தப்புக் கணக்கு…சரியான விடை…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 4,474 
 

ஒரு ஞாயிற்றுக்கிழமை … காலை பத்து மணி இருக்கும்…

பெருமாளுக்கு போதாத காலமோ இல்லை ருக்மணிக்கு போதாத காலமோ தெரியவில்லை……

“ருக்கு… ஏதோ சாமிப் படம் மாட்டணும்னு சொன்னியே….இப்போ மாட்டித்தறேன்….”

“இப்பவா….வேணாங்க….

நாளைக்கு குமார் கீஸர் ரிப்பேர் பண்ண வருவானில்ல…அவன மாட்ட சொல்லலாம்….”

“ஏன்… அவனுக்கு நூறு ரூபா தண்டம் அழணுமா….நானே மாட்டிடுவேன்…”

சரி… இன்னிக்கு படணும்னு இருந்தா பட்டுத்தானே ஆகணும்…

“ஆமா … அந்த உயர ஸ்டூல் எங்க…???”

ஆரம்பிச்சாச்சு….!!!!!

“ஏங்க… போனவாரம் பரண்லேர்ந்து நீங்கதானே ஏதோ புஸ்தகம் எடுக்கணும்னு ஏறினீங்க….திரும்ப எங்க வச்சீங்க…”

“உடன்ன என்னையே கேளு… கொஞ்சம் தேடிப் பாரேன்…”

“ஏன்… நீங்க தேடிப் பாக்கக் கூடாதா..?அடுப்பில குழம்பு கொதிக்குது….சின்னது பண்ணிட்டு வரேன்…”

“டேய்…சூர்யா…எங்கடா தொலஞ்ச…அப்பா ஏதோ கேக்கறாரு பாரு.. ஹெல்ப் பண்ணு….”

“என்னப்பா…???”

“உயரமா ஒரு ஸ்டூல் இருக்குமே….எங்கடா அது….???”

“தோட்டத்தில இருக்குப்பா…பந்து மேல விழுந்திரிச்சுன்னு பாஸ்கர் எடுத்துட்டு போனான்…..”

“திருப்பி கொண்டு வந்து வைக்கத் தெரியாதா….? எங்கடா அந்த ராஸ்கல்..??”

“ஏங்க… எல்லாரையும் திட்றதவிட நீங்க தான் போய் கொண்டு வாங்களேன்…..”

“பசங்கள நல்லாத்தான் செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்க…”

முணுமுணுத்துக்கொண்டே சூர்யா டங்கென்று ஸ்டூலைக் கொண்டு வைத்தான்…

“ருக்கு…. இங்க வந்து பாரு… இடம் சரியா இருக்கா ….??”

“நான் இன்னிக்கு சமச்சா மாதிரி தான்…இன்னும் கொஞ்சம் கீழ வரணும்…”

“ஸ்டோர் ரூமுல ஒரு சின்ன நீல டப்பா இருக்கும்…அதில ஆணி இருக்கான்னு பாத்துட்டு அதக் கொண்டா. அப்படியே பக்கத்தில சுத்தியல் இருக்கும் பாரு….”

ஊருக்கு முன்ன வேதாளம் முருங்க மரத்தில ஏறின மாதிரி ஸ்டூல் மேல் ஏறி நின்னாச்சு…

இப்போ ஒருத்தர் ஒவ்வோண்ணா எல்லாம் எடுத்து தரணும்…! !

மனதில் தான் நினைத்துக் கொள்ள முடியும்…வாயத் திறந்தால் அவ்வளவுதான்…

ஸ்டோர் ரூமுல டப்பாவையும் காணம்.பச்சை டப்பாவையும் காணம்…

“என்னங்க….இங்க ஒரு டப்பாவும் இல்லியே….”

“இந்த வீட்ல ஏதாவது வச்ச இடத்தில இருக்கா…. உனக்கும் கொஞ்சம் கூட பொறுமையே கெடயாது….நல்லா பாரு….”

“டேய்.. பாஸ்கர்…ஆணி டப்பாவ யாராச்சும் எடுத்தீங்களா ….???”

“ஆங்…. முந்தாநாள் பக்கத்து வீட்டு ரமேஷ் மாமா ஆணியும் சுத்தியலும் வாங்கிட்டுப்போனாரே…. திருப்பி குடுக்கல போல…”

“மடப்பயலே…குடுத்தா வாங்கத் தெரியாது….??? போய் உடனே வாங்கிட்டு வாடா….”

“அப்பா ஸ்டூல் மேலயே நிக்கிறார்னு சொல்லு….”

“என்ன…..கிண்டலா…? அவனவன் கால்கடுக்க நின்னிட்டிருக்கேன்னு பரிதாபப்பட ஆளில்ல….”

“ஏங்க…பேசாம இறங்குங்க…நாளைக்கு……”

“வாய மூடு ருக்கு… ஞாயிற்றுக்கிழமை எதோ நம்பளாலான உதவி பண்ணுவோம்னு நினச்சேன் பாரு.. என்ன செருப்பால அடிச்சுக்கணும்…”

“அப்பா…. செருப்பு எடுத்து தரணமா…..??”

“டேய்…சூர்யா…இறங்கி வந்து வச்சுக்கிறேன்….”

பாஸ்கர் ஒரு வழியாய் ஆணி, சுத்தியுடன் வந்தான்…

“ருக்கு…இன்னோரு தடவ எதுக்கும் அந்த படத்த கொண்டு வா…சரியா இருக்கான்னு பாத்துட்டு… அப்புறம் வலது பக்கம் சாஞ்சிருக்கு …. இடது பக்கம் சாஞ்சிருக்குன்னு ஆயிரம் குத்தம் சொல்லுவ….! !

“இருங்க எடுத்துட்டு வரேன்…என்னோட சீரியல் போச்சு….சமயலும் அரகுற…..”

“ஏங்க….பீரோ மேலதானே படத்த வச்சிருந்தேன்…..”

“சரியாகப் போச்சு…. அதையும் காணமா….????”

“மங்கம்மா தூசி தட்டும் போது எடுத்து வேற எடத்தில வச்சிருப்பா….நல்லா பாரு….”

“ஒரு நிமிஷம் அப்படியே நில்லுங்க…மங்கம்மாக்கு ஃபோனப் பண்ணி கேட்டுவிட்டால் போச்சு…

“மங்கம்மா…அந்த அனுமார் படம்..?? ஓ… சரி..சரி…மாத்தி வச்சா சொல்ல மாட்டியா ….??? ஆமா….நாளைக்கி வந்துடுவ இல்ல….? “

“ஏம்மா….நாளைக்கு இன்னா ஸ்பெசல் ….??”

“இல்ல…. நீதான் அடிக்கடி லீவு போடுவியே……அதனால கேட்டேன்…..”

டக்கென்று கட் பண்ணி விட்டாள்…

கோபித்துக் கொண்டு விட்டாளோ…..

நாம அப்படி கேட்டிருக்கக் கூடாது…..இருக்கிற தலைவலியோடு இதுவும் சேர்ந்து கொண்டது….!!!!!

“மங்கம்மா நல்லா தூசி தட்டி அலமாரியில வச்சிருக்காளாம். இதோ கொண்டுவரேன். ….”

“ருக்கு….அடுப்பில ஏதோ தீயுது போல இருக்கே…”

“ஐயையோ…. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ….நல்லா தீஞ்சு போச்சு…”

“அம்மா…பசிக்குது….. சாப்பாடு ஆயிடிச்சா….”

“எங்கடா அப்பா சமைக்க விட்டாரு….”

“ரொம்ப பசிக்குதும்மா….”

“எல்லோருக்கும் ஸ்விக்கிலேயிருந்து சிக்கன் ரோஸ்ட்டும் … காலிஃப்ளவர் மஞ்சூரியன்… மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணிடுப்பா ….”

“இந்தாங்க… அனுமார் படம்….இத வீட்ல மாட்டினாலே ஒரு காத்து கருப்பு அண்டாதுன்னு ஜோஸியர் சொல்லி ஒரு மாசமாச்சு….. இன்னிக்கி தான் வேள வந்திருக்கு …..”

“சரியா சொல்லிடு…..ஆணி அடிக்கப் போறேன்….”

“சரியாத்தாங்க இருக்கு…..!!”

ருக்மணிக்கு ஆளை விட்டால் போதும் என்று ஆகிவிட்டது….

பத்தரைக்கு stool மேல் ஏறினவர்தான்…. மணி பன்னிரண்டு ஆகப் போகிறது….

“நல்லாத்தான் வீடு கட்டித் தந்திருக்கான் குழந்தைவேல்…ஒரு ஆணி எறங்குதா பார்…. எல்லாம் வளையுது….எத்தன சிமெண்டு இழுத்திருக்கும்…!!!!”

நல்ல வேளை…..குழந்தைவேல் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்…திட்டு வாங்காமல் தப்பித்தான்…

“ஆ..ஆ…ஆ..” டமாரென்று சத்தம்…

சத்தம் கேட்டு ஓடி வந்தாள் ருக்மணி…கீழே அனந்த சயனம் போஸில் விழுந்து கிடந்தார் பெருமாள்..!!!!!

கையிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது….அரை மயக்கத்தில் இருந்தார்…

‘அனுமார்…. வடைமாலை…. சுத்தியல்….’

என்னென்னமோ சம்பந்தமில்லாமல் உளறினார்…..

“ஏங்க…. என்னாச்சு…..கண்ணத் தொறந்து பாருங்க…பாஸ்கர்…..சூர்யா… ஓடி வாங்கடா…. அப்பா கீழ விழுந்திட்டாரு….ரத்தமா கொட்டுதுடா….”

பசங்க இரண்டு பேரும் உடனே ஓடி வந்திட்டாங்க…

“இரத்தமா ஒண்ணும் கொட்டலம்மா…ஆணி அடிக்கும்போது கையில பட்டிருக்கும்…. தல சுத்தி கீழ விழுந்திருப்பாரு….”

“அப்பாவுக்கு ஏற்கனவே லோ சுகர் …low B.P….மயக்கம் போட்டிடுவார்டா…ஃபோன் பண்ணி ஆம்புலன்ஸ் வரவழிச்சா பெட்டர்னு தோணுது….”

“டோன்ட் பி ஸில்லி அம்மா…ஊருக்கு ஃபோன் பண்றேன்.நாமளே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிடலாம்…… நீ கூட வரவேண்டாம்..”

“இல்லடா…. நானும் வரேன்… ஒரு நிமிஷம் அடுப்ப அணச்சிட்டு வரேன்….”

“ஸ்விக்கில இருந்து வருவானே….”

“சூர்யா இருக்கட்டும்….”

கைத்தாங்கலாக ஊபரில் ஏறிவிட்டார்…

ஆஸ்பத்ரில நல்ல வேளை கேஷுவாலிட்டில உடனே அட்மிட் பண்ணி முழு செக்கப் பண்ணினதில பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டார்கள்..

இடுப்பு எலும்பில் லேசான ஹேர்லைன் க்ராக் இருப்பதால் ஒரு மாசம் பெட் ரெஸ்ட் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்…..

“ரொம்ப நேரம் நின்னிட்டிருந்தாரா….? “

“ஆமா… டாக்டர்….பத்து மணிக்கு ஆணி அடிக்கிறேன்னு ஸ்டூல் மேல ஏறினவர் பன்னிரண்டு மணிக்குத்தான் இறங்கினார்…”

“எங்கம்மா இறங்கினார்….

விழுந்தார்னு சொல்லு ….”

“என்னம்மா சொல்றீங்க….????” அதற்குள் டாக்டருக்கு இன்னொரு அவசர கால் வரவே

“பாத்துக்கங்ம்மா” என்று நகர்ந்து விட்டார்…

பெருமாளால் ஒரு நாள் சும்மா படுத்திருக்க முடியுமா…??

“உங்களுக்கு எப்பிடி பெருமாள்னு பேர் வச்சாங்களோ…. பத்து நிமிஷம் படுக்க முடியலயே…..”

“அம்மா ….அப்பாவ பாத்துக்க ஒரு மாசம் ஆள் போட்டுடும்மா….இல்லைனா உன்ன உயிர எடுத்துடுவாரு…”

காலையிலும் ராத்திரிக்கும் பரமசிவம் வந்து பார்த்துக் கொண்டான்.

பெருமாளுக்கும் பரமசிவத்துக்கும் நல்லாவே ஒத்துப் போனது….

கீஸர் ரிப்பேர் பண்ணக் கூப்பிட்டு அலுத்து அலுத்து குமார் கடைசியில் வந்தான்….

“என்ன குமார்… மோடி கிட்ட கூட அப்பாயின்ட்மென்ட் கிடச்சிடும்போல..!!!? உன்ன பிடிக்க முடியலயே….”

“நானென்னம்மா பண்ணட்டும்…புதுசா வர பிளாட்டுங்களோட ஆர்டரே கையில முடிக்காம நிறைய இருக்குது. உங்கள மாதிரி ஒண்ணு இரண்டு பழைய கஸ்டமர் தவிர யார் கூப்பிட்டாலும் போறதில்லம்மா…..”

அரை மணியில் குமாரின் வேலை முடிந்தது.

“அம்மா ..வேற ஏதாச்சும் சில்லறை வேல இருந்தா சொல்லுங்கம்மா….. எல்லாத்தையும் முடிச்சு கொடுத்திட்டு போறேன்…”

“குமார்….. ஒரு சாமிப்படம் மாட்டணும்பா….”

“எங்க சொல்லுங்கம்மா…???”

“இதோ இந்த இடத்தில்தான் …..!!!”

கிடுகிடென்று போனான்.பெரிய ஸ்டூல் கொண்டு வந்து போட்டான்.

“படத்த குடுங்கம்மா…”

ஒரு கையால் படத்தை இடுக்கிக்கொண்டு, ஸ்டூல் மேல் ஏறி நின்றான் .

காலுக்கு இடையில் ஆணி, சுத்தியலை, வைத்துக்கொண்டு டேப்பால் அளந்தான்..

“அம்மா … இங்க ஏதுக்காலுமே ஆணி அடிச்சிருக்காப்போல இருக்கே… “

“அத ஏம்பா கேக்கற….ஆணி அடிச்சிட்டு வா சொல்றேன்….”

ஐந்து நிமிஷத்தில் வேலை முடிந்தது…

அனுமார் சுவற்றில் தொங்கினார்…

“ஸார்… எங்கம்மா காணம்…???”

“அந்த ரூமில படுத்திட்டிருக்காரு குமார்…”

“என்னாச்சும்மா…???”

ஆணி அடித்த வைபவத்தை சொல்லி முடித்தாள்..

“ஸாரெல்லாம் இனிமே மேல ஏற விடாதிங்கம்மா…ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆய்டப்போகுது…நா பண்ணித்தர மாட்டேனா…???”

“தாங்ஸ் குமார்… எவ்வளவு ஆச்சுப்பா. ??”

“உங்க கிட்ட என்னம்மா கேக்கப் போறேன்… தெர்மோஸ்டாட்டும், காயிலும் மாத்தியிருக்கேன்… இந்தாங்க பில்… எப்பவும் குடுக்கிறத குடுங்க…”

“படம் மாட்டிருக்கியே.. அதுக்கும் சேத்து சொல்லு…”

“என்னம்மா பேசறீங்க… இதுக்கெல்லாம் என்னிக்கு காசு வாங்கியிருக்கேன்…எத்தினி வருஷப் பழக்கம்… நீங்கெல்லாம் ஆயுசோட நல்லா இருந்தா அதுவே போதும்மா..ஸார் தூங்கிட்டு இருக்கார் போல…எழுப்ப வேண்டாம்…குமாரு வந்துட்டு போனான்னு மட்டும் சொல்லிடுங்க…”

“குமார் வந்திருந்திருந்தான்….!!”

“எந்த குமார்…..??”

“அதாங்க….நம்ப எலக்ட்ரீஷியன் ….”

“ஒரு வழியா கெய்சர ரிப்பேர் பண்ணினானா …??”

“ஆமாங்க…அதோட படத்தையும் மாட்டிக் குடுத்துட்டான்….”

“நூறு ரூபா கறந்திருப்பானே…”

“இல்லீங்க… எவ்வளவு சொல்லியும் காசு வாங்க மாட்டேனிட்டான்…!!!”

“எல்லாம் பில்லில சேத்திருப்பான்….திருட்டுப் பசங்க….”

உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கிறாரே என்று ருக்மணி ஒன்றும் பேசவில்லை….

சாதாரணமாய் ருக்மணி கணக்கு பார்ப்பவளில்லை…

அதுவும் உழைக்கும் வர்க்கத்திடம் தாராளமாகவே நடந்து கொள்வாள்.

ஆனாலும் இன்றைக்கு ஏனோ மனம் கணக்குப் போட்டது….

காலை பத்து மணியிலிருந்து….

அடுப்பில் தீய்ந்து போன சாப்பாடு….100

ஸ்விக்கியில் ஆர்டர்….1500

ஊபர்…..250

கேஷுவாலிட்டி ….2500

மருந்து .. மாத்திரை…200….

திரும்பி வர ஊபர்..250..

பார்த்துக் கொள்ள அட்டெண்டர். இரண்டு வேளையும்…..10000…

மொத்தம்…….14800…. ரூபாய்.!!!!!

குமார் கேட்பதாய் சொன்னது..100

‘எங்கணக்கு எப்போதும் தப்பாது ….’ என்று சொன்னவரின் கணக்கு எங்கே தப்பியது..???

சரி போகட்டும்…

அனுமார் மேலேயிருந்து எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.

அவரே விடை தெரிந்தால் சொல்லட்டுமே…..

Print Friendly, PDF & Email

2 thoughts on “தப்புக் கணக்கு…சரியான விடை…

  1. அருமையான நகைச்சுவையும், எதார்த்தமான வாழ்வியலையும் கூறும் எழுத்தாளரின் நடை பாராட்டிற்குறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *