தேகம் சந்தேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 8,827 
 

மாதவி திரையரங்கின் முன் அன்று புத்தம் புதிய திரைப்படம் திரையிட இருப்பதால், மக்கள் கூட்டம் மிதந்தது. இயக்குனர் அருண் அத்திரைப்படத்தை காண்பதற்காக வந்தியிருந்தார். அன்று வெளியாவது அவரின் திரைப்படம் என்பதால், முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்க திரையரங்கினுள் நுழைய, அவரை போலவே, அவரது உடையும் ஜொலித்தது. திரையரங்கினுள் நுழைந்த அவரை, கை அசைத்து, விசில் பறக்க ஆரவாரத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர். அவர் இயக்கியது சில படங்களே என்றாலும், அவை அனைத்தும் வெற்றி படமே.

அருணின் கைபேசி அழைப்பு மணியை ஒலித்தது. கைபேசியை காதில் ஒத்தினான்.

“நான் யமுனா பேசுறேன். நீங்க எங்க இருக்கிங்க?”

“நான் தியேட்டரில் இருக்கேன், இன்னைக்கு என்னுடைய படம் ரிலீஸ். காலையில உன்கிட்ட சொல்லிட்டுத்தானே வந்தேன்”

“அது தெரியும். காலையிலேயே யாரோ ராய்ன்னு ஒருத்தி போன்ல கூப்பிட்டா. என்னனு கேட்டேன். நீங்க தான் வேணுன்னு சொல்லி வச்சிட்டா. அதான் நீங்க இப்போ எங்க இருக்கிங்கன்னு கேட்டேன்”

யமுனாவிற்கு தன் கணவன் அருண் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறாரோ? என்ற சந்தேகம். ஆனால் அவனோ யமுனாவை தவிர வேறு எந்த பெண்ணையும் நினைத்தது கூட இல்லை.

படம் முடிந்து அருண் வெளியில் வரும் போதும், இனிமையான குரலில் ஒரு பாடல் கேட்டது. பாடல் கேட்கும் திசையை நோக்கி திரும்பி பார்த்தான். பிச்சையெடுத்து கொண்டு, ஒரு பருவ பெண் பாடிக்கொண்டியிருந்தாள். அருண் தன் உதவியாளரை அழைத்து,

“அந்த பொண்ணுக்கு சினிமாவில் பாட சம்மதமான்னு கேளு. சம்மதம்முனா…. நம்ம வண்டியில் ஏற்றிக்கொண்டு வா….”

அதன்பின் அந்த பெண்ணும் அலுவலகத்திற்கு வந்தாள். புத்தாடை ஒன்றை கொடுத்து, அவளை அங்குள்ள குளியறையில் குளித்து, உடுத்தி கொண்டு வரும் படி சொன்னான் அருண். அவள் குளித்து வெளியில் வரும் நேரம், யமுனாவும் அலுவலத்திற்கு வந்தாள்.

“யமுனா…!! நீ ஏன் சொல்லாம திடீர்ன்னு வந்திருக்கா. ஒரு போன் பண்ணிருந்தா…நானே வந்துருப்பேன். சொல்லியிருக்கலாமே….”

“ஏன் நான் வரக்கூடாதா? யார் இந்த பொண்ணு? தினமும் இந்த மாதிரியெல்லாம் கூத்து இங்க நடக்குதா? இவ பெயருதான் ராயியா?..”

“இவ ராயியில்லடி… இந்த பொண்ணு பெயரே தெரியாது…. இப்பதான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் பார்த்தேன்”

“ஓஹோ… பொண்ணு பெயரே தெரியாது. அப்போ இங்க ஏன் வந்து குளிக்குரா?”

“ரோட்டில நல்லா பாடிக்கிட்டு இருந்தா… அதான் என் படத்தில் பாட வைக்க கூட்டிட்டு வந்துருக்கேன்”

“ரோட்ல… ஆம்பளைங்க பாடுற சத்தம் உங்களுக்கு கேட்கலயா?”

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அதை பொன்னி ஓரமாக, குளித்த தலையிலிருந்து நீர் சொட்ட சொட்ட, நின்று பார்த்துக் கொண்டியிருந்தாள். மழை பெய்து ஓய்ந்தது போல, யமுனாவின் சத்தம் நின்றது. கோபமாக வீட்டிற்கு அவள் சென்ற பின், ‘மீண்டும் இன்று இரவு இவளின் அர்ச்சனையை கேட்க வேண்டுமே’ என மனதில் நினைத்தான் அருண்.

பொன்னிக்கு படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. சில மாதங்களிலேயே புகழ் பெற்றாள். அவளுக்கு தங்குவதற்கு வீடு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான் அருண்.

யமுனா அருண் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள். எங்கே அவன் தன்னை விட்டு பிரிந்துவிடுவனோ? என்ற அவளின் சிந்தனையே அருணின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அருணின் கைபேசியை சோதிப்பது, ஆட்களை விட்டு பின் தொடர்வது, நாளிதழ்கள், புத்தகங்கள் போன்றவற்றில் கிசுகிசுக்கள் படிப்பது, என சந்தேகத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். இதனால் இருவருக்கும் இடையே சிறிய விரிசல் ஏற்பட்டது.

அருண்… மனைவியின் கேள்விகளுக்கும், அவளிடும் சண்டைக்கும் பயந்து வீட்டிற்கு செல்வதை தவிர்த்தான். அதிக நேரம் திரைப்படம் எடுப்பதிலும், மீதி நேரம் அலுவலகத்திலும் கழித்தான்.

அன்று யமுனாவின் பிறந்த நாள். அவள் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்து விட்டு, பரிசு பொருட்களுடன் வீட்டிற்கு சென்றான். அவனை கண்டதும், ஓடி வந்து கட்டியணைத்து அழுதாள் யமுனா.

“எங்க என் பிறந்த நாளைக்கு வர மாட்டிங்களோன்னு நினைச்சேன். ஏங்க வீட்டுக்கு அதிகமா வரமாட்டிங்கிறிங்க. உங்களை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை”

‘இப்போ தான் நான் வந்துட்டேன்ல்ல அழுகாதே…” அவர்களின் அந்த ஆனந்த உரையாடல் அரை விநாடி கூட தாக்கு பிடிக்கவில்லை.

“சட்டையில் என்ன குங்குமம் ஒட்டியிருக்குது?” என அருணை அனையித்திருந்த கைகளை விளக்கி கேட்டாள்.

“நான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்ம்மா… அதும் உனக்காக, உன் பிறந்த நாள் என்பதால் தானே போனேன். அங்கிருந்த குங்குமம் தான் சட்டையில் ஒட்டியிருக்கும்”

“இதை பார்த்தா அப்படி தெரியலேயே!!!”

மீண்டும் சண்டையை துவங்கினாள் யமுனா. நடந்த சம்பவம் அருண் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் மதுவருந்த துவங்கினான். நாளடைவில் தினமும் அருந்தி, தன்னிலை மறக்கும் நிலைக்கு வரும் வரை மது அருந்தினான்.

ஒரு நாள் பொன்னியின் பாடல் பதிவாகி கொண்டியிருந்தது. அருண் அந்த இடத்திலேயே மது அருந்தி, தன்னிலை மறந்து கீழே விழுந்தான். அவனை தன் காரில் ஏற்றி, தன் வீட்டிற்கு கொண்டு சென்றாள் பொன்னி. அதன் பின்னர் மது அருந்த தோணும் போதெல்லாம் பொன்னியின் வீட்டிற்கு செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.

நாட்கள் நகர்ந்தது. பத்திரிக்கையில் பொன்னியுடன் அருணை சேர்த்து கிசுகிசுக்கள் வர துவங்கியது. தங்கை போல நினைத்த பொன்னியுடன், நம்மை சேர்த்து எழுதுகிறார்களே என்ற கவலையில், அருண் ஒரு முடிவெடுத்தான். தன் துணை இயக்குனரிடம்

“பொன்னியை திருமணம் செய்துகொள்வாயா? என கேட்க, அவனும் சம்மதித்தான். பொன்னியிடமும் சம்மதத்தை பெற்றுக்கொண்டு நிச்சியதார்த்தம் ஏற்பாடுகளை துவங்கினான். அவன் செலவிலேயே திருமண பட்டு முதல் அனைத்தையும் வாங்கினான். அருணின் புது திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாளே நிச்சயதார்த்தம் வைத்து கொள்ள முடிவு செய்தான்.

பொன்னிக்கும், இயக்குனருக்கும் விரைவில் திருமணம் என கிசுகிசு நாளிதழில் வரவே, அதை படித்த யமுனா அருணின் பற்று அட்டை (டெபிட் கார்ட்) அறிக்கையை சோதித்தாள். அதில் திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டிருந்தது. அதை பார்த்து கோபத்துடன் கிளம்பி, பொன்னியின் வீட்டிற்கு சென்றாள்.

“அடுத்தவளுடைய புருசனுக்கு ஏன்டி ஆசைப்படுரிங்க… உனக்கு வேற யாரும் கிடைக்கலையா? ஏன் என்ன மாதிரி அப்பாவி பொண்ணுங்க வாழ்க்கையில் விளையாடுறிங்க” என ஆரம்பித்து அண்டை வீட்டார் அனைவரின் முன்பு தகாத வார்த்தைகளில் பேசினாள் யமுனா. மனுடைந்தாள் பொன்னி.

சிலமணி நேரம் கழித்து, அருண் துணை இயக்குனர் பாபுவின் குடும்பத்துடன் பொன்னியின் வீட்டிற்கு நிச்சயதார்த்தம் செய்ய வந்தான்.

பொன்னி வீட்டின் கதவு உள் தாழிடப்பட்டிருந்தது. வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்க்க, அனைவரும் ஒரு கணம் அதிர்ந்தனர். பொன்னியின் தேகம் மின்விசிறியில் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு, தொங்கிக் கொண்டிருந்தது.

“நீ பிச்சைக்காரியாக இருந்திருந்தாலும் உயிரோடு இருந்திருப்பையே… என்னால உன் உயிரே போயிருச்சே……” என அருண் கதறினான்

மறுநாள் காலை நாளிதழில் “பொன்னியின் தற்கொலையால், துணை இயக்குனர் பாபுவின் திருமணம் நின்றது” என்ற செய்தியை படித்து பார்த்த யமுனா….

“இயக்குனருடன் பொன்னியின் திருமணம் என கிசுகிசு படித்தது பாபுவை பற்றியதா? என் கணவனை பற்றி தவறா நினைச்சிட்டேனே!! என்னால் ஒரு உயிர் போச்சே” என்று கதறிக்கொண்டு அருணிடம் மன்னிப்பு கேட்க, கைபேசியில் அழைத்தாள் யமுனா.

மாதவி திரையரங்கில் “சந்தேகமும் உயிரைக் கொல்லும்” என்ற அருண் இயக்கிய படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டிருந்தது. அருணின் கைபேசியின் அழைப்புமணி ஒலித்துக்கொண்டிருந்தது. பொன்னி பிச்சையெடுத்த, அதே இடத்தில் கலைந்த முடி, கிழிந்த ஆடையுடன் பித்தனாய் இருந்தான் இயக்குனர் அருண்……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *