நன்றே செய், அதுவும் இன்றே செய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 9,543 
 

இன்று நேற்றல்ல, பிறந்ததிலிருந்து கண்ணன் தள்ளிப் போடுவதில் கில்லாடி. குழந்தையாக இருந்தபோது எந்த விளையாட்டு பொருளையும் தன் பக்கத்திலிருந்து தள்ளிப் போடுவான்.

பிற்காலத்தில் , அதே பழக்கமாகவோ என்னவோ, எந்த வேலையையும் ‘நாளை நாளை’ என தள்ளிப் போட ஆரம்பித்துவிட்டான்.

படிப்பது, எழுதுவது, வீட்டு வேலை இதெல்லாம் அவனுக்கு ஒத்திப் போட்டே பழக்கம். ஆனால், சாப்பிடுவது, தூங்குவது, டிவி, அரட்டை, சினிமா, ஊர் சுற்றல் இதெல்லாம் அப்போவே ஆகவேண்டும்.

இப்போது கண்ணனுக்கு வயது பதினேழு. பிளஸ் டூ மாணவன். மாணவர் அனைவரும், தனித்தனியாக கணினி சம்பந்தமாக ஒரு ப்ராஜக்ட் பண்ண வேண்டும். இவனது ப்ராஜக்ட் ‘மின் அணு நிதி மாற்றம் (EFT) , மின் அணு பரிவர்த்தனை முறை (ECS) இவைகளினால் ஏற்படும் இடர்ப்பாடுகள்’ பற்றி ஒரு விளக்க கட்டுரை எழுதுவது.

“ மச்சி! நீ ரொம்ப லக்கிடா. நாங்கள் எல்லாம் சி, சி பிளஸ் ப்ராஜெக்ட் பண்றோம். நிறைய கோடு எழுதணும். உனக்கு மட்டும் வெறும் கட்டுரை. என்ஜாய்டா” -நண்பர்கள் பொறாமை கண்ணோடு பேசினர்.

“ ஏன் மச்சி ! இதுக்கு நிறைய புஸ்தகம் பிடிக்கணுமே. வணிகம் பத்தி நிறய படிக்கணுமே? புரியாதே! என்ன பண்ணப்போற?” கண்ணனின் நண்பன் மாதவனின் கரிசனம். இவனைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும்.

“ அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. அப்பா வங்கியிலே தானே வேலை பன்றார். அவர்கிட்டே கேட்டுப்பேன்”- கண்ணன்.

கண்ணன் வீட்டிற்கு வந்தான். ப்ராஜக்ட் ஒரு மாசம் கழிச்சி, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த மறுநாள் கொடுக்க வேண்டும்.

பாத்துக்கலாம். பின்னாடி, ரெண்டு மூணு புஸ்தகம் படிச்சி ஒப்பேத்திடலாம். ஒரு மாதம் இருக்கே. இப்பத்திக்கு ப்ராஜக்டை ஓரம் கட்டிவிட்டான்.

விடுமுறை உல்லாசம். டிவி. சினிமா, அரட்டை, தெரு மதில் சுவர் , நேரம் போனதே தெரியவில்லை.

பள்ளி திறக்க ஐந்து நாட்கள்:
——————————————
ஐயையோ! ப்ராஜக்ட் பண்ணனுமே! மறந்தே போயிடுத்தே. தன் நண்பன் மாதவனை கை பேசியில் அழைத்தான்.

“மாதவா! உன் ப்ராஜக்ட் முடிச்சிட்டியா?”

“ஓ! நேத்திக்கே முடிச்சிட்டேன். இன்னிக்கு நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் சினிமாக்கு போறோம். எல்லாரும் ப்ரீ. நீ இன்னும் முடிக்கல்லே?”

“இன்னும் இல்லேடா! சரி நானும் வரேன். நாளைக்கு எழுதிக்கறேன். கட்டுரை தானே!”

“சரி வா! சத்யம் தியேட்டர், மத்தியம் 3.00 மணி.”

நாளைக்கு பாத்துக்கலாம். இன்னும் நாலு நாட்கள் இருக்கே.

பள்ளி திறக்க நான்கு நாட்கள்:
——————————————–
“டே கண்ணா ! உன் சித்தி வீட்டுக்கு போய் இந்த நகையையும் புடவையும் கொடுத்துட்டு வரியா!. அவசரமா வேணும்னு கேட்டாள்!” – அம்மா

“அம்மா! என்னை தொந்திரவு பண்ணாதே! எனக்கு ப்ராஜக்ட் வேலை இருக்கு!”

“சரி! அப்படின்னா, நாளைக்கு கொண்டு போய் கொடு”

“ சாரிம்மா! எனக்கு முக்கிய வேலை இருக்கு! பண்ணலைன்னா பெயில் பண்ணிடுவாங்க”

“சரி! சரி! உன் வேலையை பாரு. நான் வேற வழி பாக்கறேன்! எப்ப கேட்டாலும் பிசி பிசிங்கறே!”

கண்ணன் இரண்டு மூன்று நூலகம் சென்று தேடி பிடித்து பெரிய புத்தகங்கள் இரண்டு எடுத்து வந்தான். அதுவே அவனுக்கு பெரிய களைப்பு. வீட்டுக்கு வந்து ஒரு நோட்டு புத்தகம், பேனா, லேப்டாப் சகிதம் உட்கார்ந்து கொண்டான்.

புத்தகத்தை பிரித்தான். தலை சுற்றியது. என்ன கொடுமைடா இது. ஒண்ணுமே புரியலியே.

EFT , ECS, RTGS, என்னவோ சொல்றாங்களே. ஒரு கன்னராவியும் புரியலியே. எப்போ இதை படிச்சி, புரிஞ்சி, இதனாலே ஏற்படும் இடர்பாடு பற்றி எழுதறது? இதிலே இவ்வளவு விஷயம் இருக்கே!.

‘சரி, ஒண்ணு பண்ணுவோம், நெட்லே பாத்து காப்பி அடிச்சி எழுதிடலாம்.’ கண்ணன் லேப்டாப்பை திறந்தான்.

ஐயோடா! இது இன்னும் பெரிய தலைவலியா இருக்கும் போலிருக்கே. என்னென்னவோ சொல்றானே! நெட்வொர்க் ரிஸ்க், கிரெடிட் ரிஸ்க், லிகுடிட்டி ரிஸ்க் , ஒரு இழவும் புரியலியே.

ஐடியா! அப்பா கிட்டே கேப்போம். பேங்க் மேனேஜர் தானே! நிச்சயமா தெரிஞ்சிருக்கும். அவர் சொல்றதை வெச்சி எழுதிடுவோம்.

“அம்மா! அப்பா எங்கேம்மா?”
“அப்பா இன்னிக்கு லேட்டாக வருவார்டா. பேங்க்லே ஆடிட்டிங் இருக்காம்”

“ச்சே! இந்த அப்பாவாலே எனக்கு ஒரு பிரயோஜனும் இல்லே. எப்போ பாரு ஆபிஸ் ஆபிஸ்னு. எனக்கு எதுவும் சொல்லி கொடுக்க அவருக்கு நேரமே இல்லே”

“ஏன்டா! நேத்திக்கெல்லாம் என்ன கழட்டிகிட்டு இருந்தே! வீட்டிலே தானே இருந்தார். அப்போ கேட்டிருக்கலாமில்லே?”

“அட போம்மா!. எதுக்கும் என்னையே குறை சொல்லிக்கிட்டு” படாரென்று அறைக்கதவை மூடிக் கொண்டான்.

பள்ளி திறக்க மூன்று நாட்கள்:
——————————————–
“அப்பா! அப்பா!”
“என்ன கண்ணா ! என்ன விஷயம் ! என்னை தேடினியாமே!”

“வந்துப்பா!. ப்ராஜக்ட் பண்ணனும்பா. மின் அணு நிதி மாற்ற இடர்ப்பாடுகள் பற்றி.”

“என்னடா சொல்றே! புரியறமாதிரி சொல்லு!

“இல்லேப்பா, ஈ.சி.எஸ்(eletrronic Clearing System), ஈ.எப்.டி (Eletronic Funds Transfer) ரிஸ்க் பத்தி எழுதணும்பா”

“ஐயோ. ரொம்ப பெரிய விஷயமாச்சே! என்ன பண்ண போறே?”

“படிச்சேம்பா! ஒண்ணும் புரியலே. நீ என்னன்னு சொல்லிக் கொடு. அதை கட்டுரையா எழுதிடறேன்.”

“கண்ணா! நான் பேங்க் மேனேஜர் தான். எனக்கு கரன்சி நோட்டு எண்ண தெரியும், கணக்கு, செக்கு, கடன் இதெல்லாம் கொடுக்க வாங்க தெரியும். ஆனால், இந்த கம்பூட்டர் அப்படின்னாலே எனக்கு அல்லர்ஜி. ஏதோ, சுமாரா உபயோகிப்பேன். நீ சொல்லற விஷயம் எதுவுமே எனக்கு அவ்வளவா தெரியாதே. கேள்விப்பட்டிருக்கிறேன். சாரிடா. வேற யாராவதை கேளேன்”

“இல்லேப்பா! இந்த புஸ்தகம் படிச்சி எனக்கு சொல்லேன்”
“சரி கொடு”
கண்ணன் புஸ்தகங்களை கொடுத்தான்.

“சரி. படிச்சுட்டு சொல்றேன். ரிஸ்க் பத்தி தானே. ஒரு பத்து நாள் டைம் கொடு”
“ஐயய்யோ! நான் மூணு நாளிலே ரெடி பண்ணனும்”

“என்ன விளையாடறியா? சான்சே இல்லே. எனக்கு இப்போ ஆபீஸ்லே ஆடிட் நடக்குது. இவ்வளவு நாள் என்ன பண்ணிகிட்டிருந்தே! ஒரு பத்து நாள் முன்னாடியே கொடுத்திருக்கலாமில்லே? என்ன வெட்டி முறிச்சிகிட்டிருந்தே. ஸ்டுபிட்!” அப்பா வைதார். புத்தகத்தை கீழே வைத்தார்.

“இப்போ என்னப்பா பண்றது?”

“என்ன வேணா பண்ணு. எங்காவது சுவத்திலே போய் முட்டிக்கோ. என்னாலே முடியாது!”
கண்ணனுக்கு செம எரிச்சல். இந்த அப்பாவே சுத்த வேஸ்ட்.

——–

கண்ணனுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. நோட் புக், பேனா அப்படியே இருந்தது. ஒன்றுமே ஓடவில்லை. இரண்டு வரி கூட எழுதவில்லை. சனியன்! ஏதாவது புரிஞ்சாதானே!

“டே கண்ணா! சாப்பிட்டுவிட்டு வேலை பாரேன். நான் எவ்வளவு நேரம் உனக்காக காத்துக் கிட்டிருக்கிறது?”
“போம்மா! எனக்கு பசியில்லே! ஏகப்பட்ட வேலையிருக்கு. நீ வேறே. கம்முனு இரு” – எரிச்சலை அம்மாவிடம் காட்டினான்.

எல்லா நண்பர்களும் அவர்களது ப்ராஜக்டை முடித்து விட்டார்கள். இவன் மட்டும் ஆரம்பிக்கவே இல்லை.
“ச்சே! என்ன ஒரு முட்டாள்தனமான படிப்பு. எதுக்கு இந்த ப்ராஜக்ட்.? பைசாக்கு பிரயோசனமில்ல. உயிரை எடுக்கறாங்க!” – அலுத்துக்கொண்டான் நண்பர்களிடம்.

படித்தால் தூக்கம் வருகிறது. அப்பா வேறு, ஒரு உதவியும் செய்யவில்லை. சலிப்பு, ஆத்திரம், சுய பச்சாத்தாபம். என்ன ஆகுமோ தெரியலியே! பயம் நடுக்கியது.

பள்ளி திறக்க ஒரு நாள்:
———————————–
ஏதோ அரைகுறையாக ஒரு கட்டுரையை எழுதினான் கண்ணன். அவனாலேயே அதை புரிந்து கொள்ள முடியவில்லை. முடிக்க முடியவில்லை. ரிசல்ட் என்ன ஆகும்? பள்ளிக்கு ஜுரமென்று லீவ் போட்டுவிடலாமா?

முடியாதே! ப்ராஜக்ட் கொடுத்தே ஆகவேண்டுமே. இல்லாவிட்டால், கம்ப்யூட்டர் பாடத்தில் பெயில். அப்பா கொன்னேபுடுவார்.

ஒரே டென்ஷன். நினைக்க நினைக்க அவனுக்கு ஜுரமே வந்து விட்டது. தலைவலி மண்டையை பிளந்தது.

மூளை சுத்தமாக வேலை செய்யவில்லை. அவன் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறான்? தண்ணியை குடித்தான். புஸ்தகங்களை அடுக்கினான். கொஞ்ச நேரம் பாட்டு கேட்டான். கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் பேஸ் புக்கில் அரட்டை. எதிலும் மனம் லயிக்க வில்லை. ஆனால் கட்டுரை மட்டும் மேலே எழும்பவில்லை.

கட்டுரை எழுதி முடிப்பதை தள்ளி போட்டான். என்ன பண்ணுவது? சட்டியில் இல்லை, அதனால் அகப்பையில் எதுவும் வரவில்லை. கோபம் மட்டும் வந்தது.

பள்ளி திறந்தது
———————–
கண்ணன் விருப்பமே இல்லாமல் பள்ளி சென்றான். “ச்சே என்ன வாழ்க்கைடா இது?” செம கடுப்பு. ஏதோ கிறுக்கி ப்ராஜெக்ட் கட்டுரையை ஒப்பெத்திவிட்டான். பள்ளியில் கொடுத்தும் விட்டான்.

ஒரு வாரம் கழித்து:
—————————-
கணிணி வகுப்பில், ப்ராஜெக்ட் ரிப்போர்ட் முடிவு அறிவிக்கப் பட்டது. எல்லோரும் பாஸ். சிலர் நல்ல மதிப்பெண். மாதவன் 72 %. ஆனால், கண்ணன் மட்டும் பெயில். மிக குறைந்த மதிப்பெண். ஆசிரியர் வகுப்பில் இதை சொல்லும்போது கண்ணன் குனிந்த தலை நிமிரவில்லை. நண்பருக்கிடையே அவமானம்.

“கண்ணா! நீ, நீ மட்டும்தான், இந்த முழு கிளாஸ்லே பெயில். தண்டமா ஒரு ரிப்போர்ட். இதுக்கு பேர் ப்ராஜெக்டா? என்ன எழுதினேன்னு படிச்சி பாத்தியா? ஒரே அபத்தம்.”

“சார்! என் ப்ராஜக்ட் ரொம்ப கடினம் சார்”

“உன்னை யாரு இதெ தேர்ந்து எடுக்க சொன்னாங்க! நீயே தானே எடுத்துகிட்டே?”

“எங்கப்பா சொல்லிகொடுப்பார்! சி பிளஸ் ப்ரோக்ராம் எழுதாமே, வித்தியாசமா ஒரு கட்டுரை எழுதலாமேன்னு நினைச்சேன் சார்”- சொல்லும்போது கண்ணன் கண் விழியோரம் ஈரம்.

“அப்புறம் என்னாச்சு?”
“வணிக சம்பந்த கணிணி சப்ஜெக்ட் புரியலே சார்.”
“இதை பத்தி நான் பாடம் எடுக்கையில் உன் கவனம் எங்கே போச்சு?”
”கவனிச்சுகிட்டு தான் சார் இருந்தேன்”
“தினமும் வீட்டுக்கு போய் படிப்பே தானே! அப்போ நல்லாவே புரிஞ்சிருக்குமே”
“சாரி சார்”
“இப்போவாவது புரிஞ்சுக்கோ! நீ படிப்பை தள்ளி போட்டா, வெற்றி உன்ன விட்டு தள்ளி போகும்”
“புரியுது சார்”
“நீ ஒரு புத்திசாலி பையன். அதனாலே உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கறேன். இன்னும் ஒரு நாலு நாளில் வேறு ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட் பண்ணிக் காட்டு. நல்லாயிருந்தால் நீ பாஸ். ஓகே வா.”
“ரொம்ப தேங்க்ஸ் சார்” -கண்ணன் வாயெல்லாம் பல்.

“சரி! என்ன சப்ஜெக்ட் எடுத்துக்கப்போறே? ”
“நீங்களே சொல்லுங்க சார்”
“குட். ம்.. ஸ்மார்ட் கார்டு வடிவமைப்பது பற்றிய ஒரு ரிப்போர்ட் எழுது.”
“நிச்சயம் பண்றேன் சார்”

நான்கு நாள் கழித்து
—————————–
இப்போது கண்ணன் தனது வேலையை தள்ளி போடவில்லை. மிக அழகாக ப்ராஜக்டை முடித்தான்.

இந்த தடவை ஆசிரியர் கண்ணனின் ரிப்போர்ட் பார்த்து மூக்கில் விரலை வைத்தார். கண்ணனை கிளாஸ்ல எல்லார் முன்பும் பாராட்டினார்.

“வெரி குட் கண்ணா. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. போனதடவை நீ பெயில். ரொம்ப குறைந்த மார்க். ஆனால், இப்போ, இப்போ ரொம்ப நல்ல மார்க். இன்னும் நல்லா கூட உன்னால பண்ண முடியும்!. எப்படி இந்த நாலு நாட்களுக்குள் இவ்வளவு அழகான ரிப்போர்ட் பண்ண முடிந்தது? எல்லோருக்கும் சொல்லு பார்க்கலாம்?”

கண்ணன் தயங்கினான்.

“தைரியமா வா. இங்கே வந்து சொல்லு! என்ன பயம்? எல்லாம் உன் நண்பர்கள்தானே!”

கண்ணன் மெல்ல வந்து, சொல்ல ஆரம்பித்தான்.

****
“சின்ன வயதிலிருந்தே எதையும் நாளைக்கு நாளைக்கு என்று தள்ளிப்போடும் கெட்ட வழக்கம் இருந்தது. இதுவரை, எப்படியோ சமாளித்துவிட்டேன். ஆனால், இந்த ப்ராஜக்ட் விஷயத்தில், நான் மட்டும் பெயில் ஆனது எனக்கு ரொம்ப பெரிய ஷாக். என்னோட சுத்தின என் நண்பர்கள் எல்லோரும் பாஸ். நான் பெயில். அது தான் எனக்கு இன்னும் ரொம்ப அவமானமா இருந்தது. தாங்கவே முடியலே. அழுகையே வந்திடுச்சி.

ஆனால், சார், அப்போ , நீங்க எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தது எனக்கு ரொம்ப ஆச்சரியம். உங்க நம்பிக்கையை காப்பத்தவாவது, எப்படியாவது நல்ல மார்க் வாங்கிடனும்னு நெனச்சேன். பட், எப்படி பண்றதுன்னு தெரியலே.ஒரே உதறலா இருந்தது.”

“எனக்கு உன் பேரிலே நம்பிக்கை இருந்தது கண்ணா!. மேல சொல்லு!”

வீட்டுக்கு போனால், அன்னிக்கு பார்த்து, என் தாத்தா ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் என்னை கவனிச்சிகிட்டேயிருந்தார். அவர் , பெரிய கம்பனிலே, பெரிய வேலைலேருந்து ரிடயர்ட் ஆனவர். கொஞ்ச நேரம் கழித்து, என்னை தனியா அழைச்சிகிட்டு போய் “ஏன் கண்ணா! ரொம்ப நெர்வசா இருக்கே! ரொம்ப இறுக்கமா தெரியரே! என்ன விஷயம்! என் கிட்டே சொல்லு!” ன்னு கேட்டார்.

நானும் என்னோட பிரச்னை பத்தி சொன்னேன். நான் ப்ராஜெக்ட் பண்ணாம, தள்ளி தள்ளி போட்டு கடைசியில் பெயில் ஆனது பத்தியும், இன்னோர் புது ப்ராஜக்ட் நாலு நாளிலே பண்ணறது பத்தியும் சொன்னேன்.

அதுக்கு அவர் சொன்னார்:

“கண்ணா! தள்ளிப் போடறது ஒண்ணும் பெரிய தப்பில்லே”
“என்ன தாத்தா சொல்றீங்க?”

“ நம்மாலே முடியுமோ முடியாதோன்னு ஏற்படற பயம், அதனாலே அந்த வேலையை கொஞ்ச நேரம் தள்ளி வெக்கிறோம். தள்ளிப் போடறதினாலே, நமக்கு கொஞ்சம் மன உளைச்சல், தற்காலிகமா குறைகிறது.”

“ஆமாமா! அதேதான்!”

“அப்புறம், சில சமயங்களில், நம்ப தள்ளி போடற அந்த வேலையை வேற யாராவது செஞ்சு கொடுத்துடுவாங்க. அது லாபம்தானே. என்ன நான் சொல்றது சரியா?”

“நீங்க சொல்றது சரிதான் தாத்தா! அப்பா ஹெல்ப் பன்னுவார்னு பாத்தேன். ஆனால் அவர் காலை வாரி விட்டுட்டார்.”

“இன்னொன்னு, இந்த ஒத்தி போடறதாலே, நிறைய சமயங்களிலே சாக்கு போக்கு சொல்லி நாம தப்பிச்சுக்க முடியும். இவ்வளவு வசதி இருக்கரதினால தான் நாம, நம்மால் ஈசியா முடியாத அல்லது பிடிக்காத வேலையை தள்ளிப் போடறோம்.”

கண்ணனுக்கு புரிந்தது.

“ஆனா, தாத்தா, நான் இன்னிக்கு சுத்தமா மாட்டிக்கிட்டேன். பெயில் ஆயிட்டேன்.”

“அதை தான் நான் சொல்லவரேன். எல்லாத்தையும் எப்போவும் தள்ளிப் போடக்கூடாது. பின்னாலே, வேறே வேறே பிரச்னைகள் வரும். நம்ம வாழ்க்கையே கேள்விக்குறியாயிடும். அதனாலே, தேவையற்றதை மட்டும் தான் தள்ளி போட வேண்டும்.

ஒன்னு தெரிஞ்சுக்கோ, நிச்சயமா, வெற்றிக்கு தேவையானதை ஒத்தி போடக் கூடாது. “ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், அதுவும் இன்றே செய்”. படிச்சதில்லே ?

“படிச்சிருக்கேனே!”

“அப்புறம், செய்யும் காரியத்தில், கவனம் சிதறாமல் குறியாக இருக்க வேண்டும்.முக்கியமா, நேரத்தை நல்ல வழியில் செலவிட கத்துக்கணும்.புரிஞ்சுதா?”

“புரிஞ்சுது தாத்தா!”

“எந்த காரியத்தையும் எப்போ முடிக்கிறதுன்னு நினைக்ககூடாது. ஏன்னா, அந்த நினைவே நமக்கு டென்ஷன் உண்டு பண்ணும். எப்போ ஆரம்பிக்கலாமுன்னு தான் நினைக்கணும்.

ஒரு வேலை எடுத்துகிட்டா, ஐயோ தலையெழுத்தே! இந்த வேலையை பண்ணியே ஆகணும்னு நினைக்கக் கூடாது. அப்போ, அதுவே நமக்கு ஒரு வெறுப்பு, டென்ஷன் உண்டுபண்ணும்.

இந்த வேலையை யாரும் நம்ப மேலே சுமத்தலே. இது நமக்கு விருப்பமான வேலைன்னு சொல்லிக்கணும். அப்போ அந்த வேலையே சந்தோஷமா இருக்கும்”

“சரி தாத்தா”

“எதையும், இவ்வளவு பெரிய வேலையான்னு நினைச்சா, நிச்சயமா பயமாத்தானிருக்கும். நமக்கு நாமே தன்னம்பிக்கை வளர்த்துக்கணும். சின்ன சின்ன அடியா, எளிதில் முடிக்க கூடிய ஸ்டெப்சா, எடுத்து வெச்சா, பாத்துகிட்டே இருக்கச்சே, எவ்வளவு பெரிய வேலையும் தன்னாலே முடிஞ்சுடும்”

எங்க தாத்தா சொன்னது என்னை முழுமையாக மாற்றியது. இந்த ப்ராஜக்ட்லே நான் வெற்றி பெறணும் என குறிக்கோளோட உழைத்தேன். பாசாயிட்டேன்.”

“எக்ஸ்செல்லேன்ட் கண்ணா. நீ பாஸ் மட்டுமில்லே, நிறைய மார்க் வாங்கியிருக்கே. 79%.”

“தேங்க்ஸ் சார்”

“வெரி குட் கண்ணா!. நீ உன் தாத்தாவுக்கு தான் நன்றி சொல்லணும். உன்னை மாற்றியிருக்கிறாரே!. போய் உன்னிடத்திலே உக்கார்”

“நான் கஷ்டப்பட்டு படிக்கறதை பாத்திட்டு, எங்கப்பாவும் எனக்கு உதவியா, அவருக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லி கொடுத்தார். என்னோட மாமா இன்போசிஸ்லே வேலை, அவரும் நிறைய ஐடியா கொடுத்தார். அவங்களுக்கும் தேங்க்ஸ் சொல்லணும் சார்.”

கண்ணனை தட்டிக் கொடுத்து அனுப்பினார் ஆசிரியர். சிரித்த முகத்துடன், தலை நிமிர்ந்து நண்பர்களுக்கு கை காட்டியபடியே சென்று அமர்ந்தான் கண்ணன். நண்பரிடையே தனது மதிப்பு உயர்ந்தது பெருமையாக இருந்தது. ” தப்பிச்சேண்டா சாமி. இனி ஒரு போதும் ஒத்தி போடமாட்டேன்”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *