கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 6,968 
 

எங்கப் போனா இந்தத் திருட்டு முண்ட… செரியான ஓடுகாலியா கீறாளே… கால்ல சக்கரம் கிக்கரம் கட்டினிருப்பாளா… த்தூ… என்னா மனுசி இவ… கம்பம் கண்ட எடத்துல காலத்தூக்கினு ஊரலையற நாயாட்டம்… நாலுவாட்டி ஆள் மேல ஆளா சொல்லியனுப்பிச்சும் இந்நேரங்காட்டியும் வரலேன்னா என்னாங்கறது…

தம் போக்குல வாயுட்டு பெனாத்தினிருந்தா ஆராயி. கூத்தப்பாடியா மேல கழுத்தமுட்டுக் கோவம்.

அஞ்சாறுநாளா தலையில நெருநெருன்னு நமப்பு. அழுக்கு சேந்திருக்கும்னு வடிகஞ்சியும் களிமண்ணும் போட்டு நல்லா அரக்கியரக்கி தலைக்கு ஊத்தியும் நமச்சல் தீரல. அங்கொன்னும் இங்கொன்னுமா நரை கௌம்புறதாலக் கூட இப்பிடி அரிக்கும்னு முருகி சொன்னா. வரட் வரட்னு கீறியும் அடங்கல. பொடுகு பூத்திருக்கும்னு நெனச்சி சொறிஞ்சி நகக்கண்ணப் பாத்தா, கொட்டைக் கொட்டையா பேன் நெண்டினு உழுவுது எள்ளாட்டம். தலையக் கோதி கண்ணோரம் கொண்டாந்தா, தந்திக்கம்பில குருவிங்க ஒக்காந்துனுருக்காப்ல சரஞ்சரமா ஈறு கோத்துக் கெடக்கு. உருவியுருவி எடுத்தாலும் ஓயாம மிலுமிலுங்குது. உச்சந்தலையில ஊரரிப்பு. வெள்ளத்துணிய விரிச்சுப் போட்டுக்கிட்டு கட்டச்சீப்பால அழுத்தியழுத்தி சீவுனா மடிமுழுக்கப் பெரும்பேனா கொட்டுது. ஒருசேர பொறுக்கியெடுத்தா ஊருக்கே வெதையாவும். ஆத்திரம் ஆத்திரமா நசுக்குறா. கூத்தப்பாடியா வரலேங்கிற கோவமும் சேர நசுக்குற வேகம் கூடிருச்சு. தண்டையில சொருவினிருந்த ஈறுகோலிய எடுத்தாந்து கோதிக்கோதி ஈத்தினா. நொறக்கு நொறக்குனு ஈறு நசுங்குது ஆரியம் ஒடையறாப்ல. என்னாடியக்கா இவ்ளோ நேரத்துக்கு கொழம்பு தாளிக்கற, இப்பிடி வெடிக்குது கடுகுன்னு எகத்தாளமா கேக்குறா பக்கத்தூட்டு நெளிச்சி. என்னா வாய்க்கொழுப்பு நாயிக்கு.

தலை முழுக்க முடிக்கு பதிலா ஈறும்பேனுமா புழுத்துக்கெடக்கறாப்ல நமச்சலும் அருப்பும் தலையிலேர்ந்து தாவி ஒடம்பு முழுசுக்கும் ஊருது.

இதேமாதிரி மிந்தியொருவாட்டி ஈறும்பேனுமா கொசத்துருச்சு. புருவம், கண்ணெமை, அக்குள்ளயும் கூட சீப்பு சீப்பா ஈறுபடிஞ்சி இம்சையாயிருச்சு. அங்க சொரியறதா இங்க சொரியறதான்னு அல்லாடிட்டா. இவ புருசன், என்னாடியிது மாரியாத்தா கோயிலு திருவிழாவுக்கு சீரியல் பல்பு கட்டறாப்ல உனுக்கு மசுரு கண்ட எடமெல்லாம் ஈறுதொங்குதுன்னு கேலி பண்ணிட்டு பக்கத்துலயே படுக்கமாட்டேன்னிட்டான். சோத்துல, சாத்துல எதனாச்சும் கரேல்னு இருந்தாக்கூட, இதென்னாடி பேனா பாருன்னு சீண்டினேயிருந்தான். நெத்தியிலயும் தோள்பட்டையிலயும் மினுமினுன்னு பேனுங்க உருளுது. பேனையும் ஈறையும் சாக்காட்டி, திண்ணையில படுத்துக்கறேன்னிட்டு அவன் தொம்பன்பொதர்ல தேவானையோட சரசமாடினு ராவுலயும் வூடு தங்காம திரிஞ்சான்.

அப்பத்தான் எதுக்கோ வந்த கூத்தப்பாடியா, என்னா சின்னாயா இப்பிடின்னு அங்கலாச்சு, ஒக்காரு பாக்கறேன்னா. ஒரலுமேல ஒக்காந்தவ முன்னால இவ ஒக்கார, நடுவகிட்ல புடிச்சி சாலு வகுந்து ஏறு ஓட்றாப்ல அப்பிடியே ஒவ்வொரு மயிர்க்காலா களஞ்சி களஞ்சி ஈறு பேனு குஞ்சி குளுவான் அமுட்டயும் குத்தி மிச்சம் மீதியிருந்த பொட்டு ஈறையும் உருவுனா. அப்பிடியொரு நறுவிசா ஆயுசுல ஒருத்தியும் பேன் பாத்ததில்ல. நல்லா பொறாண்டி எடுக்கறாப்ல நீட்டநெகம். ஒவ்வொண்ணக் குத்தறப்பவும் நறுக் நறுக்னு நெகம் எறங்கறது அருப்பு கண்ட மண்டைக்கு சுருக்னு எறங்கும். களஞ்சி குத்துனதுல தலைய நல்லா புடிச்சிவிட்டாப்ல ஆனது ஆராயிக்கு. கொழ கொழன்னு வெத்தலச்சாற ஒழுகவுட்டுக்கிட்டு தூங்கித்தூங்கி விழுந்தவள தொடைமேல ஒருக்களிச்சு சாச்சுக்கிட்டு பதனமா பாத்து முடிச்சா. எந்திரிச்சு துணிமணிய ஒதறிக்கினு இங்கப்பாரு சின்னாயான்னு காட்டுறா, ரெண்டு நெகமும் நெறமே மாறி நசுங்குன ஈறும்பேனும் ரத்தமுமா கெடக்கு. மவராசி பொறுப்பா பாத்திருக்கா.

பீடை புடிக்கறதுக்கு முந்தி பேனு புடிக்கும்பாங்க. இப்ப எதுக்கு வந்து உன்னைய மொச்சினுக்கீதோ சனியன்… போறப்ப வாரப்ப கூப்புடு சின்னாயா… பாத்துவுடறேன்னு அவ சொன்னதும் ஆராயிக்கு கண் கலங்கிருச்சு. எங்கிருந்தோ வந்து வாக்கப்பட்ட எடத்துல அன்னி அசலுனு பாக்காம வாய்க்கு வாய் சின்னாயா சின்னாயான்னு பாசமா கூப்புடறதுல அவள ரொம்பப் புடிச்சிப்போச்சி ஆராயிக்கு. போறேன்னு கௌம்புனவள நிப்பாட்டி உரியிலேந்து பனவெல்லம் ரெண்டு சிப்பமும் வறக்கரி அஞ்சாறு துண்டும் குடுத்தனுப்பினா. பொடக்காலிக்கிட்ட, பெருசா செண்டாட்டம் பூக்குற சாமந்திய தெனத்துக்கும் வந்து பறிச்சினு போன்னு சொல்லியனுப்பிச்சா. கூத்தப்பாடியா மூஞ்சி முழுக்க சிரிப்பு, இன்னோரு சாமந்தியாட்டம்.

இதுமுடிஞ்சி ஒருவாரமிருக்கும். தொம்பன்பொதர்ல கூடிக் கெடந்த இவபுருசனையும் தேவானையவும், ஆட்டுக்கு கொப்பொடிக்கப் போன பசங்க பாத்துட்டு வந்து, பள்ளிக்கொடத்து சுவத்துல கரிக்கட்டையால கன்னாபின்னான்னு படமெல்லாம் போட்டு எழுதிப்புட்டானுங்க. இவளுக்கு சேதி தெரிஞ்ச மாயத்துல வூட்ல பாரதம் தொடங்கிருச்சு. வூடண்டாம ஒளிஞ்சினு திரிஞ்சான். தப்பித் தவறி வந்தான்னா ஓயாம சண்டை. பதில் சொல்லமுடியாத ஆத்திரத்துல அப்பிடித்தான்டி போவேன்னு அடிக்க, ஒன்னைய மாதிரி நானும் ஒருத்தன வச்சிக்கிட்டா ஒத்துக்குவியான்னு இவ கேக்க, பேச்சுக்கு பேச்சு கூடி உங்கூர்ல எங்கெங்க மேஞ்சியோ எவன் கண்டான்னிட்டான். திருடனுக்கு திருட்டு புத்தி, அவங்கப்பனுக்கு அதே புத்தியாம். உம்புத்தி தான் உலகத்துக்கே வாச்சிருக்குன்னு நெனச்சினுருக்கியா… ஒனக்குள்ள இப்பேர்பட்ட சந்தேகத்த வச்சினு இனிமே என்னையத் தொடாதேன்னிட்டா. ஆம்பளேன்னா அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்கன்னு சாக்குபோக்கு சொன்னவங்ககிட்ட ஆம்பளன்னா ஆகாசத்திலேருந்தா பொறந்து வந்தான், நம்மளாட்டம் மனுசங்க தானன்னு திருப்பியடிச்சா.

சந்தையன்னிக்கு மத்தியானம் இவ படுத்திருக்கா. வெடுக்குனு வெறப்பா வூட்டுக்குள்ற வந்தவன் ஒரு வார்த்தைப் பேசல. இவளும் வைராக்கியமா தூங்கறவளாட்டம் கெடக்கா. அடுக்களைல என்னாத்தயோ கரிசனமா கொடாஞ்சினுருந்தவன் சடக்னு போயிட்டான். தலைக்கு ஊத்திக்கிறப்ப தோடையும் மூக்குத்தியவும் கழட்டி வச்சது நெனப்பு வந்து எழுந்துத் தேடுனா சட்டி காலியா கெடக்கு. அவ அண்ணன் வாங்கித் தந்தது. அதையும் வாயில போட்டுக்கினானேன்னு பதறிக்கிட்டு வருது. வரட்டும் பேசிக்கிறேன்னு காத்துனுருக்கா. அவன் வரவேயில்ல. போனவன், போனவன்தான். தேவானையும் காணலன்னு மக்கியா நாளு தான் தெரிஞ்சது.

ஓடிப்போனவன் ஞாவகம் ஒண்ணொன்னா வருது. பாவி அவனுக்கு என்னா கொறை வச்சேன்… வெடுக்குனு ஒரு நாள்ல பேசியிருப்பனா… இல்ல அது வேணும் இதுவேணும்னு எதனாச்சும் கேட்டிருப்பனா… வூட்ல ஒண்ணுமில்லேன்னாலியும் அவன் வயிறு வாடிறக் கூடாதுன்னு தான அல்லாடியிருக்கேன்… ராத்திரி பகல்னு பாக்காம படுன்னா படுத்து எழுன்னா எழுந்து தாசியாட்டமில்ல வேசம் கட்டினேன். காணாததை என்னத்த கண்டானோ அவக்கிட்ட… அந்த சக்களத்திக்குத்தான் அறிவு வாணாமா…. ஒரு குடும்பத்த கொலைக்கறமேன்னு நெனப்பில்லாம கும்மாளம் போடறதுக்கு கூட்டினு ஓடிட்டாளே… யக்கா யக்கான்னு வூட்டான வந்தப்பல்லாம் கவுடு சூதுயில்லாம அண்டவுட்டது தான தப்பாப் போச்சி… ஊரறிய கட்டுனவளையே வுட்டுட்டு ஓடுனவன் தெனவுக்கு வந்தவள மட்டும் திரிகாலத்துக்கும் காப்பாத்தப்போறானா… திகட்டினதும் எந்த சந்துல பிச்சினு ஓடப்போறானோ… என்னை துள்ளத்துடிக்க வுட்டுட்டுப் போனவங்க நல்லாவா இருந்துருவாங்க… நாசமாத்தான் போவாங்க…

வாயில ஊறுன ஜலத்த அவங்க ரெண்டுபேரும் எதிர்ல நிக்கிற நெனப்புல ஓங்கரிச்சு துப்பினா. ஆத்திரம் மீறி அழுகையா வடிஞ்சது. பேனுதான புடிச்சிச்சு…பெருவியாதியா வந்துச்சு… அதுக்கே ஓடிட்டவன் இருந்திருந்தா மட்டும் கஷ்ட நஷ்டத்த தாங்கினு கடேசிவரைக்கும் கஞ்சி ஊத்தியிருப்பான்றதுக்கு யாரு ஜவாப்பு… அந்த ஈனங்கெட்ட பையன இமுட்டுநேரம் நெனச்சினிருந்தேம்பாரு எம்புத்திய அடிச்சிக்கணும் ஈச்சமாத்துக் கட்டையிலன்னு மொணகிக்கினே முடியைத் தட்டி கொண்டை போட்டுனு தண்ணி எடுத்தார சேந்துகெணத்தாண்டப் போனா. யாராச்சும் நெகமுள்ள பொண்டுங்க இருந்தா தலையக் காட்டலாம்னும் ஒரு யோசன.

ஏழெட்டுப் பேர் ஒரு மூச்சா சேந்தினா எப்பிடியிருக்கும்… கதவிடுக்குல மாட்டுன எலியாட்டம் கீக்கீக்னு கத்துது உருட்டு ராட்னம். நஞ்சானும் குஞ்சானுமா நசநசன்னு கூட்டம். தண்ணி எடுக்கறத சாக்கிட்டு ஜமா சேந்து நல்லதும் பொல்லதுமா நாலுவார்த்தை பேசிக்கிறது பொண்டுகளுக்கு ரொம்ப இஷ்டமான காரியம். காட்டு கரம்புக்கு வேலவெட்டிக்கு போயிட்டு வந்து வூட்ல அடைஞ்சிட்டா வெளியில வர்றதுக்கு வேறவழி என்னாயிருக்கு… அதனால தான் சின்னூண்டு சருவச்சட்டி காலியாயிருந்தாக்கூட தண்ணி சேந்தினி வாரேன்னு பொம்பளைங்க கெணத்தடிக்கு வந்துடறது…

இவளால சும்மா நிக்கமுடியல. கொடத்த கெணத்தடியில வச்சிட்டு நெப்பு நெதானம் மறந்து தலைய சொறியறதப் பாத்த ஆலந்தூரா என்னாடி ஆராயி, எங்கயிருந்து தொத்துச்சின்னா. அவ எப்பவும் இவகிட்ட அகடவிகடம் பேசறவதான். இன்னிக்கு என்னமோ சுருக்குனு பட்டுருச்சு ஆராயிக்கு. ங்…ஒம்புருசனத்தான் ராத்திரி பக்கத்துலப் போட்டு படுத்துனுந்தேன்…நீ பாக்கலியான்னு எரிஞ்சிவுழுந்தா. சுதாரிச்சிக்கின ஆலந்தூரா, அடயாருடி இவ, ஒரு பேச்சுக்கு கேட்டா ஒம்புது முறுக்கு முறுக்கிற… ஐயோன்னு சொன்னா அடிப்பேன்னு வர்ரியே… கெட்டக்காலத்துக்குத்தாண்டி ஆராயி கொட்டப்பேனு வரும். கொஞ்சம் பாத்து நடந்துக்கோன்னா… ம்க்கும்… அததுக்கு ஒரு பழமை சொல்லுங்கடி. மா, எனக்கென்னா இன்னோரு புருசனா கீறான், அவனும் எவக்கூடயாச்சும் ஓடிருவான்னு பயந்துனு கெடக்க…ன்னா. ஓஹ்ஹோ… உம்புருசன் பேனுக்கு பயந்துனுதான் ஓடிட்டான்னு இவ்ளோ நாளா நெனச்சினுக்கீறயா… அவங்க ரெண்டாளும் ஒங்கண்ணாலத்துக்கு மின்னாடியிருந்தே காடு கரம்பெல்லாம் கட்டினு உருண்டாங்கடி மார்கழிமாச நாய்ங்களாட்டம்னு அவ பதிலுக்கு சொன்னதும் இவளுக்கு வாயடைஞ்சிருச்சி. திருப்பி எதுவும் சொல்லமுடியாம வெறுங்கொடத்தோட வூட்டுக்கு வந்துட்டா. கட்டுனவன கையில வச்சிக்கத் துப்பில்ல. இதுல எம்புருசன் வேற வேணுமாம். தெறவிசி இருந்தா இழுத்தனு போடி எம்மா. நான் என்னா கொசுவத்துலயா முடிஞ்சி வச்சினுக்கிறேன்… கதையைப் பாரு… நான் ஒண்ணு கேட்டா அவ ஒண்ணு சொல்றா… ஏண்டி சிரிக்கிற சந்தையிலேன்னா பேனு கடிக்குது கொண்டையிலன்னாளாம்… அப்பிடியில்ல ஆயிருச்சு…ன்னு ஆலந்தூரா இன்னமும் வாயடிக்கிறது கேக்குது.

எல்லாம் ஆத்தாக்காரி பண்ணின அழும்பு. அண்ணன் வூட்டுச் சொந்தம் அறுந்துறக் கூடாதுனு அடமா அடம்புடிச்சா. அப்பனுக்கு, அக்கா மகனுக்கு கட்டணம்னு. அந்தப்பயலுக்கு அப்பமே மில்டிரிக்காரன் கொழுந்தியா கூட தொடுப்புங்கிறது ஊரு ஒலகத்துக்கே தெரியும். ரெண்டொருவாட்டி வரதனூரு போயிட்டு பஸ்சுல ஜோடியா எறங்கறதப் பார்த்திருக்கா. ஒரு நாளு மத்தியான ஆட்டத்துல ரெண்டுபேரும் பெஞ்சுசீட்ல ஒண்ணா ஒக்காந்திருந்தத இன்ட்ரோல்ல பார்த்திருக்கா. வலுக்கோலா நின்னு வாண்டவே வாண்டாம்னு சொன்னதுல அப்பன பகைச்சினு ஆத்தா சொன்னத கேக்க வேண்டியதாயிருச்சு. இவனும் அந்த நாதேறியாட்டம்தான்னு ஜோசியமாத் தெரியும்…

பேசாம, சரவணன் கூட ஓடிப்போயி எங்கனாச்சும் கவுரதையா பொழச்சிருக்கனும். நல்ல நல்ல எடமா வந்தப்பவும் தட்டிக் கழிச்சிட்டு காத்துனிருந்தான். இப்பமும் அவன் கண்ணுல ஏக்கம் காயாம சவலையாட்டம் பாக்கறான். மாசு மருவில்லாத அதே சிரிப்பு. வந்துடறயான்னு ஒரு வார்த்தை கேட்டான்னா இதோன்னு போயிரலாம்னு கூட எப்பவாச்சும் நெனப்பு வருது. அவங்கவங்க ஆசை அவங்கவங்களோட. அவன் குடும்பத்த கொலைச்சு நான் என்னா கோடி வருசம் வாழப் போறேன்னு எழுந்த மாயத்துல அடங்கிருது மனசு. ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்குது கழுத மேய்க்க. யாரு என்ன பண்ண?

கூத்தப்பாடியாள காணல. பொழுதமந்துருச்சி. இனிமே வந்து என்னா சாரம்… விடிஞ்சதும் மொதவேலையா அவளுக்கு வலை போட்டாச்சும் பிடிச்சாந்துரணும்னு நெனச்சினே தூங்கிட்டா. குத்துக்காலிட்டு குந்தினிருக்கறவ முட்டிமேல இந்தா உன் சீதனத்தப் பாரு சின்னாயா..ன்னு கூத்தப்பாடியா போட்டுனேயிருக்கா. இவ குத்திக்குத்தி பெருவெரலு ரத்தம் கட்டுனாப்ல வலி. கடிச்சது நீ தான கடிச்சது நீ தானன்னு பகையாளிகிட்ட பழியாடறாப்ல பேசினு பேசினு ஆத்திரமா குத்தி நசுக்குனா வலிக்காம என்னா பண்ணும்… எல்லாம் முடிஞ்சி போதுண்டியம்மா எழுன்னு அவகிட்ட சொல்லிக்கினே இவளும் எந்திரிச்சு நின்னப்பறந்தான் தெரிஞ்சது இன்னம் விடியவேயில்லைன்னு. கனாவுலக் கூட இந்தப் பேனு இப்பிடி பிசாசாட்டம் பிடிச்சினு ஆட்டுதேன்னு நொந்துக்கினா. எல்லா ஈறும் பேனும் எதிரிங்களாட்டம் மயமயன்னு கடிக்கறது தாளல. தலைக்கு நெருப்புவச்சி தீய்ச்சுக்கலாமான்னு ஆயிருச்சு.

வெளிக்காட்டுக்குப் போன பொண்டுககிட்டயும், ஏரிக்கு எருமை ஓட்டினுப்போன கோணக்காலன்கிட்டயும், குடிக்கப்போன மோளக்காரன் சுப்ருகிட்டயும், இன்னிக்காச்சும் அவள மறக்காம வந்துட்டு போகச்சொல்லுங்கன்னு கூத்தப்பாடியாளுக்கு சொல்லியனுப்பினா. ஏரியோரம் தான் அவவூடு. கூத்தப்பாடியா இந்நேரத்துக்கு எந்தரிச்சிருப்பாளான்னு சந்தேகந்தான். ராத்திரி கோயிந்தன் வந்திருந்தான்னா தாமசமாத்தான் படுத்திருப்பா.

கூத்தப்பாடியா, கண்ணாலம் கட்டி வாரப்ப, நெகுநெகுன்னு நெய்யில உருட்டுன மாவாட்டம் வந்தா. பருத்தி வெடிச்சாப்ல பளீர்னு சிரிப்பு. கண்ணுல சொக்கு வளையம். அவங்கூட்டுக்காரன் மாரப்பனுக்கு மாத்திரம் என்னா குறைச்சல்… கருப்பா இருந்தாலும் கரண கரணையா ஒடம்புக்கட்டு அவனுக்கு. நல்ல கஷ்டவாளி. கருவாட்டுப் பானையச் சுத்தற பூனையாட்டம் திரிஞ்சான் அவபின்னாடி ராவு பகல்னு நேர வழக்கில்லாம அவ குளியாம இருந்த மூணாம்மாசம் கொம்பாத்துக்கு மணலடிக்கப் போனவன் லாரிலேர்ந்து வுழுந்து ரத்தம் கக்கிச் செத்துப்போனான். சேதி கெடச்ச நொடியில குப்புன்னு வேர்த்து வெடாசி உழுந்தவளுக்கு ஒடம்பெறங்கிப் போச்சு. புருசனுமில்ல புள்ளையுமில்லேன்னு ஆனப்புறம் கூத்தப்பாடியா ஒண்டிக்கட்டையாயிட்டா. சிறுவாட்டுல வாங்கின நாலு பள்ளையாடுக மாத்திரம் மே மேன்னு வூட்டைச் சுத்தி கத்திக்கினு கெடக்கும். ஆராயி கூட மட்டும்தான் சகவாசம்.

ஏரிக்கரை பனைமரத்த ஏலம் எடுத்து கள்ளெறக்குற பாலூர் கோயிந்தனோட எப்பிடியோ தொடுப்பாயிருச்சு கூத்தப்பாடியாளுக்கு. அவன் பொண்டாட்டி ஒரு நாளு அவங்கண்ணன் தம்பிங்களோட வந்து இவவூட்டு மேல மண்ண வாரி தூத்திட்டுப் போனப்புறமும் அவன் தொடந்தாப்ல அடந்தடந்து வந்துனுதாகீறான். ஒடம்பு வளஞ்சி ஒரு வேலவெட்டிக்குப் போயி பழக்கமில்ல புருசன் கீறவரைக்கும். இப்ப திடுக்னு கூலிநாழிக்குப் போயி கொடலை நனைக்க முடியல. போன எடத்துலயும், தாலியறுத்தவ தம் பொண்டாட்டினு கண்டவனும் ஓரசறதும் இழுக்கறதும்னு ஆனப்ப, ஒருத்தன்கூட இருந்துடறது பரவால்லேன்னு கோயிந்தனோட ஒதுங்கிட்டா. ஆத்திர அவசரத்துக்கு அஞ்சு பத்துன்னு அவகிட்டதான் கைமாத்து வாங்கமுடியுது. ஆராயிக்கும் கூட மொதல்ல கோவம்தான். யோசிச்சப்ப, தேவானை மேலகீற கோவம்தான் இவமேலப் பாயுதுன்னு புரிஞ்சிச்சு. இந்த வயசுல முண்டச்சியானவ காலத்துக்கும் சாமியாடியாட்டம் கெடக்கணுமான்னு தோணினதும் அவள சேத்துப்புடிச்சிக்கிட்டா.

மத்தியான சங்கு ஊதுது. கூத்தப்பாடியா வரவேயில்ல. வேற யாரையாச்சும் கூட பாக்கச் சொல்லலாம். ஆனா கோழி குப்பைய கெளைக்குறாப்ல கெளைப்பாங்களேயொழிய நமப்பு அடங்காது. மொட்டை மொட்டையா மொனையழிஞ்ச நெகத்த வச்சினு என்னா பண்ணுவாங்க… சின்னாம் பொண்டாட்டி கூட நல்லா பாக்குறவ தான். அவளுக்கு கொந்தாளமாட்டம் நெகம். ஆனா வெத்தலையும் பொகலையும் குடுத்தே மாளாது. அதுமில்லாம பாக்குற சுகுர்ல தலைமேலய எச்சி ஒழுக்கிருவா. வாய் வம்பு வேற.

சின்னாம் பொண்டாட்டிக்கு ஊரு ஒலகத்துல ஒரு நல்ல சேதியும் தெரியாது. காதுலயும் உழாது, கண்ணுலயும் படாது. அப்புறம் வாய் மட்டும் வேறயா பேசும்… யாரு யாரு கூட ஓடிட்டாங்க, எவன் எவ கூட எங்க ஒதுங்கினான், எவ எவ புள்ள கலைச்சா, யாரு காரணம் இப்பிடியாத்தான் பேசுவா. ஆட்டக்கடிச்சி, மாட்டக்கடிச்சி அடிமடிக்கே குறிவைக்கிறாப்ல இவளையே இழுப்பா. ஏண்டி ஆராயி, உம்புருசன் மறுக்கா வந்து உங்கூட பொழைப்பான்னா இப்பிடி திமிசாட்டம் திண்திண்ணுன்னு கீற ஒடம்பு வச்சினு காத்தினுருக்க. காலம் வயசு கதகதன்னு கரண்டு கம்பியாட்டம் ஓடறப்பவே கமுக்கமா பாத்துக்கணும். ரத்தம் சுண்டுனப்புறம், நாக்கு ருசியறிஞ்சாலும் வயித்துக்கு ஒத்துக்காதுடி. சரின்னா சொல்லு, எப்ப எப்பன்னு கண்கொத்திப் பாம்பாட்டம் காத்துனுக்கீறான் ரேசன்கடைக்காரன். போறப்பவும் வாரப்பவும் விசாரிச்சியா விசாரிச்சியான்னு என்னையப் போட்டு தொணதொணக்கறான். என்ன சொல்லட்டும் சொல்லுன்னா ஒரு நாளு. எழுந்துப்போடி எரப்பட்ட நாயேன்னு வெரட்டியடிச்சிட்டா ஆராயி. இப்பம் போயி எப்பிடி கூப்புடறது. தேவையுமில்ல. பேனு கடிச்சி செத்தாப் போயிருவம்னு வைராக்யம் பொங்கிருச்சு.

அந்த ரேசன்காரன ஒரு நாளைக்கு சீவக்கட்டையாலயே சிங்காரிச்சு அனுப்பிச்சரணும். வூட்டுக்கு நேரா வர்றப்ப ஒம்பதுவாட்டி பெல்லடிக்கிறான். கணக்கு இருக்கு. எப்ப பாக்கி தீரும்னு தெரியல. சின்னாம் பொண்டாட்டி தான் அந்த பொறுக்கிக்கு தந்தாளு. அவங்களுக்குள்ள எல்லாம் உண்டுன்னு ஊர்ல பேச்சிருக்கு. அவ அரிசி சக்கரை சீமெண்ணைய்னு அள்ளிக்கிட்டு வருவா. இப்பிடியொரு பொழப்பு பொழைக்கணும்னு யாரடிச்சா… தட்டுவாணிச் சிறுக்கி… ஊர்ல இப்பிடியொரு கூட்டம் திரியுது மானம் சுங்கமத்து. எவளை கவுக்கலாம்னு எந்நேரமும் நெனப்பு. கைகால் கஷ்டத்துல கஞ்சிதண்ணி குடிச்சி காலம் தள்றவங்களப் பாத்தா இவளுகளுக்கு பொறுக்கறதில்ல. அந்த ஓடுகாலி நாயி ஒழுங்கா இருந்திருந்தான்னா இப்பிடி மரத்தடியில மாராப்பு விரிக்கிற தேவிடியாளுங்கெல்லாம் எங்கிட்ட பதம்பாக்க துணிவாளுங்களான்னு நெனக்கறப்பவே தொண்டையில வலி தெறிச்சு கண்ணுல வழியுது.

எதுக்கு இவுளுங்களுக்கெல்லாம் புருசன் புள்ளைன்னு. கூத்தப்பாடியா எவ்வளவோ தேவல. ஐயோ எம்புருசன் ஓடிட்டான், இனிமே எப்பிடிப் பொழைப்பேன்னு யாருகிட்டயாச்சும் எதுக்காச்சும் போயி நின்னிருப்பனா ஒரு நாள்ல… எம்பாட்டுக்கு கெடக்கிறவள எதுக்கு தோது பாக்கணும்… அந்தப் பண்ணாடியும் அப்பிடித்தான். மேலுக்குத்தான் வெள்ளையுஞ் சொள்ளையும். உள்ளுக்குள்ள அம்புட்டும் கருகும்முனு கள்ளம். நாலுசனம் கீறப்ப ஞாயஸ்தனாட்டம் பேசறது. ஒண்டியா ஆப்டுக்கினா ஓரக்கண்ணுல பாக்கறதும் ஒரே ஒரு நாள்னு கெஞ்சறதும்… மனுசனா அவன்… பாத்தா தீட்டு பழகுனா தோசம்னு பீத்தறது. படுத்துக்கினா மட்டும் இனிக்குமா… இவனுங்களுக்கெல்லாம் ஆத்தா வவுத்தலர்ந்து வர்றப்ப மொதல்ல தலை வந்திருக்காது. அதுதான் நெட்டினு வந்திருக்கும். பொறக்கறப்பவே ஆத்தா தொடைசந்தை நிமிட்டிப் பாத்துருவானுங்க. பெத்தவகிட்டயேப் போயிட்டு பெருமா கோயில்லயும் வௌக்கேத்துவான்னு இவன மாதிரி ஆளுங்களத்தான் பழமையில சொல்லியிருப்பாங்க.

மிந்தியெல்லாம் கொரங்காட்டிங்க வருவாங்க. சேந்து கெணத்தாண்டயோ கோயிலடியிலோ பசங்களுக்கு வித்தைக்காட்டி காசுகண்ணி தேத்தினதுக்கப்புறம் வூட்டூட்டுக்கு வருவாங்க. நாலணவோ, கால்படி குருணையோ குடுத்தாப்போதும். கௌச்சிக் கௌச்சி ஒரு ஈறு பேனு இல்லாம எல்லாத்தையும் பொறுக்கிறும். கூரா வளைஞ்ச நெகத்துல எடுக்கறப்பவே நொடுக்குன்னு ஒரு இடிஇடிக்கும். அரிக்கிற மண்டைக்கு அப்பிடியொரு சொகுசேறும். காதைக் கடிச்சிருமோ மூஞ்சிய பொறாண்டிருமோன்னு பயமிருந்தாக்கூட அந்த சொகத்துக்காக பாத்துக்குவாங்க பொண்டுங்க. இப்ப எந்த நாயிவருது. சந்தைக்கு போனம்னா அங்க இருப்பானுங்க. அத்தன சனத்து மத்தியில இந்தான்னு பேய் புடிச்சவளாட்டம் தலைய விரிச்சு கொரங்குகிட்ட காட்டினு ஒக்காரமுடியுமா… சனம்தான் என்னா சொல்லும்… காரித் துப்பி காத்துல ஏத்தும்- என்னமோ அவங்க தலையெல்லாம் அம்புட்டுச் சுத்தம்னு நெனச்சினு. பேசாம நாசுவன்கிட்டப் போயி மொட்ட அடிச்சிக்கலாமானு கூட தோணுது. யாராச்சும் கேட்டா என்னான்னு சொல்றது…

ஒத்தப்பனையாட்டம் ஊர்கோடி முனியாட்டம் தன்னந்தனியா கெடக்குறவளுக்குத் தொணையா, ராவும்பகலும் தன்னோடயே இருக்குற ஈறும் பேனும் இப்ப எதிரியா தெரியல. சனியனுங்களே, இப்பிடி ஒரே எடத்துல கடிச்சீங்கன்னா அப்புறம் கோவம் வந்து எதனா செஞ்சிறுவேன்னு அதுகளோட பேசிக்கறதும் சண்டைப்போடறதும்கிற அளவுக்கு அன்னியோன்னியமாயிட்டா. இருக்குற வரைக்கும் இருங்க, கூத்தப்பாடியா வர்றப்ப வரட்டும்னு அடிக்கடி சொல்லினு கீறறதயும் நிறுத்திட்டா. பேனும் ஈறும் கூட இப்ப கடிக்கிறதாத் தெரியல.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *