கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2021
பார்வையிட்டோர்: 6,686 
 

புதுவை நகரில் ஒரு பங்களாத் தெரு. ஒரு பங்களாவின் முன்வீடு அது பங்களா எப்பவும் பூட்டியே இருக்கும். அதன் சொந்தக்காரர் “தெகோல்” லில் இருக்கிறார். ரெண்டு வருசத்துக்கு ஒருக்க, நினைத்தால் வந்து கொஞ்சநாள் தங்கிவிட்டுப் போய்விடுவார்.

முன்வீடு வீதிக்குப் பக்கத்தில் அந்த பங்களாவை ஒட்டி அமைந் திருந்தது ஆரல்ச் சுவரில் பெரிய்ய கிரில்கேட் அதில் ஒரு சிறிய கதவு. முன்விட்டில் இருப்பவர்களுக்கு அது போதும். மூன்றே பேர்கள்; அம்மா, அப்பா, ஒரு குழந்தை குழந்தைக்கு எட்டுமாசம் இருக்கலாம்.

வீட்டின் முன்னால் அடர்ந்த வேப்பமரம். அதன் நிழலில் குழந்தை – துரங்கும் நேரம்தவிர – தனியாக விளையாடிக்கொண்டிருக்கும். தெருவில் இறங்கிவிடாமலிருக்க அந்தக் “கேட்” பாதுகாப்பாக இருந்தது. அதைப் பிடித்து நின்றுகொண்டே குழந்தை தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கும்.

வெறிச்சோடிக் கிடக்கும் தெருவுக்கு ஞாயிற்றுக்கிழமையும் வியாழக்கிழமையும் உயிர் வந்துவிடும். வாரத்தின் அந்த ரெண்டு நாட்களும் பள்ளிக்கூட விடுமுறை நாட்கள். தெருவே ரெண்டுபடும்!
தெருவைக் கடந்து செல்கிறவர்கள் யாராய் இருந்தாலும் அந்தக் குழந்தையைத் திரும்பிப் பார்க்காமல்ப் போகமுடியாது; அப்படி இருக்கும் பார்க்க குழந்தைக்குத் தெரிந்தவர்களெல்லாம் அதை “பப்புலு” என்று அழைத்தார்கள் பிரியத்தோடு, பிரியம் அதிகமாகும்போது அந்தப் பெயர் இப்படி ஆகிவிடும்;

“பப்”
“பப்பூ
“பப்பீ”
“பப்போ”
“பாப்பீ”

பப்புலுவைப் பார்க்கிறவர்களுக்கு முதல்ப்பார்வையில்த் தெரிவது அதன் அழகான சுருள் சுருளான தலைமுடிதான். அடுத்தது அதன் கண்கள். பப்புலுவின் முகம் சிரிக்கிறதா, சிரிப்பதுபோல் அமைந்திருக் கிறதா என்று சொல்லுவது சிரமம்.

பப்புலுக்குட்டியை சாப்பிட வைப்பதுக்கு அதன் அம்மா ரொம்பப் பிரயாசைப்பட வேண்டியதிருந்தது. பிராக்குக் காட்டிக்கொண்டே ஊட்டவேண்டும்.

தெருவழியாக தலைநரைத்த கிழவர்போனால் அவரைப் பார்த்து விட்டு அம்மாவைப் பார்க்கும்; அது யாரு என்பதுபோல, அம்மா மெதுவான குரலில் “தாத்தா” என்று சொல்லுவாள். குழந்தையும் அப்படிச் சொல்லிப் பார்க்கும்.

அதே தோற்றமுடைய பெண் போனால், “ஆயா’ கொஞ்ச வயது என்றால் அக்கா, கொஞ்சம் பெரியவள் அத்தை கொஞ்சம் பெரியவர் மாமா. இப்படியாக அந்தக் குழந்தை போகிற, வருகிறவர்களின் வயசை வைத்து உறவுசொல்லிக் கூப்பிடத் தெரிந்துகொண்டது.

அம்மா சொல்லித் தந்ததைச் சரிபார்க்க வேண்டாமா; அதனால் அப்படிச் சொல்லிப் பார்க்கும். அவர்கள் திரும்பிப்பார்த்து மகிழ்ச்சி யுடன் தலையசைப்பார்கள், கை ஆட்டிவிட்டுப் போவார்கள். சிலர் ரெண்டு வார்த்தை பேசிவிட்டுப் போவார்கள்.

ரொம்பவும் வயசாளி ஒருத்தர் ஒருநாள்; தனக்குத்தானே பேசிக் கொண்டு வந்தார். வாழ்க்கையில் ரொம்ப நொம்பலப்பட்டவர் போலிருக்கு எல்லா உறவுகளுமே அவரைக் கைவிட்டிருக்கலாம். அவரைப் பார்த்ததும் பப்புலு “தாத்தா” என்றாள். எங்கிருந்து குரல் வருகிறது; அது தன்னைத்தானே என்று சுற்றிலும் பார்த்தார் அந்தத் தாத்தா.

திரும்பவும் பப்புலு “தாத்தா” என்று அழகாக அழைத்தாள். குரல் வந்த திக்கைக் கண்டுகொண்டார். அடடா என்றிருந்தது. அந்த வினாடியில் அவள் ஒரு தேவதையைப்போலத் தெரிந்தாள் அவருக்கு. பரவசமாகிவிட்டார்.

“இந்தத் தாத்தாவத் தெரியுமா அம்மா ஒனக்கு” என்று கேட்டார், உணர்ச்சிவயப்பட்டவராய்.

குழந்தை பின்வாங்கியது. அவள் பார்த்த யாரும் இப்படித் தங்கள் முகத்தை வைத்துக்கொண்டதில்லை.

கிழவர் தெருவில் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரோ ஒருத்தர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவரிடம், “தாத்தான்னு சொல்லு!” வந்தவரோ அவர்பாட்டுக்குப் போனார். என்றாலும், தாத்தா, அதையே சொல்லி சந்தோசப்பட்டார். நடந்துகொண்டே, அதிசயத் துடன் “தாத்தான்னு சொல்ராளே, ம், தாத்தான்னு சொல்ராளே” என்று சொல்லிக்கொண்டே போனார். ஏமாற்றமாக இருந்தது பப்புலுவுக்கு அழுகை வரும்போல இருந்தது.

நல்லவேளையாக அந்நேரம் அப்பா “மொபட்”டில் வந்து இறங்கினார். அப்பாவைப் பார்த்ததுமே பழைய பப்புலுவாகிவிட்டாள். பப்புலுவின் அப்பாவுக்கு என்ன வேலை என்று தெரியலை; அடிக்கடி, நாள் ஒன்றுக்கு “முப்பத்திரெண்டு தடவை” மொபட்டில் வந்து இறங்குவதும் போவதுமாக இருப்பார்.

புறப்படும்போது அதிஞாபகமாய் குழந்தையிடம் “டாட்டா சொல்லு; அப்பாவுக்கு டாட்டா சொல்லு” என்று கேட்பார். அம்மாவும் சொல்லச் சொல்லுவாள்.

ஆரம்பத்தில் குழந்தையை டாட்டாவுக்குப் பழக்கப் பெரும் பாடாக இருந்தது. என்றாலும் தாய்தந்தையரின் விடாமுயற்சியின் காரணமாக சர்க்கஸில் மிருகத்தைப் பழக்குவதுபோல் குழந்தையைப் பழக்கிவிட்டார்கள்.

குழந்தை பெறுவதே என்னத்துக்கு டாட்டா சொல்லுவதுக்குத் தானே என்பதுபோல இருக்கும். கடவுள் அருளால் பப்புலு பிறந்தாள்; இல்லையென்றால், டாட்டா சொல்லக்கூட நமக்கு ஒரு குழந்தை யில்லையே என்று ஏங்க வேண்டியதிருந்திருக்கும்.

சமத்துக்குட்டி பப்புலு, டாட்டா மாத்திரமில்லை காற்றுவழி முத்தம் (ஃபிளையிங் கிஸ்) தரவும் பழகிவிட்டாள். அப்பாவுக்குத் தரும் ஃபிளையிங் கிஸ் தங்களுக்கும் வேண்டும் என்று மற்றப் பிள்ளைகள் அவளிடம் கேட்பார்கள். கடனே என்று தருவாள்! அதைப் பார்க்கவே நன்றாக இருக்கும்.

பள்ளிவிடுமுறை நாட்களில் பப்புலுவைத்துக்கி வைத்துக்கொள்ள பெரிய பெண்குழந்தைகளிடம் பலத்த போட்டி இருக்கும். அவர்கள் அவளைத் தங்கள்தங்கள் வீடுகளுக்குத் துரக்கிக்கொண்டு போவார்கள். போகும்போதே, தெரிந்தவர்களுக்கெல்லாம் ஏர்கிஸ் தரும்படியும் டாட்டா சொல்லும்படியும் செய்வார்கள். யார் கைநீட்டி அழைத் தாலும் பாய்ந்துசென்று அவர்களோடு ஒட்டிக்கொள்வாள் பப்புலு, அவளுடைய மந்திரப் புன்னகை எல்லோரையுமே கவர்ந்துவிடும்.

இப்போது பப்புலுவுக்கு ஒரு வயசு முடிந்துவிட்டது. முதலாம் ஆண்டு நிறைவுவிழா அட்டகாசமாக கலகலப்பாய் நடந்து முடிந்தது. இனி மொட்டை போடணும்.

அந்தநாள் நெருங்க நெருங்க, குழந்தையின் தலையலங்காரம் வித விதமாக இருந்தது. இப்படியெல்லாங்கூட தலைமுடியை சிங்காரிக் கவும் முடியுமா என்பதுபோல் அது இருந்தது.

கோவிலுக்குக் கிளம்பினார்கள் மொட்டைபோட சுற்றமும் நட்பும் உடன் சென்றது. இவர்கள் போய்ச் சேர்ந்ததும் அங்கே ஒரு குழந்தைக்குக் கதறக்கதற மொட்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அழுகையும் கூப்பாடும் பப்புலுவைக் கலக்கியது.

வீட்டுக்குப் போவோம்; இங்கே வேண்டாம் என்று பப்புலு முரண்டுபிடிக்க ஆரம்பித்தாள். அவளைத் தாமரிக்க ரொம்பப் பிரயாசைப்பட வேண்டியதிருந்தது. சுற்றமும் நட்பும் அதைக் கண்டு சிரிப்பது பப்புலுவுக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லை; அம்மா உட்பட.

மொட்டைபோடும் நேரம் நெருங்கியது. எப்படித் தப்பிக்க அங்கிருந்து என்று தெரியலை அவளுக்கு அவளைப் பார்த்து மற்றவர் சிரிப்பதில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. அதில் ஒரு குரூரம் இருப்பது போல்ப் பட்டது. கோவிலுக்குப் புறப்படும்போதே குழந்தை தனக்கு, ஏதோ நிகழப்போகிறது என்பதுபோல நடந்துகொண்டது. மற்றவர்கள் அவளைக் கொஞ்சியதில் வித்தியாசம் இருந்தது. வா வா இன்னைக் குத்தான் இருக்கு ஒனக்கு என்பதுபோல இருந்தது அவளைப் பார்த்துச் சிரித்ததும் நடந்துகொண்டவிதமும்.

முதலில் மொட்டைபோட்ட குழந்தையின் அழுகை இவளைத் தொற்றிக்கொள்ளுமோ என்று நினைத்து அப்பாவும் அம்மாவும் ஒரு போலிச் சிரிப்புடன் “ஒன்னுமில்ல; ஒன்னுமில்ல அம்மா” என்று சொன்னவிதம் ஏற்புடையதாக இல்லை குழந்தைக்கு. அந்நேரம் பார்த்து அங்கே வந்த பலூன்காரன், மிட்டாய்க்காரனிடம் சொன்ன விலை தந்து வாங்கிக்கொடுத்து அவளைக் கொஞ்சநேரம் பிராக்குக் காட்டினார்கள். கவனத்தைத் திசை திருப்பினார்கள். பிறகு மொட்டை போடும் நேரத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

மொட்டை போடுகிறவன் கத்தியைத் தீட்டிககொண்டிருந்தான். அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் பப்புலுவைப் பார்த்ததும் சிரித்தான். அவனுக்கு மேல்வரிசையில் பற்கள் ஒரு பக்கம் பூராவும் இல்லை. கிட்டெ நெருங்கினால் ஒரே பீடிநாத்தம்.

தன் தலையில் தண்ணிர் எடுத்துவைத்த அவனுடைய கையைப் பப்புலு வேகமாகத் தள்ளினாள். அவன் சிரித்தான். சிரிக்கும்போது அவனுடைய தொண்டையில் கோழைச்சளியின் சத்தமும் சேர்ந்து கேட்டது. பப்புலுவின் கைகளை மற்றவர்கள் இறுகப் பிடித்துக் கொள்ள, தலையில் எண்ணெய் தேய்ப்பதுபோல தண்ணிரைவிட்டுத் தேய்த்தான். பப்புலு நெளிந்தாள், உரத்த குரலில் அழுது ஆட்சேபம் தெரிவித்தாள். தன் பக்கத்துக்கு அம்மாவை அழைத்தாள். தன்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர்களில் அப்பாவும் இருந்தார். அந்த இக்கட்டிலிருந்து தன்னை உடனே விடுவிக்குமாறு கூப்பாடுபோட்டு அழுதாள். “ஒண்னுமில்லேம்மா ஒண்ணுமில்லெ, கொஞ்சநேரம்தாம், கொஞ்சநேரந்தாம்” என்று அப்பா மாறிமாறி அதையே திருப்பித் திருப்பிச் சொன்னார். தலையில்க் கத்தி விழுந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. பிடி இறுகஇறுக பப்புலு கத்தினாள். எந்தவகையிலும் இது நியாயமே இல்லை என்பதுபோலிருந்தது அவள் கத்தல்.

இப்படி ஒரு எதிர்பாரா அவஸ்தை அவள் வாழ்நாளில் ஏற்பட்டதே இல்லை. அவள் பார்த்ததெல்லாம் சந்தோசமான முகங்கள், பிரியமான தடவுதல்கள், இனிமையான பார்வைகள் இவைதாம்.
இந்த வலுவந்தத்துக்குத் தன்னைப் பெற்ற அம்மாவும் அப்பாவுமே உடந்தையாக இருப்பதைக் குழந்தையால் செரித்துக்கொள்ள முடிய வில்லை. மண்ணில்க் கீழே அவளுடைய கண்ணிரோடு சுருள்முடிகள் கொத்துக்கொத்தாக விழுந்தது.

குழந்தையின் மனசு உடைந்து, கண்ணிர் வற்றி ஏங்கி ஏங்கிக் கேவியது. அதைப் பார்த்துத் தாங்காமல் அவள் தாயாரும் கண்ணிர் வடித்தாள்.

மொட்டைபோட்டு முடிந்தது ஒருமட்டும். இவ்வளவுதாம் இவ்வளவுதாம் என்று எல்லோரும் மேல்த்தொண்டையில் சொன்னார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என்பதுபோல வந்தார் பத்தர், காது குத்த.

காதுகளில் அடையாளப் புள்ளி வைத்துக்கொடுக்க தாயாரைக் கூப்பிட்டார்கள். வெற்றிலைக்காம்பினால் சுண்ணாம்பில்த் தொட்டு அடையாளமிட்டாள் தாயார். அப்போது தன்னைத் துக்கிக் கொள்ளும்படி கெஞ்சியது குழந்தை.

பப்புலுவின் மொட்டைத்தலையை யாரோ இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். பெண்குழந்தை என்பதால் முதலில் இடதுகாதில்க் குத்தி தரிப்பு இட்டார் பத்தர். வலதுகாதைச் சரியாகக் குத்தமுடியலை; சிறிது இடம் மாறிவிட்டது தொளை.

அந்த இரண்டாவது “தாக்கு”தலினால் அரண்டுவிட்டது குழந்தை அதுக்குப்பிறகு அது யாருடைய அனுசரணையையோ கொஞ்சலையோ ஏற்கவில்லை.

தலைக்குளிப்பும் சந்தனத் தப்பளமும் சேர்ந்து சொகமான துக்கம் வந்துவிட்டது. அந்தத் தூக்கத்திலும் கேவல்ப் பெருமூச்சு விட்டது.

வெய்யில்காலமாதலால் பெரியவர்களும் அலுத்துப் போனார்கள். துரளியில் குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. வந்த சுற்றமும் நட்பும் பொங்கல் பொரியல் என்று சாப்பிட்டு முடித்து, கண் அசந்த வேளை. திடீரென்று குழந்தை தூக்கத்தில் பயந்து அலறித் துடித்து வீறிட்டு அழுதது. தாயார் எழுந்துபோய் துரளியைக் குலுக்கி ஆட்டி சமாதானம் சொன்னாள். குழந்தை அமைதி கொள்ளவில்லை.

“பசியமத்திப் படுக்கப்போடு” என்று ஒரு பாட்டி சொன்னாள். துளியிலிருந்து எடுத்து, தாயார் மறைவிடத்துக்குக் கொண்டுபோனாள். துரளியிலிருந்து தன்னை எடுத்தது அம்மாதான் என்று கவனித்தது. அம்மா என்று தெரிந்துகொண்டதுமே கழுத்தைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு குழந்தை அழுதவிதம் தாயாரையும் கண்ணிர்விட வைத்தது. அந்த மொட்டை சம்பவத்துக்குப் பிறகு அந்தக் குழந்தையிடம் ஒரு வித்தியாசமான மாற்றம் தெரிந்தது.

முன்புபோல அந்நியர்களை அது முறைசொல்லிக் கூப்பிடுவதில்லை. கைநீட்டி அழைப்பவரிடம் பாய்வதில்லை. அந்த மாயப் புன்னகை மறைந்து, வேற்றுமுகம் விழுந்துவிட்டது.

– மே 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *