பத்தினித் தெய்வம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,194 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

துணியை துவைத்துப் பிழிந்து தோளில் போட்டுக் கொண்டாள்; குளித்து முழுகிக் கூந்தலை விரித்து விட்டுக் கொண்டாள்; குடத்தில் நீரை நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டாள்; குனிந்த தலை நிமிராமல் குளத்தங் கரையிலிருந்து வந்து கொண்டிருந்தாள்.

குடும்பப் பெண்; குறுகுறுப்பான பார்வை; கண்ணிமைகள் கொட்டும்போது யாரையோ ‘வா,வா’ என்றழைப்பது போலிருந்தது. நகை முகம்; குழி விழுந்த கன்னங்கள்; நடக்கும் கைவீச்சில் ஒரு கவர்ச்சி; நடையிலே ஒரு சிருங்காரம்; நடுநடுவே தண்ணீர் ‘தொளக், தொளக்’ என்று தளும்பும் சத்தம்.

அவள் பெயர் முத்தம்மா. ஆண்டியப்பனுக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகிப் பத்து மாதங்கள்தான் ஆகியிருந்தன.

‘முத்தம்மா’ – இப்படி அவளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல். திரும்பிப் பார்த்தான். ஒரு காலத்தில் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்த சாத்தப்பன் அங்கே நின்று கொண்டிருந்தான்.

‘இவன் எப்படி இங்கே வந்தான்? – இவ்வாறு யோசித்துக் கொண்டே முத்தம்மா பேசாமல் நின்றாள். சாத்தப்பன் ஆசாபாசத்தோடு அவளை நெருங்கினான்.

“என்னா, முத்து நல்லாயிருக்குதில்லே, நியாயம்?”

“நான் என்ன செய்வேன்?”

“என்ன செய்வேனா? ‘கட்டிக்கிட்டா உன்னைத்தான் கட்டிக்குவேன். இல்லாட்டா கிணத்திலாச்சும் குட்டையிலாச்சும் விழுந்து சாவேன்’னு சொன்னியே. மறந்துட்டியா!”

“என்னமோ, எல்லாரும் சொல்லிக்கிட்டாப்போல நாமும் சொல்லிக்கிட்டோம்…”

“ஓஹோ! நீ என்மேலே வச்சிருந்த ஆசையெல்லாம் அம்மட்டுந்தானா?”

“ஆசையிருந்தாப் போதுமா தமயந்திக்காக சுயம்வரம் வச்சாங்க; அவ தனக்குப் பிடிச்ச நளமகாராசனுக்கே மாலையிட்டா என் கல்யாணத்துக்கு அப்படியா வச்சாங்க, நான் உனக்கே மாலையிட?”

“சுயம்வரம் வச்சாத்தானா? பொம்மியம்மா மதுரைவீரன் சாமியோடே ஓடிவந்த மாதிரி நீ என்னோடே ஓடி வந்துட்டா, என்னா?”

“ஐயோ! அப்படிச் சேஞ்சா நாலு பேரு என்னா சொல்லுவாங்க? அதாலே உனக்கும் கெட்ட பேரு; எனக்கும் கெட்ட பேருதானே?”

“நல்லாச் சொன்னே! இப்போ பொம்மியம்மாவுக்கும் மதுரைவீரன் சாமிக்கும் ஊரிலே கெட்ட பேரு வந்துடுத்தா?”

“சாமியும் நாமும் ஒண்ணா? ஊரிலே பார்த்தா ஒருத்தர் மேலே ஒருத்தர் ஆசை வச்சுக் கல்யாணம் பண்ணக்கிட்டவங்களும், தாய் தகப்பன் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சவங்களும் ஒரே மாதிரியாய்த் தான் இருக்காங்க! இப்போ கல்யாணம் பண்ணிக் கிட்டேனே, அந்த மனுசரும் என்னை ஒண்ணும் சிம்மாசனத்திலே உட்காரவச்சிச் சோறு போடலே; இல்லே, உன்னையே கல்யாணம் செஞ்சிக்கிட்டிருந்தாலும் நீயும் என்னை ஒண்ணும் சிம்மாசனத்திலே உட்கார வச்சிச் சோறு போடப் போகிறதில்லே அன்னிக்கே ஆணுக்கு இப்படி பெண்ணுக்கு இப்படின்னு தலையிலே எழுதி வச்சானே, அந்தப் பிரம்மன் எழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும். அதாலே, நடந்து போச்சு: இனிமே என்னை நீ மறந்துடு…”

அதற்குள் பொறுமையை இழந்துவிட்ட சாத்தப்பன், “நானா மறந்துடுவேன்?” என்று சொல்லிக்கொண்டே முத்தம்மாவின் கரத்தைப் பற்றினான்.

“சீ விடு, விடு!” என்று அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு ‘விர்’ரென்று வீட்டை நோக்கி நடந்தாள் முத்தம்மா.
*⁠ *⁠ *

என்னதான் சாத்தப்பன் தன்னைக் காதலித்திருந்தாலும் நான் இன்னொருவனுக்குச் சொந்தமான பிறகு அவன் தன் கரத்தைப் பலவந்தமாகப் பற்ற வந்ததை முத்தம்மா வெறுத்தாள். “இப்படியுமா அவனுக்குப் புத்தி கெட்டுப் போய்விடும்?” என்று எண்ணிக்கொண்டே அவள் தன் வீட்டை நெருங்கியபோது, வாசலில் ஒரு கட்டை வண்டி வந்து நின்று கொண்டிருந்தது. அந்த வண்டி தன் பிறந்தகத்தின் வண்டி என்று தெரிந்ததும் அவள் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

யாரையும் அங்கே காணவில்லை; வண்டிக்காரன் தான் நின்று கொண்டிருந்தான்.

”என்னடா சங்கதி?”

“அம்மா ரொம்பக் காயலாக் கிடக்கிறாங்க; உங்களை உடனே அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாங்க!”

“ஐயய்யோ அவருகூட வீட்டிலே இல்லையே! மாடு பிடிக்கப் போயிருக்காரு. அவருக்கிட்டே ஒரு பேச்சுச் சொல்லாமெ வரலாமா?”

“ஆபத்துக்குப் பாவமில்லே, அம்மா! அண்டை அசல்லே சொல்லிவிட்டு வந்தா, அவர் வந்ததும் சொல்லுவாங்க இல்லே?”

“அப்படியா ரொம்பக் காயலாக் கிடக்கிறாங்க!”

“ஆமாம், அம்மா இப்பவே நீங்க வந்தாத்தான் அந்த அம்மாவை உசிரோடு பார்க்கலாம்?”

“அட, பாவமே! இந்தச் சேதியையா இவ்வளவு தாமசமா சொன்னே? ஓடு, ஓடு போ, உடனே வண்டியைக் கட்டு இதோ எதிர்வீட்டுச் சின்னம்மாகிட்ட இந்தச் சேதியைச் சொல்லிவிட்டு நான் வர்றேன்” என்று வெலவெலக்க ஓடினாள் முத்தம்மா.
*⁠ *⁠ *

‘லொடுக்கிட்டி, லொடுக்கிட்டி என்று தனக்குத் தானே பாஷையில் ஏதோ பாடிக் கொண்டே வண்டி நெடு நேரம் போய்க் கொண்டிருந்தது. எனினும் வழி மாளவில்லை; அந்திவேளை மட்டும் மாய்ந்துவிட்டது; ஒரே அந்தகாரம்; வண்டிக்காரன் மாட்டை அதட்டி ஒட்டும் ஒசை சத்தத்தைத் தவிர வேறு சத்தமேயில்லை.

“டேய், நிறுத்து வண்டியை!” இப்படித் திடீரென்று ஓர் உத்தரவு. வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி விட்டான்.

அதே கணத்தில் முத்தம்மாவின் கரத்தைப் பிடித்து யாரோ ஒருவன் கரகரவென்று இழுத்தான்.

“ஐயய்யோ!” என்று அலறினாள் முத்தம்மா.

“அஹ்ஹஹ்ஹா” என்று சிரித்தான் சாத்தப்பன். அவனுக்குப் பின்னால் யாரோ அவனைப் போலவே சிரிக்கும் சத்தம் கேட்கிறதே, யார் அது கவனித்துப் பார்த்தாள் முத்தம்மா. வண்டிக்காரன் சிரித்துக் கொண்டிருந்தான்!

“அட மோசக்காரப் பாவி”
*⁠ *⁠ *

ஊருக்கு அப்பாலிருந்த ஓர் ஒண்டிக் குடிசைக்குள் முத்தம்மாவைக் கொண்டு போய்த் தள்ளினான் சாத்தப்பன். அப்பொழுது, தன் படுமோசமான பலாத்காரச் செய்கையில் அவன் வெற்றியைக் கண்டுவிட்டவன்போல் விளங்கினான். வலிமை மிகுந்த அவன் வலக்கரம் மீசையைக் ‘கறுக் ‘காக முறுக்கிவிடுவதில் ஈடுபட்டது.

கண்ணீர் தேங்கிய முத்தம்மாவின் கண்களும், இரத்தக் கறை படிந்த சாத்தப்பனின் கண்களும் ஒரு நிமிடம் சந்தித்தன. அடுத்த நிமிடம் “நாளைக் காலை நாலு மணிக்கெல்லாம் அடுத்த ஊர் ஸ்டேஷனிலிருந்து அரக்கோணத்துக்கு வண்டி போகுது. அந்த வண்டியில் நாம் இருவரும் போக வேண்டும்; தயாராயிரு!” என்று அதிகாரக் கட்டளை – உடனே கதவை அடைக்கும் சத்தம்; ‘கலகல’வென்று சிரிக்கும் சத்தம்.

பெண்ணுடன் பிறக்காத பேய் அற்ப வெற்றியின் அளவில்லாத ஆனந்தம் கொண்டு இரைந்து சிரித்தது.

இருட்டறையில் தனியே விடப்பட்ட முத்தம்மாவின் உள்ளத்தில் எதற்கென்று தெரியாத ஒர் அமைதி. அந்த அமைதியில் பாரத நாட்டுப் பெண்மணிகளுக்கென்றே பிரத்தியேகமாக அமைந்த கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்ற கவலை. உடனே அவள் மனக்கண் முன் ஒரு பெண் உருவம் காட்சி அளித்தது.

“தாயே! தாங்கள் யாரோ?”

“நான்தான் பத்தினித் தெய்வம். குழந்தாய் உன் கற்பைக் காப்பாற்றிக் கொள்”

“அப்படியா? அந்தப் பாவியின் பலாத்காரத்துக்கு முன்னால் என் கற்பு காப்பாற்றப்படுமா? எப்படிக் காப்பாற்றுவாய், தாயே?”

“உன்னைப் பலி கொண்டு!”

“என்னைப் பலி கொண்டா?”

“ஆம், என்றைக்காவது ஒரு நாள் நீ அழிவது நிச்சயம். ஆனால் உன்னைச் சேரும் பழி மட்டும் என்றென்றைக்கும் அழியாது. ஆகவே நீ பழிக்குப் பயப்படுகிறாயா, பலிக்குப் பயப்படுகிறாயா?”

“பழிக்குத்தான், தாயே!”

“அப்படியானால் எனக்குப் பலியாகிவிடு!”

“தங்கள் சித்தம்”
*⁠ *⁠ *

விடியற்காலை மூன்று மணி இருக்கும். சாத்தப்பன் வந்து கதவைத் திறந்தான்; பலாத்காரம் படுதோல்வி அடைந்திருப்பதைக் கண்டான்; ஏனெனில் முத்தம்மா அவனை வரவேற்கவில்லை. அவளுடைய உயிரற்ற உடல் தான் அவனை வரவேற்றது. அதைக் கண்டதும் அவனுடைய உள்ளம் பதைபதைத்தது. “முத்தம்மா!” என்று அழைக்க வாயெடுத்தான்; வார்த்தை வெளிவரவில்லை.

தூக்குக் கயிற்றைப்போல் துக்கம் அவனுடைய துணிந்த நெஞ்சை இறுக்கிவிட்டது போலும்!

அடுத்த நிமிடம் ‘அக்கூ!’ என்று ஆந்தையின் அழுகுரல். அங்கே நிலவியிருந்த பயங்கரமான நிசப்தத்தைக் கலைத்தது.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *