தற்செயல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 12,436 
 

நாளைய எட்டாம் நாள் கலியாணம். இந்நேரம் தாலி கட்டி முடிந்திருக்கும். வரிசை வைத்து காப்புக் களைந்து விட்டிருப்பார்கள். பந்திக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தாலும் இருக்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இருப்பார்கள், புதுக்கயிறு கழுத்திலே ஏறி விட்டிருக்கும். பச்சை மஞ்சள் பூச்சோடு பசபசவென்று தவழும், தங்கக் காசும் நாணலும் நெஞ்சிலே கொஞ்சும். கலியாணத்துக்காக செய்த புது நகைகளோடு கூரைப் புடவையோ, அதைக் களைந்து விட்டுப் பட்டுப் புடைவையோ கட்டிக் கொண்டு நிற்பாள். ஒன்றும் புரியாமல் சுற்றிச் சுற்றி வருவாள். பெருமிதத்தால் பூரித்துப் போய் விடுவாள். எல்லாப் பெண்களையும் போலவே இவளுக்கும் கலியாணம் நடக்கப் போகிறது.

நினைக்க நினைக்க வத்ஸலாவுக்கு உடம்பு புல்லரித்தது. உள்ளங்காலிலிருந்து உச்சி வரைக்கும் எதுவோ ஜிவு ஜிவு என்று ஏறியது. மனசெல்லாம் துள்ளியது. எதிரேயிருக்கும் நிலைக் கண்ணாடியில் நெஞ்சு வரைக்கும் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். எல்லாமே புதுசாகிப் பூத்துச் சிரிக்கிறா மாதிரி உற்சாகம் பெருக்கெடுத்தது.

மாப்பிள்ளையாக வரப் போகிறவர் நல்ல அழகு. பெண் பார்க்க வந்துபோன அன்று பார்த்தாள், செல்வராசுவை விட அழகு. காலையில் தினம் ஆபீஸ் வேலை செய்கிறவர்கள் தெரு வழியாகப் போவார்களே பேண்ட் போட்டுக் கொண்டு அவர்களையெல்லாம் விட அழகு. வேஷ்டி கட்டிக்கொண்டு வந்திருந்தார். கூடத்தில் உட்கார்ந்திருந்தார். சுற்றிலும் சொந்தக்காரர்களுக்கு மத்தியில் வாயில் வேஷ்டி மொசு மொசுக்க கோரைப் பாயில் சப்ளங்கால் போட்டு குந்தியிருந்தார். அப்பா குரல் கொடுத்தார். சீவி சிங்காரித்துக் கொண்டிருந்தவள் கூடத்துக்குப் போய் சம்பிரதாயப்படி காட்சி கொடுத்துவிட்டு வந்தாள். அம்மா சொன்னபடி தலையைக் குனிந்து கொண்டு வந்தாள். அறையில் வந்து நின்று ஜன்னல் வழியாகப் பார்த்தாள். மாப்பிள்ளை நல்ல சிகப்பு. தலை நிமிர்ந்திருந்தது. பிரகாசமான கண்களால் வீட்டை நோட்டமிடுகிறா மாதிரி மெல்ல விழிகளை ஓட்டினார். இவள் வந்து மறைந்த அறையின் வாயிற்படியைப் பார்த்தார்.

இவளுக்கு உள்ளே இருப்புக் கொள்ளவில்லை. தவிப்பாக இருந்தது. இன்னொரு தடவை போய் தன்னை பூராவும் அவருக்குக் காட்ட வேண்டும் போலிருந்தது! நைஸாகப் போய் வரலாமா என்று நினைத்தாள். வேண்டாம் என்று நினைத்தாள். உள்ளேயே நின்று கொண்டிருந்தாள்.

அம்மா வந்தாள். “என்னாடி; மாப்பள புடிச்சிருக்கா…!” கொஞ்சோண்டு நாணம் வந்தது. தலையைத் தாழ்த்தாமல் தலையை ஆட்டினாள் ‘ஓ!’ என்றாள்.

அம்மா சிரித்துக் கொண்டே போனாள். இவள் நகராமல் நின்று கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் புறப்பட எழுந்தபோது கூடத்துக்கு வந்தாள். எல்லாருக்கும் பின்னால் வாயிற்படியைத் தாண்டிக்கொண்டிருந்த அவர் எதேச்சையாகத் திரும்புகிறா மாதிரி மெல்ல திரும்பினார். இவள் பார்த்தாள். மெல்ல சிரித்தாள். போகிற அவரையே திருப்தி பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவரோடுகூட போய் சம்சாரமாக வாழப் போகிறாள். ரத்னாம்பாவும், பொக்கிலையும், கும்பம்மாவும் கலியாணம் கட்டிக் கொண்டு போய் குடும்பம் நடத்துவதைப் போலவே இவளும் போகப் போகிறாள். அவர் வீட்டிலேயே இருப்பாள். ஆடிமாசம் வருவாள். அப்புறம் சூல் வைத்து அழைத்துக் கொண்டு போவார்கள், வேறு ஏதாவது விசேஷம் என்றால் நடுவில் வருவார்கள். எல்லாம் அவர்கள் மாதிரியேதான், ஆனால் அவர்களுடைய புருஷன்களையெல்லாம் விட இவர் ரொம்ப அழகு இவராட்டம் யாருக்கும் வராது.

கலியாணம் முடிந்தால் மூணு நாளைக்கோ அஞ்சி நாளைக்கோ மரு இருக்கும். இங்கே வந்து தங்கியிருப்பார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் பார்ப்பார்கள். “இவர்தான் வத்ஸலா புருஷன். இவர்தான் வத்ஸலா புருஷன்” என்று பேசிக் கொள்வார்கள். “நல்ல அழகு. குடுத்து வச்சவதான்”

மரு முடிந்து ஊருக்குப் போகும் போது கையிலே டிரங் பொட்டியை எடுத்துக் கொண்டு கூடவே போவாள். கூடவே நிற்பாள். பஸ் வரும், ‘ஏறிக்கோ’ என்பார். பின்னாலேயே ஏறிக் கொள்வார். எல்லாரும் அதிசயத்துடன் பார்ப்பார்கள். இவள் எல்லோரையும் பார்ப்பாள் “எங்க ஊட்டுகார்தான் இவரு” சொல்லாமல் சொல்லுவாள்.

ஆரம்பத்தில் எப்படிப் பேசுவது, என்னமாய்ப் பேசுவது என்று கூச்சமாக இருக்கும், எதுவும் செய்யக் கூடத் தோன்றாது, எதிரில் போவதற்கேகூட கூச்சம் வந்தாலும் வரும். செல்வராசுவிடம் பழகினா மாதிரி இவரிடம் பழக முடியாது, இவர் சொந்தப் புருஷன். புருஷனைக் கண்டால் எல்லாப் பெண்களுக்குமே புதுசில் கூச்சமாகத்தான் இருக்கும். ரத்னாம்பாகூட முதலில் ரொம்பக் கூச்சப்பட்டாள். நாலைந்து நாள் பழக்கத்தில் கூச்சமெல்லாம் பறந்து விட்டிருக்கும். இடமிருந்தால் பக்கத்திலேயேகூட குந்திக் கொள்ளச் சொல்வாள்.

தனியாகக் குடுத்தனம் வைக்கப் போகிறாராம். காலை பத்து மணிக்கெல்லாம் பலகாரம் கட்டிக் கொடுத்து, சாப்பாடு செய்து கொடுத்து ஆபீஸ் அனுப்பி விட வேண்டுமாம். காலையில் போனால் சாயங்கலாம்தான் வருவார்.

சாயங்காலம் இவள் மனசில் எதை எதையோ தூண்டி விட்டது. தன் பிம்பத்தைப் பார்க்கக்கூட என்னமோ மாதிரியிருந்தது. பின்னலை இழுத்து முன்னால் விட்டுக்கொண்டு அப்பால் நகர்ந்தாள். ஜன்னலருகில் போய் நின்றாள். ரிப்பன் நுனியை பல்லால் கடித்துக் கொண்டு தோட்டத்தைப் பார்த்தாள். செடியில் கனகாம்பரம் பூத்துக் குலுங்கியது. முனையில் தொத்தி உட்கார்ந்திருந்த கருப்பு நிறக் குருவியொன்று ஊஞ்சலாடுவது மாதிரி மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது. கீச்சு கீச்சென்று கத்தியது.

இவள் புன்னகையோடு திரும்பினாள், சாயங்காலம் வந்தால் அவர் விடிந்தால்தான் போவார், வந்ததும் தொட்டு அணைத்துக் கொள்வார். ராத்திரியானால் பக்கத்தில் படுத்துக் கொள்வார். விடியற வரிக்கும் படுத்துக் கொண்டிருப்பார். செல்வராசு மாதிரியே அவரும் செய்வார். வேறு மாதிரி ஏதாவது இருந்தாலும் இருக்கும். புதுசாக ஏதாகிலும் செய்தாலும் செய்வார். ஆனால் முன்னே மாதிரி பயந்து சாக வேண்டியதில்லை. சின்ன சத்தம் கேட்டால்கூட அலறிப் புடைத்து பீதியடைய வேண்டியதில்லை. யாராவது பார்த்து விடுவார்களோ என்று திக்திக்கென்று அடித்துக் கொள்ள வேண்டியதில்லை. யாராவது ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று சங்கடப்பட வேண்டியது கூட இருக்காது. கலியாணம் எதற்காகச் செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது.

கலியாணம் ஆகாமல் அப்படிச் செய்தால்தான் தப்பு. யாராவது பார்த்து விட்டால் வம்பு. அதனால்தான் ரகஸ்யமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. தன்பாடு இனி கவலையில்லை. ஆனால் செல்வராசுதான் பாவம்! ரொம்ப பயந்து கொண்டிருக்கிறாள். அவனும் கலியாணம் பண்ணிக் கொண்டால் நல்லது. பயப்படாமல் செய்யலாம். போகும்போது பார்த்து சொல்லி விட்டுப் போக வேண்டும்.

கலியாணம் ஆகாமல் பகிரங்கமாகவே எல்லாரும் இப்படிச் செய்யலாம் என்றால் அப்புறம் கலியாணம்தான் எதற்கு. அதற்காகத்தான் கலியாணம் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் கலியாண சமாசாரம் சொன்னால் செல்வராசு மட்டும் ஏனோ சந்தோஷப்படாமல் முகம் வாடிப் போகிறான். எல்லோரும் ஆசைப்படும் போதும் அவன் மட்டும் ஏனோ உம்மென்று மூஞ்சை வைத்துக் கொண்டிருக்கிறான்.

சளப் சளப்பென்று குளம்படிச் சத்தம் ஒலியெழுப்ப சேடை கலக்கிய கழனியில் மாடுகள் இழுக்கின்றன. ஊரும் கலப்பை சேற்றைப் பிளந்து கொண்டு நகர்கிறது. கழனியில் வந்து பாயும் வாய்க்கால் நீர் பிளப்பில் ஓடுகிறது. பக்கத்துக் கழனியில் கூலிப் பெண்கள் நடவு நடுகிறார்கள். கேலிப் பேச்சும் கிண்டலும் ஊர்க்கதையும் சரளமாக அடிபடுகின்றன. ஏர் ஓட்டுற ஆண்கள் ரெண்டு பொருள் படும்படி அர்த்த புஷ்டியுடன் என்னவோ சொல்லிச் சிரிக்கிறார்கள். பெண்களைச் சத்தாய்க்கிறார்கள். செல்வராசும் ஏர் ஓட்டுகிறான்.

செல்வராசு எட்டாங்கிளாஸ் வரை படித்து படிப்பை நிறுத்திவிட்டவன். அடுத்த தெருக்காரன். கறுப்பு உடம்பு. உள்ளே கௌபீனம் கட்டி அரைக்கால் டிரௌசர் மாத்திரம் போடுவான். வேஷ்டி கட்ட மாட்டான். மேலே சட்டை பனியன் கூடம் இருக்காது. தலையில் மட்டும் ஒரு துண்டு கட்டியிருப்பான். வேலை செய்யும்போது நடுநடுவே அவிழ்த்து முகத்தைத் துண்டு கட்டியிருப்பான். வேலை செய்யும்போது நடுநடுவே அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் கட்டிக் கொள்வான். சும்மாயிருக்கிறான், அடிக்கடி திரும்பி வரப்பில் நிற்கிற இவளைப் பார்த்து மெல்ல சிரிக்கிறான். இவளும் பதிலுக்குச் சிரிக்கிறாள்.

உச்சி வேளையில் ஏரை கழனியிலே விட்டு விட்டு கை கால் கழுவிக் கொண்டு எல்லோரும் சாப்பாட்டுக்கு வருகிறார்கள். மாமரத்தடியில் குத்துக்காலிட்டு குந்துகிறார்கள். செல்வராசும் குந்துகிறான். கையைக் கூட்டி தன்னை தயார்ப்படுத்திக் கொள்கிறான். செம்பிலே சாய்த்த கூழைக் கைகளில் ஊற்றும் போது குனிந்த வாக்கிலிருக்கும் இவளையே பார்க்கிறான். விழுங்கி விடுவது போலப் பார்க்கிறான். இந்தப் பார்வையில் ஏதோ சக்தியிருக்கிறது. உள்ளே உறைந்து கிடக்கும் எதை எதையெல்லாமோ மீட்டு மேலே கொண்டு வந்து மிதக்க வைப்பதைப் போலிருக்கிறது.

கொஞ்சம் சங்கடப்பட்டவள் போல தலையைத் தாழ்த்திக் கொள்கிறாள். கொஞ்சம் கழித்து மறுபடியும் நிமிர்ந்து பார்க்கிறாள்.

“போதுமா”

வாய் நிறைய உப்பிய கூழை உள்ளுக்கு விழுங்கி விட்டு “ம்” என்று தலையை ஆட்டுகிறான். கிணற்றில் இறங்கி வாயைக் கழுவி தலையில் கட்டியிருக்கும் துண்டால் துடைத்துக் கொண்டே மேலே ஏறி வருகிறான்.

“தூரத்தில இருந்து பாத்தா நம்ப டீச்சரம்மா மாதிரியே இருக்கிற நீ!”

இவள் மெல்லச் சிரித்துக் கொள்கிறாள். அவ்வளவு அழகாகவா இருக்கிறோம் என்று உள்ளுக்குள் பெருமை பொங்குகிறது. “படிச்சிருந்தா டீச்சர் வேலைக்கி கூடந்தான் போயிருப்பேன். அதுக்குள்ளதான் வயிசுக்கு வந்துட்டேன்னு நிறுத்திட்டாங்களே, அஞ்சாங் கிளாஸோட”

அறுவடையெல்லாம் முடிந்த சமயம் அது. அடித்துத் தூற்றிய நெல் களத்திலேயே இருந்தது. மாமரத்தடியில் கட்டில் போட்டுப் படுத்திருக்கும் பாட்டிக்கு சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். காலியான டேவ்ஸாவை இடுப்பில் தொற்றலாக வைத்திருக்கிறாள். சந்தடியற்ற அமைதி. உச்சி வெய்யில் அழுந்திருக்கிறது. சுற்றிலும் அறுவடையான வயல் வரப்புகள் தேய்ந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்தாள். சின்ன மணல் ஓடையிறக்கத்தில் செல்வராசு எதிர்ப்பட்டான். ஆளுயர ஓடை அது.

எதிர்பாராத விதமாய் அவனைக் கண்டதும் உள்ளே ஏதோ குறுகுறுப்பு ஏற்பட்டது. எதையோ நிமிண்டுவதைப் போலிருந்தது. அவனும் அப்படித்தான் இருந்தான். அகஸ்மத்தாய் பார்த்ததால் முகத்தில் ஏற்பட்ட வியப்பு ஒரு கணம் தோன்றி மறைய நடையில் தேக்கம் வெளிப்பட்டது.

“சாப்பாடு குடுத்துட்டு வர்ரீயா”

“ஆமா!”

அவன் பார்வை கலங்குகிறது. அவளை பூராவும் அப்படியே தழுவி அப்புகிறது. மெல்ல நிமிர்கிறாள் இவள். அவன் எதுவோ செய்யப் போகிறான் எதுவோ நடக்கப் போகிறது என்று தெரிகிறது, வேண்டாம் என்று சொல்லத் தோன்றவில்லை. தவிர்த்துக்கொண்டு நழுவி விட வேண்டும் என்று கூட விருப்பமில்லை.

“ஊட்ட எதுனா வேல இருக்குதா?” என்கிறான் அவன்.

“ஒண்ணுமில்ல” என்று சிரிக்கிறாள்.

அவன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். தொண்டைக் குழி ஏறி இறங்குகிறது. இவளுக்கும் கிறக்கமாக வருகிறது. கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் எட்டி இவள் மார்பைப் பிடித்து விடுகிறான். வலது கையால் பிடித்து இடது கையால் இடுப்பை வளைத்து நெருக்கிறான். இறுக்கி அணைக்கிறான்.

“ச்சொச்சோ யார்னா வந்துடப் போறாங்க”

“யாரும் வரமாட்டாங்க இந்நேரத்துல” குரல் வெதுவெதுப்போடு சூடாக இருக்கிறது. மூச்சின் உஷ்ணம் கழுத்தைச் சுடுகிறது. பிடியைத் தளர்த்தாமலே மெல்ல அவன் தள்ளிக்கொண்டு போகிறான். வழியை விட்டு ஒதுக்குப் புறமாய் ஓடை உள் வாட்டமாகவே கொஞ்ச தூரம். ஓரத்தில் உயர உயர பனைமரங்கள், சின்னச் சின்ன கன்றுகள். நெருக்கமான புதர். ஒரே ஒரு ஒற்றை வேப்பமரம் மட்டும் நின்றிருக்கிறது. அடர்ந்த மரம், அடர்ந்த நிழல். குளுமையாய்ப் பரவியிருக்கிறது. பாதத்தில் குளிர்ச்சி தட்டுகிறது.

“ஸ்… இப்ப வேணா” என்கிறாள் இவள்.

அவன் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை, முதுகை வளைத்திருந்த பிடியைத் தளர்த்தி ஏனத்தை வாங்கி அப்பால் வைக்கிறான். காலைப் பின்னி பதமாகக் கீழே தள்ளுகிறான். மணல் படுக்கையிலே கிடத்தி விடுகிறான்.

பனை ஓலைகள் சலசலத்தன. வேப்பமரம் கிளைகளை ஆட்டியது. நீலநிறக் குருவியொன்று வாலை ஆட்டியபடியே விட்டு விட்டு விட்டுக் கத்திக் கொண்டிருந்தது. மேற்கே போகும் ரயில் பக்கத்து ஸ்டேஷனிலிருந்து கூவி மெல்ல ஊர்ந்து நகரும் சத்தம் கேட்டது. மற மற வென்று உடம்பெல்லாம் எதுவோ ஏறுவதைப் போலிருந்தது. பின் தலையிலும் முதுகிஉம் வெறும் தொடைகளிலும் பொடி மணல் உறுத்தியது. என்ன, ஏது என்று சொல்லமுடியாத ஒரு திளைப்பில் பலங்கொண்ட மட்டும் அவன் முதுகை இறுக்கி அணைக்கிறாள். “ரயில் போவுது” என்கிறாள். அவன் மெல்ல கிசுகிசுக்கிறான். “எதுனா போவட்டும். கம்முன்னு இரு”.

மாமரத்தின் கீழே பூக்கள் சிந்திக் கிடக்கின்றன. மரத்தில் கட்டை எறும்பு ஊர்கிறது. வடுக்கள் காய்ந்து தொங்குகின்றன. பாட்டி பெரியம்மாவின் சாவுக்குப் போய்விடவே இவள் காவலிருக்கிறாள். கட்டிலில் குந்தியிருக்கிறாள். மணலைத் தட்டிக் கொண்டு எழுந்ததையும் ஏனத்தை எடுத்து பழையபடியே இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்ததையும் நினைக்க சந்தோஷமாக இருக்கிற்து.

“பெரிய ஆளுதான் நீ” என்று அவனைப் பார்த்து சிரிக்கிறாள்.

“ஏன்; என்னா…” என்று அவனும் பதிலுக்கு சிரிக்கிறான்.

“என்னா துணிச்சல்ல அப்பிடி வெடுக்குன்னு புடிச்ச நீ!”

“எல்லாரியும் அப்பிடி புடிச்சிடுவேனா, நீன்னவாசிதான் அந்த துணிச்சலு”

“நான்ன வாசின்னா என்னா, ஏமாந்தவ ஒண்ணும் கேக்க மாட்டன்றத்தான”

சிரித்துக் கொண்டேதான் கேட்டாள் இவள். ஆனால் அவன் முகம் ஒரு மாதிரியாக ஆகியது. “வச்சலா” என்றான். அன்போடு கண்டிப்பு காட்டும் பாவனையில் இதமாயிருந்தது குரல். “எம்மா நாளா உம்மேல எனக்கு ஆச தெரியுமா”

“இத்தினி நாளா ஏன் எங்கிட்ட சொல்லலே”

“சொல்லணம், சொல்லணம்னுதான் நெனக்கிறது. ஆனா என்னுமா சொல்றதுன்னுதான். அதனால்தான் அப்பிடி.. அத்த மாதிரி மொரட்டாம் போக்க கூடம் புடிச்சிருக்க மாட்டேன். எதுவோ ஒரு வேகம்” பேசும்போதே அவன் குரல் தழுதழுத்தது. “நீயும் இம்மா நாளா பாத்துக்னுருக்கிறயே எப்பனா எதுனா இன்னொரு பொண்ணுகிட்ட இந்த மாதிரி நடந்துக்னதா கேள்விப்பட்டிருப்பியா”

“எனக்கு அப்பவே தெரியும்”

“என்னான்ணு”

“நீ இந்த மாதிரி செய்வேன்னு”

அறுப்பு அறுத்த கழனியில் குத்துக் கொட்டை போடுகிறார்கள். மஞ்சள் நிறப் பூக்கள் கழனியெங்கும் கண் சிமிட்டுகின்றன. இவள் தினமும் அவனைச் சந்திக்கிறாள். என்ன ஏது என்று புரியாத பழக்கம். சின்னக் குழந்தைகள் கூட்டாஞ்சோறு ஆக்கி அம்மா அப்பா ஆட்டம் ஆடுவது மாதிரி. தின்பண்டத்துக்கு ஆசைப்படுவது மாதிரி. மனசில் எந்தவித சிராய்ப்பும் இல்லை. எப்போதும் போலவே இருக்கிறாள். அவன் ரொம்ப கரைந்து போயிருப்பதைக் கூட இவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“வத்ஸலா” என்கிறான் அவன்.

“என்னா”

மெல்ல இவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து அழுத்திக் கொள்கிறான். “ராவிக்கு உங்க ஊட்டுக்கு வரட்டுமா”

“எதுக்கு”

“ராவுல படுத்தா தூக்கம் வரமாட்டுது வத்ஸலா. எப்பவும் உம் பக்கத்துலியே இருக்கணம் போலருக்குது”

“ஆர்னா பாத்துட்டாங்கன்னா”

“யாரும் பார்க்க மாட்டாங்க. பாதி ராத்திரிக்கு மேலே வர்ரேன். தோட்டத்துக் கதவை தெறத்துக்னு மாட்டுக் கொட்டாய்க்கா வா”

“எதுனா ஆயிடுத்துன்னா”

“என்னா”

“கிஷ்டவேணி கத தெரியுமில்ல”

அவன் கொஞ்சம் தயங்கி இவள் முகத்தைப் பார்க்கிறான். இவள் கண்களில் எதையோ தேடி ஏமாந்தவனாகக் அந்த ஏமாற்றத்தை மறைத்து மெல்ல சிரித்தபடி ‘அதெல்லாம் ஒண்ணும் ஆயிடாது. பயப்படாத. அதுக்குல்லாம் மருந்து இருக்குது”

“மெய்தானா! ஒண்ணும் ஆவாதா”

“உங்கிட்ட நான் பொய்யா சொல்றேன்” இவள் கைகளை அழுத்திவிட்டு விட மனமில்லாமல் பார்க்கிறான்.

கைகளை சாதாரணமாய் விடுவித்துக் கொள்கிறாள் இவள். “கொட்டாய்லியே இரு. கதவைதட்டிப்புடாத.”

ராத்திரி வந்தது. அவனும் வந்தான். கீழே உட்காரப் போன இவளை கொஞ்சம் வைக்கோலை அள்ளி மெத்து மெத்துன்று உதறிப் பரப்பி தலையிலிருந்த துண்டை அவிழ்த்துப் போட்டு உட்கார வைக்கிறான். பக்கத்தில் குந்திக் கொள்கிறான். கொஞ்சம் சாய்ந்து அவள் வயிற்றிலே முகத்தைப் புதைத்து இடுப்பைச் சுற்றி வளைத்து “வத்ஸலா” என்கிறான்.

“ம்”

“இப்படியே இருக்கணம் போலருக்குது”

“ஆசதான்” என்று சிரிக்கிறாள்.

“தெனம் வரட்டுமா” ஏக்கத்தோடு கேட்கிறான்.

தினம் வராவிட்டாலும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் வந்தான். ஐந்தாம் பிறை நிலவு மங்கி வியாபித்திருந்தது. மாடு கட்டும் முளைக்குச்சும், புல்தரையும், குப்பைமேடும் குளுமையாய் சலனமற்று இருந்தது. கொட்டாய் உள்ளிலும் கொஞ்சம் கம்மலான வெளிச்சம். உருவங்கள் மங்கலாகத் தெரிந்தன. வைக்கோலை அசை போட்டு பெருமூச்சு விடும் மாடுகளுக்குப் பக்கத்தில் கொஞ்சம் தள்ளி அவனை அணைத்துப் படுத்திருந்தாள். முதுகைப் பிடித்து ஒரு இறுக்கு இறுக்கி “அடுத்த வாரம் எனக்கு கலியாணம்” என்றாள். அவன் பேசாமலிருந்தான். “மின்ன வந்து பாத்துட்டுப் போனாருன்னு சொல்லல; அவர்தான். பத்திரிகல்லாம் கூடம் அடிச்சாச்சி உனக்குத் தெரியுமல்ல; அந்த எடந்தான்; எங்க அளவுக்கு நெல பலமெல்லாம் இருக்குதாம். அவரு உத்தியோகத்துல வேற இருக்காராம். மாசம் எரநூறு ரூவா சம்பளம்.”

அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

கொஞ்சம் கழித்து “கட்டிக்னு போனினா அப்பறம் எங்களல்லாம் மறந்துடுவ இல்லை” என்றான் அவன்.

‘அது எப்பிடி, அப்பப்ப இங்க வந்து போவ மாட்டனா”

“வந்தினா இந்த மாதிரி என்ன பார்க்க வருவியா!”

“அது எப்படி அவரு இருக்க மாட்டாரா…!”

அவன் பெருமுச்சு விட்டுக் கொண்டான். இறுக்கம் தளர்ந்தா மாதிரியிருப்பதை உணர்ந்தாள் இவள். சட்டென்று அவன் கைகளை விலக்கி தள்ளிக்கொண்டு எழுந்தாள். இருளில் அவன் முகம் கறுப்பாகத் தெரிந்தது.

“என்ன ஒனக்கு” என்றாள்.

“ஒண்ணுமில்ல” என்றான்.

இருந்தாலும் இவளுக்குக் குறையாகத் தோன்றியது.

“தோ பாரு இந்த மாதிரி இருந்தினா அப்பறம் எழுந்து உள்ள போயிடுவேன்”

அவன் “வத்ஸலா” என்றான். இழுத்து மடியில் கிடத்தில் சாய்த்துக்கொண்டு முதுகைத் தடவினான். இவள் “நீ கூடம் கல்யாணத்துக்கு வந்துடு. நான் வண்டிச் சார்ஜ் தர்ரேன்” என்றாள். இவள் “நீ கூடம் கல்யாணத்துக்கு வந்துடு. நான் வண்டிச் சார்ஜ் தர்ரேன்” என்றாள்.

குருவி எங்கோ பறந்தோடி விட்டது. ஊஞ்சலாடிக் கொண்டிருந்த நரம்பு ஒடிந்து விழவே பயத்தில் சடசடத்துப் பறந்தது. அதன் லயிப்பில் நின்றிருந்தவள் ஒரு வினோதமான புன்னகையுடனே ஜன்னலை விட்டு அப்பால் நகர்ந்தாள். கண்ணாடியில் மறுபடியும் தன் பிம்பத்தைக் காண வேண்டுமென்று தோன்றியது. கூடத்திலிருந்து அம்மா அழைக்கவே பேசாமல் திரும்பி வந்தாள்.

அம்மா கலியாணத்துக்காக எடுத்திருந்த ஜவுளி வகையறாக்களை விரித்துப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். வெளூர் நீலத்தில் நாலு விரற்கடை அகலம் பார்டர். மஞ்சள் வண்ணத்தில் கத்திரிப்பூ கொடியோடினா மாதிரி மெல்லீஸ் வாயில் எல்லாம் இவளுக்கு. பரவசத்தால் நெஞ்சு விம்மியது. இப்படியும் அப்படியுமாக புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்.

“மின்ன அந்த போலீஸ் காரூட்டு பொண்ணு கட்டிக்னு இருந்ததே அந்தமாதிரி இல்லம்மா இந்த சேல.”

“உங்கண்ணு என்னா பழுதாடி. அது என்னா வெல. இது என்னா வெல. அது என்னுமோ பதிமூணர்ர ரூபாயோ, பத்தர்ர ரூபாயோன்னுதான் சொன்னா. இது எழுவத்தெட்டு ரூபாயாமில்ல…”

“அதவ்ட ஒஸ்தி” உதட்டுக்குள் முணு முணுத்துக்கொண்டாள். அட்டைப் பெட்டியைத் திறந்து புதுசாய் வாங்கி வந்திருந்த கோடுகளைப் பார்த்தாள். ”போட்டுப் பாக்கட்டாமா…”

“பாரேண்டி எல்லாம் ஒனக்குத்தான்”

வெளியே போயிருந்த நைனா வந்தார்.

”சரி சரி எல்லாத்தியும் எடுத்து வச்சிட்டு சாப்பாட்டப் போடுங்க. தலைக்கிமேலே வேல கெடக்குது. வெளில அனுப்ப வேண்டிய பத்திரிகங்கல்லாம் அப்பிடி அப்பிடியே கெடக்குது. வெலாசம் எழுதணம் தபாலாபீஸ் போவணம்”

“அப்படியே எடுத்து வைடி எல்லாத்தியும் அப்பறமா பாப்ப” அம்மா எழுந்து அடுப்பண்டை போனாள். எப்போதோ வடியல் விட்டிருந்த சோற்றுப் பானையை நிமிர்த்திக் குலுக்கினாள். அடுக்கு சட்டியை எடுத்து வைத்து சோறு தோண்டி தயார் செய்ய ஆரம்பித்தாள்.

வத்ஸலா எல்லாவற்றையும் கட்டி சுருட்டிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

தெருவிலே சைக்கிள் மணி அடிக்கும் சப்தம் கேட்டது.

“ஏங்க, யாரு ஊட்ல”

“யாரது”

”இங்க வாங்க; தந்தி வந்திருக்குது”

’தந்தியா!” திடுக்கிட்டாள் அம்மா. “இங்க வாங்க. அத என்னாண்ணு பாருங்க”

தோட்டத்தில் கை கழுவப் போன நைனா ஒன்றும் புரியாமல் வந்தார்.

”எங்கருந்து வந்துருக்குது.”

“கடலூர்ல இருந்து”

நெஞ்சில் பீதி படர்ந்தது. அம்மா கலவரத்துடன் “ரேடியோவ அடக்குடி” என்றாள். ஈரக் கையைத் துடைத்துக் கொண்டு கையெழுத்துப் போட்டுத் தந்தியை வாங்கிய நைனாவின் கரங்கள் நடுங்கின. சிரமத்துடனே பிரித்தார். தந்தி சேவகனிடமே கொடுத்து “என்னா போட்டுகுது படிங்க” என்றார்.

”யாரோ ரங்கனாதனாமே அவுரு தவறிட்டாராம்.”

“என்னா!” அம்மாவும் நைனாவும் ஏககாலத்தில் அலறினார்கள். வத்ஸலா திடுக்குப் போய் நின்றாள்.

“எப்படி செத்தாராம்.”

”என்னுமா செத்தாரு”

“அதல்லாம் இதுல தெரியாதுங்க. செத்துட்டாரு அவ்வளோதான்.”

அம்மா பீறிட்டு அழுதாள். நைனா உள்ளேயே வெம்பினார். வெடிக்காமல் குமுறியதில் உடம்பு நடுங்கியது. வத்ஸலா அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே திக்பிரமையுடன் நின்றாள். இவளால் நம்ப முடியவில்லை. “எப்படி அதுக்குள்ளோ செத்துட முடியும், கலியாணம் ஆவாம”

கொடியில் கிடந்த சட்டையை இழுத்து உதறிப் போட்டுக் கொண்டு “பத்தரமா பாத்துக்கோங்க. யார் கிட்டியும் எதுவும் மூச்சு உட்டுக்க வேணாம். போயி என்னாச்சின்னு பாத்துக்னு வந்துடறேன்” என்று கரகரத்த குரலில் சொல்லி விட்டுப்போன நைனாவைப் பார்த்தாள்.

அடுக்கு சட்டியில் தோண்டி வைத்திருந்த சோற்றில் ஈ மொய்த்தது/ “அப்படியே எடுத்து வச்சி மூட்றி” என்றாள் அம்மா. இவள் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் வந்தது. முந்தானையால் துடைத்துக் கொண்டாள். மெய்யாலுமா செத்திருப்பாரு.

பூவரச மரத்தின் கீழே இலைகள் பழுத்து உதிர்ந்து கிடந்தன. பசங்கள் பீப்பி செய்து ஊதுவது அனாதைக் குழந்தைகளின் கேவலைப் போல கேட்டது. கலியாண தேதி முடிவடைந்து நேற்றோடு எட்டு நாள் ஆகி விட்டது. நைனா புறப்பட்டுப்போன போது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும், அவர் திரும்பி வந்து “பாம்பு கடிச்சி செத்துப்புட்டானாம். கைகால் அலம்ப சொம்பு எடுக்க போயிருக்கிறான். உள்ளியே சுருட்டிக்னு கெடந்துருகுது பாவம்!… நல்ல பாம்பாம்” என்றதும் பூராவும் கறுத்து இருண்டு போய்விட்டது.

கலியாண சேதி சொன்ன வீடெல்லாம் எழவு சேதி சொல்ல வேண்டியிருந்தது. பார்ப்பவர்கயெல்லாம் எப்பிடி ஆச்சாம், என்னமா செத்தாராம் என்று ஆளுக்கு ஒன்றாக கேட்டார்கள். எல்லாருக்கும் சொல்ல வேண்டியிருந்தது. இருக்கிற துக்கத்திலும் வெறுமையிலும் ஒவ்வொருவருக்கும் சொன்னதையே திருப்பிச் சொல்ல வேண்டியிருந்ததில் வேதனையும் எரிச்சலும்தான் மிஞ்சியது.

வத்ஸலாவின் முகத்தில் உயிர் இல்லை, களை இல்லை. கட்டிக்கொடுத்து அறுத்து விட்டவளைப் போலக் கிடந்தாள். வெளியே தலைகாட்டவே கூசியது. கழனி கட்டுக்குக் சாப்பாடு எடுத்துக்கொண்டு போகும்போதும் வரும் போதும் ஒருத்தர் பாக்கியாக இவளை விட்டு வைக்கவில்லை.

”அதோ போவுது பார். அதான். பாவம்! பத்திரிகல்லாம் கூடம் அடிச்சாச்சி. அதுந்தலையில் எழுதி வச்சத பாத்தியா”

“அது அது குடுத்து வச்சது அவ்வளோதான்.”

“அடப்பாவமே..!

”எங்கனா கேழ்விப்பட்டு இருப்பியா இந்த மாதிரி.”

வழியெல்லாம் வந்து விழும் வார்த்தைகள் காதில் நெருப்பாய்ச் சுட்டது. உடம்பே கூனிக் குறுகுவதைப் போலிருந்தது. யார் முகத்திலுமே விழிக்கக்கூடாது என்று நினைத்தாள். ஒற்றை வரப்பில் நடக்க முடியவில்லை. கால்கள் பின்னின. சீக்கிரம் வீட்டுக்குப் போய் தலையை எங்காவது மறைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அதே ஓடையில் எதிர்ப்பட்டான் செல்வராசு. பார்க்கவே அருவருப்பாயிருந்தது இவளுக்கு, பார்க்காத மாதிரி தலையைக் குனிந்து கொண்டு நடந்தாள்.

சோகத்துடனே கிட்டே நெருங்கிய அவன் ‘வத்சலா’ என்றான். “எல்லாம் கேள்விப்பட்டேன் ரொம்ப இதுவாயிடிச்சி.”

நின்று எரித்து விடுபவளைப் போல அவனை முறைத்துப் பார்த்தாள் இவள். ‘திருப்திதானா!” என்கிறா மாதிரியிருந்தது பார்வை. அவன் “எப்பிடி செத்தாராம்” என்றான். “எப்பிடியோ செத்தாரு ஒனக்கென்னா அதப் பத்தி “ “வத்ஸலா” “ஆமா ரொம்ப அக்கரதான்போ.”

நன்றி : அஸ்வகோஷ், மணிபாரதி பதிப்பகம், padippakam.com , ஓவியர் டிராட்ஸ்கி மருது , நண்பர் யெஸ். பாலபாரதி, வம்பர் சென்ஷி!

’தற்செயல்’ சிறுகதையை நான் தட்டச்சு செய்து இங்கே பதிவிட. ’உதயம்’ பத்திரிக்கையில் 1973ல் வெளிவந்த சிறுகதை இது. – ஆபிதீன் (http://abedheen.wordpress.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *