நான் கணவன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 10,967 
 

தட்டுத்தடுமாறி ஒருவழியா பி.ஏ., ஹிஸ்டரி முடிச்சு ‘எங்கூரு நாட்டரசன்பேட்டையில் முதன்முதலா டிகிரி முடிச்சது நாங்கதாம்லே!’னு மமதையில் திரிஞ்சிட்டு இருந்த காலம். 17 அரியர்ஸை முட்டி மோதி க்ளியர் பண்ணி, டிகிரியை முடிச்ச ஒரு வீரனுக்கு எவ்வளவு அசதியும் பெருமையும் இருக்கும். அதைஎல்லாம் அனுபவிக்கவிடாம, ‘நம்ம சினை மாட்டை மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுப் போ ராசா!’ன்னு ஆரம்பிச்சாங்க வீட்ல. ஒரு பட்டதாரி மாடு மேய்ப்பதா? இல்லாத மீசை துடிக்கப் புறப்பட்டேன். வேற எங்கே… வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு!

ஒண்ணாப்புல கூடப் படிச்ச(!) மாரியைத் தேடிக் கண்டுபிடிச்சா, ஒரு மளிகைக் கடையில எடுபிடியா இருந்தாப்ல. பாசக்காரன்… ஒரு வாட்டர் பாக்கெட் கம்பெனியில் வேலைக்குச் சேர்த்துவிட்டான். வீடு வீடா கேன் வாட்டர் சப்ளை செய்யும் வேலைதான். இந்த வேலை என்னவோ, என் பி.ஏ., ஹிஸ்டரிக்கு இல்லைன்னு தெரியும். ஆனாலும், ஊர்ல எல்லோரும் நம்ம பய மெட்ராஸ்ல சம்பாதிக்கிறான்னுதானே சொல்லிப்பாய்ங்க.

மெஸ், ஹோட்டல் எதுவும் கட்டுப்படிஆகலை என் சம்பளத்துக்கு. ஒரு ரூபாய் அரிசியின் மகிமை எல்லாம் எங்க ரூம் பசங்களுக்குத்தான் தெரியும். ரேஷன் சாதம், புளிக் குழம்புன்னே வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்தாலும், ஊரில் இருந்து யாராவது வந்தா மட்டும் மெனு மாறும். ‘ரேஷன் அரிசியா சாப்பி டுற?’ன்னு தன்மானத்துக்கு இழுக்காகிடக் கூடாதுல்ல!

ஊர்ல இருந்து மச்சான் வந்தப்பவும் இப்படித்தான், ”நம்மூரு சாப்பாடு மாதிரி வராதுடா… செல்ஃப் குக்கிங்தான் பெஸ்ட். சாதம், சாம்பார், ரசம்னு டைம் வேஸ்ட்!” அப்படினு பிட் போட்டேன். அரை கிலோ ரவை, வெங்காயத்துக்கு எவ்வளவு காசு வேணும்னு கால்குலேட் பண்ணிக்கிட்டே.

”சரிடா, நீ சிரமப்படாதே! சாப்பாடெல்லாம் வேணாம். ஒரு ஃபேமிலி பேக் மேகி வாங்கிப் பண்ணிடு போதும்!” என்றான். எனக்கோ பகீர்னுச்சு. அதுக்கு உடுப்பி ஹோட்டல்ல ஃபுல் மீல்ஸே சாப்பிடலாமே.

”என்னதான் சொல்லு… நம்மூரு உப்புமா பக்கத்துல நிக்க முடியுமா?”ன்னு சமாளிச்சுட்டோம்ல. மச்சான் சென்னைக்கு வந்து என்னத்தைப் புரிஞ்சுகிட் டானோ? எங்க வீட்ல போய்ப் பேசி அவன் தங்கச்சிக்கு என்னைக் கல்யாணம் பண்ணக் கேட்டானாம். இங்க வந்தபோது கிண்டி பார்க், மெரினா பீச்னு செலவு இல்லாத இடமாச் சுத்திக் காட்டுனதுல இம்ப்ரெஸ் ஆயிட்டான் போல!

எங்க வீட்லயும் ஓ.கே. சொல்லி, கல்யாணம் முடிஞ்சது. யப்பா! ஒருவழியா மேன்ஷன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வெச்சாச்சு. ஒரு சட்டைக்கு ஒன்பது பேர் ஓனர். புளிக் குழம்பு, உப்புமா எதுவும் இல்லாம, மாமனார் கொடுத்த டௌரியில ஒரு வாடகைவீட்டுக் குப் போயிடலாம். ‘புதுப் பொண்டாட்டி எப்படிச் சமைச்சாலும் ‘சூப்பர்’னு சொல்லு மாப்ள… அதான் சேஃப்ட்டி!’னு ஓர் அனுபவசாலி நண்பன் அட்வைஸ் கொடுத்தான்.

”மாமா, சாப்பிட வாங்க”ன்னு அவ கூப்பிட்டதும் கம்பங் கொல்லையில மாடு புகுந்த மாதிரி போனா… தட்டுல உப்புமா, புளிக் குழம்பு.

”அண்ணன் சொல்லிச்சு… உங்களுக்கு சாம்பார், ரசம்னு டைம் வேஸ்ட் பண்ணாப் பிடிக்காதாமே. அதான் அப்படியே தேடிப் பிடிச்சு 30 வகை உப்புமான்னு ஒரு புக்கு வாங்கிட்டேன். இன்னிக்கு ரவை, நாளைக்கு சேமியா அப்புறம் அவல் உப்புமா..!”

என்ன கொடுமை சார் இது!

– செப்டம்பர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *