கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 2,081 
 

(1960 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சில சமயம் சில சிறுகதைகள் நம்மிடையே வாழ்ந்து மறைந்துபோன மனிதர்களின் ஞாபகச் சின்னமாக அமைந்து விடுகின்றன.

ஞாபகச் சின்னங்கள் சிலையாக மட்டுமல்ல. கதை யாகவும் இருக்கலாம், இருக்க வேண்டும்.

எழுத்துக்கள் கொள்கைகள், இலட்சியங்கள் எல்லாமே ஆரம்பத்தில் வெற்றிலை நோக்கித்தான் சென்று கொண் டிருக்கின்றன. முடிவில் தோல்வியில் துவண்டு விடுவது முண்டு .

தோல்வியைக் கண்டு துவண்டு விடுவதினாலேயே அதிக மானவர்கள் தோற்றுப் போய் விடுகிறார்கள். வள்ளுவன் சொன்னது போல் ஒரு புன்னகையால் அலட்சியப்படுத்தி விட்டால், தோல்வியும் வெற்றியாகிவிடும்.

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையோடு ஒட்டிப் பிறந்தவை. எனவே தான் இந்த இரண்டுக்கும் மத்தியில் சிக்கிக் கொண்டு சோதனைக்குள்ளாகிறான்.

சோதனையும் வேதனையும் ஒன்று சேர்ந்து மனிதனை வேட்டையாடுகின்றன! இப்படியொரு சோதனையில் தோற்றுப் போன என் நண்பன் ஒரு ஓவியக் கலைஞ7.

நம்மிடையே வாழ்ந்து மறைந்து போன ஒரு மனிதன் கையைப் பிடித்து இழுத்து வந்து மற்றவர்கள் முன்னால் நிறுத்துவது தான் ஞாபகச் சின்னம் என்றால் இந்தக் கதை!;

மார்க்கண்டு என் பள்ளித் தோழன். நானும் அவனும் ஒன்றாகப் படித்தோம். நண்பர்களானோம். எட்டாம் வகுப்பில் என்று நினைக்கிறேன். மார்க்கண்டு பாட சாலைக்கு வருவதை நிறுத்திக் கொண்டான். நான் தொடர்ந்து படித்தேன். மார்க்கண்டு எங்கே போனான். என்னவானான். ஒன்றுமே தெரியவில்லை. படிப்பை முடித்துக் கொண்டு. உத்தியோகம், குடும்பம் என்று பல சுமைகளைச் சுமந்து திக்குமுக்காடிய வேளையில் மார்க்கண்டின் ஞாபகம் என் மனதில் மறைந்திருந்ததில் வியப்பில்லை .

ஒரு நாள் தெருவில் வந்து கொண்டிருந்த பொழுது மார்க்கண்டு தென்பட்டான்! அவன் தானா? என்று ஆச்ச ரியத்தோடு உற்றுப் பார்த்தேன்.

அவன் என்னருகில் வந்து தோளில் கை வைத்து;

“என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் தான் சாச்சாத் மார்க்கண்டு” என்றான்.

அந்த அரும்புச் சிரிப்பு இன்றும் அவனிடம் அப்படியே இருந்தது. இந்தியர்கள் பேசும் பாணியில் பேசினான் அவன்.

“ஆச்சரியம் இருக்காதா என்ன? திடீரென்று ஒரு நாள் மறைந்து போனவன் இன்று தோன்றி இருக்கிறாய்!” என்றேன்.

“வாழ்க்கையென்றால் அப்படித்தாம்பா இருக்கும். செக்குமாடு போல சுத்தரத நான் விரும்பல்ல. இந்தியா வுக்குப் போனான். போன காரியம் முடிஞ்சு போச்சு வந்துட்டன்”‘ என்றான்.

“என்ன காரியத்துக்குப் போய் எதை முடித்துக் கொண்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“உனக்குத்தான் தெரியுமே பள்ளி நாட்களில் சித்திர பாடம் வந்தால் ஒன்று அடிவாங்குவேன். இல்லாட்டா பெஞ்சி மேல நிப்பன்! அதுமட்டுமா?-உன் விரல்கள் விறகு வெட்டத்தான் உதவும்; ஓவியம் தீட்ட வராது-என்று நமது ஆசிரியர் நையாண்டி செய்வாரே? அத சோதனை பண்ணிப் பார்க்கத்தான் இந்தியா போனன். வெற்றியோட திரும்பி வந்தன்”‘ என்றான்.

நான் ஆச்சரியத்தோடு அவன் முகத்தைப் பார்த்தேன்.

“என்ன அப்படிப் பார்க்கிறே? என் விரல்கள் எப்படிப் பட்டதுன்னு பாக்க விரும்பினா என் வீட்டுக்கு வா!”

“எங்கே உன் வீடு?” என்று கேட்டேன்.

“104 பிள்ளையார் கோயில் தெரு.”

“கட்டாயம் வருகிறேன்” என்றேன் நான்.

“நிச்சயம். உன்னை எதிர்பார்ப்பேன் வா!” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

அன்று மாலை அவனையும் அவனுடைய திறமையை யும் சந்திக்க அவன் வீட்டுக்குப் போனேன். ஒரு பெரிய ஓவியக் கூடம் ஒன்று என்னை வரவேற்றது. அவன் ஒரு திரையில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான். சுவர்களில் சிறியதும் பெரியதுமாகப் பல ஓவியங்கள் காட்சியளித்தன. எல்லாமே அற்புதமான படைப்புகள் தாம். ஒரு திறமை யான கலைஞனின் கனவுகள் என்ற மன நிறைவைத் தந்தன.

“அடே! நீ எப்ப வந்தே?” என்று கேட்டபடி என் முதுகில தட்டினான் மார்க்கண்டு.

“நான் வந்து வெகுநேரமாகி விட்டது. உன் கனவைக் கலைக்காமல் நீ படைத்த கனவுகளோடு உறவாடிக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.

“இப்பொழுது நீ சொல். என் விரல்கள் விறகு வெட்டவா லாயக்கு?”

“முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்” என்றேன் நான்.

“முயற்சி மட்டுமல்ல ரோஷமும் என்று சொல்! என்னை நையாண்டி செய்த ஆசிரியரை மட்டந்தட்ட” என்றான் அவன்.

“அப்படிச் சொல்லாதே மார்க்கண்டு, நீ இவ்வளவு பெரிய ஓவியனாக வந்ததே அந்த ஆசிரியரால் தான். அவரு டைய நையாண்டியே உனக்கு ஆசீர்வாதமாக அமைந்து விட்டது.”

என்றேன் நான். அவன் தலையசைத்தான். அதன் பிறகு சமயா சமயங்களில் அவன் வீட்டுக்குப் போவேன். அங்கே இருந்து அவன் வரையும் சரஸ்வதி தேவியின் படத்தைப் பார்த்து விட்டு வருவேன். ஒரு நாள் நான் அவன் வீட்டுக்குப் போன போது உள்ளே ஒரு பெண்ணின் பேச்சுக் குரல் கேட்டது! எனவே நான் உள்ளே போகாமல் வெளியிலேயே தங்கிட்டேன், சிறிது நேரத்தில் அந்தப் பெண் வெளியில் வந்தாள். அவள் முகம் வாடியிருந்தது. முந்தானை யால் கண்களைத் துடைத்தபடி சென்று விட் டாள்! நான் ஓசைப்படாமல் உள்ளே சென்றேன், அவன் வளமை போல் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தான்.

“வந்து விட்டாயா? வா!” என்றான் ஓவியம் தீட்டியபடியே.

நான் அவன் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

“வாசலில் ஒரு பொண்ணு போகுதே பாத்தியா?” என்று கேட்டேன்.

“பார்த்தேன்; யாரவள்?”

“ஒரு இளம் பெண்; அதிலும் அழகாக இருந்தாள்! யாராய் இருப்பாள்?” என்றான்.

“ஒரு இளைஞன் ஒரு பெண்ணைப் பார்த்து அழகானவள் என்று சொன்னால் அதிலும் ஒரு ஓவியக் கலைஞன் சொன்னால் நிச்சயம் அவள் அவன் காதலியாகத்தான் இருப்பாள்!” என்றேன்.

“சரியாகச் சொன்னாய் நீ! அவள் ஒரு டாக்டரின் மகள். மறைந்து போன அவள் தந்தைவின் படத்தை வரைந்தெடுக்க என்னிடம் வந்தாள். ஓவியம் முடியும் வரை தினமும் வந்து போவாள். முடிந்த பிறகு அவள் தினமும் வரவேண்டுமென்று நான் கவலைப்பட்டேன். படத்தை முடித்துக் கொடுத்தேன், பணம் வாங்கவில்லை இப்பொழுது தினமும் வந்து போகிறாள்!” என்றான்.

“சரிதான் உன்னையும் உன் திறமையையும் கண்ட பிறகு அவள் உனக்குக் கடன்காரியாகி விட்டாள். அந்தக் கடனைத் தீர்க்கத்தான் இப்படி வருகிறாளோ என்னவோ?”

“அவளா? நானா? யாருக்கு யார் கடன் என்று தெரியவில்லையே?”

“அதிருக்கட்டும் அவள் ஏன் அழுது கொண்டு போகிறாள்?”

“இதோ பார்! இந்தப் படத்தை வரையத் தந்தவர் சரஸ்வதி பூஜைக்கு வேண்டுமென்கிறார்கள்; இன்னும் மூன்று நாட்களுக்குள் இதை முடித்துக் கொடுத்தாக வேண் டும். இதைப்பத்தி அவளுக்குக் கவலை இல்லை! வேலையை விட்டு விட்டு சினிமாவுக்கு வா என்கிறாள். என்னுடைய இலட்சியத்திற்கும் அவனுடைய கனவுக்கும் இடையில் போராட்டம். அதுதான் அழுமூஞ்சித்தனமாகப் போகிறாள்” என்றான்.

“சரிதான் இருவருமே கடன்காரர்கள் தான்!” என்றேன் நான்.

எனக்கும் வேலைத் தொல்லைகள் ; மூன்று நான்கு நாட்கள் அந்தப் பக்கம் போகவில்லை! ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை அவள் வீட்டுக்குச் சென்றேன். அங்கே நாலைந்து வேலையாட்கள் சாமான்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார்கள், சுவரில் மாட்டியிருந்த ஓவியங்க ளெல்லாம் கீழே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன! நான் உள்ளே நுழைந்தபொழுது மார்க்கண்டு எதிர்ப்பட்டான்.

“வா, வா!! உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேன்” என்று வரவேற்றான், மார்க்கண்டு.

“இதெல்லாம் என்ன மார்க்கண்டு வீடு மாற்றுகிறாயா?” என்று கேட்டேன்.

“விதி மாறிய பிறகு வீடு மார்றதுல ஆச்சரியமில்ல”

“நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டபடி ஆச்சரியத்துடன் அவன் முகத்தைப் பார்த்தேன்.

“நான் தோற்று விட்டேன்! ஓவியக் கலைஞன் என்று மார்தட்டிய மார்க்கண்டு தோற்று விட்டான் என்கிறேன்!” என்றான்,

“எனக்கொன்றும் விளங்கவில்லை; மார்க்கண்டு விபரமாகச் சொல்லு” என்றேன்.

“உனக்கு எல்லாம் விளங்கி விடும் என்னுடன் வா!” என்றழைத்துச் சென்றான்.

நான் அவனைப் பின் தொடர்ந்தேன். அங்கோ அவன் எழுதிய சரஸ்வதி படத்தைக் கண்டேன். அற்புதமான படைப்பு! வீணை மீட்டும் அந்த விரல்களில் தான் எத்தனை லாவகம். அந்தத் தளிர் விரல்களைப் பார்த்துக் கொண் டிருக்கும் பொழுது மென்மையான அந்த வீணையின் நாதம் மெல்ல வந்து காதுக்குள் புகுவது போன்ற ஒரு பிரமை!

“அற்புதமான படைப்பு!” என்று வாய்விட்டுப் பாராட்டினேன்.

“அற்புதம் தான். ஆனால் அவச்சுரம் விழுந்து விட்ட அற்புதம்!” என்றான் அவன்.

*ஏன்! என்ன நடந்தது?” ஆவலோடு கேட்டேன்.

“என்ன நடக்கவேண்டுமென்று நான் எதிர்பார்த் தேனோ அது நடக்கவில்லை’ எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது”.

“ஏன் இதை அவர்கள் கொண்டு போகவில்லையா?”

“இல்லை கலைவாணிதான் என்னைச் சோதித்து விட்டாளே!”

நான் அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் பெரு மூச்சு விட்டு விட்டு பக்கத்தில் இருந்த படம் ஒன்றை எடுத்துக் கலைவாணியின் படத்துடன் வைத்தான். பிறகு!!

“பார்! நன்றாகப் பாரு! கலைவாணி எப்படி என்னைச் சோதனைக்குள்ளாக்கி இருக்கிறாள் பார்’ என்றான்,

நான் பார்த்தேன். இரண்டு படங்களையும் உற்றுப் பார்த்தேன். ஒன்று அவன் காதலியின் படம், மற்றது கலைவாணியின் படம். அந்த இரண்டு படங்களையும் பார்த்து நான் அதிர்ந்து போனேன்! ஏமாற்றத்தோடு அவன் முகத்தைப் பார்த்தேன்.

“உள்ளத்தில் இருந்தது உருவத்தில் பதிந்து விட்டது. ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்துச் சரஸ்வதிக்கு முக வைத்தது என்று குற்றம் சாட்டினார்கள்! நான் என்ன செய் வேன்? மனித முகத்தைத் தெய்வத்துக்கு வைத்தால் அது வணக்கத்துக்குப் பயன்படாது, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்!” அவன் கண்கள் கலங்கி விட்டன.

என்னால் ஒன்றுமே பேசமுடியவில்லை. நான் அதிர்ந்து போய் நின்றிருந்தேன். திரும்பவும் அவன் பேசினான்.

“இது எனக்குப் பெருத்த அவமானம்டா! ஓவியக் கலைக்கு மாசு கற்பித்த அவமானம்! கலைவாணி என்னைச் சோதித்தாள், நான் தோற்றுப் போய் விட்டேன். அந்தக் காலத்தில் நமது ஆசிரியர் சொன்னாரே? அது போல என் விரல்கள் விறகு வெட்டுவதற்குக் கூடப் பயன் படுமோ என்னவோ?” என்றான்.

“இப்பொழுது என்னதான் செய்யப் போகிறாய் மார்க்கண்டு?” என்று கேட்டேன்.

“நான் அவள் வீட்டுக்கு மூட்டை கட்டுகிறேன்” என்றான்.

அதன் பிறகு?

அவன் கலைஞனாக இல்லை; கணவனாகி விட்டான்!

– 1960, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *