பறவைப் பூங்கா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 9,670 
 

அந்தப் பழங்கால பிரிட்டிஷ் கட்டடத்தை விட்டு வெளியே நடந்தாள். வெயில் முகத்தைச் சுட்டெரித்தது. இதைப் போன்ற உயரமான மேற்கூரையும் வளைவுகளையும் நீளமான தாழ்வாரங்களையும் கொண்ட கட்டடம் இன்னும் வேறு ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள். ராஃபிள்ஸ் பிளேஸில் இல்லை. டோ பிகாட் எம்ஆர்டி அருகில் மெக்டொனால்ட் ஹவுஸ் இதே போலத்தான் இருக்கும். உள்ளே போய்ப் பார்த்தால்தான் தெரியும். தினமும் நடந்து போகும் பாதையில் எதிர்ப்படும் மனிதர்கள், முகங்கள், உடைகள், வாசங்கள் பழகிவிடுவது போல் கட்டடங்களும் பழகிவிடுகின்றன. சில கட்டடங்கள் சிலீரென்று அளவுக்கதிகமாகக் குளுமையைத் தந்து மரண அறையைப் போல் பயத்தைத் தருகின்றன. சில, நண்பர்கள் போன்ற இதத்தைத் தரும். சில கட்டடங்கள் அம்மாவைப் போல் பாதுகாப்பைத் தரும். இத்தனை நாட்கள் காலையில் வேலைக்குப் போகும்போதெல்லாம் பாதுகாப்பைத் தந்த கட்டடம் இன்று அவளை வெளியே பிடித்துத் தள்ளியது. ஆட்குறைப்பு என்று சொல்லப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட அறைகள் காலியாகவே இருந்துகொண்டுதான் இருந்தன. இப்போதல்ல. நிர்மலா வேலைக்குச் சேர்ந்த அன்றிலிருந்து அப்படித்தான்.

நிர்மலாவும் ஷாலினியும் ‘வாக்-இன்-இன்டர்வியூ’ என்று ஒன்றாக நேர்முகத் தேர்வுக்கு வந்தார்கள். வரவேற்பாளர்களாக இருக்க விரும்புகிறோம் என்று சொன்னதும் இன்டர்வியூ செய்த பெண்மணி அழகாகச் சிரித்துச் சிரித்துப் பேசி, ‘இந்த ஹோட்டலில் வேலை செய்யும் அனைவருக்கும் எல்லா வேலைகளும் கற்றுத் தரப்படும். முதலில் ஹவுஸ் கீப்பராகப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வேலை நிரந்தரமான பிறகு வரவேற்பாளராகவும் வேலை செய்யலாம்’ என்று வாக்குறுதி தந்தார். எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கட்டாயமா? வாழ்க்கையில் கடவுள் முன், உற்றார் உறவினர் முன் எடுக்கப்பட்ட வாக்குறுதியை தாஸ் காப்பாற்றவில்லை. இதென்ன பெரிய வாக்குறுதி? ஒரு வேலையில் சேர விருப்பம் தெரிவித்த பின் இன்னொரு வேலைக்கு மாற விரும்புவது சின்ன விஷயம். ஆனால் இந்தச் சின்ன விஷயம் நிறைவேறாமல் போனது கூடத் தன்னுடைய துரதிருஷ்டம்தான் என்று நினைக்கவில்லை. அதைப் பற்றிப் பேசி நினைவூட்டலாம் என்றால் மேடம் மேரி சூ அந்த ஹோட்டலில் எங்கேயும் கண்ணில் படவேயில்லை. அவளுக்கும் நிறைவேறாத வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஷாலினி மாதிரி கோபித்துக்கொண்டு வேலையை விட்டுப் போய்விட்டாளா?

படுக்கை விரிப்புகள் மாற்றுவது, பூச்சாடிகளில் பழைய பூக்களை மாற்றிப் புதுப் பூக்களால் அலங்கரிப்பது, கழிவறையில் வாசனைக் காற்றைப் பரவவிடுவது, குட்டிக் குளிர்ப்பதனப் பெட்டியில் சீல் செய்து வைக்கப்பட்டிருக்கும் பான வகைகளின் சீல் பிரிக்கப்பட்டிருக்கின்றதா என்று சரிபார்ப்பது போன்ற வேலைகள் தொடர்ந்தன. ‘சீலை சும்மாத்தானே பிரித்துப் பார்த்தேன், அதிலிருந்து ஒரு சொட்டுக்கூடக் குடிக்கவில்லை. இதை ஏன் பில்லில் சேர்க்கிறீர்கள்?’ என்று அசட்டுக் கேள்வி கேட்கும் பெரிய மனிதர்கள். குடித்துவிட்டு அதற்குப் பதிலாகக் கோக்கோ கோலாவை நிரப்பி ‘என்னது, சீல் பிரிக்கப்பட்டுள்ளதா? நாங்க ஓப்பன் செய்யவே இல்லையே. உங்க ஹவுஸ் கீப்பிங்லே பிரச்சினை’ என்று சாதிக்கும் சாமர்த்தியசாலிகள், இப்படி நிறைய பேரைச் சமாளித்தாகிவிட்டது. ஒரு நாள் அறை வாடகை இருநூறு முன்னூறு வெள்ளி கட்டத் தயாராக இருப்பவர்களுக்கு ஏனோ இதில் ஒரு அல்பத்தனம் வந்துவிடும்.

ஷாலினிதான் மெல்ல விசாரித்தாள். ‘எங்களுக்கு ஏன் ஃப்ரன்ட் ஆஃபீஸ் வேலையே கொடுப்பதில்லை?’ என்று கேட்டாள். ‘ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு வந்தவர்களுக்கு எப்படி ஃபிரன்ட் ஆஃபிஸ் வேலை கொடுக்க முடியும்?’ என்று பதில் வந்தது. ஷாலினி அன்று முழுவதும் கொதித்துக்கொண்டிருந்தாள்.

“நம்பளால தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு வேலை செய்ய முடியாதா? நம்ம கையால ரூம் சாவிய எடுத்துக் கொடுத்தா நம்ப கருப்பு ஒட்டிக்கிடுமா?” என்று ஆத்திரப்பட்டாள்.

“ஆமா! பெரிய வேலை! வீட்டுக்குப் பக்கமா ஃபாக்டரிலே வேலையிருக்கு நிம்மி! வாரம் நாலு நாள் ராத்திரி வேலை, மூணு நாள் லீவு! ராத்திரி வேலை முடியலைன்னா பகல் ஷிஃப்டுக்கு மாறிக்கலாம். நீயும் வந்துடேன்” என்று தைரியமாக வேலையை விட்டாள்.

நிர்மலாவுக்கு வழக்கம்போல் தயக்கம். வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.

“நீ எப்போதான் ரொம்ப யோசிச்சிக்கிட்டேயிருக்கற பழக்கத்தை மாத்திக்கப்போறியோ? ரொம்ப யோசிச்சா எந்த இடத்திலேருந்தும் மாறவே முடியாது” என்று சொல்லிவிட்டு அவள் வேலை மாறிப் போய்விட்டாள்.

“நம்ப ரெண்டு பேரும் தினமும் நல்லா டிரெஸ் பண்ணிக்கொண்டு சிட்டி பக்கம் வேலைக்குப் போகணும். ஸ்கூல் மாதிரி யூனிஃபார்ம், ஷிஃப்ட் வேலையெல்லாம் இல்லாம ஆஃபீஸ் வேலைக்குப் போகணும்” என்று ஆசைப்பட்டதே ஷாலினிதான். கிடைத்த வேலைக்குத் தயக்கம் இல்லாமல் மாற அவளால் முடிகிறது. நிர்மலாவால் முடியவில்லை. தான் செய்யும் வேலையில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. தினமும் விதவிதமான மனிதர்களைச் சந்திக்க முடிந்தது. தினமும் செந்தோசாவுக்கும் பறவைப் பூங்காவுக்கும் எப்படிப் போவது என்று வழி சொன்னாள். தான் கடைசியாக செந்தோசாவுக்கும் பறவைப் பூங்காவுக்கும் போனது எப்போது என்று யோசித்துப் பார்த்தாள். தொடக்கநிலை ஐந்தில் படிக்கும்போது ‘இளம் விஞ்ஞானி’ பேட்ஜ் வாங்குவதற்காக மிஸஸ் சான் கூட்டிக்கொண்டு போனாள். அந்தப் பறவைகள் இன்னும் உயிரோடு இருக்குமா? கிளிகளும் நாரைகளும் எத்தனை நாட்கள் உயிரோடு இருக்கும்?

இருபது வருடம் இருக்குமா? இயற்கைச் சூழலைவிடச் செயற்கைச் சூழலில் வாழும் பறவைகள் இன்னும் அதிக நாட்கள் வாழலாம். வேளாவேளைக்குத் தவறாமல் உணவு. உடலில் கோளாறு என்றால் உடனடியாகக் கவனிக்க மருத்துவ வசதிகள். தான் பார்த்த அதே கிளிகள் இன்னமும் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கலாம். கணக்குகள் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கலாம். அதே நாரைகள் இறக்கைகள் விரித்து வரவேற்பு தந்துகொண்டிருக்கலாம். தனக்கும் பத்து வருடமாக அதே இடம். அதே வேலை. எண்ணெயிட்டுச் சீராக இயங்கும் இயந்திரமாய் ஓட்டம். திடீரென்று பறவைப் பூங்காப் பறவைகளிடம் ‘இந்தப் பூங்காவில் உங்களுக்கு இடமில்லை; இனிமேல் இங்கே உங்களுக்கு வேலை இல்லை’ என்று துரத்திவிட்டால் அவை எங்கே போகும்? பறக்கும் சக்தி இருந்தாலும் அதை முழுமையாகப் பயன்படுத்திப் பறந்துசெல்லப் பழகாத பறவைகள். அதிலும் சில அங்கேயே பிறந்து வளர்ந்திருக்கலாம். இரை தேடி அலையும் அவசியமே இல்லாமல் வாழப் பழகிவிட்ட பறவைகள். என்ன செய்யும்?

ஹோட்டலில் சில சமயம் சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்தித்துப் பேசியதைத் தவிர வேறு எந்தப் பரபரப்பும் இல்லாமல் ஓடியது வாழ்க்கை. தன்னிடம் பேசுவதற்குக்கூட யாருமில்லை என்ற எண்ணமே அவளைத் துக்கத்தில் ஆழ்த்தியது. தனக்கு மட்டும் ஏன் எதுவுமே எளிமையாக அமையவில்லை? காதல், கல்யாணம், குடும்பம், குழந்தைகள் இப்படி எதுவுமே எளிதாக இல்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தொழிற்பேட்டையில் ஏதோ ஒரு வேலை, மாதாமாதம் சம்பளம், சீனப் புத்தாண்டு சமயம் போனஸ், பிக்கப் வேன் வைத்துக்கொண்டு சாமான்களை ஏற்றி இறக்கி வியாபாரம் பண்ணிக்கொண்டு, வார இறுதியில் அந்த வேனிலேயே ஜேபிக்கு அல்லது தேக்காவுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் தேவையானவற்றையெல்லாம் வாங்கிக்கொண்டு, அடுக்குமாடி வீட்டின் கீழேயே மினிமார்ட் பூக்கடை, போட்டோ காப்பி பண்ணும் கடை. மாதம் ஆயிரத்தைந்நூறு வெள்ளி கிடைத்தால் கூடப் போதும், குடும்பத்தை ஓட்டிவிடலாம். இரண்டு குழந்தைகள். மூத்தது கிண்டர்கார்ட்டன்; இரண்டாவதை நர்ஸரிப் பள்ளியில் கொண்டு விட்டுவிட்டுப் பள்ளிக்கூட வாசலிலேயே மூன்று மணி நேரமும் சின்னது அழுகின்றதா என்று பார்த்துக்கொண்டு, வீட்டில் சமைத்துக் கொண்டு, “பத்து வெள்ளி கொடுத்துட்டுப் போங்க! மார்க்கெட்டுப் போகணும்”, என்று முழுமையாக ஓர் ஆணைச் சார்ந்து வாழும் வாழ்க்கையை அவளால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

ஷாலினியும் இப்படித்தான் சாதாரணக் கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கினாள்.

“பரிசம் போடறாங்க! வீட்டுக்கு வா!”, என்று கூப்பிட்டு விஜயனை அறிமுகப்படுத்தினாள். பழக்கப்படாத சேலையில் கால்கள் தரையிலேயே படாததுபோல் மிதந்து கொண்டிருந்தாள். விஜய் விஜய் என்று சுற்றிச் சுற்றி வந்தாள். ரிஜிஸ்தர் செய்கிறோம் என்று ஒரு கொண்டாட்டம், விருந்து. “வீடு வாங்கிட்டுத்தான் கல்யாணம். சிம்பிளா கோவில்ல சைவச் சாப்பாடு போட்டு நெருங்கின சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டு செஞ்சா போறும்” என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள். ஐந்து வருடமாயிற்று. இருவருமாகச் சேர்ந்து வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுக் கோவிலில் முறைப்படி கல்யாணமில்லாமலேயே கிட்டத்தட்ட கணவன் மனைவியாக வாழ்ந்த அலுப்பு மட்டும்தான் மிஞ்சியது. ஷாலினி இன்னும் நம்பிக்கையோடு, ‘கல்யாணம் முடிஞ்சதும் ஹனிமூன் நியுசீலாண்ட் போகலாம்னு இருக்கோம்’ என்றாள். இனிமேல் புதுமணத் தம்பதிகளாக அவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருந்தது. யாருக்கு?

தாஸ் இப்படியெல்லாம் நிர்மலாவைக் காத்திருக்கவைக்கவில்லை. எல்லாம் புயல் வேகத்தில் நடந்து முடிந்தன. பார்த்தவுடன் காதல். அடுத்த சந்திப்பிலேயே தன் நண்பர்கள் எல்லார் முன்னிலையிலும் நாடகம்போல் மண்டியிட்டுத் தன் காதலை ஏற்றுக்கொள்ளச் சொன்னான். அதுவும் அவன் விளையாடுகிற கால்பந்தாட்ட மைதானத்திலேயே! விளையாடும்போதே காதலையும் சொன்ன விளையாட்டு வீரர் என்று உள்ளூர் நாளிதழில் செய்தி வேறு வந்தது. காதலின் உச்சத்தில் இருந்தபோது அவன் செய்தது எல்லாமும் பெரிய புரட்சியாகத் தெரிந்தன. தன்னை வாழ்விக்க வந்த தேவதூதனாக அவன் தெரிந்தான். காதலைத் தெரிவித்ததும் தன் அம்மாவிடம் அறிமுகம் செய்துவைத்தான். மதம் மாறினால்தான் அடுத்த பேச்சு என்று அவன் அம்மா சொன்னதும் இதென்ன பெரிய விஷயம் என்று நிர்மலா ‘ஏஞ்சல்’ என்று பெயர் மாற்றிக்கொண்டு கிறித்துவ மதத்திற்கு மாறினாள். இதெல்லாம் அவள் அம்மாவிடம் சொல்லவில்லை. சொன்னாலும் என்ன புரியப்போகிறது என்று சொல்லவில்லை. சர்ச்சில் மோதிரம் மாற்றித் திருமணத்தை உறுதி செய்தபோதுதான் அம்மாவிடமும் சின்னம்மாவிடமும் மெல்லச் சொன்னாள். அம்மாவிடமிருந்து ஒரு உறுமல்தான். பேச்சுக் குறைந்துபோனதிலிருந்தே இப்படித்தான். சின்னம்மாதான் அம்மா இதைச் சொன்னாள், அதைச் சொன்னாள் என்று அம்மாவின் ஒவ்வொரு அசைவுக்கும் எதாவது அர்த்தம் சொல்வாள். சின்னம்மா வழக்கத்திற்கு மாறாக ஒன்றும் சொல்லவில்லை.

“ஆமா! இந்த ரெண்டு கிழவிகளும் சேந்து உனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப்போறோமான்னு நீயே பாத்துக்கிட்டே! கல்யாணத்தைப் பாக்கறதுக்காவது உங்க ஆத்தாளைக் கூட்டிக்கிட்டுப் போ!” என்றாள். மரியதாஸுக்குத் தான் விளையாடுகிற கால்பந்தாட்டம்போல் பந்தை உதைத்து உதைத்துத் தள்ளி கோல் போடும் வேகம்தான் எல்லாவற்றிலும்!

மரியதாஸ் முதன் முதலில் வீட்டுக்கு வந்தபோது. “என்ன, இந்த ரெண்டு பைத்தியக்காரக் கிழவிகளும் இங்க நம்ம கூடத்தான் தங்கியிருப்பாங்களா?” என்று கேட்டான். அவன் ஏதோ பெரிய ஜோக் அடித்ததைப்போல் விழுந்து விழுந்து சிரித்தாள். ஆண்கள் இப்படித்தான் நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பார்கள் என்ற அசட்டுத்தனமான எண்ணம்தான்!

அம்மா ஆசையாக வாங்கி வைத்திருந்த புடவைகளில் எதையுமே இவள் கட்டியதில்லை. புடவை மூட்டைக்காரரிடம் அம்மாவுக்காக நிர்மலாதான் புடவை தேர்ந் தெடுத்துத் தருவாள். அம்மா கட்டி அழகு பார்க்க ஏது நேரம்? சரோங்கும் சட்டையும்தான் அம்மாவின் உடை. எப்போதும் சமையல் வாசம் வீசும் துணிகள். என்றாவது கோவிலுக்குப் போகும்போது ஆசையாக வாங்கி வைத்த புடவையில் ஒன்றை எடுத்துக் கட்டிக்கொள்வாள். அந்தப் புடவையில் மட்டும்தான் அம்மாவின் சமையல் வாசம் வீசாது. குஞ்சலங்களாகத் தொங்கும் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அம்மாவின் பின்னால் போவாள். தன் கல்யாணத்தன்று அம்மாவைப் புடவை கட்டவைத்துக் கிளப்பினாள். அம்மாவுக்கு ரொம்பப் பிடித்தமான கிளிப் பச்சை நிறப் புடவை. அம்மா ஏதாவது கோவிலுக்குப் போகப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டு கிளம்பியிருப்பாள். சர்ச்சைப் பார்த்ததும் மிரண்டுபோய் உள்ளேயே வர மாட்டேன் என்று வெளியில் நின்றுவிட்டாள். ஆட்டுக் குட்டியை இழுத்துக்கொண்டு போவதுபோல் அம்மாவைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போகும்படியாயிற்று. “என்ன இது, இப்படி டிராமா போடறாங்க” என்று பல்லைக் கடித்துக்கொண்டான் தாஸ்.

திருமணம் முடிந்ததும் பெரிய விருந்து. தேனிலவு. எக்கச்சக்கச் செலவு. எதற்கு இத்தனை செலவு என்று கணக்குச் செய்ததில் தலைவலிதான் மிச்சம். தன் பக்க விருந்தினர்கள் என்று எண்ணி இருபத்தைந்து பேர்கூட வரவில்லை. எல்லோரும் தாஸ் கூட்டாளிகள், உறவினர்கள். எல்லோரையும் ரொம்ப நெருக்கமானவர்கள் என்று சொல்லிக்கொண்டான். இத்தனை மனிதர்களிடம் நெருக்கம் என்று காட்டிக்கொண்டவன் உண்மையாகவே நெருங்கிய மனிதர்களிடம் நெருக்கம் காட்டவில்லை. அதையும் எத்தனையோ நாட்கள் அவள் உணரவேயில்லை. மரியதாஸ் தன் வீட்டுக்கு நிர்மலாவைக் கூட்டிக்கொண்டு போய்க் குடும்பம் நடத்தவில்லை. இங்கே இவள் வீட்டிலும் வந்து தங்கவில்லை. நினைத்தபோது வந்து தங்குவான். தங்கிவிட்டுப் போகும்போதெல்லாம் இருநூறு வெள்ளி கொடு, ஐநூறு வெள்ளி கொடு என்று தவறாமல் கேட்டு வாங்கிக்கொண்டு போவான். பணம் இல்லையென்றால் சரி, அந்தச் செயினைக் கொடு, வளையலைக் கொடு என்று உரிமையோடு எடுத்துக்கொண்டு செல்வான்.

“ஒருநா தங்கிட்டுப் பணம் பிடுங்கிட்டுப் போறானே! அவன் குடுத்தனம் நடத்துற வீடா இல்லை வேற எதாவதுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கானா?” அம்மாவே முணுமுணுத்தபோதுதான் நிர்மலாவுக்கு அவன் ஏன் இப்படிப் பணம் பணம் என்று அலைகிறான், அப்படியென்ன செலவு என்று கேட்கத் தோன்றியது.

“ஆம்பிளைக்கு ஆயிரம் செலவு இருக்கும். ஃபுட்பால் டீம் வச்சி நடத்தறதுன்னா எத்தினி செலவு தெரியுமா? இப்ப செலவழிச்சா அப்புறமா ரெண்டு மடங்காத் திருப்பிடலாம். இதெல்லாம் உனக்குப் புரியாது” என்பான்.

“நா இங்க வரச்ச உன்னோட அம்மாவையும் சின்னம்மாவையும் சும்மா வெளியில வந்து சுத்தாம இருக்கச் சொல்றியா? நா போன் பேசவே முடியலை. இப்படிச் சுத்தி சுத்தி நடக்கறதைப் பாத்தா எரிச்சலாயிருக்கு” என்று ஒரு நாள் கத்தினான்.

அம்மாவுக்குச் சும்மாயிருக்க முடியாது. எப்போதும் நடைதான்! சாதாரண நடையில்லை. அசுர நடை! எதையோ தொலைத்துவிட்டுத் தேடும் அவசர நடை! கதவைத் திறந்து வைத்துவிட்டால் அவ்வளவுதான். வெளியில் நடக்க ஆரம்பித்துவிடுவாள். அந்தக் குடியிருப்புப் பகுதியில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் அம்மாவைத் தெரிந்திருந்ததால் அம்மா இப்படித் தனியே நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் மெல்லப் பேச்சுக் கொடுத்துத் திரும்ப வீடுவரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார்கள்.

“என்னம்மா! இப்படி நீ கிளம்பிப் போய்டறியே” என்று கேட்டால், “நான் என்ன சின்னப் புள்ளையா தொலஞ்சு போறதுக்கு? இந்தா இருக்கிற கோயிலுக்குப்போனேன்” என்று பதில் சொல்வாள்.

அந்தக் கோவிலை இடம் மாற்றிவிட்டார்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் அம்மாவுக்குப் புரிவதில்லை. என்றாவது அம்மா தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கும்போது “அம்மா! அந்தக் கோவிலுக்கு இப்ப பஸ் எடுத்துதான் போகணும்! வேற இடத்துக்கு மாத்திட்டாங்க!”, என்று சொல்லிப் பார்த்தாள்.

அம்மா, “கோவிலை வேணா இடம் மாத்தலாம். சாமிய இடம் மாத்த முடியுமா? நான் சின்னப் புள்ளேலேருந்து இருக்கிற சாமி இப்பொ எங்கே போயிருக்கும்?” என்று கேள்வி கேட்டபோது பதில் சொல்ல முடியவில்லை. கல்முகத்துடன் பிரார்த்தனைகளை வாங்கிக்கொண்டு கருணையற்ற விதி படைத்த கடவுளிடம் அம்மா கொண்டிருந்த நம்பிக்கைகளை மாற்ற முடியாதுதான்.

“சின்னம்மா! நீங்களாவது கொஞ்சம் பாத்துக்கக் கூடாதா? அம்மா பாட்டுக்கு இப்படித் தனியாக் கிளம்பிப் போய் அடிபட்டு ஏதாவது ஆச்சுன்னா?” என்று சொல்லிப் பார்த்தாள்.

“நா ஒருத்தி இங்க வந்து மாட்டிக்கிட்டேன். இந்த ஆயா வேலையை வெளியே எங்கியாவது போய்ப் பாத்தேன்னா ஆயிரம் வெள்ளி சம்பளமாவது கிடைக்கும். உங்காத்தாவுக்கு நாந்தான் கதவைத் தொறந்துவிட்ட மாதிரி பேசறியே! கதவு கொஞ்சம் தொறந்து இருந்தா ஓடிர்றா! உங்கம்மாவைப் பாத்துக்க ஒரு மெயிட் ஏற்பாடு செய்யி! நானும் உன்னிய மாதிரி வேலைக்குக் கிளம்பிடுவேன்.”

சின்னம்மாவுக்குச் சாதாரணமாகவே பேசத் தெரியாது. இப்படி வாயால் கொட்டியே எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடிந்ததில்லை. அக்காவும் தங்கையுமாக இப்படி வாழ்ந்து பழகிவிட்டார்கள். எப்போதும் ஓர் ஆங்காரம். சின்னம்மாவுக்குத் தன் வாழ்க்கையை எல்லோரும் சேர்ந்து திருடிவிட்டதுபோல் ஒரு பதட்டம்.

“இப்ப முன்ன மாதிரி பழைய ஆளுங்களைக் காணறதில்லை. பாதிப் பேர் செத்தாச்சு. மிச்ச மிருக்கறவங்களும் வீடு மாறிப் போய்ட்டாங்க! முன்னபின்ன தெரியாதவங்களுக்கு நின்னு உதவி செய்யற அளவுக்கு இப்போ யாருக்கு நேரமிருக்கு?” என்று கேட்டதும் சின்னம்மா ஒன்றும் சொல்லவில்லை. அம்மாவைவிட்டால் சின்னம்மாவுக்கும் யாருமில்லை. அம்மாவைப் பார்த்துக்கொள்ள இயற்கையாகவே அமைந்த துணை! ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் என்பதுதான் இயல்பு என்றாலும் இருவருக்குமே அது அமையவில்லை. அம்மா அப்பாவைப் பற்றிப் பேசியதேயில்லை. சின்னையாப் பிள்ளை என்று பெயரின் பின்னால் வந்த தொடர்பைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அதைப் பற்றி எப்போதும்போல் சின்னம்மா மட்டும் “கையிலே ஒரு பொம்பளைப் புள்ளையக் கொடுத்துட்டு, இருக்கியா செத்தியான்னுக் கூடப் பாக்கலையே அக்கா!” என்று எப்போதாவது புலம்புவாள்.

“ஆமா! இருந்திருந்தா இன்னும் மூணு நாலு புள்ளைங்க மட்டும் மிஞ்சியிருக்கும். போவுது போ. இந்த மட்டும் கரையேத்தறதுக்கு ஒரு புள்ளையோட விட்டுவிட்டுப்போய்ட்டானே!” என்று அம்மா அதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால் சின்னம்மாவுக்குக் கல்யாணத்தின் மீது இருந்த நம்பிக்கை மறையவில்லை. ரொம்ப நாள் தனக்குக் கல்யாணம் நடக்கும், குழந்தைகள் பிறக்கும் என்ற வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தில் கொண்ட அசையாத நம்பிக்கை! அது நடக்கவேயில்லை என்ற நிலை ஆனபோது வாழ்க்கையோடு ஏற்பட்ட பிணக்கு நாளாக நாளாக ஆங்காரமாக மாறிவிட்டிருந்தது. பி. சுசீலாவின் பாடல்களை மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்த சின்னம்மாவின் உருவம் அவள் நினைவிலிருந்து மறைந்துபோய்விட்டது. ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், அந்த ரகசியத்தை ஒருவரிடமும் சொல்லிவிடாதே’ என்று பொம்மையை வைத்துக்கொண்டு பாடும் சினிமாக் கதாநாயகியைப் போல் கற்பனை வாழ்வு மட்டுமே மிஞ்சியது.

தாஸ் வீட்டில் தங்கும் நாள்களில் அம்மாவை ஓர் அறையில் கட்டிப் போட்டதுபோல் வைப்பது கஷ்டம்தான். அம்மா உழைப்பில் வாங்கிய வீடு. வருடக் கணக்கில் வெங்காயம் உரித்து, மிளகாய் அரைத்து, சமையல் வேலைசெய்து வாங்கிய வீடு. அதில் அம்மா உரிமையாக நடமாடக் கூடாது என்று அவன் சொன்னதும் அதை அநியாயம் என்று சொல்லத் தெரியவில்லை. ஏன் அவனை எதிர்த்து எதுவுமே செய்ய முடிந்ததில்லை என்பது புரியவில்லை. ஆண்கள் அற்ற வீட்டில் வாழ்ந்து பழகிவிட்டவளுக்கு முதல் முதலில் ஓர் ஆணிடம் தன்னைக் கொடுத்த மயக்கமா! அந்த மயக்கம்கூட அவள் எதிர்பார்த்த உறவிலிருந்து மாறுபட்டது. அவசர அவசரமாக இயந்திர கதியில் இயங்கி முடித்துவிடுவான். ஏதாவது பேசுவான், காதில் ஏதாவது கிசுகிசுப்பான், முத்தமிடுவான் என்ற எந்த எதிர்பார்ப்பிற்கும் இடமில்லாமல் இரை தேடும் கோழி இரை கிடைத்ததும் கொத்தி முடித்து இடத்தை விட்டுக் கிளம்பிவிடுவதைப்போல் முடிந்துவிடும் அவன் செயல்கள். அவன் வரும்போதெல்லாம் தோன்றும் பரபரப்பு, ‘சே! இவ்வளவுதானா!’ என்ற ஏமாற்றத்தில் முடியும். எல்லாம் முடிந்தபின் அவனுடன் அவன் உடல் சூட்டை அனுபவித்தபடி பக்கத்திலேயே படுத்திருக்கலாம் என்று நெருங்குவாள். அவளிடமிருந்து விலகி இரவு பகல் எந்நேரமும் போனில் பேசிக்கொண்டிருப்பான்.

சாதாரணப் பேச்சே கிடையாது. “அவன் என்னை யாருன்னு நினைச்சிட்டிருக்கான்? நான் நேர்ல வந்து பேசிக்கறேன். மலேசியாலேந்து ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கேன். இங்க இருக்கறவங்க யாரும் ஒண்ணும் செய்ய முடியாது.” உருட்டல் மிரட்டல் பேச்சுத்தான். பேசி முடித்ததும் அவசர அவசரமாகக் கிளம்புவான். அந்த அவசரத்திலும் மறக்காமல் பணம் கேட்டு வாங்கிக்கொண்டுதான் கிளம்புவான்.

சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போதுகூட யாராவது தன்னை அடித்துவிட்டார்கள், திட்டிவிட்டார்கள் என்றால் உடனே அம்மாவிடம் ஓடி வருவாள். அம்மா வந்து நாட்டாமை செய்ய வேண்டும். சாப்பாட்டுக் கடையில் எத்தனை கூட்டமிருந்தாலும் அம்மா அத்தனை வேலையையும் விட்டுவிட்டுத் தன்னுடன் பள்ளிக்கு வர வேண்டும். அம்மா அசரமாட்டாள்.

“உனக்கு வாயில்லை! கையில்லை! எங்கிட்ட வந்து சொல்றதை டீச்சர்கிட்டப் போய்ச் சொல்லு!” என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான். தன்னை யாருமற்ற அனாதைச் சிறுமியாகக் கற்பனை செய்துகொண்டு கழிவிரக்கம் அதிகமாக அழ ஆரம்பித்துவிடுவாள். அவ்வளவுதான். அஞ்சலை தன் வேலையை அப்படியே போட்டுவிட்டு அவளுக்காகச் சண்டை போடக் கிளம்பி விடுவாள். வளர வளர, “அம்மா நீ எதுக்கு என் ஸ்கூலுக்கு வர்றே?” என்று சண்டை போடுவாள். தன்னால் இனி மேல் தன் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்ற தைரியம் வந்ததும் அம்மா தேவையில்லாமல் போயிற்று.

“பெரிய மனுஷியாய்ட்டே! இனிமே நா ஸ்கூலுக்கு வந்தா உனக்குப் பிடிக்காது. சரி, சோறு போடவாவது அம்மா வேணுமா?’ என்று அம்மா சிரித்துக்கொண்டே கேட்டாள்.

தாஸ் பணம் கேட்டபோதெல்லாம் அம்மா குருவி சேர்ப்பதுபோல் சேகரித்த நகையெல்லாம் கொடுத்தாகிவிட்டது. இதற்கெல்லாம் அம்மாவிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை.

“தாஸ் வர்றப்ப நீங்க ரெண்டு பேரும் உங்க ரூமிலேயே இருங்களேன். அம்மா இப்படி நடக்கறது அவருக்கு ரொம்பத் தொந்தரவா இருக்கு” என்று சொன்னதும், “ஆமா! பெரிய புருஷனைக் கண்டுட்டே! நானும் உங்கம்மாவும் பாக்காத புருஷன்! இப்படி ராத்திரித் தங்கிட்டு மறுநா உங்கிட்ட பணம் வாங்கிட்டுப் போறவனுக்குப் பேரு என்ன தெரியுமா? ஒரு நா உங்க மாமியா வீட்டுக்குப் போயிருக்கியா? அவங்கதான் மருமவன்னு துணிமணி, நகைநட்டுன்னு எடுத்துக் கொடுத்திருக்காங்களா? ஏதாவது நான் கேட்டா எனக்கு வாய் ஜாஸ்திம்பே! உங்கம்மாவுக்கு எதுவும் புரியாதுன்னு நீ வேண்ணா நெனச்சிக்கிட்டு இருக்கலாம். அவளுக்கு எல்லாம் புரியுது. அவ புலம்பற புலம்பலை வெச்சுத்தான் சொல்றேன்” என்றாள் சின்னம்மா. அம்மாவுக்கு முன்பு போல் நிதானம் இல்லை. ஞாபகமும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தால் அவளுக்கு எப்படியோ இதெல்லாம் புரிந்துவிடுகிறது.

கடைசியில் அவள் பயந்ததுபோல்தான் எல்லாம் முடிந்தன. பணம் பணம் என்று எப்போதும் பணத்திற்காகப் பேயாய் அலைந்தான். ஊரெல்லாம் கடன். எல்லாக் கடன்காரர்களிடமும் நிர்மலா வீட்டு முகவரியைக் கொடுத்துவிட்டு எங்கே போனான் என்றே தெரியாமல் கொஞ்ச நாள் அலைந்துகொண்டிருந்தான். கடன்காரர்கள் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் வாசலில் பெயிண்டைக் கொட்டி, ஜன்னலிலும் கதவுகளிலும் சிவப்பு மையால் எழுதப்பட்ட வாக்கியங்களை போஸ்டர் ஒட்டி, கடனைத் திருப்பிக் கட்ட முடியாத அவமானத்தை ஊர் முழுதும் தெரிவித்தார்கள். அம்மா முகத்திலும் சின்னம்மா முகத்திலும் வாசலில் எந்த ஒரு சின்னச் சத்தம் கேட்டாலும் பய ரேகை. அக்கம் பக்கத்தினர் அவளிடம் சாதாரணமாகப் பேசவே பயந்தனர். போலீஸ், கோர்ட், விசாரணை என்று அவமானப்பட்டு அலைந்து, அவன் ஜெயிலுக்குப் போன பிறகுதான் நிம்மதியாக வீட்டில் இருக்க முடிந்தது. ஆனாலும் பணப் பிரச்சினை பூதமாகத் துரத்தியது. வீட்டில் இருக்கும் ஓர் அறையை வாடகைக்கு விடலாம் என்று ஆள் தேடினாள்.

ஒருவருக்கு இருவராக வந்தார்கள். இருவருக்கும் மாறி மாறி ஷிஃப்ட் வேலை. ஒரு சமயத்தில் ஒருவர்தான் வீட்டில் இருப்பார். எப்படியோ அதிகப்படி வருமானம் வந்தால் சரியென்று வாடகைக்கு விட்டாயிற்று. ஆளுக்கொரு பெட்டி, பையுடன் தங்குவதற்கு வந்தார்கள். சின்னம்மா கேள்விகளால் குடைந்து எடுத்துவிட்டாள்.

“எங்க ஃபாக்டரிக்குப் பக்கமாயிருக்கு! தேவையில்லாம பஸ்ஸும் ரயிலும் புடிச்சு அலைய வேண்டாம்னு இந்த ரூமை வாடகைக்கு எடுத்தோம்” என்று சண்முகமும் ராஜேந்திரனும் சொன்ன பிறகு கொஞ்சம் சமாதானம் ஆனாள். முதல் மாதம் ரூம் கதவு அடைத்தே கிடந்தது. தேவையில்லாமல் வெளியில் வரவே தயங்கினார்கள். பிறகு அந்த இறுக்கம் குறைந்து கொஞ்சம் சகஜ பாவம் வர, காபி, டீ குடிக்க, சமையலறையை உபயோகித்துக்கொள்ளலாமா என்று தயங்கித் தயங்கித்தான் ராஜேந்திரன் அனுமதி கேட்டான். சண்முகத்துக்குப் பகலெல்லாம் வேலை. அவன் சாப்பாட்டுக்குப் பிரச்சினையில்லை. ராஜேந்திரனுக்குத்தான் இரவு நேர வேலை. ராத்திரி தூங்குவதுபோல் பகலெல்லாம் தூங்க முடியாதே! பசித்தால் அதற்காக எழுந்து சாப்பாட்டுக் கடையைத் தேடிப் போய்ச் சாப்பிட அலுப்பாக இருக்கும். ஒரு அவசர சமையல் செய்து சாப்பிட சமையலறையை உபயோகிக்க ஆரம்பித்தான். வெளியில் சுதந்திரமாக வந்து அம்மாவுடனும் சின்னம்மாவுடனும் பேசிக்கொண்டிருப்பான். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பான். சின்னம்மா சமையல் செய்ய அலுத்துக்கொள்ளும்போதெல்லாம் சாப்பாடு வாங்கி வருவான். அவனே ஏதாவது சமையல் செய்தும் தர ஆரம்பித்தான்.

அன்று நிர்மலாவுக்குத் தலைவலி. காய்ச்சல் வரும் போலிருந்தது. பசியுடன் வந்தாள்.

“சாப்பிட ஏதாவது இருக்கா” என்று கேட்டாள்.

“ம்! இன்னிக்கு வெறும் ரொட்டிதான்! கையிலே ஏதாவது காசிருந்தாத்தானே மார்க்கெட்டுக்குப் போய் வாங்கலாம். உங்கம்மாவுக்கு மீன் இல்லேன்னா சாப்பாடு இறங்காதே!” சின்னம்மா ஆரம்பித்துவிட்டாள்.

நிர்மலாவுக்கு அலுப்பாக இருந்தது. தாஸைப் பார்த்துவிட்டு வந்த அலுப்பு.

வழக்கம்போல் அந்தக் கட்டடத்தையும் சுற்றுப் புறத்தையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இதுவும் பழங்காலக் கட்டடம் போலத்தான் இருந்தது. சுற்றிலும் பெரிய மைதானம். அதைச் சுற்றிலும் பெரிய, உயரமான முள்கம்பி வேலிகள். கம்பி வேலி முடியும் உயரத்தில் பெரிய வளையங்களாய்ச் சுருட்டப்பட்டிருந்த கம்பி வேலிகள். போகும் பாதை யெங்கும் மஞ்சள் நிறப் பூக்கள் தீப்போல் பரவிக் கம்பளம் விரித்திருந்தன. தீ மேல் நடக்க முடியுமா? தீ என்பது வெளியில் தகிக்கும் சூடு மட்டும்தானா? உள்ளுக்குள் பொங்கும் வெம்மைதான் உயிரா? பூக்களுக்குள்ளும் இந்த உயிர்த் தீதான் இப்படி மஞ்சள் நிறம் தருகிறதா? இந்தப் பூக்களை இங்கே வளர்ப்பதற்கு தாஸ் உதவியிருப்பானா? அந்த இடத்திற்குப் பொருத்தமில்லாத இதத்தைத் தந்தன அந்த மலர்கள். இவளைப் போலவே பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் காத்திருந்தனர். என்ன குற்றம் செய்து இவர்களின் கணவர்கள், இந்தக் குழந்தைகளின் அப்பாக்கள், இந்தப் பெற்றோரின் மகன்கள் சிறையில் இருக்கிறார்களோ?

தாஸ் நிர்மலாவைப் பார்த்ததும் பரபரத்தான்.

“பன்னீரைப் பாக்கச் சொன்னேனே! பாத்தியா? அவன் எனக்கு ரெண்டாயிரம் வெள்ளி கொடுக்கணும். ஜோசப் பணம் தர்றேன்னான். அவனையும் பாத்து வாங்கிடு! நம்ப லாயரைப் பாத்து பெயிலுக்கு ஏற்பாடு செஞ்சியா?”

“பெயில் எடுக்கவே முப்பதாயிரம் வெள்ளி கட்டணும். அவ்வளவு பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்யறது. அதெல்லாம் இப்போ முடியாது. பேசாம மூணு வருஷத்தை நல்லபடியாக முடிச்சுட்டு வாங்க.”

“நா வெளிய வந்ததும் என்னை உள்ள தள்ளினவங்களைச் சும்மாவிட மாட்டேன். என்னை ஏமாத்திட்டு அத்தனிப் பேரும் வெளில இருக்காங்க!” என்று ஆத்திரத்துடன் கத்தியதைக் கேட்டதும் தாஸ் வெளியே வந்தும் தனக்கு ஒன்றும் இன்பமான வாழ்க்கை காத்திருக்கவில்லை என்பது புரிந்தது. நல்லவேளை, இந்தக் குழப்பமான தாம்பத்தியத்தில் குழந்தை பிறக்கவில்லை. அவன் பெயர் சொன்ன ஆட்கள் யாரும் தாஸ் பற்றிப் பேசக் கூடத் தயாராக இல்லை. முப்பதாயிரம் வெள்ளி கட்டினால்தான் பெயில் என்று லாயர் சொல்லிவிட்டார்.

இதை அவனிடம் சொன்னால், “முப்பதாயிரம்தானே! எப்படியாவது புரட்டிக்கொண்டு வந்து கட்டிடு. நா வெளியே வந்ததும் அதை உடனே திருப்பித் தந்துடலாம்” என்று பிடிவாதம் பிடித்ததைக் கேட்டு அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. கையில் முப்பது வெள்ளிகூட இல்லாமல் வந்திருக்கிறாள். முப்பதாயிரம் வெள்ளி கட்டி இவனை வெளியில் கொண்டு வந்து இவன் குற்ற எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா? முப்பதாயிரம் வெள்ளிக்கு யாரிடம் போய்க் கையேந்த முடியும்? தண்டனை உறுதியான பிறகும், “லாயரைப் பாத்துப் பேசி அப்பீல் பண்ணச் சொல்லு”, அங்கப் போய் அவனைப் பாரு, இவனைப் பாரு என்று வழக்கமான அர்த்தமில்லாத கட்டளைகள், எதிர்பார்ப்புகள்.

அவனைப் பார்த்துவிட்டு வந்தாலே உடலின் சக்தியெல்லாம் உறிஞ்சிவிட்ட மாதிரி ஒரு பலவீனம் வந்துவிடுகிறது. மாதம் ஒரு முறை தாஸைப் போய்ப் பார்க்காமல் இருக்கவும் முடிவதில்லை. அவன் அம்மாவிடம் போய் ஒரு முறை சொன்னதற்கு, “அவன் பாவத்தின் சம்பளம் இந்தத் தண்டனை!” என்று சொல்லிவிட்டு, “இந்த முறை அவனுக்காக ஏற்பாடு செய்கிற பிரேயர் மீட்டிங்கில் நீயும் கலந்துகொள். அவன் செய்த பாவத்திலிருந்து மீண்டு வருவான்” என்று வெறும் ஆறுதல், அதுவும் இவளுக்குத் தெரியாத, புரியாத வார்த்தைகளில் ஆறுதல் சொன்னாள். எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று சொல்வது என்ன மதமாக இருந்தால் என்ன? தன்னுடைய நிலைமையின் தீவிரம் புரியாதபோது எந்தக் கடவுளிடமும் போய் முறையிடுவதில் என்ன தீர்வு கிடைத்துவிடும்?

“ரொம்பப் பசிக்குதே! சாப்பிட ஏதாவது இருந்தா சாப்பிட்டுட்டு ஒரு பனடால் போட்டுக்கணும்” என்று சொன்னதும், “இந்தாங்க, இதைச் சாப்பிடுங்க! ரவா உப்புமா. சைவம்தான்!” என்று ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தான் ராஜேந்திரன்.

“பரவாயில்லை, வீட்ல ரொட்டிதான் இருக்கே, அதைச் சாப்பிட்டுக்கறேன். நீங்க உங்களுக்காகச் செஞ்சதைச் சாப்பிடுங்க.”

“அட! என்னங்க, இதைத் திருப்பிப் பண்றத்துக்கு பத்து நிமிஷம் ஆகாது. சரி, நா இன்னும் கொஞ்சம் செஞ்சு எடுத்திட்டு வறேன், ரெண்டு பேரும் ஷேர் பண்ணிச் சாப்பிட்டுக்கலாம்” என்று சூடாகக் கொடுத்த சாப்பாட்டில் வயிறு நிறைந்தது. அவன் காட்டிய பரிவில் மனமும் நிறைந்தது.

“மிஸ்டர் ராஜ்! எனக்கு இந்த மாதிரி அவசர சமையலெல்லாம் தெரியாது. கோல்ட் ஸ்டோ ரெஜ் சூப்பர் மார்க்கெட்டுல கிடைக்கிற ரெடிமெட் ஃப்ரோசன் ஃபுட்தான் இந்த மாதிரி அவசரத்துக்குச் செய்வேன். இந்த மாதிரி சமையலெல்லாம் பத்தி அவ்வளவாத் தெரியாது” என்று நிர்மலா சொன்னதும், “என்னங்க சமையல் பத்தி ஒண்ணும் தெரியாதுங்கறீங்க! எங்க ஊர்லலாம் பொண்ணுங்க வயசுக்கு வந்ததும் முதல்ல கத்துக்கற விஷயமே சமையல்தான். இன்னொருத்தன் வீட்டுக்குப் போய் ஆக்கிப் போட வேணாமான்னு கத்துக் கொடுத்துடுவாங்க!” என்று பெருமையாகச் சொன்னான்.

“உங்க கேர்ள்ஃபிரண்டும் அப்ப சமையல் நல்லா செய்வாங்கன்னு சொல்லுங்க!” என்றாள்.

“ஐயையோ! கேர்ள் ஃபிரண்டா! தெரிஞ்ச பொண்ணுங்க கிட்டயே அப்படியெல்லாம் போய்ப் பேச முடியாதுங்க! சின்ன கிராமம். நீங்க நினைக்கிற மாதிரி கேர்ள்ஃபிரண்டு கிட்டக்க எல்லாம் பேச முடியாதுங்க!”

“கிராமம்ன்னா அங்கே காதல், கல்யாணம் எதுவுமே கிடையாதா என்ன? சும்மா சொல்லாதீங்க! உங்க ஊர் சினிமாவைப் பாத்தா அங்கே காதலைத் தவிர வேறு எதுவும் நடக்கிற மாதிரியே தெரியலையே!” என்றதும், “அது சினிமாங்க! அதைப் பாத்துட்டு எங்க ஊர்ல எல்லோரும் முறைப் பையனைக் கட்டிக்கறதுக்குக் காத்திட்டு இருப்பாங்க! பச்சப்பசேல்ன்னு வயல்ல வேட்டில அழுக்குப் படாம வயல் வேலை செய்யற கதாநாயகன். இப்படிக் கற்பனை செய்யறீங்களா? வறண்டு கிடக்கும் பூமி! பாதி ஆளுங்க பசி கண்ணை அடைக்க வயல்லயும் பாசனம் இல்லாம வேறு எந்த வேலையும் செய்யாம சுருண்டு படுத்திருப்பாங்க! பொம்பளைங்க காட்டுக்குப் போய் சுள்ளி பொறுக்கியும் வீட்டில இருக்கிற சின்னப் பசங்கள்ளாம் படிக்காம பீடி சுத்திக்கிட்டும் இருக்காங்க! நீங்க கலர் கலராப் பாக்குற கிராமம் வேற! அங்கே பஞ்சத்துல பரிதவிக்கிற கிராமம் வேற!” என்று சொன்னவனைப் பார்க்கப் பார்க்க அவன் சொன்ன வாழ்வின் அவலங்கள் மனதில் சித்திரமாகப் பதிந்தன.

“அப்ப இங்கியே இருந்து நல்லாச் சம்பாதித்து நிம்மதியாக இருந்துவிட வேண்டியதுதானே” என்றாள்.

“அது எப்படிங்க முடியும்? ஊர்ல எக்கச்சக்கக் கடன். அம்மா அப்பாவைக் காப்பாத்தணும், குடும்பத்தை முன்னேத்தணும்னு வந்துட்டு நம்ப நினைக்கிற மாதிரியெல்லாம் இருக்க முடியுமா? மாசம் இத்தனி ரூபான்னு அவங்க செலவுக்கு அனுப்பிடணும். அப்புறம் கடனை அடைக்க இவ்வளவுன்னு தனியா சேத்து வைக்கணும்” என்றான்.

அப்படிப்பட்ட ஏழ்மையிலிருந்துதான் இங்கு வந்திருக்கிறான். ஆனால் மீண்டும் ஊருக்குப் போய் வாழ்வதையே விரும்புகிறான். எல்லோர் வாழ்க்கையிலும் தேவைகளுக்கு மேல் ஏதோ அர்த்தம், பிடிப்பு, காதல், புரட்சி எல்லாம் இருக்கிறது. அதைப் போல் தன்னிடம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தாள். தின வாழ்க்கையே போராட்டமாகிவிட்டபோது இதைப் பற்றியெல்லாம் சிந்தித்துத் தேவைகளுக்கு மேல் எதையும் தேடி அலையும் மனம் தொலைந்துபோய்விடுகிறது.

“என்னங்க! நிலா காயற மாதிரி இந்த வெய்யில்ல காலாற நடந்து வர்றீங்க? எம்ஆர்டி வாசல்ல நில்லுங்க! ஐஞ்சு மணிக்கெல்லாம் வந்துடறேன்னு சொல்லிட்டு இவ்வளவு லேட்டா வர்றீங்களே!” பேசும் மொழியில் இருந்த மரியாதை அவன் காட்டிய சிடுசிடுப்பில் இல்லை.

ராஜேந்திரனுக்குத் தொடர்ச்சியாக மூன்று நாள் இரவு நேர வேலை. முடிந்தால் இரண்டு நாள் விடுமுறை. ஒரு நாள் தூங்கிவிடுவான். இரண்டாவது நாள் இப்படிக் கிளம்பி வந்து விடுவான். இருவரும் சேர்ந்து எங்காவது சுற்றிவிட்டுப் பிறகு தனித்தனியாக வீடு திரும்புவார்கள். எதற்கு இந்த நாடகம் என்பது நிர்மலாவுக்குப் புரியவில்லை. ராஜேந்திரன்தான் தயங்கினான்.

“தேக்கா பக்கம் மட்டும் போக வேணாம். தெரிஞ்ச ஆளுங்க கண்ணுல பட்டா என்னன்னு சொல்றது? எங்க வீட்டுக்காரின்னு சொல்லலாமா?” என்றான்.

உடல் நெருக்கம்தான் இப்படி அவனைச் சுதந்திரமாகப் பேச வைக்கிறதோ?

அது தற்செயலாக நிகழ்ந்த இரவு. முன்னிரவு நேரம் திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. வெளியில் மூங்கில் குச்சிகளில் தொங்கிக்கொண்டிருந்த துணிகளை எடுத்துப் போடலாம் என்று எடுக்க ஆரம்பித்தாள். மழையின் ஈரத்தால் குச்சியில் தொங்கிய துணிகள் கனத்தன. ராஜேந்திரன் அவன் அறையிலிருந்து வெளியில் வந்து இவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.

“இந்த மழை எங்க ஊர்ல பேஞ்சா இப்போ விதை போட்றதுக்கு நல்லாயிருக்கும்” என்றான்.

“ரூம்ல தூங்காம முழிச்சுக்கிட்டுதான் இருந்தேன். நீங்க நடக்கற சத்தம் கேட்டு வெளில வந்தேன். சண்முகம் நைட் ஷோ சினிமாவுக்குப் போய்ட்டான்” என்று சம்பந்தமில்லாமல் பேசினான். அவன் கண்கள் மையிட்டுத் தீட்டியது போல் பெரிய கண்கள்! அவளைப் பார்த்தபோது அதில் கன்றுக் குட்டியின் கெஞ்சல் இருந்தது. ஆணின் அனல் கொதிக்கும் பார்வை!

தனிமையில் இருப்பவர்களுக்கு இரவுகள் பயங்கரமானவை. அப்போது அவர்களுடைய தடைகள், அரண்கள் எல்லாம் உடைந்துவிடுகின்றன. பகலின் கண் கூசவைக்கும் ஒளியைத் திரையாக மூடிவிடுகிறது இரவு. உள்ளத்துக் காமம் உடலைத் தாக்கும்போது பெண் உடல் ஆணுக்கும் ஆண் உடல் பெண்ணுக்கும்தானே ஆறுதல் தர முடியும்? முடிவில்லாத் தேடலைச் சலிப்பின்றிச் செய்யும் வேகம் அவனிடமிருந்தது. அவன் அனுபவமின்மையும் சந்தேகங்களும் அவளுக்குப் புதுமையாக இருந்தன. அவள் சிரித்ததைப் பார்த்ததும், “எதுக்கு இந்தச் சிரிப்பு! சந்தோஷமா இருக்கியா?” என்று அவன் ஒருமையில் கூப்பிட்டுக் கேட்டதும் அந்தக் கணம் அப்படியே நின்றுவிடக் கூடாதா என்றிருந்தது.

மனதில் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாதே! அவன் தன் அறைக்குத் திரும்பிப் போகும்போது அம்மா நடக்க ஆரம்பித்திருந்தாள். நிர்மலாவின் அறையிலிருந்து அந்த நேரத்தில் அவன் போனதைப் பற்றி அவளிடம் கேட்கவில்லை. ராஜேந்திரனைப் பார்க்கும் பார்வையில் மட்டும் ஏதோ ஒன்று இருந்தது. அதைப் பற்றி ராஜேந்திரனே, “உங்கம்மா என்னைப் பாக்கும்போது மட்டும் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு! உங்களை ஏமாத்திவிட்டதா நினைச்சுட்டாங்களா?” என்று கேட்டான்.

“ஏதோ நினைச்சுக்கிட்டே வந்ததுலே லேட்டாயிடுச்சு! எங்க வேலை தேடலாம்னு பாத்தேன்” என்றாள்.

“இப்பப் பாத்துட்டிருந்த வேலைக்கு என்ன ஆச்சு?”

“அந்த வேலை இனிமே கிடையாது. வேற வேலை தேட வேண்டியதுதான்” என்றதும், “உங்களுக்கு என்ன கவலை? இந்த மாதிரி வேலை உடனே கிடைச்சுடும்! எங்களை மாதிரி உடனே ஊரை விட்டு ஓட வேண்டாமே?” என்று அவன் சொன்னதும், ‘ஆமாம், இதென்ன பெரிய விஷயம், இது இல்லை என்றால் வேறு ஒன்று’ என்று மனம் சமாதானமாயிற்று.

“ரொம்ப சோர்ந்து போயிருக்காப்புல இருக்கு! வாங்க ஏதாவது சாப்படலாம்” என்று ராஜேந்திரன் கூப்பிட்டான். அந்த ஆறுதலும் சாப்பாடும் அப்போது தேவைப்பட்டது.

சாப்பிட்டு முடிந்ததும் அவன் சிரித்துக்கொண்டே, “இன்னிக்கு நா நைட் ஃஷிப்ட் போகணும்! நீங்க எனக்காகக் காத்திட்டு இருப்பீங்களேன்னுதான் ஓடி வந்தேன். நா இப்படியே கிளம்பறேன்” என்று சொன்னதும் சட்டென்று மனதில் ஒரு வெறுமை. அவள் முகம் மாறியதைக் கண்டு, “பரவாயில்லை! இன்னும் எத்தனையோ நாட்கள் நமக்கு இருக்கின்றன. அதிலும் எத்தனையோ இரவுகள்” என்றான்.

தன்னுடைய அந்தரங்கத்தில் தன்னுடைய உடல் தேவையை மட்டுமே இவன் அறிந்திருக்கிறானோ! இன்று எனக்கு இவனுடைய அருகாமை மட்டுமே வேண்டும் என்பது புரியவில்லையா? தான் விரும்பும் பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கிறானா? அவசரப்பட்ட அந்த இரவு ஏன் வந்தது? பலவீனப்பட்ட பின் அதன் மறுபக்கம் தெரிகிறது. விளையாட்டின் வலியில்தான் ஆண் தன் இன்பத்தை அடைகிறானா? அன்று அவளால் தனியே படுக்க முடியவில்லை. அம்மாவுடன் போய் ஒண்டிக்கொண்டாள். அம்மாவின் கை தன்னிச்சையாக லேசாக அவள் முதுகில் பட்டுக்கொண்டிருந்தது. அந்த இதமான தீண்டலே போதுமானதாக இருந்தது. அவளையும் மீறி ஒரு கேவல்! எங்கே சத்தமாக அழுது அம்மாவையும் சின்னம்மாவையும் எழுப்பிவிடுவோமோ என்று அடக்கிக்கொண்டாள். அம்மாவின் முலையில் முட்டிப் பால் குடிக்கும் குழந்தையாக அடங்கிப்போனாள்.

புது வேலை! புதிதாக ஒரு வேலைத் திறன் கற்றுக்கொள்ள வேண்டும். பேக்கிங் செய்ய நாங்களே உனக்குப் பயிற்சி தருகிறோம். அதன் பிறகு பேக்கிங் பிரிவில் வேலை. முந்திய வேலையை விடக் கொஞ்சம் அதிகச் சம்பளம். பேக்கிங் செய்யக் கற்றுக்கொண்டபோதே அவள் மேல் முட்டை நாற்றம் வீசுவதுபோல் உணர ஆரம்பித்தாள். கையில் எப்போதும் வெண்ணெயின் பிசுபிசுப்பு, பாலேட்டின் குழகுழப்பு. ‘அவ’னில் வைத்து எடுக்கும் சுடசுட வந்த வித விதமான ரொட்டிகளையும் கேக்குகளையும் பார்க்கவே தனி ரசனையாக இருந்தது. அவளுடன் வேலை செய்யும் அமீனாதான் சொன்னாள்.

“பாடி ஷாப்புல ட்வென்ட்டி டாலருக்கு ஒரு சோப் கிடைக்கும். கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ்தான். அது வாங்கித் தேய்த்துக் குளி. அப்பத்தான் இந்த பேக்கிங் வாசனை உடம்பை விட்டுப் போகும்” என்றாள்.

அதை வாங்கித் தேய்த்துக் குளித்தும் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. நாளாக நாளாகச் சரியாகிவிடும். ராஜேந்திரனிடம் உருவாக்கிக்கொண்ட இடைவெளிபோல் பழகிவிடும்.

“ஏதோ நா தப்பா பேசிட்டேனா? வேலை கிடைக்கலேங்கற கவலையில இருப்பேன்னு நினைச்சு, சரி, நானும் உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நினைச்சேன். இப்பத்தான் வேலை கிடச்சு உன் மூட் சரியாயிருக்குமேன்னு நேத்திக்கு உன் ரூம் கதவைத் தொறந்தேன். உள்ளே உங்க சின்னம்மா படுத்திருந்தாங்க! என்ன ஏதுன்னு கேட்டுக் குடைஞ்சுட்டாங்க. என் ரூம்ல லைட் ஃப்யூஸ் ஆயிடுச்சு! உங்ககிட்ட வேற பல்ப் இருக்கான்னு கேக்க வந்தேன்னு சமாளிச்சேன்” என்றான்.

“சரி! சமாளிச்சிட்டீங்க இல்ல! அப்படியே இருந்துக்குங்க!” என்றாள்.

“உனக்கு ஏதோ கோபம். சரி, இப்ப அதைப் பத்தி பேச வரலை. எனக்கு இங்க செஞ்ச வேலை முடிஞ்சாச்சு! இன்னும் ஒரு மாசத்துல கிளம்பறேன். அப்புறம் துபாய்லயோ மஸ்கட்லயோ வேலை கிடைக்கும். நம்ப இதையெல்லாம் பத்திப் பேசி ஒரு முடிவு எடுக்கணும்” என்றான். நிர்மலாவுக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது.

ஏதோ ஒரு சின்னப் பிரிவுக்குப் பிறகு சமாதானம் சொல்லிப் பழைய மாதிரி ஆகிவிடும் என்று நினைத்திருந்தவளுக்கு ராஜேந்திரன் சொன்னது ஒரு நிமிடம் மனதில் பதிவாகவில்லை.

“என்ன முடிவு எடுக்க வேண்டும்?”

“எங்கூட இந்தியா வாங்க! எங்க வீட்ல உங்களைப் பத்திச் சொல்றேன். இங்க என்ன செட்டில் பண்ணணுமோ அதைப் பத்தியெல்லாம் பேச வேண்டாமா?” என்று கேட்டான்.

“என்னால் அப்படியெல்லாம் முடிவெடுக்க முடியாது. தாஸ் விஷயமா நா இன்னும் டைவோர்ஸ் கேக்கணுமா வேணாமான்னு யோசிக்கவேயில்லையே!” தடுமாறினாள்.

“என்னை என்ன கைவிட்டுட்டு ஓடிப் போறவன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா, இல்ல மாசமாசம் நீ உபயோகப்படுத்திவிட்டுக் குப்பைத் தொட்டியில் போடும் விஷயமா நான்?” அவன் கேட்ட கேள்வியின் நேர்மையில் அவன் கண்களைப் பார்க்க முடியவில்லை.

“நா உன்னைப் பைத்தியக்காரன் மாதிரி சுத்தி வர்றது, உன்னை உண்மையாகவே லவ் பண்றதுனாலதான் என்று உனக்குப் புரியலையா?” இந்த வாழ்க்கையைத் தவிர வேறு எந்தச் சூழலைப் பற்றியும் தெரியாதபோது அம்மாவை விட்டுவிட்டு, தாஸைப் பற்றிக் கவலைப்படாமல் கிளம்பிவிட முடியுமா? அம்மா அட்டைப் பெட்டிகளைச் சேகரித்துக் கொடுத்துப் பணம் சம்பாதித்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்வாளா? எம்ஆர்டி நிலையங்களில் கைப்பிடிகளைச் சுத்தம்செய்து, கழிவறை வாசலில் காவல் காத்துக்கொண்டு இரு முதிய பெண்களுக்கும் பரிதாபத்துக்குரிய வாழ்க்கைதான் காத்திருக்கிறதா?

“சரி, என்னை என்னதான் பண்ணச் சொல்கிறாய்? எல்லாத்தையும் மறந்துவிட்டு ஊருக்குப் போய் திரும்ப வேல பாத்து, ஊர்லயே நல்ல பொண்ணாப் பாத்துக் கல்யாணம் கட்டிக்கறதுக்கு உன் அட்வைஸ் வேணாம். உன் புருஷனைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம். உங்க அம்மாவையும் சின்னம்மாவையும் ஏதாவது ஒரு ஓல்ட் ஏஜ் ஹோமில் சேத்துடலாம். இந்த வீட்டில் ஒரு ரூமைப் பூட்டிவிட்டு வாடகைக்கு விட்டுடலாம். என்னோட இப்ப கொஞ்ச நாள் இந்தியாவுக்கு வா. எங்க ஊர்ல வந்து இரு. அப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு செய்யலாம்” என்று சொன்னது உண்மையாகிவிடுமோ என்ற பயம்தான் மிஞ்சியது. அம்மாவையும் சின்னம்மாவையும் அனாதரவாக விட்டுவிட்டுப் போவதா? ரெண்டு பைத்தியக்காரக் கிழவிகளும் நம்ம கூடத்தான் இருப்பாங்களா என்று தாஸ் கேட்டதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை.

ஒரு மாதம்தான். வாழ்நாளில் ஒரு மாதம் என்பது ஒரு துளிதான். அதைப் பாதரசத் துளியாக்கினான். பிரிவைப் பற்றி அஞ்சி உறவை விட்டு ஓடும் மனநிலை. பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதம்தானா? இந்தக் கொடூரமான காத்திருப்பை மௌனமாக ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரிவு, காத்திருப்பு, கூடல், மீண்டும் காத்திருப்பு, இவ்வளவுதான் தன் வாழ்க்கையில் மிஞ்சியிருக்கிறதா? சாயங்காலம் மழை பெய்யும்போதெல்லாம் அவன் மூச்சுக் காற்றுத் தன்மீது படும் உணர்வு! மண்ணுக்கும் வானத்துக்கும் இருக்கும் ஒரே உயிர்த் தொடர்பான மழைதான் அவன் கற்றுத் தந்த அன்பின் அடையாளமா?

“இப்படியே இங்கியே ஏதாவது வேலை தேடிக்கிட்டு இருக்கக் கூடாதா?” என்று கேட்டுப் பார்த்தாள்.

“இல்லை. இப்ப எனக்குக் கிடச்சிருக்கிற வேலை நல்ல வேலை! நான் எப்படியிருந்தாலும் ஊருக்குத் திரும்பிப் போறதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

அன்று பறவைகள் பூங்காவுக்குப் போயிருந்தார்கள். அதற்கு முதல் வாரம் செந்தோசா சுற்றி வந்தார்கள். எல்லாப் பறவைகளும் சுதந்திரமாக இருப்பதைப் போன்று ஒரு தோற்றம். எத்தனை விதமான பறவைகள். நிஜமாகவே காட்டுக்குப் போனால்கூட இத்தனை பறவைகளை ஒரு நாளில் பார்க்க முடியாது. தேடிக் கண்டுபிடித்துப் பார்க்க ஒரு மாதம் ஏன், ஒரு வருடம் கூட ஆகலாம்.

“ராத்திரி லேட்டாக் கிளம்பற ஃபிளைட்! எதுக்கு ராத்திரி தனியா வந்து கஷ்டப்படறே!” என்று சொல்லிப் பார்த்தான்.

“எனக்கு என்ன ராத்திரி பகல்! அதுவும் இந்த ஊர்ல! ராத்திரி நீங்க வெளில போய்ப் பாத்ததில்லையா? ஒரு உலகமே ஓடிட்டு இருக்கும்!” என்றாள்.

“ஃபோன் பண்ணிப் பேசிக்கலாம். ஈமெயில் அனுப்பிக்கலாம். சாட் செய்யலாம். பிறந்த நாள், தீபாவளின்னு வரும்போது கார்ட் அனுப்பிக்கலாம்! ஆனா இதெல்லாம் தேவையான்னு நீதான் முடிவு செய்யணும்” என்று அவன் சொன்னபோது, “நாளைக்கு தாஸைப் பாக்கப் போற நாள்” என்றாள். அவன் கேள்விக்கான அர்த்தமில்லாத பதில்.

“அன்னைக்கு பேர்ட்ஸ் பார்க் போனோமே, ஞாபகம் இருக்கா? அதில இருக்கிற பறவைகளைப் பாக்கறச்சே உன் ஞாபகம்தான் வருகிறது. எல்லாம் சுதந்திரமாகப் பறப்பதுபோல் ஒரு பாவனையில் பறக்கிறது. உயரத்தில் ஒரு எல்லைக்கு மேல் பறக்க முடியாதபடி ஒரு வலை போட்டு வச்சிருக்காங்க பாத்தியா? அப்படியே வலையைத் தாண்டிப் பறந்து வந்தாலும் ரொம்ப நாள் வெளியே தாக்குப் பிடிக்க முடியாது. திரும்ப அங்கேயே போய்டும்” என்று சொல்லி நிறுத்தினான்.

நான் மட்டுமில்லை, எல்லாப் பெண்களும் இதைப்போல் ஏதாவது ஒரு கண்ணுக்குத் தெரியாத வலையில் இருப்பதைத்தான் விரும்புகிறார்கள். உனக்கும் கல்யாணம் ஆகும். உன் மனைவியும் இந்த மாதிரி ஒரு வலையில் இருப்பதைத்தான் நீயும் விரும்புவாய். உனக்கு ஒரு பெண் பிறக்கும். அந்தப் பெண்ணையும் இப்படித்தான் வளர்ப்பாய். அதுவும் தானாக விரும்பி ஒரு வலையைத் தேடிச் செல்லும். கண்ணாடித் தடுப்பிலிருந்து கண் மறைகிறவரை கையசைத்துக்கொண்டே சென்றான். பேரிரைச்சலுடன் மழை பெய்து ஓய்ந்த நிசப்தம். வலி நிறைந்த வெறுமை வீடெங்கும் நிறைந்திருந்தது. அம்மா மட்டும் தூங்காமல், நடந்துகொண்டிருக்காமல் அதிசயமாக உட்கார்ந்துகொண்டிருந்தாள். இப்படித்தான் அம்மா வேலை முடிந்து வரும்வரை பசியோடு நிர்மலாவும் அம்மாவுக்காக் காத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்திருப்பாள். அம்மா சமையல் செய்த அலுப்புடன் வந்தாலும் “என் ராசாத்தி! அம்மாவுக்காகக் காத்திட்டு இருக்கியா?” என்று கொஞ்சலுடன் உள்ளே அழைத்துச் செல்வாள். அம்மாவுக்காக இல்லை, அம்மா கொண்டுவரும் சாப்பாட்டுக்காகப் பசியோடு காத்திருக்கிறாள் என்பது இருவருக்குமே தெரியும். இருந்தாலும் அந்த நாடகம் இருவருக்குமே அப்போது பிடித்திருந்தது.

அம்மாவைப் பார்த்தாள். கண்களில் பசி தெரிந்தது. “ஏதாவது சாப்பிடறியாம்மா?” என்று கேட்டுவிட்டுக் குடிக்க ஹார்லிக்ஸ் கலக்கிக் கொண்டுவந்து கொடுத்தாள். பாதி குடித்துவிட்டு நிர்மலாவுக்குக் கொடுத்தாள். அவளுக்கும் அப்போது ஏதாவது குடிக்க வேண்டும் போலத்தான் இருந்தது.

“வாம்மா, ரொம்ப நேரமாயுடுச்சே. படுப்போம்!” என்று அம்மாவுடன் போய்ப் படுத்தாள். அம்மாவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு படுத்தாள். அம்மாவின் கை அவள் முதுகை வருடியது. அதன் பின் அவன் விட்டுச் சென்ற வெற்றிடம் சுருங்கிச் சுருங்கி ஓர் ஒளிப் புள்ளியாகிப் பின்னர் இரவின் இருளில் கரைந்தது.

தாஸிடம் முன்புபோல் அந்தப் பரபரப்பு இல்லை. சிறை வாழ்க்கை தந்த பாடமாக இருக்கலாம். அவன் பேச்சும் மாறியிருந்தது. அவனே “நல்லபடியா இருந்தா சீக்கிரம் விட்டுருவாங்களாமே! சீக்கிரம் வரப் பாக்குறேன். அம்மா வந்து பாத்தாங்க. பிரேயர் மீட்டிங் செஞ்சாங்களாம். நீ ஏன் போகல?” என்று கேட்டுவிட்டு, “பரவாயில்லை நிம்மி. உனக்கு எந்த மாதிரி இருக்கப் பிடிச்சிருக்கோ அப்படியே இருந்துக்க!” என்றான்.

“வுட்லண்ட்ஸ்ல சிவன் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் பண்றாங்க! போகணும்” என்று அம்மா முணுமுணுத்தது நினைவுக்கு வர, “சரி! நா கிளம்பறேன்! அடுத்த வாரம் வந்து பாக்கறேன்! அம்மாவையும் சின்னம்மாவையும் கோவிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும்” என்றாள்.

அந்த இடம் மஞ்சள் நிறப் பூக்களோடு இன்னும் ஆரஞ்சு நிறமும் ஊதா நிறமும் கொண்ட பூக்களால் நிறைந்திருந்தது. ஏதோ பெயர் தெரியாத பறவைகள் பறந்துகொண்டிருந்தன. பறவைப் பூங்காப் பறவைகள் இயற்கையாகக் கூடுகட்டிக் கூடிக் குலாவி முட்டையிடுமா? தெரியவில்லை. பறவைகள் என்றிருந்தால் முட்டை போடாமல் இருக்குமா? அப்படியில்லா விட்டால் அவை பறவையாக வாழ்வதற்கு வேறென்ன தான் அடையாளம்?

வீட்டிற்குப் போய் நன்றாக சோப்புப் போட்டுக் குளித்துவிட்டுத்தான் கிளம்ப வேண்டும்.

சாயங்கால நேரமானதால் எல்லாப் பறவைகளும் மரங்களில் வந்து அடையும் நேரம். நல்ல வேளை, இன்று மழையில்லை. வெளியில் இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது. மரங்களெங்கும் பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *