ஞானோதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,688 
 

‘கலி முத்திப் போச்சுங்க!… ச்சே;… இப்படியெல்லாமா ஒரு அக்கிரமம் நடக்கும்?… படிச்சவங்களே இப்படி இருக்காங்களே!” மருத்துவமனையின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அந்த உடல் தடித்த மனிதர் தன் கருத்தை உடனிருப்பவரிடம் சொல்ல,

‘என்னத்தைப் பண்றது… இப்பத்தான் ஜனங்க புத்தியே சின்னப் புத்தியாவல்ல போச்சு…”

அவர்களது பேச்சை அலட்சியம் செய்தபடி நடந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தார் டாக்டர் பரமசிவம்.

வேகமாக வந்த நர்ஸிடம் ‘என்னம்மா… என்ன கேசு!”

‘கார் கதவு லாக் ஆகி… உள்ளார சிக்கி … மூச்சுத் திணறி…”

‘பேஷண்ட் ஆணா?…பெண்ணா?”

‘பெண் டாக்டர்”

‘ஓ.கே!… ஓ.கே!”

அவசரமாய்க் கட்டளைகளைப் பிறப்பித்து அவசரமாய்ச் சிகிச்சைகளை ஆரம்பித்தார்.

இருபது நிமிடத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அப்பெண் இலேசாய் விழிகளைத் திறந்தாள்.

‘அப்பாடா…” தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டர் பரமசிவம் அங்கே வாய் விட்டுக் கதறிக் கொண்டிருந்த அந்த நபரை வினோதமாய்ப் பார்த்தார்.

நர்ஸ் அருகில் வந்து ‘டாக்டர் … அந்த ஆளுதான் அந்தப் பொண்ணோட புருஷன்”என்றாள்.

டாக்டருக்கு அதிர்ச்சியாயிருந்தது. ‘என்னது….இவனா?… இந்தாளா அந்தப் பெண்ணோட புருஷன்?… நம்பவே முடியலையே… அந்தப் பெண் நல்ல கலரா…பார்க்கப் படு டீசண்டா இருக்காங்க… இவன் ‘கரு…கரு”ன்னு…குண்டா… பாத்தா அந்தப் பெண்ணோட டிரைவர் மாதிரியல்ல இருக்கான்” என மனதிற்குள் நினைத்தபடியே மெல்ல அந்த நபரின் அருகில் சென்று ‘டோண்ட் வொரி… உங்க வொய்ப் கண் திறந்துட்டாங்க…” என்றார்.

‘டாக்டர் … நான் பாவி டாக்டர் … கட்டின பொண்டாட்டியக் கொல்லப் பார்த்த பாவி டாக்டர்…” கத்தலாய்ச் சொன்னான்.

டாக்டர் ஏதும் புரியாமல் நர்ஸைப் பார்க்க,

அவள் ‘வாங்க டாக்டர் … உங்க அறைக்குப் போய்ப் பேசுவோம்” என்று சொல்லி அவரை அங்கிருந்து நகர்த்திச் சென்றாள்.

அறைக்குச் சென்றதும் ‘என்ன சிஸ்டர் … அந்த ஆளு என்னென்னமோ சொல்றான்… இது போலீஸ் கேஸ் போலல்ல இருக்கு…”

‘டாக்டர் … உண்மையில் நடந்தது என்னன்னா… இந்த ஆளுக்கு தன்னை விட தன் மனைவி ரொம்ப அழகா இருக்கறது ஒரு பெரிய பிரச்சினை… எப்பப் பாரு சந்தேகம்… எங்கே அவளை வேற எவனாவது கொத்திட்டுப் போயிடுவானோன்னு ஒரு பயம்… அதனால வெளிய எங்க கூட்டிட்டுப் போனாலும்… அவளைக் காருக்குள்ளாரவே உட்கார வெச்சிட்டு… கதவை லாக் பண்ணிட்டு…இவன் மட்டும் இறங்கிப் போயிட்டு வருவானாம்… அப்படித்தான் இன்னிக்கும் கடை வீதில பொண்டாட்டிய காருக்குள்ளார வெச்சுப் பூட்டிட்டுப் போயிருக்கான்… திரும்பி வந்து திறந்தப்ப…லாக் பெயிலியராகி… திறக்க முடியாமல் போயிட்டுது…”

டாக்டரின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளுத்துப் பேயறைந்தது போல் ஆக….

‘என்ன டாக்டர் … என்னாச்சு உங்களுக்கு… ஏன் உங்க முகம் திடீர்ன்னு என்னவோ போலிருக்கு…” தன் பேச்சை நிறுத்தி விட்டு நர்ஸ் கேட்க,

‘ம்…ம்…ம்… அது… வந்து … ம்ம்ம்… ஒண்ணுமில்லை… நீங்க சொல்லுங்க சிஸ்டர்”

‘ம்… அப்புறமென்ன?…கார்க் கதவைத் திறக்க மணிக் கணக்குல போராடி… ரெண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வழியாகத் திறந்த போது… உள்ளார அந்தப் பொண்ணு மூச்சுத் திணறி… மயக்கமாக் கெடந்திருக்கு… இங்க தூக்கிட்டு வந்திட்டாங்க…”

சில நிமிடங்கள் சிலையாய் அமர்ந்திருந்த டாக்டர் பரமசிவம் சட்டென்று எழுந்து தன் மொபைலில் எண்களை அழுத்தினார்.

எதிர் முனையில் போன் எடுக்கப் படாததால் பதட்டமானவர்,

‘சிஸ்டர் … அவசரமா ஒரு சினன வேலை!… வீட்டு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்…”

அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டையடைந்து பூட்டியிருந்த வீட்டுக் கதவை அவசரமாய்த் திறந்து வேக வேகமாய் உள்ளே ஓடிய டாக்டர் பரமசிவம் எதிரில் வந்த தன் மனைவி சிவகாமியை அதே வேகத்தில் ஆரத் தழுவிக் கொண்டு தழுதழுத்தார்.

‘ஏங்க…என்னாச்சு உங்களுக்கு…? உடம்புக்கெல்லாம் நல்லாத்தானே இருக்கு?” பயந்து போய்க் கேட்டாள் அவள்.

‘என்னை மன்னிச்சிடு சிவகாமி… எனக்கு இன்னிக்குத்தான் புத்தி வந்திருக்கு… இனிமே… இனிமே…”

‘இனிமே?”

‘இனிமே சத்தியமா உன்னை ஏ.சி.ரூமுக்குள்ளார வெச்சுப் பூட்டிட்டுப போக மாட்டேன் சிவகாமி… என் மனசுல இருந்த சந்தேகப் பேய் செத்திடுச்சு சிவகாமி…” குரல் கமறியது.

தன் கணவரின் திடீர் ஞானோதயத்திற்கான காரணம் புரியாத சிவகாமி ஒருவித பிரமிப்புடன் அந்தத் தழுவலை இறுக்கிக் கொண்டாள்.

சந்தேகம் என்னும் மாயை மறைந்து சந்தோஷம் என்னும் மன்மதக் கலை அங்கு மெல்ல மெல்ல வியாபிக்கத் துவங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *