கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: January 18, 2024
பார்வையிட்டோர்: 4,767 
 
 

(1959ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

1.பூச்சி! பூச்சி! பூச்சி! 

“நளினி! அடீ நளினி! எங்கேயடியம்மா தொலைஞ்சு போயிட்டே?” என்று குரல் கொடுத்தாள் சின்னம்மா. 

“ஏன் சின்னம்மா? இதோ இருக்கேன். முதல் தடவை நீ கூப்பிட்டதே காது கேட்டது. ஏன் இன்னும் கேட்டுண்டே உள்ளே வரதுக்குள்ளேயே நீ எட்டுதரம், கூப்பிட்டுடறயே!” என்று கூறிக்கொண்டே குதித்துக் குதித்துக் கொண்டு உள்ளே வந்தாள் நளினி. 

நளினிக்கு வயசு பத்திருக்கும் – இரண்டு, மூன்று மாசங்கள் அதிகமாகவே இருக்கும். ரொம்பவும் சிவப்பில்லை; மாநிறம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், முகத்திலே ஒரு குறுகுறுப்பும், அசைவிலே ஒரு அழகும் இருந்தன. ஒரு காலத்தில் பச்சையாயும், நன்றாகவும் இருந்த பாவாடையைக் கட்டிக் கொண்டிருந்தாள். பாவாடை இரண்டொரு இடங்களில் கிழித்து தைக்கப்பட்டிருந்தது. கழுத்திலே ஒரு பவழமாலை. தலைமயிர் எண்ணெய் பட்டு எத்தனை நாள் இருக்குமோ! ஆனால், அதை வாராமல் பின்னி வாழைநார் முடிந்திருந்தாள். நெற்றியிலே பொட்டில்லை. ஆனாலும் அதிலே ஒரு பள பளப்பு இருந்தது. கைகளிலோ கால்களிலோ ஒரு நகையும் இல்லை. கண்ணாடி வளையல்கூட அவள் கைகளை அலங் கரிக்கவில்லை. அவள் கண்கள் ஆழ்ந்தகன்று இருண்டு இருந்தன. சின்ன வாய். ஒவ்வொரு வார்த்தையைப் பேசும் போதும் அவள் வாய் ஒரு சிவப்பு வளையமாகத் திறந்து மூடியது. 

‘நளினி! நளினி!’ என்று அவளைக் கூப்பிட்டு அதட்டிய சின்னம்மா நகைநட்டுகள் எல்லாம் ஏராளமாக அணிந்திருந்தாள். சற்று அதிகமாகவே அணிந்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல சிவப்பு நிறம். விலை உயர்ந்த பகட்டான பட்டாடை அணிந்திருந்தாள். தலையை வாரிச் சீவி ஜில்லென்று பொட்டும் இட்டிருந்தாள். கொஞ்சம் பகட்டான ஸ்திரீ தான். வயசு இருபது இருபத்திரண்டுக்குள் தான் இருக்கும். அவர் நளினியின் சின்னம்மா; அதாவது, நளினியினுடைய தகப்பனாரின் இரண்டாவது மனைவி. 

நளினி தாயில்லாப் பெண். அவள் தாய் இறந்து இப்போது நாலைந்து வருஷங்களுக்கு மேலாகிறது. தனக்கு தாயார் ஒருத்தி இருந்ததே நளினிக்கு ஞாபகம் இல்லை என்றே சொல்லலாம். தாயன்பு என்றால் என்ன என்பதே அறியாமல் வளர்ந்து வருகிறவள் அவள். அது மட்டும் அல்ல; தாயன்பு தேவை என்றும் உணராதவள் அவள். 

நளினியின் சின்னம்மா – அவள் பெயரே சின்னம்மா தான் – சுபாவத்தால் கெட்டவள் அல்ல. ஏழ்மையான, அங்கத்தினர்கள் அதிகம் உள்ள குடும்பத்தில் பிறந்தவள். அந்தக் குடும்பத்திலே சிடுசிடுவென்று சதா சண்டை போட்டுக்கொண்டிருந்தால் தான் – அதாவது, ஏழெட்டுப் பேருடன் ஓயாமல் போட்டி போட்டுக் கொண்டிருந்தால் தான் ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ணமுடியும். வாழ்க்கை என்பது ஒரு போர் என்பதைச் சின்னம்மா தன் இளவயதிலிருந்தே உணரச் சந்தர்ப்பங்கள் படைத்திருந்தாள். அந்தப் போரிலே வெற்றி பெற வேண்டுமானால் ஓயாத வாயடி கையடி அடித்துதான் வெற்றி பெறலாம். வெற்றி ஒரு லக்ஷயம் ஓயாத வாயடி கையடியே லக்ஷயம் என்றாகிவிட்டது அவளுக்கு! பதினாறு வயது வரையில் கலியாணமாகாமல் எப்போதுதான் கலியாணம் ஆகும் என்கிற நிச்சயமும் இல்லாமல் தெருவார் சொன்னது போல் ‘மாடு மாதிரி’ வளர்ந்து வந்த சின்னம்மா, ஒரு நாள் பணக்கார இடத்தில் இளையாளாகத்தான் என்றாலும் பணக்கார இடம் ஒசந்த இடம் தானே! வாழ்க்கைப் பட்டாள். பெண்டிழந்து விட்டு நாலைந்து வயது கூட நிரம்பாத சிறுமியை வைத்துக் கொண்டு அவஸ்தைப் பட்ட விசுவநாதய்யர் நல்ல டம் பார்த்து, பொறுப்புத் தெரிந்த பெண்ணாக வேண்டுமென்று தேடி, தானாகவே வலிய வந்து அவளைக் கலியாணம் செய்து கொண்டார். 

நல்ல இடம்தான். வாழ்க்கை ஒரு போர் என்பதையே மறந்துவிட்டு, வாழ்க்கை நடத்தலாம் சின்னம்மா. ஆனால் பழைய பழக்க வேகம் அவளை விட மறுத்தது. கணவன் சாது. அவள் பேசுவதற்கு எதிர்வார்த்தை பேசமாட்டார். அவள் இட்டதே சட்டம். போராட, வாயடி கையடி அடிக்க, 
அங்கு வீட்டிலே யாரும் இல்லை. ஒரு சிறு பெண்தான் இருந்தாள் கள்ளங் கபடு அற்ற சிறுபெண். கோபித்துக் கொண்டாலும், அதட்டினாலும் அழத் தெரியாத சிறு பெண். மாற்றாந்தாய், படுத்துகிறாள் என்ற ஞாபகமே, பிறர் ஞாபக மூட்டினால் கூட, நளினிக்கு வருவதில்லை. அப்படியிருந்தும் நளினியைக் காணும்போதெல்லாம், வெட்டலாமா என்று தான் வரும் சின்னம்மாவுக்கு. 

அப்படி ஒன்றும் கெட்டவளும் அல்ல அந்தச் சின்னம்மா. 

தன் வயிற்றில் பிறந்தவள் அல்ல என்பதற்காக நளினியைக் கடுமையாக நடத்தினாள் அவள் என்று சொல்ல முடியாது. தன் வயிற்றில் பிறந்திருந்தாலும் அவள் அவ்வளவு கடுமையாகவே தான் இருந்திருப்பாள். மூத்தாள் பெண் என்பதற்காக அவளுக்குத் தலை வாராமல், நல்ல ஆடை உடுத்திவிடாமல் இருந்தாள் என்றும் சொல்வதற்கில்லை. தன்னைச் சிங்காரித்துக் கொள்ளவே போதில்லை சின்னம்மாவுக்கு- போது போதவில்லை. தன் பெண்ணையோ, மூத்தாள் பெண்ணையோ சிங்காரிக்க அவளுக்குப் போது எங்கிருந்தது. 

சின்னம்மாவைச் சொல்வதில் லாபம் இல்லை. மனித சுபாவமே இதுதான் போலும். தீவிரமாக, சிந்தித்துக் கண்டு பிடிக்கக்கூடிய காரணம் எதுவும் இல்லாமலே, சில காரியங்கள் நடந்து வருகின்றன; சிலர் உறவுகள் பாதிக்கத் தான் பாதிக்கப்படுகின்றன. அதைப்பற்றி ஆராய்வது அவசியம் இல்லை. 

ஆனால், நளினியைப்பற்றி அவள் கண் மறைவாக இருக்கும்போது கெடுதியே நினைக்காத சின்னம்மா, அவள் கண்ணெதிரே வந்தவுடன் காளிமாதிரியாகி விடுவாள்! அவள் உள்ளத்திலே ஆத்திரம் ஏதோ குடிகொண்டு மூண்டு மூண்டு எழும். 

இன்றும் அப்படித்தான். “சும்மா வாயாடிண்டு நிக்காதே, கழுதை! எத்தனை தரம் சொல்றது? வாசல் திண்ணையிலே உனக்கென்ன வேலை எப்பப் பார்த்தாலும்! உள்ளே வெள்ளிப் பேலாவிலே சாதம் பிசைஞ்சு வைச்சிருக்கேன்; ராஜாவுக்கு சாதத்தை ஊட்டு! வயது ஆறது – சொந்தமா ஒரு பெண்ணைப் பெத்துக்க; இப்படி தினம் நிக்கறயே!” என்றாள் சின்னம்மா. 

நளினி பதில் ஒன்றும் சொல்லவில்லை. குதித்துக் குதித்துக் கொண்டே உள்ளே போய். இடுப்பில் ராஜுவைத் தூக்கி வைத்துக்கொண்டு, இடது கையில் வெள்ளிப் பேலாவை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். 

“அம்மு, சாப்பிடறயாடா?” என்று ராஜுவைக் கேட்டுக் கொண்டே கூடத்தில் நின்ற தன் சின்னம்மாவை லக்ஷயமே செய்யாமல் மீண்டும் வாசல் பக்கம் போய்விட்டாள். 

“நன்னாருக்குடி இந்தப் பொண் அடிக்கிற கூத்து!” என்று முணுமுணுத்துக் கொண்டாள் சின்னம்மா. 

இதற்குள் அவள் கணவன் விசுவநாதய்யர், “அடியே! அடியே! வெந்நீர் எடுத்து வை; ஸ்நானம் பண்ணிவிட்டு ஆபீஸ் போகணும்” என்று கொல்லைத் தாழ்வாரத்திலிருந்து குரல் கொடுக்க, அதைக் கவனிக்க போய்விட்டாள். 

இடுப்பில் குழந்தையுடன் வாசலில் நின்று நளினி, குழந்தை சாப்பிடமாட்டேன் என்று பிடிவாதம் செய்வது கண்டு, பயமுறுத்தலாகவும் வேடிக்கையாகவும், “பூச்சி! பூச்சி!” என்று கூப்பிட்டாள். 

“ச்சி… ச்சி….” என்று மழலை பேசியது அவள் இடுப்பில் இருந்த குழந்தை. 

சாப்பிடறயா; இல்லாட்ட, அம்முவை எல்லாம் பூச்சிக்குப் போடட்டுமா? என்று கேட்டாள் நளினி. 

“…ச்சி… சி… ஓடு” என்றது குழந்தை. 

அந்தச் சமயம் பெண்ணின் குரல் கேட்டு, ‘பூச்சி’யே வாலை ஆட்டிக் கொண்டு நாலுகால்ப் பாய்ச்சலாக அங்கு வந்து சேர்ந்துவிடவே, குழந்தைக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. கலகலவென்று சிரித்தது; கைகளையும் கால்களையும் போட்டு உதைத்துக் கொண்டது. 

பூச்சிக்கு சாதத்தைப் போட்டு விடுவேன் என்று பய முறுத்திக் காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்த்த நளினி ஏமாந்தாள். பூச்சிக்கும் சாதம் போட்டால்தான் சாப்பிடுவேன் என்றது குழந்தை. பூச்சிக்குப் பாதி, குழந்தைக்குப் பாதி என்று சாதத்தை ஊட்டிவிட்டு வெள்ளிப் பேலா காலியான பிறகு, உள்ளே திரும்பலாமா என்று நளினி யோசனை பண்ணிய சமயம் தெருக்கோடியிலே ஒரு குதிரை வண்டி வந்தது. “அதோ பார், குதிரை வண்டி….” என்று குழந்தைக்குச் சொல்லிவிட்டு அவ்விடம் பேலாவும் கையுமாகக் குதிரை வண்டியைத் தானே பார்த்துக் கொண்டு நின்றாள் நளினி. 

குதிரை வண்டி அவள் வீட்டிற்கு எதிரே வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வாலிபன் இறங்கினான். அவன் நளினி வீட்டுக்கு நேர் எதிர் வீட்டை நோக்கிப் போனான் வண்டிக் காரன் அவனுடைய பெட்டி படுக்கையுடன் பின் தொடர்ந்தான். 

“ராஜு, அந்த மாமாவைப் பார்த்தியாடா? பட்டணத்து மாமாவை!” என்றாள் நளினி சற்று உரக்க. 

எதிர் வீட்டை நோக்கிப் போன வாலிபன் காதில் நளினி சொன்னது நன்றாக விழுந்தது. பட்டணத்து மாமா திரும்பினான், யார் அப்படித் தனக்குப் பட்டம் அளித்தது என்பதைப் பார்ப்பதற்காக. ஆனால் அவன் கண்ணில் அழுக்குப் படிந்த கிழிந்த பச்சைப் பாவாடை அணிந்திருந்த ஒரு பெண், இடுப்பிலே ஒரு குழந்தையுடன் எதிர் வீட்டிற்குள்ளே போவது தான் தெரிந்தது. அவள் முகம் அவனுக்குத் தெரியவில்லை. 

“தேவலையே! வாயாடிப் பெண்ணாக இருக்கும் போலிருக்கே! வளர்ந்த பெண்ணாகவும் இருக்கிறதே!” என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் போனான் அவன். 

2.பட்டணத்து மாமா 

பட்டணத்து மாமா என்று நளினி விளையாட்டாகப் பெயர் சூட்டிய அந்த வாலிபன் உண்மையிலேயே பட்டணத் திலிருந்து வந்தவன் தான். விஜயபுரம் அக்கிரகாரத்தில் நளினி வீட்டிற்கு நேர் எதில் வீட்டில் அவனுடைய மூத்த சகோதரி வசித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்ப்பதற்காகத்தான் வந்திருந்தான். 

அவன் பெயர் சீதாராமன். அவனுக்கு வயசு இருபத் திரண்டுக்குள் தான் இருக்கும். ஒல்லியாக, உயரமாக, மூக்கும் முழியுமாக, பார்ப்பதற்கு நன்றாக இருந்தான். பி.ஏ. படித்தவன். மேலே கணக்கு வழக்கு என்று கொஞ்சம் அதிகமாகவும் படித்து இரண்டொரு பட்டங்களும் பெற்றவன். அவனுக்குப் பட்டணத்து பாங்கிகளில் ஒன்றிலே வேலையாகியிருந்தது. வேலை கிடைத்து ஒரு வருஷம் இருக்கும். லீவு கிடைத்த சந்தர்ப்பத்திலே, தன் சகோதரியைப் பார்த்துவிட்டு அவளுடன் இரண்டொரு நாள் தங்கிவிட்டும் போகலாம் என்று எண்ணி வந்திருந்தான் சீதாராமன். 

அவன் வந்ததில் அவன் அக்கா பர்வதத்தம்மாளுக்கு அளவற்ற திருப்தி, அவள் கணவர் வைதீகர்; கொஞ்சம் கட்டுப்பெட்டி என்றுதான் சொல்ல வேண்டும். சொல்ப நிலபுலன்கள் உள்ளவர். வைதீகத் தொழில் செய்து காலங் கடத்தியவர். வைதீகன் என்பதிலே ஏதோ கொஞ்சம் அகௌரவம் உண்டு என்று உள்ளூர அந்தரங்கத்தில் எண்ணி யிருப்பவள் பர்வதம்மாள். பட்டணத்து தம்பி வந்து தங்கள் வீட்டில் சிலநாள் தங்கிப் போவதனாலே விஜயபுரத்து அக்கிரகாரத்திலே தன்னுடைய மதிப்பு சற்றே ஓங்கும் என்று அவள் எண்ணியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்தத் தம்பியைப் பற்றி அவள் ஏற்கனவே தன் சிநேகிதிகள் பலரிடமும் கூறியதுண்டு. தம்பி என்றால் பட்டணத்துத் தம்பிதான் அவளுக்கு ஞாபகம் வரும். அந்தத் தம்பிக்கு மூத்தவனான இன்னொரு தம்பி தனக் கிருந்தது பர்வதத்துக்கே மறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அந்தத் தம்பியும் வைதீகன்தான்; தஞ்சாவூரிலே புரோகிதம் பண்ணிக்கொண்டிருந்தான். 

பட்டணத்து தம்பியின் வருகையைக் கொண்டாட பர்வதம் வெகுவாகப் பாடுபட்டாள். ஏதோ வீட்டிலிருக்கிற சாமான் களையே கடன் வாங்குகிற சாக்காக வெளியே சென்று அண்டையில் இரண்டொரு வீடுகளுக்கு தன் தம்பி வந்திருக்கிற விஷயத்தை நைஸாகச் சொல்லி விட்டு வந்தாள். இப்படி அவள் எதிர் வீட்டுச் சின்னம்மாளிடம் வந்து தன் தம்பியைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் போது நளினியும் உடன் இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள். 

“இப்போ சித்தே முன்னாடி குதிரை வண்டியிலே வந்து இறங்கினாரே, அவரா? உங்கள் தம்பியா அவர்?” என்றாள் நளினி. 

பர்வதத்துக்கும், நின்று இன்னும் ஒரு நிமிஷம் தன் தம்பியைப்பற்றிப் பேசலாமே என்று ஆசை. “ஆமாம்! நீ பார்த்தயோல்லியோ? பாக்கறதுக்கு அழகாயிருப்பான்!…. நாழியாறது. பாவம்! பதினாறு மணிநேரம் ரயிலிலே வந்த அலுப்பு! சீக்கிரம் சமைச்சுப் போட்டா சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் அலுப்புத் தீரத் தூங்குவான்… ஆமாம் மாமி! உங்காத்திலே சேமியா இருக்கோ? இருந்தாக் கொஞ்சம் கொடுங்கோ. அது வந்ததும் வாங்கிண்டு வரச் சொல்லித் திரும்பத் தடுந்திடுரேன். என்னிக்கும் வராதவன் இன்னிக்கு வந்திருக்கான்; நாள் பார்த்து அது பக்கத்துக் கிராமத்துக்குத் தொலைஞ்சுடுத்து மிராசு பண்ண! எண்ணம்மா பண்றது?” 

சின்னம்மா வீட்டிலே சேமியா இல்லை. பர்வதத்திற்கும் சேமியா அப்படி ஒன்றும் அவசியம் இல்லைதான். அப்படி என்ன மாப்பிள்ளையா வந்திருந்தான் சேமியாப் பாயஸம் பண்ணிப் போட? தம்பிதானே! ஏதாவது வேண்டும் என்று கேட்டுக் கொண்டு போனால்தானே சின்னம்மாவிடம் தன் தம்பியைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் பேச இயலும்? 

“உங்க தம்பி ஒருவாரம் இருப்பாரா?” என்று ஏதாவது கேட்கவேண்டுமே என்று சொரத்தில்லாமல் கேட்டு வைத்தாள் சின்னம்மா. 

“அதென்னமோ வந்ததும் வராததுமா சொல்லிப்புட்டான். இரண்டொரு நாளிலே திரும்பணும்னு. பட்டணத்து பாங்கியிலே வேலை? இவன் இல்லாமே அங்கே பாங்கியிலே எல்லாருமே திணறிப் போவாளோல்லியோ? சீக்கிரம் போகணும்னுதான் சொன்னான்” என்றாள் பர்வதம். 

தன் தம்பியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டுப் போக பர்வதத்துக்கு மனமில்லைதான். ஆனால் எப்படியோ நிறுத்தி விட்டுக் கடைசியில் “போய்ட்டு மத்தியானமா வரேன்” என்று விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள். 

அவள் போன பின் சின்னம்மா சற்றுக் கேலியாகவே சொன்னாள். “பிரமாதமாகத் தம்பியைப் பத்திப் பீத்திக்கிறதுக்கு வந்துட்டா இங்கே! அதிசயத் தம்பிதான்! பட்டணத்திலே நாற்பது ரூபாய்க்கு லாட்டரி அடிச்சிண்டிருப்பான்! இங்கே….” 

நளினி பேசாமல் இருந்திருக்கக் கூடாதா பாவம்! குறுக்கிட்டாள்; வாங்கிக் கட்டிக் கொண்டாள். 

“அவர் வண்டியிலேருந்து வந்து இறங்கச்சே நான் பார்த்தேன். நன்னாகத்தான் இருந்தார்” என்றாள் நளினி. 

“பெரிய மனுஷி கணக்கா உட்கார்ந்துண்டு வம்பளந் துண்டு! போடி கழுதை! அண்டாவிலே ஜலம் இல்லே; கிணத்திலேருந்து இழுத்துக் கொண்டு வந்து கொட்டு!” என்று நளினியை அதட்டினாள் சின்னம்மா. 

நளினி இங்கு சீதாராமனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது போலவே அங்கே எதிர்வீட்டில் சீதாராமனும் நளினியைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். 

“இன்னிக்கு நான் வந்து வண்டியிலேருந்து இறங்கச்சே எதிராளாத்திலே ஒரு பொண்ணு பத்துப் பனிரெண்டு வயது இருக்கும்….” என்று சீதாராமன் தன் தமக்கையிடம் ஆரம்பித்தான். 

“ஊருக்கு வரத்துக்கு முன்னாடியே பொண்ணையும் பாத்து வச்சுட்டாயா? இனிமே முகூர்த்தத்துக்கு நாள் வைக்க வேண்டியதுதான் பாக்கியாக்கும்! வரட்டும்; அத்திம்பேர் வந்தவுடனே சொல்லி நாள் பார்க்கச் சொல்றேன் என்றாள் பர்வதம் கேலியாக. ஆனால் பெருமையுடன். இந்தச் சமயத்தில் தன் கணவர், வைதீகர் என்பதுகூடப் பெருமை அளிக்கிற விஷயமாக இருந்தது போலும் அவளுக்கு. 

“போ அக்கா! அந்தப் பெண்ணு கொஞ்சம் வாய்த் துடுக்குக்காரின்னு பட்டுது எனக்கு. என்னைப் பார்த்துப் ‘பட்டணத்து மாமாவைப் பாத்தியாடா! என்று தன் இடுப்பில் இருந்த குழந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். என் காதிலே விழும்படியா வயசான பொண்ணு இப்படிக் கூச்சமில்லாம…” என்று சொல்லி நிறுத்தினான் சீதாராமன். 

“நல்ல பொண்ணுதான்; கள்ளங் கபடில்லாத பொண்ணு மனசிலே நினைக்கிறதை வாயிலே சொல்லிப் புடும். இளைய தாயார்கிட்டே மாட்டிண்டு சிரமப்படறது!” என்றாள் பார்வதத்தம்மாள். 

“ஐயோ பாவம்! நன்னாத் தலைவாரி நல்ல புடவை கட்டி தலைபின்னி விட்டா அழகாகக்கூட இருக்கும்” என்றான் சீதாராமன். 

அவனுடைய சகோதரி அவன் சொன்னதைக் காதில் வாங்காமலே சொன்னாள்! “தங்கமான பொண்தான். இங்கே அடிக்கடி வரும். போகும். ஆனால் இப்போ அவ இளைய தாயார் தர்பார் பண்றா; முன்னைப்போல வந்து போற தில்லை. எங்கிட்டே உசிரா ஒட்டிண்டிருக்கும். நம்ம எச்சுமுவும் அவளும் ரொம்ப சினேகிதம்” என்றாள். 

“அத்திம்பேர் சாயங்காலம்தான் வருவாரோ?” என்று பேச்சை மாற்றும் உத்தேசத்துடன் கேட்டான் சீதாராமன். 

“அது போறதும் வரதும் ஒரு நிலையா என்ன? போனா போனதுதான். வந்தா வந்ததுதான்! ஏதாவது நிலையாச் சொல்லிப்புட்டுப் போற வழக்கம்தான் கிடையாதே! பாவம்! உனக்குப் பசிக்கிறாப்லே இருக்கும்! இரு. ஒரு நொடியிலே அடுப்பை மூட்டிச் சமைச்சுப் போட்டுடறேன்” என்று சொல்லிக்கொண்டே சமையல் அறையை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள் பர்வதம். 

சமையல் அறை வாசல்படியைத் தாண்டும்போது எதிர் வீட்டு நளினியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்த விஷயம் ஞாபகம் வந்தது அவளுக்கு. வாசற்படியிலேயே நின்று தன் தம்பியைப் பார்த்துச் சொன்னாள்: “சீதா! நீ கெட்டிக்காரன் தாண்டா” என்றாள். 

“என்ன?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் சீதாராமன். 

“அந்தப் பெண்ணைப்பத்தி மேலே என்னைப் பேச விடாமே ஒரு நொடியிலே பேச்சை மாத்திவிட்டாயே. நீ! இருந்தாலும் நீ கெட்டிக்காரன் தாண்டா!” என்றாள் பர்வதம். 

“பின்னே என்ன பண்றது? யார் அந்தப் பொண்ணுன்னு உங்கிட்ட கேட்ட குத்தத்துக்காக அதுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சுவிடறதுன்னு ஆரம்பிச்சுடறே நீ” என்று சொல்லிச் சிரித்தான் சீதாராமன். 

“இல்லே; சரியான ஜோடிதான்னு என் மனசிலேயும் பட்டது. அவளும் ரொம்பக் கெட்டிக்காரி தான்; உனக்கேத்த கெட்டிக்காரிதான்” என்றாள் பர்வதம். 

“எனக்கு அசட்டுப் பொண்தான் வேணும். கெட்டிக்காரப் பொண்ணைக் கட்டிண்டு அவஸ்தைப்பட என்னாலே முடியாதம்மா!” என்றான் சீதாராமன். 

அதற்குமேல் பேசிக்கொண்டு நின்றால் சமையல் காரியம் தாமதமாவிடும் என்று பர்வதம் அடுப்பு மூட்டப் போனாள். ஆனால் அவள் அடுப்பு மூட்டியாவதற்குமுன், அவர்கள் வீட்டு வாசல்கதவை யாரோ படபடவென்று அதிகாரத்துடன் தட்டும் சத்தம் கேட்டது. அவளுடைய மூன்றாவது பிள்ளை ஏழெட்டு வயசுப் பையன் போய்க் கதவைத் திறந்தான். சீதாராமன் கூடத்தில் ஊஞ்சலிலே உட்கார்ந்திருந்தான். பர்வதத்தம்மாள் கையில் கிரோஸின் சிம்மணியுடன் சமையல் அறை வாசற்படியண்டை நின்றாள். 

தெருவாசலுக்கப்பால் ஏழெட்டுப் போலீஸ்கார்களும், தெருவிலே ஏகமாகக் கும்பலும் நிற்பதைக் கண்டதுமே பர்வதத்தம்மாளுக்குப் பாதிப் பிராணன் போய்விட்டது! கையிலிருந்த சிம்ணி கீழே நழுவி விழுந்து அணைந்தது! “ஐயோ!” என்று கூவ வாயெடுத்தாள்: ஆனால் வாயிலிருந்து சப்தம் ஒன்றும் வெளிவரவில்லை!

– தொடரும்…

– நளினி (காவிரிக்கரை நாவல்), முதற் பதிப்பு: 1959, சந்தியா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *