்து ஒரு பெண்ணின் குரல் மட்டும் வந்தது. அந்த குரலை வைத்து அந்த பெண்ணிற்கு தன் வயதோ, தன்னை விட குறைந்த வயதோ தான் இருக்குமென்று இவன் நினைத்துக் கொண்டான்.

“வெளிய வாடி. காச தர வக்கில்ல உள்ள ஒக்காந்துகிட்டு வாய்விடுற” தடியன் கத்தினான்.

“செவனேன்னு இரேன்” அந்த பெண்மணி உள்ளே பார்த்து சொல்லிவிட்டு, திரும்பி தடியனைப் பார்த்து, “அவ தெரியாம பேசிட்டானே” என்று பாந்துவமாக சொன்னாள்.

“அண்ணே நொண்ணேனு. பத்துதேதிக்கு வட்டிய கொடுக்குறேன்னு இளிச்ச. இப்ப தேதி என்ன?”

“கொடுத்துறன்னே. பெரியவ பிரசவத்துக்கு வந்துட்டா”

“அதான் சின்னவ வாய்விடுறாளே… “

அதன்பின் அவன் இன்னும் ஆபாசமாக கத்திவிட்டு சென்றான். இவன் மட்டும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். பூங்காவில் இவனை கடந்து சென்ற யாரும் அங்கே அந்த வீடு இருந்ததைப் பற்றியோ அங்கிருந்து சப்தம் வந்ததைப் பற்றியோ அலட்டிக்கொண்ட மாதிரி தெரியவில்லை. சிறிது நேரத்தில் தடியன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த பெண்மணி கண்கலங்க வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தாள். இவனுடைய மொபைலில் அலாரம் அடித்தது. அலுவலகத்திற்கான நேரம். அங்கிருந்து கிளம்பினான்.

அன்று முழுக்க மனம் லேசாக இல்லை. அவனுள் ஏதேதோ கேள்விகள். மிஞ்சிபோனால் அவர்கள் எவ்வளவு கடன் வாங்கி இருக்க முடியும்? அதற்காக எவ்வளவு பேச்சு வாங்க வேண்டி இருக்கிறது! இந்த கட்டமைப்பே தவறாக இருக்கிறதே? இதை எப்படி சரி செய்வது? இதே சிந்தனை தான் நாள் முழுதும். அதனால் அவனால் எந்த வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் சம்பரதாயமாக ஏழு மணி வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு திரும்பி வீட்டிற்கு வர ஒன்பது மணி ஆகிவிட்டது. கனவில் அந்த தடியனின் குரல் நாராசமாக ஒலித்ததால் இரவில் சரியாக தூக்கம் வரவில்லை. அதனால் காலையில் எழ சற்றுத் தாமதாகிவிட்டது. வேகவேகமாக ஸ்போர்ட்ஸ் ஷூவை எடுத்து மாட்டினான்.

“இப்ப போற? நேரமாச்சே!” அம்மா சொன்னாள்.

“இன்னைக்கு ஆபிஸ் லேட்டா போலாம்” அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு பூங்கா நோக்கி நடந்தான். அந்த தடியன் மீண்டும் வந்து தொந்தரவு செய்துகொண்டிருப்பானோ என்று எண்ணிக் கொண்டே நடந்ததால் தெருக்களைப் பற்றிய எந்த சிந்தனையும் வரவில்லை.

பூங்காவை ஒட்டியிருந்த அந்த ஒத்தையடிப் பாதையின் முன்னே இருசக்கர வாகனமொன்று நின்றிருந்தது. அது தடியனின் வண்டியாக தான் இருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. அவன் நினைத்தது போலவே, அவன் பூங்காவில் நுழைந்து இடது மதில் சென்று நின்றதும், தடியனின் குரல் கேட்டது.

“எந்த போலிஸ்ட போவ. எல்லாம் போலீஸ்க்கும் பைசல் பண்ணிட்டுதான் தொழில் பண்றோம்”

இவன் இடைவெளியில் பார்த்தான். வாசலில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அந்த பெண்ணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். நேற்று உள்ளே இருந்து பேசிய பெண் இவளாகதான் இருக்கக்கூடும் என்று எண்ணினான். அவ்வளவு பிரச்சனையிலும் அவள் முகம் சாந்தமாக இருந்தது. இவர்களின் பிரச்சனையோடு ஒப்பிடுகையில் தன் பிரச்சனை எல்லாம் ஒன்றுமே இல்லையே! இவ்வளவு தைரியமாக பிரச்சனையை சமாளிக்க முயல்கிறாளே! அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே இருந்தான். யாரோ தன்னைப் பார்ப்பதை உணர்ந்த அவள் பூங்காவை நிமிந்து பார்த்தாள். இவன் விருட்டென்று நகர்ந்து பூங்காவை சுற்றத் தொடங்கினான். பூங்காவின் வலது புறத்தில் ஒருவன் தலைகீழாக நின்று யோகா செய்துகொண்டிருந்தான். பூங்காவின் நடுவே இரண்டு வயதானவர்கள் அமர்ந்து இந்திய பொருளாதாரத்தின் போக்கைப் பற்றி சப்தமாக பேசிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே இவன் அடுத்தச் சுற்று இடது மதிலை அடைந்தபோது அந்த பெண் வாசலில் இல்லை. வீட்டுக் கதவு உள்ளே தாளிடப்பட்டிருந்தது.

இப்போது தடியன் மாடியில் நின்றுகொண்டிருந்தான். மாடியிலும் வரிசையாக மூன்று வீடுகள் இருந்தன. நடுவீட்டின் வாசலில் நின்ற தடியன் அந்த வீட்டிலிருந்த பெண்ணிடம், “உன் புருஷன் ரொம்ப பேசுறான். என்னைக்காவது போட்டு பொலக்க போறேன்” என்று மிரட்டினான். மிகவும் மெலிந்திருந்த அந்த பெண் பேசமுடியாமல் பேசினாள்.

“அவரு நிதானம் இல்லாம இருக்காருங்க….”

“காலேலயே ஊத்திக்க தெரியுது இல்ல. வட்டிய கொடுக்க என்ன குறைச்சல்!”

இவன் மீண்டும் கீழ் வீட்டைப் பார்த்தான். திறந்திருந்த ஜன்னலின் வழியே அந்த பெண்ணின் குரல் மட்டும் கேட்டது.

“அசிங்கமா இருக்குமா… தினைக்கும் காலைல” அவளால் பேசமுடியவில்லை. விசும்பல் சப்தம் மட்டும் கேட்டது. அவனால் மேற்கொண்டு அங்கே நிற்க முடியவில்லை. அவன் பூங்கா வாசலின் வெளியே வந்து நின்றபோது, அந்த தடியன் தன் இருசக்கர வாகனம் அருகே வந்து நின்றான். திரும்பி இவனைப் பார்த்தான். அவனுக்கு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். தொப்பை வீங்கி வெடிப்பது போல் இருந்தது. இவனும் ஒரு நொடி தடியனைப் பார்த்தான். ஓடி சென்று அவன் மேல் பாய்ந்து கீழே தள்ள வேண்டும்போல் இருந்தது. அவ்வளவு பலம் தனக்கு இல்லை. அந்த தடியனை ஏதாவது செய்ய வேண்டும். போலிசிடம் போகலாம். ஒருவேளை அந்த தடியன் சொன்னது போல் அவனுக்கு போலீசில் ஆட்கள் இருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்கள் தன்னை காட்டிக் கொடுத்து விட்டால், தடியன் ஆள் வைத்து தன்னை அடித்துவிட்டால் என்ன செய்வது? இது போன்ற ஆட்கள் கொலை கூட செய்வார்கள். இன்னொருவருக்கு உதவி செய்ய போய் தனக்கு உபத்திரத்தை தேடிக் கொள்வது புத்திசாலித்தனமில்லை. ஆனால் இப்படி கோழையாக சுயநலவாதியாக இருப்பது வெட்கப்படவேண்டிய செயல். நாமும் மற்றவர்களைப் போல் சராசரி ஆளாக இருப்பது எவ்வளவு அபத்தம். ‘வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ’ மனதில் ஒரு குரல் கேட்டது. அவன் கோபகமாக தடியனை பார்த்தான். தடியன் திரும்பி அந்த பெண்ணின் வீட்டை பார்த்து துப்பிவிட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான். இவன் மனமெல்லாம் ஆக்ரோசம் ஆக்கிரமித்துக் கொண்டது.

சாப்பாடு இறங்கவில்லை. அருகில் அமர்ந்திருந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டனர். மதியம் இரண்டிலிருந்து இரண்டரை வரை தான் சாப்பாட்டு நேரம். சாப்பாடு நேரம் முடிவதற்கு முன்பு இருக்கையில் இருக்க வேண்டும். இதுவும் பொதுமேலாளரின் உத்தரவு தான். கண்காணிப்பு கேமரா மூலம் எல்லாவற்றையும் அவர் கண்காணித்துக் கொண்டே இருப்பார். மனசாட்சிக்கு பயப்படாதவர்கள் கூட கண்காணிப்பு கேமாரவிற்கு பயந்தனர். மணி இரண்டரையை தொட்டுவிட்டது. இவன் மட்டும் சாப்பிடாமல் சாப்பாட்டு டப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன செய்யலாம்? தன்னை தானே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான். கையில் கொஞ்சம் காசு இருக்கிறது. நேரடியாக அவர்களின் வீட்டின் கதவைத்தட்டி அந்த பெண்ணிடம் போய் கொடுத்துவிடலாமா! இல்லை. அவள் தவறாக நினைத்துவிடக் கூடும். அல்லது அப்பாவுக்கு தெரிந்த யாரவது பார்த்து அப்பாவிடம் சொல்லிவிட்டாலும் பிரச்சனை. ஆனாலும் அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். தடியனின் பிடியிலிருந்து அந்த குடும்பத்தை விடுவித்தால் கூட போதும்.

“சாப்பிடாம அப்படி என்ன யோசனை?” கோபிகிருஷ்ணன் சார் கேட்டுக்கொண்டே தன் டிபன் பாக்ஸில் இருந்த தண்ணீரை வடித்து, டப்பாவை மேஜை மீது வைத்தார்.

கோபிகிருஷ்ணன் அவனுடைய அலுவகத்தின் சீனியர் கிளார்க். பொது மேலாளர் உட்பட எல்லோரும் அவரை கோபிகிருஷ்ணன் சார் என்றே அழைத்தனர். வயதில் மூத்த அவர் தன்னுடைய மனக்குழப்பத்தை போக்கக் கூடும் என்று எண்ணினான். காலையில் நடந்ததை சொன்னான்.

“தம்பி, கடன் கொடுத்தவன், அவனுக்கு அவன் காசு வேணும். எப்படி பேசுனா காசு கிடைக்குமோ அப்படி பேசுறான்” என்றார்.

“அவன் பேசுறது தப்புசார்”

“நாம என்ன பண்ணமுடியும்டா கண்ணா. அவன பத்தி தெரிஞ்சுதான் கடன் வாங்கிருப்பாங்க. நம்மால முடிஞ்சா ஏதாவது உதவலாம். அவ்ளோதான். அதுவும் எவ்ளோ பேருக்கு பண்ணமுடியும்? எதுக்கு அடுத்தவங்க லைப் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்கிற? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. இந்த மாதிரி சிந்தனைலாம் வராது”, அவர் கண் சிமிட்டினார். இவனுக்கு கோபமாக வந்தது. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

“சீக்கிரம் சீட்டுக்கு போ. பெரியவர் கேமரால பாப்பாரு!” சொல்லிவிட்டு அவர் டிபன் டப்பாவை மூடி பைக்குள் போட்டுக்கொண்டு நகர்ந்தார்.

கேமரா என்றதும் இவனுக்கு பொறித் தட்டியது. அந்த தடியனை கேமராவில் பதிவு செய்தால்? சாலையில் வழிப்பறி செய்த ஒருவனை யாரோ ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து இணையத்தில் போட்டு, அது பரவி போலிஸ் அவனை கைது செய்தது நினைவு வந்தது. ஆம் நாமும் அதை செய்யலாம். அந்த புடவையின் பின் நின்று அந்த தடியன் அவர்களை மிரட்டுவதை மொபைல் கேமராவில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றிவிட்டால் போதும். யார் யாரோ அந்த தடியனுக்கு எதிராக குரல் கொடுத்தால் எந்த போலிசாக இருந்தாலும் அவனை கைது செய்துதான் ஆக வேண்டும். அந்த குடும்பத்திற்கும் நல்லது நடக்கும். ரயில் பயணம் முழுக்க இந்த திட்டமிடல் தான். வீட்டிற்குள் நுழைந்த போது அம்மா தன் பையில் அவனுடைய துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதை கவனித்த போதுதான் நினைவு வந்தது, இரவு திருச்சிக்கு செல்லவேண்டும்.

“உன் துணியையும் என் பேக்லயே வச்சிக்குறேன்” அம்மா சொன்னாள்.

“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர வேண்டிதானா…!” அப்பா சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் அடுத்த அறைக்கு சென்றார்.

வெள்ளிக்கிழமை இரவு ரயில் என்பது கடந்த இரண்டு நாட்கள் முன்புவரை அரைகுறையாக நினைவிருந்தது. அடுத்த வெள்ளிக்கிழமையாக இருந்திருக்கக் கூடாதா! தனக்கு மறுநாள் காலை முக்கியமான வேலை இருக்கிறது என்பதை எப்படி அம்மாவிடம் சொல்வது?

“ஞாயிற்று கிழமை தான மேரேஜ்! நான் நாளைக்கு கிளம்பி வரவா?”

“நீலாம் வரணும்னு தான மாமா லீவ் நாள்ல வைக்குது…. மாமாக்கு ஆம்பள புள்ளையா இருக்குது? நீதான் முன்னாடி நின்னு செய்யனும்” அம்மா சந்தோசம் பொங்கச் சொன்னாள். அவள் நல்ல மனநிலையில் இருந்தாள். அதனால் அவன் மேற்கொண்டும் எதுவும் பேசி அவளை கஷ்டப் படுத்த விரும்பவில்லை.

இல்லையேல், “பொண்ண தான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்ட…” என்றெல்லாம் சொல்லி கண்ணை கசக்க ஆரம்பித்துவிடுவாள். அவளை சமாளித்தாலும், “அப்படி என்ன வேலை சாருக்கு?” என்று கேட்டுக் கொண்டு அப்பா வந்துவிடுவார். அவரை தன்னால் சமாளிக்க முடியாது. அமைதியாக அவர்களோடு சென்றான்.

சனி ஞாயிறு முழுக்க மண்டபத்திலேயே கழிந்தது. ஆனால் அம்மா சொன்னது போலெல்லாம் இவன் எதையும் முன்னின்று செய்யவில்லை. தன் போக்கில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். எதிலும் ஆர்வமில்லை. எப்போது இந்த இரண்டுநாட்கள் கடந்து போகும் என்பதே அவனுடைய பெரிய பிரச்சனையாக இருந்தது. சிறுவயது முதல், எப்போது வார விடுமுறை வரும் என்ற எதிர்பார்ப்போடும், அது வந்தால் சீக்கிரம் முடிந்துவிடக் கூடாது என்ற ஆசையோடும்தான் அவனுடைய பள்ளி கல்லூரி நாட்கள் கழிந்தன. அதுவும் இந்த அலுவலகத்தில் சேர்ந்ததிலிருந்து எப்போது சனிக்கிழமை வருமென்று எதிர்பார்த்துதான் அவன் ஐந்து நாட்களை கடத்துவான். முதல் முறையாக அவன் எப்போது இந்த சனி ஞாயிறு கடந்து போகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தான். இடையிடையே வீடியோவை எடுத்தப் பின் அதை யாரிடமெல்லாம், எப்படியெல்லாம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று யோசித்தான். மிகவும் மெதுவாக அந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. திங்கள் காலை வீட்டிற்குள் நுழையும் போது மணி ஐந்தரை.

“கொஞ்ச நேரம் தூங்கு… ஒரு நாள் லேட்டா போன ஒன்னும் ஆகாது ” அம்மா சொன்னாள்.

இவன் எதுவும் பேசாமல், துரிதமாக ஆடையை மாற்றிக் கொண்டு பூங்காவிற்கு செல்ல தயாரானான். அந்த நாள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அவன் அம்மாவிற்கு தெரியாததால், அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்ததை அவன் பொருட்படுத்தவில்லை. தன் கைபேசியில் சார்ஜ் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டான். இன்றோடு அந்த தடியனின் அட்டூழியம் அடங்கிவிடும், அதை தான் சாத்தியமாக்கப் போகிறோம் என்று எண்ணும்போது அவனுக்கு பெருமையாக இருந்தது. எல்லாம் சரியாக நடந்தபின்பு வேண்டுமானால் அந்த பெண்ணிடம் மட்டும் தான் செய்த இந்த காரியத்தை சொல்லிக் கொள்ளலாம். அது தற்பெருமை அடிப்பதைப் போல் ஆகாதா? ஆகாது. ஆகாது. அவளுக்கு மேற்கொண்டு உதவும் பொருட்டே உண்மையை சொன்னதாகவும், அவளுக்கு தான் எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவளிடம் சொல்லலாம். அவள் தன்னை நம்பக் கூடும்.

பூங்காவை அடைந்த அவன், அருகே நின்றிருந்த தடியனின் வண்டியை பார்த்ததும் தனக்குள் சிரித்துக் கொண்டான். ‘ஆம் நான் ஒரு ஆபத்பாந்தவன்.’

பூங்காவின் இடது மதிலை நெருங்கிய போது, எந்த சப்தமும் வராதது ஆச்சர்யம் அளித்தது. கம்பியில் துணிகளும் இல்லை. அந்த வீடு கம்பிகளின் வழியே தெளிவாக தெரிந்தது. கதவு திறந்திருந்தது. ஒரு வயதான பெண் வீட்டை கழுவி விட்டுக் கொண்டிருந்தாள். அந்த அறையில் ஆங்காங்கே புகை அண்டி சுவரெல்லாம் கருப்பாக இருந்தது. அவன் சிந்தனை வழக்கத்தை விட வேகமெடுத்தது. அவனால் அங்கு நடந்திருப்பதை யூகிக்க முடிந்தது. அவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றதால், அந்த வயதான பெண்மணி அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை.

“என்ன கண்ணு பாக்குற?” அந்த பெண் இவனைக் கேட்டாள்.

“இங்க இருந்தவங்க…. ஒரு அம்மா” அவனால் கேள்வியை முடிக்க முடியவில்லை.

“ஆத்தாளும் பொண்ணும் கொழுத்திகிச்சுங்க… ” அவள் செய்தி வாசிப்பது போல் எந்த உணர்வுமின்றி பதில் சொன்னாள்.

இவனால் பதில் பேசமுடியவில்லை. அப்படியே நின்றான். அவள் தொடர்ந்து தன் வேலையை கவனித்தாள்

“எப்ப… ” அந்த வீட்டை பார்த்தவாறே கேட்டான்.

நிமிர்ந்து பார்த்த அவள். “வெள்ளிகிழமை. ஏன் உனக்கு தெரிஞ்சவங்களா?” என்றாள்.

இவன் அமைதியாக இருந்தான். இவனிடம் பேசுவது வீண் என்று அந்த பெண்மணி நினைத்திருக்கக் கூடும். அவள் கதவை இழுத்து தாளிட்டு விட்டு, “அடுத்த குடி வரதுதான் கஷ்டம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நகர்ந்தாள். அங்கே அதுவரை இருந்தவர்கள் இல்லாமல் போனதைப் பற்றி அந்த வயதான பெண் அலட்டிக் கொள்ளாதது அவன் மனதை உறுத்தியது. உண்மையில் அங்கே யாருக்கும் போனவர்களைப் பற்றி எந்த கவலையும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. வாசலில் நால்வரும் சளைக்காமல் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருந்தனர். பூங்காவின் வலது புறத்தில் சிரசாசன நிலையிலிருந்த அந்த ஆசாமி பக்கத்தில், இன்னொருவன் தலைகீழாக நிற்க முயற்சி செய்துகொண்டிருந்தான். வயதான நண்பர்கள் இருவரும் சப்தமாக பேசிக் கொண்டே இருந்தார்கள். அந்த அப்பாவும் பெண்ணும் பூங்காவை சுற்றி வர, மகளின் கவனம் முழுக்க மொபைலில் இருந்தது. இவன் மீண்டும் அந்த வீட்டைப் பார்த்தான். பெரிய பூட்டு ஒன்று தொங்கியது.

அந்த தடியன் அந்த குடும்பத்திற்கு கொடுத்த அழுத்தத்தை கண்ணால் கண்டது தான் மட்டுமே. தான் முதல் நாளே ஏதாவது செய்திருக்க வேண்டும். தவறவிட்டு விட்டோம். அவன் குற்ற உணர்ச்சி அவனை அழுத்தியது. இனியாவது எழ வேண்டும். தடியனுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். அவனுக்கு தடியனின் மீது கோபம் அதிகமானபோது, தடியனின் குரல் மாடியில் இருந்து வந்தது. நிமிர்ந்து பார்த்தான்.

“காச கேட்டா எகத்தாளமா” தடியன் மிகவும் கோபமாக அந்த மாடிவீட்டுக் காரனின் சட்டையை கோர்த்து பிடித்து கன்னத்தில் அடித்தான். அவன் சுருண்டு விழுந்தான். மெலிந்த அந்த பெண் தடியனின் காலை பிடித்துக் கொண்டு கதறினாள். தடியன் அவளையும் அவள் கணவனையும் மிதித்தான். அதே கோபத்தில் திரும்பிய தடியன், பூங்காவிற்குள் நின்றுகொண்டிருந்த இவனை ஒருமுறை தற்செயலாக பார்த்தான். தடியனின் வெறிகொண்ட முகத்தைப் பார்க்கும் போது, இவனுக்கு உடம்பு நடுங்கியது. பார்வையை திருப்பிக்கொண்டு நகர்ந்தான்.

‘சொங்கிப் பயலே’ ‘எதுக்கு அடுத்தவங்க லைப் பத்தியெல்லாம் யோசிச்சு குழப்பிக்கிற’ ‘ரொம்ப யோசிக்காதிங்க. ரிலாக்ஸ்’ ‘வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ’

‘சோற்றுக் கற்றாளைச் சாறு கால் வலியை நீக்கும்’ என்று தனக்குதானே இரண்டு மூன்று முறை மனதினுள் சொல்லிக் கொண்டே பூங்காவை சுற்றத் தொடங்கினான்.

– September 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *