மணி தெரு முனையிலேயே இறங்கிக் கொண்டான். ஆட்டோக்-காரன் கூடுதல் பணம் கேட்டான்.
எல்லோரும் நிலவு வெளிச்-சத்தில் வாசலில் அமர்ந்து நேரம் போகப் பேசிக் கொண்டிருந்-தார்கள்.
தலையில் கட்டுடன் மணி நடந்து செல்வதைப் பார்த்து-விட்டுச் சிலர் ரகசியமாக தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள்.
மணி, வீட்டுவாசலை நெருங்கும் போது அவனின் அம்மா புலம்பிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
வாசல் லைட்டைப் போட்டுவிட்டு உள்ளே போனான். அவனைக் கண்டதும் அம்மாவின் புலம்பல் இன்னும் அதிகமானது.
நான் அப்பவே சொன்னேன்கேட்டீயா? செவ்வாய் தோஷக்காரியைக் கட்டிக்கிட்டா உன்னோட உயிருக்கு ஆபத்தானது
மணியும் சுந்தரியும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார்கள்.
மணியின் தாய், எப்படியோ மருமகளிடம் நைசாகப் பேசி அவளின் ஜாதகத்தைத் தெரிந்து கொண்டாள்.
சூது, வாது தெரியாத சுந்தரியும் தனக்குச் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், தோஷத்தை நீக்கப் பரிகாரம் செய்து விட்டதாகவும் சொன்னாள்.
சும்மா மெல்லுகின்ற வாய்க்கு, அவளே அவலைத் தந்தாள்.
மணிக்கு மனைவியின் ஞாபகம் வந்தது. சுந்தரியைத் தேடினான். அவள், பின் வாசலில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தாள்.
மணி, சுந்தரியின் தோளைத் தொட்டான். அவள் அவனின் கையைத் தட்டிவிட்டாள். நேராக, மணி தன் தாயிடம் வந்தான்.
என்ன நடந்து போச்சுணு இப்படிப் புலம்பிக்கிட்டு இருக்கே. நான் வண்டியில இருந்து விழுந்ததுக்கு அவ என்ன பண்ணுவா?
ரோட்டோரத்துல இருக்கற மரத்தை எல்லாம் ரோட் அகலப்படுத்தறோம்னு சொல்லி வெட்டிப் போட்டிருந்தாங்க.
பயங்கர டிராபிக் ஜாம். நான், பார்த்துக் கவனமா, நிதானத்தோட வண்டி ஓட்டிட்டுப் போயிருக்கணும்.
நான் ஆபீஸ் போறதுக்கு அவசரப்பட்டு மணல் சறுக்கி விழுந்துட்டேன். நான் செஞ்ச தப்புக்கு, செவ்வாய் தோஷத்து மேல பழி போடறது எப்படி நியாயமாகும்?
மணி கூறியது எதுவுமே கேட்காதது போல அவனதுதாய் தனக்குள் முனகிக் கொண்டிருந்-தாள்.
மணிக்கு, சாப்பிடும் போது மாமா வீட்டில் நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. அச்சம்பவத்தை நினைத்துத் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.
ஒரு பள்ளி விடுமுறையின் போது அவன், தன்னுடைய மாமா வீட்டிற்கு போயிருந்தான். மாமாவுக்கு, போலீஸ் பணி. இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.
மாமா பணிபுரியும் போலீஸ் எல்லைக்குள் திருட்டும், கொலையும் அதிகமாக இருந்தது.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார்.
குற்றவாளிகள் எல்லாம் போலீஸாரை விட புத்திசாலித்தனமாக இருக்கிறார்கள் என்பது ஏனோ மாமாவுக்குப் புரியவில்லை.
ஒரு நாள் மாமா, ஆவியுடன் பேசும் ஒரு நபரை அழைத்து வந்தார்.
ஆவியுடன் பேசும் அந்த நபர், ஹாலின் மையத்தில் மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்தார்.
மாமாவின் அப்பாவை ஆவியுடன் பேசும் நபர் அழைத்தார். நேரம்தான் போய்க்-கொண்டிருந்தது. மாமாவின் அப்பா ஆவியாக வரவில்லை. அவரின் குரலும் கேட்கவில்லை. ஆவியுடன் பேசுவதாகச் சொன்ன நபரின் குரல் மட்டும் தான் கேட்டது.
மாமாவுக்குக் கோபமும் எரிச்சலும் வந்தது. ஆவியுடன் பேசும் நபர் எவ்வளவு முயற்-சித்தும் எந்த ஆவியும் வரவில்லை. அதற்கு அவன் சொன்ன காரணம், நீங்க உங்க அப்பாவே அவர் இருக்கிற சமயத்துல நல்லா கவனிச்சிருக்க மாட்டீங்க. செத்தபிறகு அவங்களுக்குப் படையல் போடுட்டுக் கவனிச்சி என்ன பிரயோசனம் என்றார். அன்றாட வாழ்வில் நடக்கும் குடும்ப மோதல்களைச் சொல்லி ஏமாற்றுவதுதான் ஜோசியர்களின் தந்திரம். அப்பாவுக்கும் மகனுக்கும் எந்த வீட்டில்தான் சண்டை-இல்லை.
மாமாவின் முகம் இருண்டு போனது.
ஆவியுடன் பேசுவதாகச் சொன்ன அந்த நபர், முடிந்தவரையில் பணத்தைக் கறக்க முயற்சித்தான். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மாமாவைச் சுற்றி உள்ளவர்கள் சும்மா இருக்கவிடவில்லை. வழக்குகள் அதிகமாக, யாரோ சொன்னார்-கள் என்று மாமா குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் புறப்பட்டுப் போனார்.
நல்ல பலன் கிடைத்தது (?). மாமாவை அந்தப் பதவியில் இருந்தே தூக்கி இருந்தார்-கள். இந்த நினைவோடு உறங்கிப் போன மணி.
மறுநாள் காலையில் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.
குளியலறையில் இருந்து பெரும் சப்தம் கேட்டது; ஓடிப்போனான்.
மணியின் அம்மா, குளியலறையில் விழுந்துகிடந்தாள். கைகளில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
இதுக்கும் சுந்தரியோட செவ்வாய் தோஷம் தான் காரணமாம்மா
தூக்கி விட்டபடியே மணி கேட்டான்.
சோப்பு வழுக்கி நான் விழுந்ததுக்கு, பாவம் அவ என்ன பண்ணுவா? என்னை மன்னிச்சிடுறா. நாம கவனமில்லாமச் செய்யற காரியங்களுக்கு மத்தவங்க மேல பழி போடறது தப்புதான். அவன் அம்மா சொன்னது அவளுக்கும் கேட்டது. இப்பொழுது எல்லாம் சுந்தரி அழுவதில்லை.
– ஜூன் 2010