நல்ல கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,780 
 

கடிகாரம் இனிமையாய் மணி எட்டு என்று அறிவிக்கவே. பாலன், “சசி! என்னோட துணிமணிகள் ரெடியா?” என்று பதற்றமாய்க் கேட்டான்.

“ரெடிங்க!” சசி கலைந்த கேசத்துடனும், வேர்வையுடனும் “ஏர்பேக்” ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து வைத்தாள், “நாலுசெட் டிரஸ் இருக்கு. ஷேவிங் பாக்ஸிலிருந்து, பேஸ்ட் வரை எடுத்து வெச்சிருக்கேன். “சாப்பிட வாங்க,” என்றாள்.

சாப்பிடும்போது, “ஏங்க வெள்ளிக்கிழமை வந்துடுவீங்கல்ல…?” என்று சுசி கேட்டாள்.

“வெள்ளிக்கிழமை என்ன விசேஷம்..?”

“மறந்துட்டிங்களா..? பிசினஸ் மூடுல உங்களுக்கு உலகமே மறந்து போகும்!”

“வளர்த்தாமல் விஷயத்தைச் சொல்!”

“ஆனந்தோட பிறந்த நாள்!”

“ஓ! மறந்தே போச்சு. வெள்ளிக்கிழமை வந்திட முயற்சி பண்றேன்..!”

“முயற்சி பண்றதென்ன? கட்டாயம் வந்திடணும்!”

“வேலூர் வேலை முடிஞ்சிட்டால் வந்திடலாம்!”

“முடிஞ்சாகணும்!” என்றாள் சசி.

“விவரம் புரியாமப் பேசாதே சசி. இன்னொருத்தனை நம்பி லட்சம் லட்சமாய் பணத்தைப் போட்டிருக்கேன். அவன் என்னடான்னா திடீரென்று இடறுறான். செட்டில் பண்ணாம, பாதியிலே வந்திட முடீயுமா…?”

ஆமா, உங்களுக்கு பிசினஸ்தான் முக்கியம். நாங்களெல்லாம் அந்நியங்க! பிசினசுக்கு ஒதுக்கறதிலே பத்திலே ஒரு பங்கு நேரமாவது குடும்பத்துக்கும் இல்லேன்னா, மகனுக்கு அப்பாவோட மூஞ்சியே மறந்துபோகும்!’

ஒதுக்குங்க.

சசி சொல்லிவிட்டு விசுக்கென ஆனந்த் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். அவனைத் தட்டி “ஏய்,” எழுந்திரு” என்றாள்.

“ஏம்மா! இன்னைக்கு லீவ் தானே?”

“அப்பா ஊருக்குப் புறப்பட்டுக்கிட்டிருக்கார். உன்னைப் பார்க்கணும்னார்!“

“என்னையா, ஆச்சர்யமாயிருக்கே! பொய் சொல்லாதம்மா!” என்று அசுவாரஸ்யமாய் எழுந்தான் ஆனந்த்.

“உன் பர்த்டேக்கு என்ன வேணும்னு அப்பாகிட்டே சொல்லு வாங்கி வருவார்!”

“ஹும்… எங்கே? ஸிம்பிளா மறந்துட்டேம்பார்”

“இல்லேடா! இந்தத் தடவை கட்டாயம் வாங்கி வருவார்!”

ஆறுதலாய்க் கூறினாள் தாய்.

பாலன் டிரைஸ் பண்ணிக் கொண்டு பெட்டியை எடுகக, ஆனந்த் ஓடி வந்து “அப்பா…!” என்று கட்டிக் கொண்டான். “என்னோட பர்த்டேக்கு என்ன பிரசன்ட் பண்ணப் போகிறாய்…?”

“என்ன வேணும்?”

“உன் கையால எது கொடுத்தாலும் ஓ.கே!”

“அதுதான். என்ன வேணும்னு கேட்டேன்!” “வந்து… கிரிக்கெட் பேட்!”

“ப்பூ… ! இவ்வுளவு தானா..? ஓ. கே!”

வேலூரில் பாலனக்கு வேலை சரியாயிருந்தது. காலையில் அறையிலிருந்து கிளம்பினால் ராத்திரி எத்தனை மணிக்குத் திரும்புவான் என்பது அவனுக்கே தெரியாது. மீட்டிங்க, இன்ஸ்பெக்ஷன், விவாதம், வக்கீல், கேஸ் என ஒரே டென்ஷன் தான்!

வியாழக்கிழமைதான் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. மாலையில் நிம்மதியாய்க் குளிக்கும்போதுதான். ஆனந்தின் பிறந்த நாள் ஞாபகத்திற்கு வந்தது.

மனம் சசியை சிலாகிக்க ஆரம்பித்தது. அவள் நல்லவள்தான். நன்றாகப் படித்தவள்தான். ஆனால் இங்கிதம் தெரியாமல் சென்டிமென்ட்ஸ் பார்ப்பதுதான் அவனுக்கு எரிச்சல்!

“யாருக்காகக் கஷ்டப்டுகிறேன்? யாருககாகச் சம்பாதிக்கிறேன்? பெண்டாட்டி பிள்ளைங்க நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே? அதை ஏன் புரிந்து செகாள்ள மறுக்கின்றாள் சசி…? லட்சக்கணக்கில் பணம் சீரழிந்து கொண்டிருக்கும் டென்ஷனில் மகனின் பர்த்டேதான் அவளுக்கு முக்கியமாய்ப்படுகிறது. பர்த்டேக்கு நான் உடனிருக்க வேண்டும் என்பது என்ன அவசியம்? என் சார்பில் ரிச்சாக பிரசன்ட் பண்ணி கோயிலுக்குப் போய் வரக் கூடாதா?” என்று தவித்தது மனம்.

போனவருடம் அப்படித்தான் அவர்களுடைய வெட்டிங்டேயின் போது அவன் வெளியூரில் மாட்டிக்கொண்டான்.

வீட்டிற்கு வரமுடியவில்லை. அவள் கோபித்துக கொண்டு பிறந்தவீடு போய் விட்டாள்.

வானம் மப்பும் மந்தாரத்திலிருந்து திரும்புவதற்கு இரண்டு வாரமயிற்று.

இம்முறையாவது நல்ல கணவனாய் நடந்துக கொள்ள வேண்டும் என்று ஊருக்குக் கிளம்பினான். காட்பாடி ஸ்டேஷன் போகும் வழியில் கிரிக்கெட் மட்டை செட்டாய் வாங்கிக் கொண்டான்.

வேலூரிலிருந்து ஊருக்குத் திரும்பும் போது வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. விசாரித்த போது பந்த் என்றார்கள். பஸ் டிரைவருக்கும், போலீசுக்கும் தகறாராம். அதனால் வாகனங்கள் வழியை மறித்துக கொண்டு நின்றன. துப்பாக்கிச் சூடு வேறு.

பாலனுக்குச் சங்கடமாயிருந்தது. மகனின் ஆசையைப் பூர்த்தி பண்ணிவிட வேண்டும் என்று ஆர்வத்துடன் வந்தால்… சே!

நீண்ட க்யூவில் நின்று வீட்டிற்கு ‘போன்’ பண்ணினான். “நான் எப்படியும் வந்து விடுவேன்’ என்று மனைவியிடம் உறுதிப்படுத்தி விட்டு ஆட்டோ ஒன்றை கெஞ்சிக் கூத்தாடி ரூபாய் இருநூறு தருவதாகச் சொல்லி ஆட்டோவில் ஏற, எங்கிருந்தோ கற்கள் வந்து மண்டையைத் தாக்க, அவன் ரத்தத்துடன் மயங்கி விழுந்தான்.

அடுத்த மூன்றாவது மணியில் விஷயம் தெரிந்து, சசி கதறிக் கொண்டு ஆனந்துடன் ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தாள்.

படுக்கையில் கட்டுடன் கிடந்த கணவனைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை முட்டிற்று.

“உங்களுக்கு ஆபத்து ஒண்ணுமில்லையே?…” என்று கேட்டு நெற்றியில் முத்தம் பதித்தாள்.

“எல்லாம் என்னால்தானே?… நான் செய்த நிர்ப்பந்தத்தால்தானே நீங்கள் ஊரிலிருந்து அவசரமாய் வந்தீர்கள்?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சசி!” என்று பாலன் ஆறுதல் கூற செல்ல மகன், ஆனந்த், “எனக்குக் கிரிக்கெட் மட்டை வாங்கி வந்தியாப்பா?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

“மட்டை கேட்கிற நேரமாடா இது?” சசி பளாரென அந்தப் பிஞ்சு முகத்திலே அறைந்தாள். “அப்பா உயிர் பிழைத்ததே தெய்வாதீனம். உனக்குக் கிரிக்கெட் மட்டைதான் இப்போ முக்கியமாய்ப் போயிற்று” விம்மினாள் அவள்.

“அவனை ஏன் அடிக்கிறாய்… சசி?.. ஆனந்த்! இங்கே வாப்பா!”

கட்டிலுக்கடியிலிருந்த மட்டையை எடுத்து ஆனந்திடம் நீட்டின போது. பாலனுக்கு மகனின் பிறந்த நாள் ஆசையை நிறைவேற்றிவிட்ட பூரிப்பு இரட்டிப்பாய்ப் பொங்கியது!

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *