தினம் தினம் அணியும் முகமூடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 7,412 
 

காலையில் ஐந்து மணியில் இருந்து காத்திருக்கிறான் ராகவன், இன்னும் பால் பூத் திறக்கப்படவில்லை, தூக்கமும் கெட்டு, சும்மாவே காத்திருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது,கோபமாக வந்தது ராகவனுக்கு, அதற்குள் பூத்காரர் அவசர அவசரமாக வந்து கடையை திறந்து சாரி சார் லேட்டாயிடுச்சு என்றவர் இவனைப்போல நின்றிருந்தவர்களுக்கு பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க ஆரம்பித்தார், இவனும் பரவாயில்லை என்று ஒரு புன்னகையை சிந்தி பாக்கெட்டை வாங்கி வந்து வீட்டில் இவனை எதிர்பார்த்து காத்திருந்த மனைவியின் கையில் கொடுத்துவிட்டு தன் தூக்கத்தை தொடர சென்றவனை பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று காய் வாங்கி வரச்சொல்ல வந்த கோபத்தை காட்ட நினைத்தவன் பின் எதுவும் பேசாமல் பையை வாங்கி கடைக்குச்சென்றுவிட்டான்
.
ராகவன் ஆபிசுக்கு கிளம்ப வீட்டை விட்டு வெளியே வந்தவன் எதிர் வீட்டில் இதே போல் தயாராக நின்ற சுப்ரமணியத்தை பார்த்தவன் முகத்தை சுருக்கினான்.

சுப்ரமணியம் இதை கவனித்தாரா என்று தெரியவில்லை அல்லது கவனித்ததாக காட்டி கொள்ளாமல் இருந்துவிட்டாரா என்றும் தெரியவில்லை “குட் மார்னிங்க்” என்றார்.

இன்றைக்கும் ஓசி கிராக்கியா என்று மனதுக்குள் நினைத்தவாறு “குட் மார்னிங்க்” என்று வலிய புன்னகையை வரவழைத்து வந்து “ஏறிக்குங்க சார்” என்று வீட்டிலிருந்த வண்டியை நகர்த்தினான்.”சாரி உங்களை தொந்தரவு பண்றேன் என்று சொல்லி அவர் வந்து இவன் வண்டியில் ஏறிக்கொண்டார்.

ராகவன் அலுவலகம் செல்லும் வழியில் தான் சுப்ரமணியம் வேலை செய்யும் அலுவலகமும் இருந்தது அதனால் அவரை ஏற்றிச்செல்வது அவனுக்கு ஒன்றும் பொ¢ய வேலையில்லை இருந்தாலும் தொடர்ந்து ஒருவரை ஏற்றிச்செல்வது இவனுக்கு ஒரு சலிப்பை தோற்றுவித்திருந்தது.

சுப்ரமணியத்தை இறக்கிவிட்டுவிட்டு சிக்னலில் நின்ற்போது அருகில் ஒரு வண்டி வந்து நின்று இவனை கூப்பிட்டது, இவனுக்கு ஹெல்மெட் போட்டிருந்ததால் அடையாளம் தொ¢யவில்லை அவர் ஹெல்மெட்டை கழட்ட இவனுக்குக்கு சுரிர்… என்றது, பைனான்ஸ் சுந்தரம் அல்லவா, அதற்குள் சிக்னல் வழிவிட சுந்தரம் வண்டியை ஓரம் கட்ட இவனும் வேறு வழியில்லாமல் வணடியை ஓரம் கட்டி முகத்தில் ஒரு சோகத்தை வைத்துக்கொண்டு சார்..எப்படியும் அடுத்த மாசம் வட்டியோட செட்டில்மெண்ட் பண்ணிடுறேன் சார்..இந்த இரண்டு மாசமா ஏகப்பட்ட டைட் சார், என்று ஏகப்பட்ட ‘சார்’களை போட்டு பேசினான்.இது போல எத்தனை பேரை பார்த்திருப்பான் சுந்தரம்,முகத்தை கடு கடுவென் வைத்துக்கொண்டு அடுத்த மாசம் வரைக்கும்தான் டைம் அதுக்கப்புறம் என்மேல வருத்தப்படாதே என்று பார்வையை ராகவனின் வண்டியின் மேல் செலுத்தினான். ராகவனும் இதை புரிந்துகொண்டான், அடுத்த மாதம் வண்டியை வந்து தூக்கிக்கொண்டு போவான், போனா தொலையுது என்று ஒரு கணம் நினைத்தான், சுப்ரமணியம் மாதிரி ஆளுங்க தொல்லையில்லாம இருக்கும், என்று நினைத்தவன் வண்டியில்லாமல் தனக்கும் பெரிய இடைஞ்சலாகிவிடுமே, என்று தோன்றியதும் சடாரென அந்த நினைப்பை கைவிட்டான்.கவலைப்படாதீங்க சார் கண்டிப்பா அடுத்த மாசம் கொடுத்திடறேன் அவன் பதிலை முழுவதும் எதிர்பார்க்காமல் சர்ரென வண்டியை கிளப்பிச்சென்றான் பைனான்ஸ் சுந்தரம். வெயில் ஏறத்தொடங்கியிருந்தது ராகவனின் மனதிலும் உஷ்ணம் ஏறத்தொடங்கியது “இன்னைக்கு யார் மூஞ்சியில முழிச்சேனோ” மனதிற்குள் புலம்பியவாறு வண்டியை எடுத்தான்.

பணி புரியும் நிறுவனத்தில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான், நுழைவாயிலில் நின்றிருந்த காவலாளி “சார் உங்க பேட்ஜை” போட்டுங்கங்க அறிவுறுத்தியவுடன் இவனுக்கு கோபம் வந்தது, சூடாக பதில் சொல்ல காவலாளியிடம் முகத்தை திருப்பினான், மனதில் பைனாஸ் சுந்தரம், இந்த மாத செலவுகள்,..இத்யாதி..இத்தியாதி போன்றவை மனதில் பயமுறுத்த முகத்தை புன்முறுவல் காட்டி சாப்பாட்டுபையை கீழே வைத்து அடையாள அட்டையை எடுத்து கழுத்தில் போட்டுக்கொண்டான்.

இவன் சீட்டை அடைந்து “அப்பாடா” என் உட்கார்ந்த பத்து நிமிடத்தில் மேனேஜர் இவனைக் கூப்பிடுவதாக சொன்னதும் ஒரு சு¡£ர்… என்ன பிரச்னையோ பயத்துடன் உள்ளே சென்றான். பரமசிவம் மேனேஜர் பெயருக்கேற்றவாறு சிவப்பழமாக உட்கார்ந்திருந்த்தார்.ஏய்யா ராகவா நீ ஸ்டோர்ஸ் ஸ்டாக் எடுத்துட்டு வந்து கொடுத்ததுக்கும் இப்ப அவங்க கொடுக்கற ஸ்டாக்கும் நிறைய வித்தியாசம் வருதேயா போய் அதை என்னன்ணு பார்த்துட்டு வந்து “டீடெய்ல்ஸ்” கொடு அப்பாடா சிவப்பழம் கடிக்கவில்லை தப்பித்தோம் என நினைத்துக்கொண்டு “யெஸ் சார்” இப்பவே போய் பார்க்கறேன் என்று விட்டால் போதும் என்று வேளியே ஓடி வந்தான்.

கம்பெனி ஸ்டோருக்குள் நுழைவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள், முதலில் போர்மேன்(மேற்பார்வையாளர்) அனுமதி வேண்டும், அவர் அனுமதி கொடுத்தால்தான் ஸ்டோர் கீப்பர் ஒத்துழைப்பார். ஆகவே அவரைப்போய் பார்த்து ஒரு கும்பிடு போட்டான். அவர் அப்பொழுதுதான் கம்பெனிக்குள் சென்று வேலை செய்யாமல் அரட்டை அடித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை திட்டிவிட்டு வந்து உட்கார்ந்திருந்தார். இவனைப்பார்த்தவுடன் அதே வேகத்தில் என்ன ராகவன் சார் கம்பெனிக்குள்ள வந்திருக்கறீங்க? என்று கேட்டது இவனுக்கு அவர் கோபத்தில் இருப்பதை உணர்த்தியது, ஒண்ணுமில்ல சார்… என்று இழுத்தவாறு மெதுவாக பிரச்னையை சொன்னான்.இந்த ஸ்டோர் கீப்பர் ஒரு சரியான சோம்பேறி !

ஒரு நிமிடம் இருங்க..என்றவாற் போனில் ஸ்டோர்கீப்பா¢டம் ஏதோ வேகமாக பேசினார். பின் போனை வைத்துவிட்டு நீங்க போய் பாருங்க சார் என்று அனுமதி கொடுத்தார்.இவன் ரொம்ப நன்றி சார் என்று ரெடிமேட் புன்னகையை உதிர்த்துவிட்டு ஸ்டோர் கீப்பரை காணச்சென்றான்.

ஸ்டோர் கீப்பரும் கோபமாக் காணப்பட்டார். இவன் போய் நின்றவுடன் ஏன் சார் நீங்க வர்றதா இருந்தா லிஸ்ட் செக் பண்ண போறேன்னு சொல்லிட்டு வந்தா பத்தாதா? என்னைப்பத்தி அவர்கிட்ட போட்டுகொடுத்துட்டு வர்றீங்க… என்று கடிந்து கொண்டான், இவன் இரத்தம் சூடாக ஆரம்பிக்க மனமோ பைனான்ஸ் சுந்தரம், மனைவி மக்கள், போன்றவைகளை ஞாபகப்படுத்த சார்..கோபிச்சுக்காதீங்க..போர்மேந்தான் ஏன்? எதுக்குன்னு ஏகப்பட்ட கேள்வி கேட்டு பதில் சொல்லிட்டு வர்றதுக்குள்ள போதும்..போதும்னு ஆயிடுச்சு, இதுல நீங்க வேற கோபிச்சுக்கறீங்க நான் எங்கதான் போவேன்? அவரை தாஜா செய்து விவரங்களை வாங்கி ஒரு வழியாக வேலையை முடியும்போது இவன் மதிய உணவு இடைவேளையும் தாண்டி விட்டது.

மனைவி கட்டிக்கொடுத்த உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டுவிட்டு மதியத்துக்குமேல் கொஞ்சம் நிதானமாக வேலை செய்யலாம் என் நினைத்து அவ்ன் சீட்டில் உட்கார அதற்காகவே காத்திருந்தது போல் எதிர் சீட்டு கோபால் இவன் அருகே வந்து நண்பா உங்கிட்ட ஒரு 500 ரூபாய் இருக்குமா? பிரண்ட்ஸ் எல்லாம் நாளைக்கு ஒரு சின்ன பார்ட்டி வச்சிருக்கோம், அடுத்த மாசம் கொடுத்திடறேன், ராகவனுக்கு நன்கு புரிந்தது, இந்த 500ரூபாய் இவன் மாதாந்திர பட்ஜெட்டில் விழுந்த துண்டு, இந்த 500 ரூபாயில்தான் இந்த மாததின் மிச்ச பத்து நாட்களை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பான்.

ஆனால் அதை சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு பிரண்ட்ஸ், பார்ட்டி என்று கதை விடுகிறான்.இவன் நிலைமை மட்டும் என்னவாம்? இவனுக்கு அதற்கும் மேல் பணப்பிரச்னை, ஆனால் இவன் அதை சொல்வானா? சாரி நண்பா நேத்துத்தான் ஒரு பிரண்ட் எங்கிட்ட இருந்த 1000 ரூபாயும் அவசரமா வேணும்னு வாங்கிட்டுப்போயிட்டான். இவன் கேட்ட தொகையை விட இரட்டிப்பாக அடுத்தவனுக்கு கொடுத்துவிட்டதாக பெருமையுடன் பொய் சொன்னான். ம்ம்..பரவாயில்லை எதிர்பார்த்தவ்ன் போல் திரும்பிவிட்டான் எதிர் சீட் கோபால்.மனதில் நினைத்திருப்பான் கண்டிப்பாக இவனிடம் பணம் இல்லை ஆனால் கொடுத்ததாக பொய் சொல்லுகிறான்.

அலுவலகம் முடிய அரைமணி நேரம் முன்பு இவனுடைய செல் போன் ஒலித்தது, அவன் மனைவி ! ஏங்க வீட்டுக்கு வரும்போது பசங்களுக்கு ஒரு “இங்க்” பாட்டிலும் பென்சில் பாக்ஸ்சும் வாங்கிட்டு வாங்க, பதிலை எதிர்பாராது போனை வைத்துவிட்டாள். அவள் செல் “பேலன்ஸ்” தீர்ந்துவிடுமல்லவா !

எல்லா பாக்கெட்டிலும் கைவிட்டு தேடியதில் 50 ரூபாய் தேறியது அவள் சொன்னதை வாங்கிவிடலாம்.

அலுவலகம் முடிந்து அவள் சொன்ன பொருட்களை வாங்கி வாகன நொ¢சலை கடந்து வீடு வந்து சேர்ந்த பொழுது இருள் சூழ்ந்துவிட்டது.

வீட்டுக்குள் நுழையுமுன் அப்பா..என குழந்தைகள் இவனிடம் ஓடி வந்து இவன் அடித்துவிட்டான், இவன் கிள்ளிவிட்டான் என் இவனை நடுவராக்கி புகார் செய்தன. இவன் வந்த அலுப்பினால் குழந்தைகளிடம் குரலை உயர்த்தப் போனவன் மனம் யார் யாருக்கோ பல்லைக்காட்டி சிரிக்கிறோம் நம் குழந்தைகளிடம் காட்டுவதால் ஒன்றும் குறைந்துவிடாது என்று மனதை தேற்றி சரி..சரி..இந்தாங்க நீங்க கேட்டது என்று அவர்களிடம் கொடுக்க அவர்கள் சண்டையை மறந்துவிட்டு ஆவலுடன் வாங்கிச்சென்றனர்.

எப்பவுமே மாச முதல் வாரமே குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி வச்சுடுவோம்னு சொன்னா கேட்டாதானே! ஒரு தொடர் போல பேசிக்கொண்டே வந்த மனைவியிடம் கடும் கோபம் ஏற்பட்டது, முதல் வாரமே வாங்கிவிடு என்று இவன் சொன்னபொழுது அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொன்னவள் இவள்தான்.

இப்பொழுது பிளேட்டை திருப்பி போடுகிறாள், மனம் அடங்கு,அடங்கு என்றது.

கட்டின பொண்டாட்டிதானே’ மீண்டும் ஒரு ரெடிமேட் புன்னகையை உதிர்த்துவிட்டு சரி அடுத்த மாசம் பார்த்துக்கலாம் என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கை கால் கழுவ பின்புறம் சென்றான்.

இனி !

வீட்டுக்காரர் அடுத்த மாதத்திலிருந்து வாடகை ஏற்றிவிட்டதாக சொல்லி சென்றது, கரண்ட் பில் இந்த மாதம் அதிகமாக வந்துள்ளது, பசங்களுக்கு கல்விச்சுற்றுலா செல்ல ஆளொரவருக்கு ரூபாய் 250 கேட்டது இவை எதுவுமே இவன் மனைவி இவனிடம் சொல்லவில்லை, மறந்திருக்கலாம், அல்லது நாளை சொல்லலாம் என்று நினைத்திருக்கலாம்.

அதுவும் நல்லதுக்குத்தான் படுக்கும்போதாவது இவன் தன்னுடைய முகமூடியை கழட்டி வைத்துவிட்டு நிம்மதியாக தூங்கட்டும். நாளைக்காலையில் இவன் மனைவி இந்த பிரச்னைகளை சொல்லும்போது மீண்டும் முகமூடியை எடுத்து மாட்டிக்கொள்வான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *