நோக்கிப் பாய்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 7,390 
 

”பேசாதடா… பேசாதடா… கல்லக் கொண்டு அடிச்சிடுவேன்” – சொல்லிக்கொண்டே இருந்த அந்த வாலிபன், வீதியில் கிடந்த உடைந்த செங்கல் ஒன்றை எடுத்து, எதிரில் இருந்தவனின் முகத்தில் அடித்தான். அடி வாங்கியவனுக்கு நெற்றியில் பணியாரமாகப் புடைத்துவிட்டது.

அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்க கூழுப் பிள்ளைக்குத் திராணி இல்லை. அசைந்து அசைந்து தாங்கலான நடையுடன் நகர்ந்தார்.

சுளீரென வெயில் ஏறிக்கொண்டு இருக்கிற காலை நேரம், சனிக் கிழமைப் பொழுது. பள்ளிக்கூடத்துக்கான பரபரப்புகள் ஏதும் இல்லாமல், வீதி இயங்கிக்கொண்டு இருந்தது. இருந்தாலும், வேலைக்குப் புறப்பட்டுச் செல்கிற அவதியும் ஆவலாதியும் குறையவில்லை.

தார் சாலை முழுக்க பெட்ரோல், டீசல் வாசனைதான். சைக்கிள்கள், மோட்டார் வண்டிகளாகவும், மாட்டுவண்டிகள், சின்ன லாரி களாகவும் மாறிவிட்டன. கால மாற்றத்தோடு மனுசனும் மாறிப்போனான். சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கு எல்லாம் அடிதடி யும் ஏச்சும் பொது விதியாகிவிட்டது.

வரசித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது. ‘அரசாங்கத்தின் மதுக் கொள்கையால், இன்னும் பத்து வருடங்களில் இன்றைய இளைஞர்களின் நிலைமை படுமோசமாகப் போகிற அவலத்தைக் காணப்போகிறோம். கல்லீரல் கெட்டு, சக மனிதனை நேசிக்கிற சுபாவம் காலாவதிஆகும்!’

அது நிஜமானதைக் கொஞ்ச நேரத்துக்கு முந்தைய நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது. அவர்கள் அண்ணன் – தம்பிகள்தான், அவர் களுக்குள்கூட இணக்கமாக இருக்க முடியவில்லை.

நல்லவேளை, அந்த வகையில் தனது பிள்ளைகள் தப்பித்துவிட்டார்கள். ஆளுக்கு ஒரு தொழிலில் இருந்தாலும், இத்தகைய சகவாசம் ஏதும் இல்லை.

வழியில் கோயில் நிழலடி கொஞ்சம் நின்று போகச் சொன்னது. உடம்போ உட்கார்ந்து போகலாமே என்றது. மரத்தின் குளுமை அப்படி. கோயிலின் கீழ்ப் படியில் உட்கார்ந்தார். அது கருங்கல்லால் ஆனது. கல்லின் ஊடறுத்த ஜில்லிப்பு அமர்தலை விரித்துக் கொடுத்தது. கோயிலின் வாசல் கதவு மூடி இருந்தது. சாத்திய கதவிலும் ஊதுபத்தி சொருகப்பட்டு, வாசம் கசிந்துகொண்டு இருந்தது. வாசலின் இடதுபுறம் இருந்த பன்னீர் மரத்தின் நீள நீளமான பூக்கள் கீழே சிதறிக்கிடந்தன. கோயிலின் நிழல் படர்ந்த அந்தச் சூழலில் பூக்களின் சிதறல், மாக்கோலம் இட்டதுபோலக் காட்சியளித்தது.

‘என்னா… கூழண்ணே… எழவு வீட்டுக்குப் போவலியா?’

சைக்கிளோடு போன செவ்வாழையன், ஒரு காலை ஊன்றிக்கொண்டு கேட்டான்.

‘செவடயனா..?” என்றவர், ‘ந்தா… போகணு மப்பா. பயக பூராம் ஆளுக்கொரு தொழில்ல இருக்கானுகளா, சட்டுனு கடையச் சாத்திற முடியலீல்ல’ – நிதானமாகத்தான் பேச வந்தது. காலையில் சத்தமாகப் பேசினால், இளைப்பு வந்து மறிக்கிறது.

‘அவிங்கள விடுண்ணே… அவிங்க ஏதோ டயத்தப் பாத்து பொண்டுபிள்ளைகளக் கடய மாத்தச் சொல்லி வரட்டும். நீங்க பெரிய மனுசெ முன்னுக்குப் போயி நின்டா… கேத வீட்டாளுகளுக்கு ஒரு தெம்பா இருக்கும்ல!’

ஒன்றுவிட்ட சொந்தம்தான். ஆனால், பழக்கத்தில், பாடுகளில், கூடுதலான நெருக்கம். தன் வீட்டில் ஒரு காரியம் என்றால், அந்த வீட்டில் இருந்து தாய் பிள்ளை என செட்டோடு வந்து குவிந்துவிடுவார்கள். உறவு சொல்லி அழைப்பதில்கூட, ‘சின்ன மாமா, பெரிய அத்தை’ என்று இடம் பிரித்துப் பேசுவது இல்லை. ‘எங்க அத்தை, எங்க மதனி’ என்றே உரிமை மேலிடத்தான் கூப்பிடுவார்கள். அந்த வீட்டில் ஒரு மரணம். நியாயப்படி பார்த்தால், குடும்பத்தில் அத்தனை பேரும் கடைகளைச் சாத்திவிட்டு, இந்நேரம் அங்கே கிடை போட்டிருக்க வேண்டும்.

ரத்தினம்மாள் இருந்திருந்தால், இந்நேரம் பிள்ளைகளிடம் பேசி அவர்களைக் கிளப்பி இருப்பாள். அவளைப்போலத் தன்னால் பிள்ளைகளிடம் ஒட்ட முடியவில்லை. பெற்ற பிள்ளைகள்தான் என்றாலும், ஏதோ ஒரு விலகல் நிற்கத்தான் செய்கிறது. சிறு வயசில் இருந்தே அப்படித்தான் நடந்தேறி வருகிறது. ஒருவேளை எல்லா வீட்டிலுமே அப்பாவின் நிலைமை இதுதானோ?

எழவுச் செய்தியைக்கூட நடுவுலவன் தான் சொன்னான். போன் வந்ததாம், ”அந்த அத்தையோட சம்பந்தக்கார அம்மா வாம்லப்பா”- சொல்லும்போதே தூரத்தை அழுத்திச் சொன்னான்.

‘எங்களுக்கெல்லாம் அது யார்னே தெரியாதே மாமா? நான்லாம் அவகளப் பாத்திருக்கனா?’- இப்படிக் கேட்டது சின்ன மருமகள்.

‘சின்னமனூர்ல இருந்தாகளேப்பா… இப்ப, இங்கியே வந்திட்டாகளோ..?’- இது மூத்தவன்.

‘ஆமாப்பா… ஃபாரஸ்ட் ரோட்ல குடி இருக்காங்க.’

கொஞ்சம் நடக்கிற தூரம்தான். வண்டியில் போனால் ஈசி. மினி பஸ் எனில் இறங்கி, ரெண்டு சந்து திரும்ப வேண்டும்.

‘மயிலுதானப்பா அவங்க பேரு..?’

நல்லா ஞாபகம் வைத்திருக்கிறான் மூத்தவன். ‘ஆமாப்பா’ என்றார்.

‘ஓராளாச்சும் போகணும்லப்பா…’

மூத்தவனின் பேச்சில் கூழுப் பிள்ளைக்கு முகம் சுண்டியது. என்ன பதில் சொல்வது. கேள்வி மட்டும் அல்லாது, பதில்களையும் அவர்களே தயாரித்துவிடுகிறார்கள்.

இதே மூத்தவனின் மச்சினன், கோயம்புத்தூரில் கால் ஒடிந்துகிடந்தபோது, பெண் பிள்ளைகள் உட்படக் கிளம்பி வந்திருந்தார்கள். ‘எங்க மாமா மகனோட மச்சினெ, எனக்குத் தம்பி மொற…’ என்று வெகு இயல்பாக வந்து விசாரித்தது அவனுக்கு மறந்தா போயிருக்கும்?

நீண்ட மௌனத்துக்குப் பிறகு மெதுவாக மூத்தவனிடம் பேசலானார். ‘தம்பிகளுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம். நம்ம வீட்ல யாதொரு காரியம்னாலும், நான்னு வந்து நிக்கிற குடும்பம். எழவுச் சேதியக் கேட்டும் யார அனுப்பறதுன்னு கணக்குப் போடுறீக”- லேசாகச் சிரித்தபடிதான் கேட்டார். நெஞ்சுக்குள் அழுகை ரணம் கட்டி இருந்தது.

அதனை உணர்ந்தவனாக, ‘இல்லப்பா… போகணும்தே. கட இருக்கேப்பா… பக்கம்னாக்கூட மாத்தி மாத்திப் பாத்திட்டு வந்திடலாம்!”

அந்த வகையில் மூத்தவன் குடும்ப மானத்தைக் காத்திடுவான் என்ற நம்பிக்கை பிறந்தது பிள்ளைக்கு. ஓர் ஆறுதல்தான்.

‘எந்நேரம் எடுக்குறாகளாம்..?’

‘எப்பிடியும் மதியத்துக்கு மேலதான் தூக்குவாங்க.’

‘சரிப்பா, நீங்க போயி வீட்ல சாப்டுக் கௌம்புங்க. அந்தப் பிள்ளகிட்ட வீட்டு வேலயக் கொறச்சுக்கச் சொல்லணும். அது பாட்டுக்கு துணிய ஊற வச்சுட்டேன், மாவு ஆட்டணும், தண்ணி பிடிக்கணும்னு பட்டியல் போட்டான்னா சிக்கல்!” என்றபடி செல்போனை எடுத்து மனைவியை அழைத்தான்.

நிறையப் பேசினவன், கடைசியாக, ‘அதெல்லாம் பேசக் கூடாது. நாம போயாகணும். சரி… சரி, அப்பா வர்றாரு. அவருக்குச் சாப்பாடப் போட்டு அனுப்பிச்சுட்டு ஒன் வேலய ஆரம்பி!”

போனை சட்டைப் பையில் போட்டுக்கொண்டவன், ‘தம்பி வீட்ல ஆர்ப்பா வாராங்க?” என விசாரித்தான்.

பகீரென்றது கூழுப் பிள்ளைக்கு. இணை போடப்போகிறானோ… ”தெரியலப்பா… போவாங்கெ..!” என்று தப்பித்தார்.

‘சரி, ஆர் வேணாலும் வரட்டும்ப்பா. நீங்க கௌம்புங்க. வீட்ல மாவு ஆட்டிக்கிட்டு இருக்காளாம். முடிச்சிட்டுத்தே கடைக்கி வர முடியும். அதனால, நா முன்ன பின்ன வந்திர்றே!’ என்றபடி பஸ்ஸுக்கு பணம் எடுத்துக் கொடுத்தான்.

யாரையாவது ஒருத்தனைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டால், ஒருவேளை வீட்டுக்கு ஒருத்தன் என்ற கணக்குப் போட்டு ஆண், பெண் யாராவது ஓர் ஆள் வந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக நினைத்தார். அப்படி நடந்தால், மாமா வீட்டில் இருந்து சின்னவர், பெரியவர் எல்லோரும் வந்துவிட்டதான நிறைவு அந்த வீட்டாருக்குக் கிட்டும். தனக்கும் குற்ற உணர்ச்சி எழாது.

தான் மட்டும் புறப்பட்டுப் போக, அசந்தர்ப்பமாக பிள்ளைகள் கிளம்பத் தாமதம் ஆகிறபோது, ஒருத்தனுக்கொருத்தன் பேசி, ‘அதான் பெரியவர் போயிருக்கார்ல. அவர் போனா சரித்தான். கேத வீடுதான! எல்லாரும் போய் நிக்கணுமா? நாளப் பின்ன, பொம்பளப் பிள்ளைகள அனுப்பிச்சுவிட்டு விசாரிக்கச் சொல்லலாம்’ என்று ஒருமித்த முடிவு எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

உறவுகளைப் பேணுவது என்பது இது மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் அமையும். அதுவும் துக்க வீட்டுக்குப் போய் வருகிறது மாதிரியான ஆகச் சிறந்த காரியம் வேறு எதுவும் இல்லை என்பது கூழ்ப் பிள்ளையின் அய்யா சொல்லுவது உண்டு. அந்த வழி வந்த பழக்கம்.

ரத்தினம்மாள்கூடக் கேலி சொல்வதுண்டு. ‘குழி தோண்டிக்குக்கூட எழவுச் சேதி வராது. எங்க வீட்டுக்காரருக்குத்தே பொணமே தேடி வந்து சேதி சொல்லிட்டுப் போகும்.’

மூத்தவன் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டார். ‘போறது போறம்… சித்த வெள்ளனமே போனம்னா…” இழுத்தார்.

‘வந்திர்றேம்ப்பா… நம்ம வீட்டுக்கு ஒண்ணுன்னா அவங்கல்லா டாண்ணு வர்றாகல்ல’- காலை யாவாரத்தின் கெடுபிடிகளுக்கு இடையில் மூத்த மகனின் ஆதூரமான அந்த வார்த்தைகள் கூழுப் பிள்ளைக்கு ஆசுவாசத்தைக் கொடுத்தது.

நிழலோரமாக நடக்கலானார். முழங்காலில் கட்டியிருந்த நீர், நடையை வீசிப் போகத் தடையாக இருந்தது. அதன் போக்கில் எட்டுப் போடாவிட்டால், சுளீரென மின்வெட்டுபோல முட்டிக்குள் வலி கீறிப் பாய்கிறது. மாத்திரை போட்டாலும், அந்த வேளைக்குத்தான் மட்டுப்படுகிறது. அடுத்த வேளையில் அதிகமாகிவிடுகிறது. மெதுவாக நடக்கலானார்.

மூத்தவன் வீட்டில் எப்பவும் ராத்திரிதான் டிபன். காலையில் சோறு என்கிறபோதே அயர்ச்சியாக இருக்கிறது. நல்ல வேளையாக இன்னார் வீட்டில்தான் சாப்பாடு என்கிற முறை வைக்கவில்லை. தேவைப்படுகிற இடத்தில் சாப்பிடுகிற சுதந்திரம் வாய்த்து இருந்தது.

சமயத்தில் அதுவும் பிழையாகி, எந்த வீட்டிலும் சாப்பாடு இல்லாது போகிற சம்பவமும் நேர்வதுண்டு.

‘முன்கூட்டியே சொன்னாத்தான சோறு சேத்து ஆக்க முடியும். வெலெயரிசிய வாங்கி வீணாக்க முடியுமா?” என்பார்கள்.

அதைப்பற்றி அவரும் கவலைப்படுவது கிடையாது. அப்படி உணவு கிடைக்காத பொழுதை, இரைப்பைக்கு ஓய்வு என்று அன்றைக்கு நோன்பென விரதம் மேற்கொள்வார். இன்றைக்கு மூத்தவன் வீட்டில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

மெள்ளவே நடந்து அவனது வீட்டைச் சமீபித்தார். வாசலில் பெண் பிள்ளைகள் நின்று பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது. நடையினைச் சுருக்கி ஊர்ந்தார்.

”வீடுன்னா, ஆயிரம் பாடு இருக்கும். ஊருன்னா, நூறு நல்லது கெட்டது நடக்கத் தேஞ் செய்யும். அல்லாத்துக்கும் அல்லாரும் போயிர முடியுமா. நாம என்னா அவதாரக் கடவுளா? அங்கியும் இங்கியுமா ஓடிப் போயி நிக்க!”- நீட்டி முழக்கிப் பேசிக்கொண்டு இருந்தது மூத்த மருமகள்.

‘இல்லக்கா… நாலு குடும்பமும் பேரம் பேத்தி எடுக்கற ஸ்டேஜுக்கு வந்தாச்சு. இப்பவும் போயி மொத்தஞ் சேந்து கௌம்புங்கன்னா நடக்குற காரியமா?’- அடுத்து ஒலித்தது, மூன்றாவது மருமகளின் கீச்சுக் குரல்.

கூழுப் பிள்ளை நடையை நிறுத்திக்கொண்டார். இந்த நேரம் சாப்பிடச் செல்வது உசிதமானதல்ல எனப்பட்டது. ‘ஒங்களுக்குத்தே வேலயில்ல வெட்டியில்ல… போயி ஒக்காந்துட்டு வர வேண்டியதுதான. ‘நீ வா… நீ வா’ன்னு தொயங்கட்டி தொந்தரவு. ச்சே… வயசு போயும் இன்னும் வீராப்பு போகலியே!”

எழவு வீட்டில் ‘நகநக’வென மேளம் அடித்துக்கொண்டு இருந்தார்கள்.

‘மாமா…’ என்றபடி மயிலு மகன் அவரது கைப்பிடித்து சேரில் அமரவைத்தான்.

அழுதுகொண்டு இருந்த பெண்கள் கூட்டத்தில் இருந்து பெண் பிள்ளைகள் எழுந்துவந்து அவரை நலம் விசாரித்தனர்.

கூழுப் பிள்ளைக்குத் துக்கம் மேலிட்டது. தொண்டையைச் செருமிக்கொண்டார்.

‘பயகளுக்குக் கட… யாவாரம்… எடுத்துவச்சு வரணும்… பின்னாடி வந்திருவான்க” – திணறித் திணறிச் சொன்னார்.

‘யாவாரக் கடைய அடைக்கக் கூடாது மாமா. ஓடிட்டே இருக்கணும்… முன்ன மாதிரிஇல்ல உலகம்… திரும்பியெல்லா பாக்க முடியாது. அதான் நீங்க வந்திருக்கீகள்ல!”- தத்துவமாகப் பேசினான் மயிலு மகன்.

தனது பிள்ளைகளின் பேச்சுபோலவே அவனும் பேசினான். மாறித்தான் போனது உலகம். அதே நேரம் உறவுமுறைகள்..?

மாறுதல்ங்கறது ஒடஞ்சு செதறிப் போகறது கெடையாது. ஒண்ணு, அதவிட வலுவானதா ஆகணும். அதுதான் உண்மையான மாறுதல். ஏன் எல்லாரும் இத உணராமப் பேசுறாங்க!

ஆறோட விதி, பாய்ச்சல்… ஊரோட விதி, பெருத்தல்… மனிச உறவுகளோட விதி..?

கூழுப் பிள்ளைக்குச் சமாதானம் ஆக வில்லை அவன் பேச்சு!

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *