பிரம்ம ஞானி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,870 
 

(1959 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வயிரவ கோவிலடி வாசலில் பஸ் ஒன்ற தங்கிப் போகும் அசுரத்தொனி ஊருக்குள் எதிரொலிக்கிறது.

யாரோ எவரோ என்ற அசுவாரசியத்துடன் ஊர் திரும்பிப் படுத்துக் கொட்டாவி விடுகின்றது.

உழைக்கும் மக்கள் நித்திரா தேவியை இறுக அணைத்து, இன்பம் அனுபவிக்கும் அந்த வேளையில் யார் வந்தாலென்ன? ஊர் அரைத் தூக்கத்திற் சுகிக்கிறது.

பஸ்ஸை விட்டிறங்கிய வித்துவான் கந்தசாமி வெகு சிரமத்தினூடே தன் கைக்கடிகாரத்தைப் பார்க்கின்றார். மணி பன்னிரண்டே முக்கால் என்பதை நெருப்புக்குச்சி வெளிச்சத்தில் நீச்சலடித்த கடிகார முட்கள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக அவர் கையிலிருந்த கடிகாரம் அவருக்கே தெரியவில்லை என்பது ஆச்சரியந்தான் ! உள்ளுணர்வுப் ‘பெண்டூலத் திற்கு அது இருப்பது தெரியும். ஆனால் வெளியே இருள்

கொடிய இருளின் கோரத்தாண்டவம் எங்கும் குறைவில்லாமல் அரசோச்சுகிறது. அதன் அடக்குமுறைச் சட்டத்திற்கு அடிபணிந்து விட்டதுபோல் கரிக் கும்பமாகக் காட்சியளிக்கிறது வடக்கம்பிராய்க் கிராமம்.

காரிருளின் கோரப்பிடியிற் கருகித்தெரிந்த ஊரை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறார். அவருடைய அகத்தையும் புறத்தையும் அந்தகாரமான இருள் சொந்தம் கொண்டாடியதால் எங்கு செல்வோம் என்ற மனப்பிரமை அவருக்கு. ஒளியுண்ட விழிகளை உறுத்தும் இருளுடன் ஐக்கியப் படுத்துவதற்காக இமைகளை அப்படி மளமளவென்னு வெட்டிப் பிரித்து நிலைமையைச் சரிசெய்ய முயலுகின்றார்.

அவருடைய நெஞ்சில் நிரம்பி வழியும் வியாகூல இருளுக்கும் தன் விழிகளால் வெட்டிப் பார்த்து விழிதிறக்க நினைக்கின்ற அந்த வெளியிருளுக்கும் வித்தியாசம் இல்லை .

கலங்கிச் சுருங்கிய ‘நஷனல்’ உடுப்பை இலேசாக உதறித்தட்டிவிடுகிறார். சிலும்பிச் சின்னாபின்னப்பட்டிருந்த தலைமயிர்க் கூட்டத்தை ஒரு நிரைப்படுத்த விரும்பியவராய் வலக்கை விரல்கள் ஐந்தையும் அதற்குள் விட்டுக் கோதிக் கொள்கிறார்.

கையில் ஏதோ ஒன்று. எதுவாக இருப்பினும், கனக்கும் பொருள் என்பது கைமாற்றிக்கொண்டு செல்வதிலிருந்து தெரிகிறது. காலின் செருப்புக் குதிகளை முத்தமிடுமோசை நிசியின் அமைதியினால் தூரத்தில் கேட்கிறது. அது வித்துவான் ஊருக்குள் இறங்கிவிட்டார் என்பதை கட்டியங் கூறிச் சொல்வதாயமைகிறது.

பழக்கப்பட்ட தெரு என்ற மமதையில் பாதையைப் பார்க்காமலே நடக்க முயற்சிக்கின்றார். இடைக்காலத்தில் எத்தனை எத்தனையோ குண்டு குழிகளைத் தன்வசம் சேர்த்துக்கொண்ட அத்தெரு அவரையொரு அசல் குடிகாரனாக்கிக் கொண்டே நீண்டு செல்கிறது!

அதனாலென்ன? அதையொன்றும் அவர்மனம் பொருட்படுத்தவில்லை. கனகம்! அவருடைய மனைவி. அவருக்குப் பாலிய வயது முதற்கொண்டே நன்றாகத் தெரிந்தவள் தானே! அவளே அவரை இடறித் தூக்கி எறிந்து விட்டிருக்கும் போது…

குண்டு குழிகளில் அவர் கால்கள் இடறுப்படுவதால் உடல் குலுங்கத்தான் செய்கிறது. ஆனால், அவர் மனம் இரைமீட்கும் அந்த மொட்டைக் கடிதத்து விவகாரத்திலேயே நிலைத்திருக்கின்றது.

அதிலோர் வார்த்தை. நெஞ்சில் உளிகொண்டு செதுக்கியது போல் அங்கு நிலைப்பட்டுவிட்டது. இன்னமும் அவ்விடத்தில் உதிரம் பொசிந்து கொண்டேயிருக்கிறது. ‘அதற்கு உன் அம்மாக்காரியும் உடந்தையாயிருக்கிறாள்’ என்பது தான் அது.

இனந்தெரியாத யாரோ ஒரு யமனால் எழுதப்பட்ட அக் கடிதத்தில் தாயைப் பற்றி இழுத்துவிட்டிருப்பது விடுபடாத வெறும் புதிராகவே பட்டது.

‘பெற்றதாய் பிள்ளைக்கு இப்படியும் செய்வாளா? எந்தத் தாய்தான் இந்தக் கொடூரமான ஈனத்துரோகத்திற்கு உடந்தையாக இருக்கமுடியும்? அப்படிப்பட்டவளுடைய சொந்த வாழ்க்கை …….? ஐயோ அம்மா!’

அசைமீட்ட ஆட்டிற்குத் திடீரென்று இரைப்படுவான் வியாதி கண்ட மாதிரியாகிறது. அது தாயைப் பற்றிய நினைவைத் தொடர்ந்து நினைக்காமல் இடைக்கொள்ளையாக அதைச் சாகடித்துவிட்ட அவர், மனதைத் திருப்பி மனைவிமேல் மேயக்கட்டுகிறார்.

பயிரும் ஆடும் அவருடையது. கயிற்றை வேறு தாராளமாக இளக்கிக் கட்டிவிடுகிறார். எப்படி மேய்ந்தால் என்ன?

அம்மானுடைய ஆட்டைத்திவசம் முடிந்த அடுத்த நாள் என்பது அவருக்கு நன்கு ஞாபகமிருக்கின்றது. அதைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கையின் கதையை உள்ளூர் இருட்டில் யாரோ ஒளித்திருந்து பகடி பண்ணிப் பேசுவது போன்ற ஒரு சலனம் மனத்திற் பிரமை ஊட்டுகிறது.

உண்மை . ஊருக்குத் தெரியாமல், அப்படியொரு மொட்டைக் கடிதம் வந்திருக்க நியாயமில்லை. அதிலும் அவரை மாப்பிள்ளையாக அடைய விரும்பி ஏமாந்தவர்களுக்கு, இதைவிட வேறு சந்தாப்பம் எப்போது கிடைக்க முடியும் ?

அடுத்த நாள்.

ஆட்டைத்திவசத்திற்குச் சமைத்த சட்டி பானை களைத் துப்புரவாக்கி வைத்துவிட்ட சுற்றத்தார் வித்துவானைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள்.

அவர்களுக்கென்ன? அடுத்த விருந்தையும் நாட் குறித்து வைத்து விட்டால் வயிற்றைச் சற்று ஆசுவாசமாக இளக்கிவிட்டுக் கொண்டு வரலாம் என்ற நினைப்பு.

கலியாணப் பேச்சு வெற்றிலைச் சமா’வுடன் ஆரம்பமாகிறது. பழஞ்சோற்றுப் புளிச்சல் எதிரெடுப்பிற்குத் தன்னை ஈடு கொடுத்துச் சமாளிக்க முடியாத பொக்கை வாய்க்கிழவரொருவர் பேச்சைத் தொடக்கி வைக்கின்றார்.

‘ஏன்ரி பிள்ளை விசாலம்’ இந்தப் பொட்டை கனகத்தின் சங்கதியைத்தான் சொல்லுறன். தாய் தகப்பனில்லாத பிள்ளையை நெடுக வீட்டிலை வைச்சுக் கொண்டு……. பொடியனும் வந்து நிக்குது. இப்ப கதைச்சாத்தானே நல்லது’ என்ற பெரியவர், எல்லுப்போல தேத்தண்ணி குடித்தால் தேவையில்லை என்ற பாணியில், அந்தப் பெரிய ஏவறையைத் தொண்டைக்குள் இருந்து வெளியே தள்ளினார்.

‘அதுக்கு நான் என்னண்ணை செய்ய?….. நானுந் தான் நாண்டுகொண்டு நிக்கிறன். அவர் ஓமெண்டு சொல்லாமலுக்கு…..’ என்று இழுத்தாள் வித்துவானின் தாய் விசாலம்.

எல்லோரும் கதைத்துப் பேசி ஆடும் நாடகம் தான் என்பது வித்துவானுக்குத் தெரியும். என்றாலும், அவருடைய மனச்சாட்சியே அவரைக் குத்திக் காட்டியபோது கனகத்தைக் கைப்பிடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டார். அதைத் தொடர்ந்து தேநீர் விருந்தொன்று சமிபாட்டிற்கு எல்லோர் வயிற்றிலும் இன்பமாகச் செல்கிறது.

அந்த லீவு முடிந்து போவதற்குள்ளாகவே வித்துவானுக்கும் கனகத்திற்கும் திருமணத்தை முடித்து வைத்து விட்டார்கள். வயது மூப்பிளமையில் இருவருக்கும் எவ்வளவோ உண்டு. பத்தாண்டுகளை முதலில் உருட்டித் தள்ளிவிட்ட வித்துவானுக்கு, முப்பது வயதுக்காரி ஒத்து வரமாட்டாளா?

திருமணம் வெகு சிறப்பாக நடக்காவிட்டாலும் மட்டுக்கு மட்டாக வெகு கச்சிதமாக நடந்தேறியது. ஆனால் ஒரு சங்கதி; அது ஒரு துக்குறி மாதிரி ஆகிவிட்டது. எல்லோருடைய வயிறுகளும் பகீரென்று பற்றி எரியத்தான் செய்தன. தவணைக் கணக்கைக்கூடக் கலியாண உற்சாகத்தில் கனகம் மறந்து போய் விட்டாளா?

கனகம் அன்றைக்கென்றே தாலி கழுத்தில் ஏறிய உடனேயே தன்னைச் சுற்றிக் கரிவட்டம் போட்டுக் காவல் செய்து கொண்ட சங்கதியிருக்கிறதே…….

மூக்கின் கொழுந்தில் யாரோ ஓங்கிக் குத்தியது போலிருந்தது, மேற்படி சங்கதியைக் கேட்ட வித்துவானுக்கு. தீட்சை கேட்ட அவருக்குத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்ட அயர்வு தட்டிற்று வாழ்க்கையில். வெட்கம் வேறு அவரைப் பிடுங்கித் தின்றதால் லீவு முடிந்து போய்விட்டது என்று சொல்லி அடுத்த நாளே கிளம்பிப் போய்விட்டார்.

நாற்பது வயதை எவ்வளவு நாணயத்துடன் கழித்த மனிதன்! ஊருக்குள் இருப்பதுகூடத் தெரியாது. அவருடைய பிரம்மச்சரியத்தில் இதுவரையில் ஒரு தவறேனும் ஏற்பட்டிருக்குமா?

கலகெதரையின் குளிர்காற்றில் கனகத்தின் நினைவு அடிக்கடி தலைகாட்டத்தான் செய்தது. இடையில் ஒருதரம் போய் வரவேண்டுமென்ற ஆசையுந்தான். என்றாலும் எங்கே ஒழிகிறது இலக்கிச் சொற்பொழிவு என்று சதா ஏதாவது ஒன்று இருந்து கொண்டேயிருக்கும். கடைசியில் ஒரேயடியாக பள்ளிக்கூட லீவு விட்ட பின்பு போய் விடுவோம் என்று தீர்மானித்திருந்தவரை, திடுதிப்பென்று வந்த மொட்டைக் கடிதம் கட்டித் தூக்கி வந்து ஊருக்குள் எறிந்து விட்டதென்றால்….

வெட்கக்கேடான சங்கதி. அவருடைய அறிவுக்கும் பெருமைக்கும் இப்படி ஒரு இழுக்கை கனகம் உண்டாக்கி விட்டாள்.

அவரால் அதை நம்பவே முடியவில்லை . என்றாலும் மனம் குழம்பிப் போய்விட்டது. சோகச் சாயல் அவர் முகத்தில் தானாகவே வந்து கவியத் தொடங்கி விட்டது.

வித்துவான் என்பதால் சந்தேகம் விட்டு விலகியிருந்து விடுமா? அன்பு அதிகமாகச் செலுத்தப்பட்ட இடத்தில் சும்மா ஒரு கீறு விழுந்தாலும் போதும், சந்தேகம் தானாகவே செழித்து வளரும்.

அவருடைய ஆண்மைக்குச் சவால்விட்ட மொட்டைக் கடிதத்தை மறுபடியும் ஒருமுறை பைக்குள் கைவிட்டு நெருடிப் பார்க்கிறார்.

அது விரிபுடையனாகச் சரசரக்கிறது.

கட்டிய மனைவி கள்ளப் புருஷன் கனகசபையுடன் சோரம் போகிறாள்’ என்றால் எட்டிநின்று கேட்டுவிட்டுப் போகக்கூடிய சமாச்சாரமா?

வெட்டிக் கொலை செய்ய வேண்டியது தான்!

இல்லையேல், நானாவது செத்தொழிய வேண்டியது.’

பல நினைவுகள் குதியாட்டமிட வித்துவான் கால்களை எட்டிப் போட்டு நடக்கிறார்.

அப்படிச் செய்யவில்லையென்றால், காலமெல்லாம் சொள்ளைக் கதைகள் பேசி எள்ளி நகையாடுமே ஊரும் உலகமும். தலைநிமிர்ந்து நடக்கத்தான் முடியுமா ஊருக்குள் என்று திரும்பவும் தன்னைத்தானே கேட்டுக் கொண்ட வித்துவானின்

நடையிலே மீண்டும் வேகம்.

இருட்டை எதிர்த்துப் பிரித்துக் கொண்டு நடக்கும் வித்துவானின் முன்னே சற்றுத் தொலைவில் சென்று கொண்டிருக்கிறதே ஓர் உருவம், அது…?

குரல், குரல்வளைக்குட் சாம்பியது. அவருடைய திடப்படுத்தப்பட்ட நெஞ்சுகூட சற்றுநேரம் வெலவெலத்துப் போய்விட்டது. வித்துவான் திகைத்து நின்று நோட்டமிட்டார். பேய், பிசாசைக் கண்டாற் கூட ஏற்படமாட்டாத திகில் ஒரு கணப் பின்னத்தில் அவரை உலுக்குகின்றது. மனித உருவமென்று நிதானித்த பின்னர் செருப்பைக் கழற்றிக் கைகளில் எடுத்துக் கொள்ளுகிறார். தூரத்தில் செல்லும் அந்த உருவத்தைத் தொடர்ந்து செல்லும் முயற்சியது.

கடுகதி வேகத்தில் நடக்கும் அந்த உருவம் அடிக்கொருதரம் பின்னும் முன்னுமாக இருட்டைத் துளாவிப் பார்த்துக் கொண்டே நடக்கின்றது.

மொட்டைக் கடிதம், சரித்திர தஸ்தாவேஜாக விரிகிறது….. பிரம்மச்சரியத்தின் இந்திரியப் புலனடக்கம் அவரை எள்ளி நகையாடுகின்றது. ஒழுக்க சீலம் சம்மட்டியால் அவருடைய மண்டையை ஓங்கி அறைந்து பிளக்கின்றது. அந்த மண்டைப் பிளவில் முன்னால் நடக்கும் உருவம் கனகசபையாக மிடுக்கு நடை போடுகின்றது… அவருடைய சேதனச் செயலையும் மீறி, அவருடைய உடல் அதன் பாரத்தை இறக்கி, அந்த உருவத்தின் பின் இறகாகப் பறக்கின்றது… அவரும் சமீபமாக வந்து விடுகிறார்.

வேலிப் பொட்டுக்கூடாக முதுகை வளைத்து உள்வளவுக்குள் தன்னை இழுத்துக் கொண்ட கனகசபை, வித்துவானின் வீட்டிற்குள் புகுந்து விடுகிறான்!

இருவரையும் தொலைத்துத் தலைமுழுகி விடுவதென்ற வீறாப்புடன் தொடர்ந்து வந்த வித்துவான், ஏன் அப்படி வேலிப் பொட்டடியில் கல்லாய்ச் சமைந்து போயிருக்கிறார் ?

வேலியைப் பிரித்துச் சென்ற பிணத்திற்கு இளநீர் வெட்டி வைத்து அழும் காட்சி

பொட்டிற்குள் வித்துவானின் உடல் இலகுவாகப் புகுந்து முன்னேறுகிறது. கதவு மூடாமற் சார்த்தப்பட்டிருக்கிறது. வீட்டிற்குரியவன் போன்று கனகசபை உள்ளே நுழைகின்றான். கதவு உள்ளே சார்த்தப்படுஞ் சப்தம் கேட்கின்றது.

வித்துவானின் உள்ளம் ஒரு கணம் குழம்பிய குளமாகின்றது. மறுகணம் தாமரை இலை நீராகின்றது. அடுத்த கணம் தாமரை இலை நீர் குளத்து நீருடன் கலந்து கலங்குகின்றது. கலங்கிய குளத்தின் நீர்த்துளி ஒன்று தாமரை இலையிலேறி, நித்திய ஜாலம் காட்டுகின்றது.

கதவை வெளிப்புறமாகப் பூட்டினார்.

அன்றொருநாள் வித்துவானுக்கும் கனகத்திற்கும் விவாகம் முடித்து வைத்த சமூகம் அங்கு கூடி நிற்கிறது. அவர்களுடைய உள்ளங்களில் துவேஷம் குடி கொண்டிருக்கின்றது. ஆனால், வித்துவான் மிக அமைதியாகச் சில வார்த்தைகளில் விஷயத்தை விளக்கி, வீட்டைத் திறந்து காட்டுகிறார்.

கனகமும், கனகசபையும் வெவெலத்து, நடுநடுங்கி விழிகளை நிலத்திற் புதைத்து நிற்கின்றார்கள்.

கூட்டத்தில் நின்ற கிழவர்களிற் சிலர் “தூ! மானங்கெட்ட சவங்கள்” என்று துப்பல் மூலம் ஆத்திரத்தைக் காட்டுகிறார்கள்.

வித்துவான் பிரம்மஞானியின் பரிபக்குவ நிலையுடன், வார்த்தைகள் தளம்பாமல் மிகவும் நிதானமாகச் சொன்னார் : உங்களுக்கு விருப்பமெண்டால், ஊரறிய வாழ்கிறது தானே ? ஏன் ஒளிப்பு மறைப்பு ? நான் வருகின்றேன்.”

ஊரைத் திரும்பிப் பார்க்காமல் வித்துவான் நடக்கத் தொடங்குகிறார்.

அந்த துன்பப்பட்ட கௌதம முனிவரே தன் மனைவி அகலிகையைக் கல்லாகச் சமைத்தார். அகலிகை, ஸ்ரீராமனின் கால் வண்ணம் படும் வரையிற் சிலையாகத் தவமிருந்தாள்.

ஆனால், கனகத்தின் மேல் தனக்கிருந்த உரிமையை சமூகத்தின் முன்பாக உதறிவிட்டு, அவளுக்கும் புதுவாழ்வு அளித்து, ஊரைவிட்டுத் தூரத்தூர நடந்து கொண்டிருக்கும் வித்துவான்…?

– 1959, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *