கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,127 
 

மளிகைக் கடைக்கார பையன் கொண்டு வந்திருந்த சாமான்களை சரிபார்த்துக் கொண்டிருந்த பாக்யம்…

“என்ன தம்பீ, நீ கடைக்கு புதுசா? நாங்க வழக்கமா வாங்கற பிராண்ட் இல்லாம பொருட்கள் எல்லாம் மாறி இருக்கு!’ என்றபடி ரவை, மாவு, டூத் பேஸ்ட், ஆயில் என பல பொருட்களையும் அந்தப் பையனிடமே திருப்பிக் கொடுத்து, என்னென்ன பிராண்ட் வேணும் என எழுதியனுப்பினாள்.

“ஏம்மா, என்னைக்கோ ஒருநாள் மாறினதுக்கு அந்தப் பையனை ஏன் அலைய விடற? இந்த மாசம் வித்தியாசமா வேற பிராண்ட் பொருட்களை யூஸ் பண்ணிப் பார்க்க வேண்டியதுதானே?’ மகள் ப்ரியா.

“ப்ரியா, உங்கப்பாவுக்கு, அவருக்குப் பிடிச்ச ஐட்டம் இல்லைன்னா அவ்வளவுதான், ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பிச்சிடுவார்! அதுவுமில்லாம பிடிக்காததைச் சாப்பிட்டா அவருக்கு அஜீரணம் ஆயிடும்…!’

“ஒரு உணவு விஷயத்துக்கே, பிடிக்கலைன்னா ஒத்துவர்றதில்லை! கல்யாணம்ங்கிறது என்னோட உணர்வு விஷயம்! ஆனா, அதுல எனக்குப் பிடிக்காத மாப்பிள்ளையை அப்பாவே தேர்வு பண்ணிட்டு கட்டாயப்படுத்தறது, எந்த விதத்துல நியாயம்மா!’

ப்ரியாவின் பிராண்ட் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்து நின்றார். அவரது தந்தை ராகவன்.

– நா.கி.பிரசாத் (அக்டோபர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *