கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,830 
 

என்னதான் கார் பங்களா என வசதியிருந்தாலும பெரிய படிப்பு இருந்தாலும் விமானத்தில் பயணிக்காத வரை ஏர்போர்ட் என்பது பிரமாண்டமான மிரட்டும் வஸ்துதான்!

சென்னை பன்னாட்டு விமான தள வாசலில் கசகசப்பு! யாரையோ வரவேற்க, தொண்டர்-குண்டர் படைகள்! வெளிநாட்டு வேலை விடுப்பில் வரும் நபர்களை எதிர்பார்ப்புடன் வரவேற்க நின்றிருந்தவர்களில் தர்ஷணாவும் அடக்கம்.

அவளுக்கு அங்கே எல்லாமே விநோதமாய்த் தெரிந்தது. இத்னியூண்டாகத் தெரியும் விமானத்தில் எப்படி இத்தனை பேர் பயணிக்க முடிகிறது?

வெளியே கார்களின் அணிவகுப்பு ஹாரன்! போட்டார்கள்! டிராலி உரசல்! பயணிகளை ‘சுனாமி’க் கொண்டு போகும் போட்டியில் டாக்ஸிகள்! கண்ணாடிக் கதவைத் திறக்கும்போது கசிந்துவரும் அறிவிப்புக்கள் வியர்ப்வு!

தர்ஷணாவுக்கு இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துக் கொண்டிருந்தன. மகேஷ் அவளுக்கு நிச்சயிக்கப் பட்ட வரன்.

அவர் இப்போ எப்படியிருப்பார்? தாடி வச்சிருப்பாரா? சென்ற வருடம் பெண் பார்க்க வந்த போது திருடா – திருடி என லேசாய்ப் பார்த்துக் கொண்டது இன்னமும நெஞ்சில் இருக்கிறது. அப்புறம் குவைத்திலிருந்து போன் எவ்வளவோ பேசியாயிற்று. ஆனாலும் கூடசலிக்கவில்லை. இன்னும்…. இன்னும் கொஞ்சம் என்கிற ஏக்கம். செல்போன் வாங்கி அனுப்பி. “இது எப்பவும் உன் கைல இருக்கணும். ராத்திரி – பகல்-பத்ரூம்-காலேஜ்ன்னு கண்ட கண்ட நேரத்துல கூப்பிடுவேன். கூப்பிட்டான்.

அவளுக்கு சுகமாயிருந்தது. கல்யாண தேதி குறித்த பின்பு மகா அவஸ்தை. தூக்கமும் சாப்பாடு கசந்தது. முகத்தில் பருக்கள் கொப்பளித்தன. எதிலும நாட்டமில்லை. அணுக்கள் சிறை! தனிமையில் கனவுதான் உணவு.

விமானங்கள், காதைப் பதம் பார்த்து ஜிவ்வென ஏறின. இறங்கின அருகில் பெற்றோர் இருந்தாலும் கூட வேண்டா வெறுப்பைக் காட்டுவதுபோல வாட்ச்சைப் பார்த்தாள்.

எங்கே என்னவன்! மன்னவன்! அப்பா பொறுமையிழந்து கொஞ்சம் தள்ளி நின்றிருந்த இளைஞனை பிடித்து “வேணு தம்பி! மாப்பிள்ளை வர்றது ஏர் இந்தியான்னுதானே சொன்னாய்? வந்துருச்சு போலிருக்கே. அறிவிப்பு காட்டுது!” என்று அவசரப்பட்டார்.

“இல்லை சார். அது சிங்கப்பூர்! கவைத் விமானம். அரை மணி நேரம் லேட்டாம்! விசாரிச்சுட்டேன்!”

“பாவிங்க. இங்கே உட்கார நாற்காலி தாராளமாப் போடக்கூடாது?”

“நிக்க கஷ்டமாயிருந்தா-எல்லோரும் கார்ல போய் உட்காருங்க சார்! மகேஷ் வந்ததும் நான் அழைச்சுட்டு வர்றேன்!”

“பரவாயில்லை இவ்ளோ நேரம் நின்னாச்சு. குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைகுமா?”

வேணு ஓடிப்போய் தண்ணீருடன் சமுசா, கட்லெட், கூல்டிரிங்க்ஸ் எல்லாம் கொண்டுவந்து நீட்டினான். தர்ஷணா உனக்கு ஐஸ்க்ரீம் வேணுமா?

“எதுக்குப்பா உனக்கு சிரமம்?“ என்று வாங்கிக் கொண்டார்கள்.

“சிரமமா எனக்கா?” என்று சிரித்தான்.

“உங்களைச் சரிய கவனிக்கலேன்னா அப்புறம் மகேஷ் அந்நியனாகி என்னைக் கொன்னு போட்டிருவான்.”

அப்பாவுக்கு அவன் பேரில் பரிவும் பாசமும் தோன்றிற்று நண்பன் என்றால் இப்படித்தானிருக்கணும். மாப்பிள்ளைக்குச் சரியானவன் வாய்த்திருக்கிறான்.

தர்ஷணாவின் மனது அவனுக்கு நன்றி சொல்லிற்று. இவன் மட்டும் நிர்ப்பந்திக்கவில்லையென்றால், நான் இங்கே வந்திருக்க முடியுமா? நிச்சயித்தப் வெண், வெளியே வரக்கூடாது, ஊர் தப்பாய் பேசும் என்று பெற்றோர் மறுக்க இவன் விடவில்லை.

வாஸ்தவத்தில் பெற்றோர் கூட ஏர்போர்ட்டுக்கு வருவதாயில்லை வேணுதான் போன் பண்ணி “நீங்க அவசியம் வரணும்” என்றான்.

“கல்யாணத்துக்கு முந்தி நாங்க வந்தா நல்லாருக்குமா?”

“அட என்ன இது கேள்வி? மகேஷ் வீட்டுலு அவனோட அக்கா வந்தா தான் உண்டு அம்மாவுக்கு உடம்பு முடியலே. அப்பா இல்லை. நீங்க வந்தா உறவு பலப்படும்.ஏன் இப்படி வித்தியாசமாய் யோசிக்கீறிங்க? அவர் உங்களோட மாப்பிள்ளை அவனுக்கு நீங்க மாமனார் மட்டுமில்லை அப்பா ஸ்தானமும் தான். ஏர் போர்ட்லருந்து மாப்பிள்ளை அவங்க ஊருக்குப் போவாரா. இல்லை எங்க வீட்டுக்கு? போற வழிதானே உங்க வீட்டுல ஒரு வாய் காபி சாப்பிட்டு அப்புறம் அவங்க ஊருக்குப் போறோம் நீங்க உங்க கார்ல வந்துடுங்க. எல்லோருக்கும் பத்துமா?”

“பத்தலேன்னா நான் டாக்ஸி எடுத்துக்கறேன்” என்று அவர்களை வரவழைத்தற்காக தர்ஷணாவிற்கும் அவன் பேரில் கரிசனம் மனதுக்குள் ஆசையிருந்தாலும் நானாக ஏர்போர்ட் வரேன் என்று கேட்க முடியுமா? பெண்ணாயிற்றே! எல்லாவற்றையும் அடக்கி அடக்கி ஆளணும். “

“சீக்கிரம் வாடா மாப்பிள்ளே”.

“தர்ஷணா உனக்காக ஏசி வாங்கி வரேன். டி.வி.டி தாலி, நகைகள், டிரஸ்கள்ன்னு அடுக்கினாயே எனக்கு அதெல்லாம் வேணாம். நீ மட்டும் போதும சீக்கிரம் வா.

வேணு காண்டீன் பக்கமிருந்து “வண்டி வந்திருச்சு லேண்டாயிருச்சு” என்று கூவிக்கொண்டு ஓடிவந்தான். எல்லோரும் உஷாரானார்கள். தளர்வு நீங்கினார்கள் சுறுசுறுப்பு. வழிமேல் விரி தர்ஷாவுணாக்குக் கிளர்ச்சியாயிற்று. மறுபடியும் கசகசப்பு, வெயில் அப்போது மட்டும் உறைக்கவில்லை. எங்கே அவன்? தலையைச் சரி பண்ணிக்கொண்டாள்.

வண்டி தள்ளிக்கொண்ட கண்களால் தேடிக்கொண்டு வெளியே அதோ மகேஷ்.

‘மகேஷ் ‘கமான் கமான்’ என்று அவளுக்குக் கத்த வேண்டும் போலிருந்தது.

மகேஷ் தர்ஷணாவைப் பார்த்துப் புன்னகைக்க உடன் பதிலிட்டாள். அவனும் அதை வாங்கி நெஞ்சில் செருகிக் கொண்டான்.

அவள் மேல் கவர்ச்சி! உந்துதல்! அந்தப் பொழுதின் சுகத்திற்காகவும் பரவசத்திற்காகவும் அவளது மனது மீண்டும் வேணுவிற்கு நன்றி சொல்லிற்று.

வேணு ஓடிப்போய் மகேஷிற்கு கை கொடுத்து லக்கேஜ் டிராலியை வாங்கிக் கொண்டான்.

“மாப்பிள்ளை பயணமெல்லாம் சுகமா?”

“ஓ” என்று தர்ஷணாவுக்கு பதிலளித்தான். அம்புவிட்டான்.

மன்மத அம்பு. அவள் சிலிர்த்தாள்.

“விமானம் லேட் போல” ஏதாவது போசணும் என்று பேசினார்.

“ஆமாம் இது சகஜம்” என்று அவளை சைடில் வெட்டினான்.

“பேசிட்டிருங்க. நான் போய் வண்டி எடுததுவரேன்” என்று வேணு ஓடி வண்டிணயைக் கொண்டு வந்து லக்கேஜை ஏற்றினான்.

“வேணு தம்பி நீங்களும் எங்க வண்டியிலயே வரலாமே”

“வேணாம் சார். நீங்க ஃப்ரீயா உட்கார்ந்து வாங்க கல்யாண நேரம் மாப்பிள்ளைகிட்டே நிறையப் பேச வேண்டியிருக்கும். லக்கேஜ் கூட யாராவது வணுமில்லே.”

எல்லா சந்தர்ப்பத்திலும் மகேஷின் அருகில் தான் இருக்கும்படி வேணு செயல்படுவதில் தர்ஷணாவுக்கு மகிழ்ச்சியாயிற்று. கதகதப்புடன் வண்டி கிளம்பிற்று தர்ஷணா – மகேஷ் இருவருக்குள்ளும் பரவசம்.

பயண அலுப்பு இருந்தாலும் தூக்கம் கண்களை துளைத்தாலும் கூட பின்சீட்டில் இருந்த தர்ஷணா மகேஷிற்குத் தெம்பு தந்தாள். அவளது மலர்ந்த முகம்! மல்லிகை வாசகம்! கிளுகிளுப்பு! கண்ணாடி வழி அவளை சைட்! என்னவள்.

“அப்புறம் ஏன் அலைச்சல்? இருந்தாலும் இந்த திருட்டு சைட்டில் உள்ள சுகமே தனி.”

மாப்பிள்ளை எவ்ளோ நாள் லீவு? என்று ஆரம்பித்து கல்யாண மண்டபம் பத்திரிகை ஏற்பாடுகள் பற்றி அப்பா விளக்கினார். “எங்க தரப்புல எல்லோருக்கும் அழைப்பு கொடுத்துட்டோம் மாப்பிள்ளை இனி உங்க நண்பர்கள்தான் பாக்கி. ஆங்! நண்பர்கள்ன்னதும் தான் ஞாபகம் வருது இந்த வேணு எங்களுக்கு ரொம்ப ஒத்தாசையாயிருந்தார். “

“எந்த வேணும்?” என்று ஒப்புக்குக் கேட்டு தர்ஷணாவைத் தரிசித்தான்.

“அதான் உங்க நண்பர் அவர் இல்லேன்னா ஏர்போர்ட்ல வெறுத்துப் போயிருக்கும். என்னென்வோ வாங்கிக் கொடுத்து நல்லா பார்த்துக்கிட்டார். இபோ கூடப்பாருங்க… என்ன ஒரு பொறுப்பு, தன்னந்தனியாவே லக்கேஜை ஏத்திக்கிட்டு பின்னாடி வரார்.

வீடு வந்திருந்தது. தர்ஷணாவைத் தின்றுகொண்டே மகேஷ் இறங்கினான். தர்ஷணா! மாப்பிள்ளே நீங்க எல்லோரும் உள்ளே போய் முகம் கழுவிட்டு டிபன் பண்ணுங்க. நான் லக்கேஜை இறக்கிட்டு வர்றேன். அவர்களை அனுப்பிவிட்டு அப்பா லக்கேஜ் வரும் வண்டிக்காக வாசலில் காத்திருந்தார். அது வரவில்லை வராது. எப்படி வரும?

ஜகஜ்ஜால கில்லாடியான வேணு இவர்களின் திருமணம் குடுமப விசேஷம் அறிந்து திட்டம் போட்டு நண்பனாக நுழைந்து தர்ஷணாவின் வீட்டிலும் அவளும் ஏர்போர்ட்டுக்கு வந்தால்தான் மகேஷின் கவனம் திரும்பும், மயங்கும் என்று வரவழைத்து நாடகமாடி லக்கேஜை தன் கஸ்டடியில் ஏற்றி அழகாய் ஏமாற்றி காணாமல்போன அந்த நண்பன் என்ன மடையனா திருமபி வர?

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *