பீனிக்ஸ் பறவைகள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,013 
 

“”காலையிலேயே பிரச்னை… மோட்டார் தண்ணீர் எடுக்கலைங்க.”
“”சுவிட்ச் சரியாக போட்டியா?”
“”புதுசா போடறாப்ல கேட்கறீங்க. வேணும்ன்னா நீங்கதான் போட்டு பார்க்கறது.”
நான் போய் சுவிட்ச் போட்டேன். மோட்டாரில் வினோதமான ஓசை கேட்டது; தண்ணீர் ஏறவில்லை.
இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தபின், உள்ளே திரும்பினேன்.
“”மேல் தொட்டியில கொஞ்சமாவது தண்ணீர் இருக்கா?”
“”இல்லை…”
“”முதல் நாளே நிறைச்சு வச்சுக்கறதில்லையா?”
“”மோட்டார் இப்படி கழுத்தறுக்கும்ன்னு எனக்கென்ன தெரியும். முன் யோசனையா கிணறு வெட்டி இருந்தால், இந்த மாதிரி நேரத்துல, கயிறு போட்டு நாலு குடம் தண்ணீர் எடுத்திருக்கலாம்…”
பீனிக்ஸ் பறவைகள்!“”வீடு கட்டி, ஏழு வருஷம் கழிச்சு யோசனை சொல்லு. இப்பெல்லாம் பங்களாவிலேயே கூட போர்வெல் தான். காலரைக்கால் கிரவுண்டுல, உனக்கு கிணறு வெட்டணுமா?”
“”விவாதம் பண்ணிக்கிட்டு நிக்காதிங்க… பிளம்பருக்கு போன் போடுங்க. சாதாரண நாளிலேயே அவனை பிடிக்க முடியாது. ஞாயிற்றுக் கிழமையில வருவானோ, என்னமோ…” என்பதற்குள், நான் போன் செய்தேன்.
“”ஹலோ…” என்றான் பிளம்பர்.
“”வினோத் ராஜ்?”
“”சொல்லுங்க.”
“”நான் காந்திநகர் இரண்டாவது தெருவுல இருந்து மூர்த்தி பேசறேன்… தெரியுதா?”
“”பூவரசு மர வீடுதானே சார்.”
“”கரெக்ட்… அர்ஜென்ட் மேட்டர். சுவிட்ச் போட்டால், மோட்டாரில் சப்தம் வருது; ஆனால், தண்ணி எடுக்கலை… நேத்து கூட நல்லா வேலை செஞ்சுது… திடீர்ன்னு என்ன ஆச்சுன்னு தெரியலை. வந்து பாருங்க… தண்ணி இல்லாம, குளிக்காம, ஒரு வேலையும் ஓடாம உட்கார்ந்திருக்கோம்,” என்று வேண்டினேன்.
“”அரை மணி நேரத்துல வந்து பாக்கறேன் சார்…” என்றான்.
என் மொபைல் போன் மீண்டும் அழைத்தது.
“”ஹலோ…”
“”மூர்த்தி…”
“”ஹாங்…”
“”நான் ஏகாம்பரம்; தெரியுதா?”
“”எந்த ஏகா…” பாதியில் நினைவு வந்து, “”ஏகாம்பரம் அண்ணனா… எப்படி இருக்கீங்க? பெங்களூருவிலிருந்து எப்ப வந்தீங்க?”
“”சென்னையிலிருந்துதான் பேசறேன்… பையனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்; பத்திரிகை கொடுக்க வந்தேன்.”
“”பையன் அந்த அளவுக்கு வளர்ந்துட்டானா?”
“”இருபத்தாறு வயசு; பெங்களூருவிலேயே ஐ.டி., கம்பெனியில வேலை பார்க்கறான். பொண்ணு நம்ம ஊருதான்; லோகநாத வாத்தியார் மகள். அப்பாவுக்கெல்லாம் தெரியும். அவர்கிட்ட தான் உன் நம்பர் வாங்கினேன். நீ எப்படி இருக்கே, வீட்ல எல்லாரும் சவுக்கியமா? திருவொற்றியூர் முடிச்சுட்டு, கார்ல நேரா அங்க வந்துடறேன்; எங்கேயும் போயிடாதே,” என்றார்.
சரியாக, முப்பதாவது நிமிடம் பிளம்பர் வந்து, மோட்டாரை ஆராய்ந்தார்.
பலமுறை சுவிட்சை போட்டும், நிறுத்தியும் பார்த்து, கொண்டு வந்திருந்த டூல்ஸ் பையை பிரித்து வைத்து, மோட்டாரை கழட்டி, பைப்பை ஆராய்ந்து, என்னென்னமோ செய்து, கடைசியில் என்ன கோளாறு என்று கண்டுபிடித்தார்.
“”புட் வால்வு மாத்தணும் சார்… இன்று ஞாயிற்றுக்கிழமை; கடைகள் எல்லாம் மூடியிருக்கும். கேம்ப் ரோடு பக்கம், ஒரு கடை இருக்கும்… ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்,” என்று கிளம்பினார்.
பைக்கை எடுத்து அவர் புறப்பட, வாசல் வரை வந்து நின்றேன் நான்.
பைக், தெரு முனைக்கு சென்ற போது, ஒரு கார் எதிர்ப்பட்டது. காரில் இருந்தவர், பைக்கை நிறுத்தி, அவனிடம் ஏதோ விசாரிப்பது தெரிந்தது.
அண்ணன்தான் வீட்டை விசாரிக்கிறாரோ என்று ஒரு எண்ணம் எனக்கு. ஆனால், பைக்கும், காரும் நிமிஷக் கணக்கில் நின்றது; ரெண்டு வண்டியும் ஒரே நேரத்தில் பிரேக் டவுண் ஆகிவிட்டது போல.
ஒரு வழியாக காரும், பைக்கும் பிரிந்தது.
கார் நேராக என் வீட்டு வாசலில் வந்து நிற்க, நினைத்தது போல் அண்ணன் தான்; ஆளே உருமாறியிருந்தார்.
“”அடேய் மூர்த்தி…” என்று கூவினார், வீதியென்றும் பாராமல், பாசத்தில் கட்டியணைத்தார்.
“”ஏண்டா… நான் வந்து தண்ணி செலவு பண்ணிருவேன்னு, போரை ரிப்பேராக்கி வச்சுட்டியா… அந்த பிளம்பர் பையன் யார்ன்னு தெரியுமா உனக்கு?” என்றபடி படியேறினார்.
வரவேற்றேன். உள்ளே வந்து பத்திரிகை கொடுத்து, காபி சாப்பிடும் போது, “”அந்த பிளம்பரை பத்தி ஏதோ சொல்ல வந்தீங்களே… உங்களுக்கு அவனை தெரியுமா?” என்றேன்.
“”பல வருஷங்களுக்கு பிறகு, அவனை இங்க வச்சுதான் பார்க்கிறேன்… உனக்கு ஜெயராமனை தெரியுமா… ரைஸ் மில்காரர்.”
ஏன் தெரியாமல், சிறு வயதில் அண்ணன் ஊரான பள்ளிப்பட்டுக்கு போகும் போது, அந்த ரைஸ் மில்லை கடந்துதான் போவோம். எந்த நேரமும் நெல் அரைக்கும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்கும். மில் வாசலில் மாட்டு வண்டியிலும், டிராக்டர்களிலும் நெல் மூட்டைகள் வந்தபடி இருக்கும். அதன் ஓனர் ஜெயராமன், சினிமா நடிகர் போல இருப்பார். புல்லட் பைக்கில் படபடவென்று பயணிப்பார். அவர் வீடு; சந்தைக்கு எதிர் வாடையில் அழகான மாடி வீடு. நிறைய நிலம். அதில் விளைவதை அரைக்கவே சொந்தமாக மில் கட்டினார் என்று சொல்வர்… அவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள்; ஒரு பையன் கடைக்குட்டி. திண்ணையில் விளையாடிக் கொண்டிருப்பர்; எப்போதோ பார்த்தது.
ஏதாவது விசேஷமென்றால்தான் அந்த ஊருக்கு போவது. மற்றபடி அண்ணன் குடும்பத்தை தவிர, யாருடனும் ஒட்டுதல் இல்லை. அதிலும், அண்ணன் பெங்களூருக்கு இடம் பெயர்ந்த பின், பள்ளிப்பட்டு போகும் வாய்ப்பு இல்லாமலே போய் விட்டது. நானும் வேலை கிடைத்து, கல்யாணமும் ஆன பின், பேட்டையிலிருந்து புலம் பெயர்ந்து, சென்னைக்கு வந்து ஆண்டுகள் பல கடந்த பின்னும் ரைஸ் மில், புல்லட் பைக், பெரிய வீடு நினைவில் இருக்கவே செய்கிறது.
“”ஆமாம்… தெரியும்,” என்றேன்.
“”அந்த ஜெயராமன் பையன்தான் இவன்; பேரு வினோத்,” என்றார்.
“”அப்படியா… சாயலை பார்க்கும் போதே நம்ம ஊர் பக்கத்து ஆள் மாதிரி தெரிஞ்சுது. ஆள் கொஞ்சம், “மூடி டைப்’ போல தெரிஞ்சதனால பேச்சு கொடுக்கலை. எப்படி கலகலப்பாய் இருக்க முடியும்… நடக்கக் கூடாததெல்லாம் நடந்து போச்சே அவங்க குடும்பத்தில்,” என்றவர், அந்த விவரங்களை தெரிவித்தார்; மனம் ரொம்பவே சங்கடப்பட்டது எனக்கு.
“”ஆனால், பையன் கெட்டிக்காரன். ஊரை விட்டு வந்து, தொழில் பழகி, சம்பாதிச்சு, ஒரு அக்காவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கான்; இன்னொரு அக்காவுக்கு, வரன் பார்த்திருக்கான்,” என்றார்.
மேலும், சிறிது நேரம் பேசிவிட்டு, “”அவசியம் கல்யாணத்துக்கு வந்திடுங்க…” என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
எங்கெங்கோ அலைந்து, உதிரி பாகமும், வியர்வைக் குளியலுமாக வந்திறங்கிய வினோத்தை, நான் அனுதாபத்தோடு பார்த்தேன்.
“”ரொம்ப தொலைவு போக வேண்டியிருந்ததோ!”
“”ஆமாம் சார்,” என்றபடி, நேராக மோட்டார் இருக்கும் இடத்துக்கு சென்றான். பழைய புட் வால்வை கழட்ட துவங்கினான். நான் தொண்டையை செருமி, மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.
“”அண்ணன் சொல்லிதான் தெரிஞ்சுது… நீ பள்ளிப்பட்டு ஜெயராமன் மகன்னு… நான் சின்ன வயசுல உங்க ஊருக்கு வந்து, அப்ப உன்னையெல்லாம் கூட பார்த்திருக்கேன்… நீ கூட என்னை பார்த்திருக்க முடியும்; ஆனால், உனக்கு ஞாபகம் இருக்காது; நீ ரொம்ப சின்னவன். நடந்ததை கேள்விப்பட்டப்ப, மனசு ரொம்ப கனத்துப் போச்சு. பாவம், எப்படி இருந்திருக்க வேண்டியவர். இங்க வந்து, இந்த வேலையெல்லாம் செய்துகிட்டு…”
“”இதுவும் நல்ல வேலைதான் சார்,” என்றான் வினோத் சட்டென்று, வேலையில் கவனமாக இருந்தபடி…
“”அதுக்கு சொல்லலை… உங்க அப்பா உயிரோடு இருந்து, அந்த சொத்து வசதியெல்லாம் இருந்திருந்தால், நீ
ஊர்ல வசதியா, ஒரு முதலாளியா, சவுகரியமா வாழ்ந்திருப்பீங்க… இருக்கிற தொழில் போதாதுன்னு, யாரோ சொன்னாங்கன்னு, தெரியாத தொழில்ல இறங்கியிருக்கக் கூடாது அவர். இந்த பிசினசே இப்படித்தான். இழப்பு ஏற்பட்டிருச்
சிங்கறதுக்காக உங்கப்பா தற்கொலை செய்துக்கிட்டிருக்க வேண்டாம். மனைவி, குழந்தைகளுக்காகவாவது கொஞ்ச காலம் உயிரோடு இருந்திருக்கலாம். தலை சாய்ஞ்ச உடனே, கடன்காரக் கழுகுகள் இப்படியா ஒரேயடியா எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போவானுங்க. சின்ன வயசுல குருவி தலைல பனங்காய வைக்கிறாப்ல, குடும்ப பாரத்தை உன் தலைல சுமத்திட்டு போனது சோகம்,” என்று வருந்தினேன்.
“”அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை… ஒரு நிமிஷம் இந்த பைப்பை பிடிங்க சார்…” என்று கையில் கொடுத்து, பைப்பின் முனையை ஹாக்சா பிளேடால் அரை அங்குலம் கர, கர என அறுத்தான். ஒரு வழியாக வேலையை முடித்து, சுவிட்ச் போடச் சொன்னான். மோட்டாரின் பக்கவாட்டில், நீர் ஏறும் பைப்பை தொட்டுப் பார்த்தான்.
“”தண்ணி ஏறுது சார்,” என்றான். நான் மாடிக்கு போய் தண்ணீர் கொட்டுகிறதா என்பதை உறுதிபடுத்தி, இறங்கி வரும் போது, அவன் டூல்ஸ் பேக்கை தூக்கிக் கொண்டு கிளம்ப தயாராக இருந்தான். சொந்த விஷயத்தை பேசியதில், மூட்-அவுட் ஆகிவிட்டானோ என்று எனக்கு சந்தேகம்.
“”உன் பர்சனல் மேட்டரை பத்தி பேசினதுல வருத்தம் உண்டாயிருந்தால் மன்னிச்சுக்க வினோத். தெரிஞ்ச ஆளாயிருக்கியேங்கிற உரிமையில பேசினேன். எதையும் மனசுல வச்சுக்காதே… வா, ஒரு காபி சாப்பிடு.”
“”வேணாம் சார்… கிளம்பணும். மன்னிப்பு கேட்கற அளவுக்கு நீங்க தப்பா ஒண்ணும் பேசலை சார். அக்கறையிலதானே விசாரிக்கறீங்க… ஆனால், நான் நடந்து போனதை நினைக்கிறதில்லை. அதனால் ஆகக் கூடியது ஒண்ணுமில்லை. நடக்க வேண்டியதை நினைக்கிறவன். அப்படி வாழ்ந்திருக்கலாமோ, இப்படி இருந்திருப்போமோன்னு சிந்திச்சால், ஏக்கமும், துன்பமும்தான் மிஞ்சும். அப்பா வாழ்ந்த வாழ்க்கையை ஒரு பாடமாதான் எடுத்துக்கறேன். அதிலிருந்து என்ன செய்யலாம், எதை செய்யக் கூடாதுன்னு கத்துக்கிட்டேன். அதுவே, அவர் எனக்கு விட்டுப் போன பெரிய சொத்து. அதை எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்க முடியாது. விரக்தியில பேசறான்னு சொல்வாங்க… உழைச்சு, முன்னேறி வாழ்ந்து காட்டணும். பேசிக்கிட்டிருக்க நேரமில்லை சார்,” என்று பில்லை கொடுத்தான்.
லேபரும் சேர்த்து, ஐநூறு ரூபாய்; 1,000 ரூபாய் கொடுக்கலாம் போலிருந்தது. நான், அறுநூறு ரூபாய் கொடுத்தேன். எண்ணிப் பார்த்து, “”நூறு ரூபாய் அதிகமா இருக்கு சார்…” என்று, திருப்பிக் கொடுத்தான்.
“”வச்சுக்க, பரவாயில்லை,” என்றேன்.
“”எனக்கு சேர வேண்டியது இவ்வளவு தான்,” என்று சொல்லி, மீதியை கறாராக திருப்பிக் கொடுத்து விட்டுப் போனான்.
இழந்தவைகளை எண்ணி மனம் வெதும்பி, பிறர் அனுதாபத்தை பெறுவதற்காகவே சோகக் கடலில் குளியல் போட்டுத் திரியும் பல மனிதர்கள் மத்தியில், இந்த வினோத்… எரிந்து சாம்பலான பின்னும் அதிலிருந்து உயிர்த்தெழுமாமே பீனிக்ஸ் பறவைகள்… அதைப் போன்றதொரு எழுச்சியை அவனிடம் கண்டேன்.
மனம் சிலிர்த்தது.

– ஜூன் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *