சும்மா கிடப்பதே மேல்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 20,118 
 

தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய கழிவுநீர் சாக்கடைகள், குட்டை குட்டைகளாக தேங்கியிருந்தன. தேங்கியிருந்த கழிவுநீரில், பன்றிகள் குட்டிகளுடன் புரண்டு கொண்டிருந்தன. புரளும் சுகத்தில் அவை, “பர்க் பர்க்…’ என, குரல் எழுப்பின.
சும்மா கிடப்பதே மேல்!மின் கம்பத்திலிருந்து, ஒற்றை பல்ப் கனக்ஷன், குடிசைக்குள் இழுக்கப்பட்டிருந்தது. பெயர்தான் ஒற்றை பல்ப் கனக்ஷன். ஆனால், மாதம், 500 யூனிட் மின்சாரம் அதன் வழி@ய திருடப்பட்டுக் கொண்டிருந்தது.
குடிசையின் சமையலறை தனியாகவும், படுக்கையறை தனியாகவும் பிரிக்க, ஒரு மூங்கில் தடுப்பு போடப்பட்டிருந்தது. சமையலறையில் விறகடுப்பும், கெரசின் அடுப்பும், இலவச கேஸ் அடுப்பும், கும்பகர்ண தூக்கம் கொண்டிருந்தன.
குடிசையின் ஒரு மூலையில், ஒரு குட்டி மரமேஜை காணப்பட்டது. அதன்மேல், “டிவி’ பெட்டி அமர்ந்திருந்தது. அதன் அருகிலேயே திருட்டு, டி.வி.டி.,கள் பார்க்க, கொரியன், டி.வி.டி., பிளேயர் காத்திருந்தது.
குடிசையின் குறுக்கும், நெடுக்கும், சணல் கயிற்றில் கோர்க்கப்பட்ட உப்புக் கண்டங்கள் தொங்கின.
வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், முதல்வர் வழங்கிய, மூன்று பெட்டை ஆடுகளையும், ஒரு கிடா ஆட்டையும், மேய்க்க ஓட்டிப் போயிருந்தாள் சடையாண்டியின் மகள் ஆதிரை.
தரையில் அழுக்கு கோரைப்பாயை விரித்து, இரண்டு தலையணைகளை மடித்து, அதன் மேல் தலைவைத்துப் படுத்திருந்தான் சடையாண்டி. அவனுக்கு வயது நாற்பதிருக்கும். 170 செ.மீ., உயரம். கிரானைட் நிறம். கோரையான முடி. சரிவர பல் துலக்காத மஞ்சள் நிற பற்கள். அதற்குள்ளாகவே இரண்டு, மூன்று பற்கள் விழுந்திருந்தன. இரண்டு, மூன்று சொத்தை பற்களை பிடுங்கியிருந்தான். மங்காத்தா அஜீத்குமாரின் படம் பிரின்ட் @பாட்ட பனியனும், பிளாட்பாரத்தில் விற்கும் செகண்ட் ஹாண்ட் பெர்முடா டவுசரும் அணிந்திருந்தான்.
அவனுக்கு முன், இரண்டு பாக்கெட் சாராயமும், ஒரு ஊறுகாய் பொட்டலமும் இருந்தன. சாராயத்தை டம்ளரில் ஊற்றி, தண்ணீர் பீய்ச்சி கலந்து குடித்து, ஊறுகாயை நக்கினான். வித்யாபாலன் நடித்த, தி டர்ட்டி பிக்சர் திருட்டு, டி.வி.டி., இந்தி படத்தை, பிளேயரில் போட்டு, “ஆன்’ செய்தான்.
குடிசைக்கு வெளியே இருந்த செம்மண் ஒற்றையடிப் பாதையில், ஒரு பி.எம்.டபிள்யூ., கார் திணறி வந்து நின்றது. அதன் பின்னிருக்கையிலிருந்து ஒரு புல்சூட் ஆசாமி வெளிப்பட்டார். இடது கையில் வெள்ளைநிற கர்ச்சிப் வைத்திருந்தார். ஓட்டுனரை காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, குடிசையை நோக்கி நடந்தார்.
குடிசையின் வாசலில் படுதாவாக, ஒரு பழைய புடவை தொங்க விடப்பட்டிருந்தது.
“”ஹலோ… வீட்டுக்குள்ள யாரு?” ஏறக்குறைய பத்து வகை ஒலியன்களில் குரல் கொடுத்த பின், எரிச்சல் முகத்துடன் எட்டிப் பார்த்தான் சடையாண்டி.
“”எவன்டாது… என்னை இந்தி சில்க் ஸ்மிதா படம் பார்க்க விடாம, கத்தி உயிரை வாங்கிறது?”
காரையும், காரில் வந்த கோடீஸ்வர மனிதரையும் பார்த்த பின், சடையாண்டியின் தோரணை மாறவில்லை.
“”வணக்கம்… என் பெயர் பற்குணன். நான் பத்துக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்யும் தொழிலதிபர்!”
“”சரி… என்ன விஷயமாக வந்தீங்க…”
“”உங்களுக்கு இந்தி தெரியுமா சடையாண்டி?”
“”இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், தீவிரமாய் ஈடுபட்ட குடும்பம் எங்க குடும்பம். கிளுகிளுப்பான படம் பார்க்க மொழியா முக்கியம். திருட்டு டி.வி.டி.,யை பிடிக்கற அதிகாரியா நீங்கள்?”
“”இல்லை…”
“”பின்ன?”
“”விவசாய வேலை செய்ய, ஒரு பெண் தொழிலாளி தேவைப்படுகிறார். கொத்தனார் பணி செய்ய, ஒரு திறமையான ஆண் தேவைப்படுகிறார். உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும், கேட்கும் கூலியை தருகிறேன். மதியம் சாப்பாடு உண்டு. இரு நேரம் தேநீர் உண்டு. தினம் எட்டுமணி நேரம் வேலை பார்த்தால் போதும்!”
“”மொதல் பார்வையிலே, நீ காந்தி குல்லா போடாத ராகுல் காந்தியோன்னு பயந்திட்டேன். நீ பாட்டுக்கு வீட்டுக்குள்ளார வந்து, எனக்கு வச்சிருக்கிற சாப்பாட்டை சாப்ட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு போய்ட்டன்னா என்ன செய்யறதுன்னு திகைச்சேன். கடைசில பார்த்தா, நீ வேலைக்கு ஆள் தேடுற கொழுத்த பணக்காரன்.
“”என் பொஞ்சாதிக்கு விவசாய வேலை தெரியும்; எனக்கு கொத்தனார் வேலை தெரியும்ன்னு எந்த பய்யன் உனக்கு சொன்னான்?”
“”யாரு சொன்னா என்ன… உங்களுக்கு தினம் ஐந்நூறு ரூபாய் சம்பளம். உங்க மனைவிக்கு தினம் இருநூத்தி அம்பது ரூபாய் சம்பளம். திருப்தியா?”
“”நான் வேலைக்கு வர்றதா சொன்னால்ல நீ சம்பளம் பேசணும்… உன் பணத்தைக் காட்டி, எங்கள அடிமையாக்கப் பாக்றியா?”
“”சடையாண்டி என்ற நீங்கள், தச்சு, கொல்லு, பெயின்ட்டிங் வேலைகள் பல தெரிஞ்ச வித்தகன். உங்கள் மனைவி பெயர் அன்புமலர். அவரும் விவசாய வேலைகள் செய்வதில் நிபுணி. உங்களுக்கு இரு குழந்தைகள். மூத்த மகளுக்கு வயது பத்து. நாலாவது வகுப்பை, பாதியில் நிறுத்தி விட்டு, ஆடு மேய்க்கிறாள். எட்டு வயது மகன் மட்டும் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.
“”நான் உங்களை வேலைக்கு கூப்பிடுவதில், பொதுநலமும் ஒளிந்திருக்கிறது. நான் கொடுக்கும், 750 ரூபாய் சம்பளம், உங்க குடும்பத்தை பல வழிகளிலும் மேம்படுத்துமே… மகன், மகளை நன்கு படிக்க வைச்சு, பெரிய உத்தியோகத்திற்கு அனுப்பலாமே…”
“”ஆசை வார்த்தை காட்றியா… சொர்க்க போகத்ல இருக்கற எங்களை கெடுக்கப் பாக்றயா?”
“”எந்த சொர்க்க போகத்ல இருக்கீங்க சடையாண்டி?”
“”த பார்… ஏரி பொறம்போக்குல குடிசை கட்டியிருக்கேன். ஒத்தை பல்ப்பு கனக்ஷன்ல, மாசம் ஐந்நூறு யூனிட் கரன்ட்டு திருடுறேன். ரேஷன்ல மாசம் முப்பத்தியஞ்சு கிலோ அரிசி கிடைக்குது. சி.எம்., அம்மா வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், நாலு ஆடு மேய்க்க குடுத்திருக்காங்க. மிக்சி, கிரைண்டர், பேன் கொடுத்திருக்காங்க…
“”இலவச கேஸ் அடுப்பு, சிலிண்டர் கொடுத்திருக்காங்க… சிலிண்டரை வித்துட்டோம். மாசம் மூணு லிட்டர் கெரசின் குடுக்றாங்க… அதையும் வித்திடறோம்… தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்ல நானும், என் பொஞ்சாதியும் உறுப்பினர்கள். குடிசையிலிருந்து, அஞ்சு கி.மீ., தொலைவுக்குள் எதாவது வேலை செய்ற மாதிரி, மத்தியானம் வரைக்கும் பாவ்லா பண்ணினா, 117 ரூபாய்ல கமிஷன் போக, பாக்கி கிடைக்குது…
“”ரேஷன்ல கோதுமை, பாமாயில், சர்க்கரை, மைதா, துவரம்பருப்பு, 50 ரூபாய் மளிகை பொருள் போடுறான்… மேல் விலைக்கு வித்துப்புடுறோம். மகனை எதுக்கு பள்ளிக் கொடம் அனுப்பறேன்னு கேட்கறீயா? மதியம் சத்துணவை சாப்பிட்டுட்டு, வீட்டுக்கும், ஒரு தட்டு எடுத்திட்டு வந்திருவான். ஆடு மேய்க்கப் போற மக, வழி தவறிவரும் ஆட்டை, ஈர சாக்கு போட்டு வீட்டுக்கு தூக்கிட்டு வந்திடுவா. நடுராத்திரில அறுத்து, கறிக்குழம்பு ஆக்கி சாப்பிடுவோம். மீதி கறியை உப்புக்கண்டம் போட்டு வச்சு, ரசம் சோத்துக்கு தொட்டுக்குவம். ஆட்டுத்தோலை நல்ல விலைக்கு டவுன்ல வித்திடுவோம்.
“”பொறம்போக்கு இடங்களை, கழிநட்டு பிடிச்சு நல்ல விலைக்கு வித்திடுறோம். நாளைக்கு படிச்சிட்டு வேலைக்கு போகும்ங்ற கேரன்டி இல்லாம, எதுக்கு உழைச்சு, கடனவுடன வாங்கி, பிள்ளைகளை படிக்க வைக்கணும்… மீறி அதுக வேலைக்கு போனாலும், பெத்தவங்களுக்கு கஞ்சி ஊத்துங்கன்றது என்ன நிச்சயம்… மாசத்ல விரும்பிய நாள் வேலைக்கு போவம். மீதிநாள் நாள் முழுக்க குடிப்போம், கூத்தடிப்போம். இது சொர்க்க போகமில்லையா ரிச்சுமேன்?”
“”ஓர் அர்த்தமில்லா வாழ்க்கை வாழ்றத பெருமையா பீத்திக்கிறீங்களே சடையாண்டி?”
“”நாங்க உழைச்சு உழைச்சு, உங்க பணப்பெட்டியை ரொப்பறதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கையா?”
“”தேசத்தின் நூத்திபத்து கோடி மக்களும், உழைச்சு தங்களையும், தங்கள் தேசத்தையும் முன்னேத்தணும். அரசியல்வாதிகள், ஏழைகளை ஏழைகளாகவே வச்சிருக்க விரும்புறாங்க. கல்வி அறிவு இல்லாதவர்களை, கல்வியறிவு இல்லாதவர்களாக வச்சிருக்கவே கூட்டுச்சதி செய்றாங்க. இலவசங்களால், ஏழைகளின் சிந்திக்கும் அறிவை மழுங்கடிக்கிறாங்க.
“”நாட்டின் எழுபது சதவீத மக்களை மத்திய – மாநில அரசாங்கங்கள் உழைக்க விடாம, செய்து, விவசாயிகளை கூட்டுத் தற்கொலை செய்யத் தூண்டுகின்றன. பணவீக்கத்தையும், உணவு பற்றாக்குறையையும் அதிகரிக்கச் செய்கின்றன. நாட்டின் இரண்டு சதவீத அரசியல்வாதிகளும், தீய வழியில் சம்பாதிக்கும் பணக்காரர்களும் அமோகமாய் வாழ, நாட்டின், 98 சதவீத மக்களின் எதிர்காலம் பலிகடா ஆக்கப்படுகிறது!”
“”என்னய்யா உனக்கு மூளை கீளை குழம்பி போச்சா… நீ சொல்ற வேலைக்கு, நாங்க வரலைன்னா உடனே கம்யூனிஸ்ட்டுகள் மாதிரி டயலாக் பேசுற… யாரை நம்பினாலும் நம்புவேன். பணக்காரப் பசங்களை மட்டும் நம்ப மாட்டேன். பணக்காரன்க எல்லாருமே அயோக்கியன்கள்தான்!”
“”இப்படி பேசக் கூடாது சடையாண்டி… ஒரு பைசா ஏமாத்தாம, இன்கம்டாக்ஸ் கட்றேன். அட்வான்ஸ் டாக்ஸ் கட்றேன். விற்பனை வரி செலுத்தறேன். உழைச்சவங்க@ளாட வியர்வை காயுறதுக்கு முன்னாடி சம்பளத்தை கொடுத்திடுறேன். உழைப்பாளிகளின் குழந்தைகளை படிக்க வைக்க தேவைப்படும் உதவிகளை செய்றேன். தலித் மலைவாழ் மக்கள் மாணவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகடமி நடத்துறேன். சம்பாதித்ததில் பாதியை, பிறந்த மண்ணுக்கு திருப்பிச் செலுத்தறேன்…
“”என்னை மாதிரி நேர்மையான பணக்காரங்க, ஊருக்கு நூறு பேர் இருக்கத்தான் செய்றாங்க. இப்பக்கூட, நீங்க என் நிலத்துக்கு விவசாய வேலை பாக்க, கொத்தனார் பணி செய்ய வரலைன்ற சுயநலத்தோட நான் சிந்திக்கல. பதிலா வேலை செய்ய ஆட்கள் கிடைக்காத ஆற்றாமைல, என்னை மாதிரி பல பேர் செய்யும் தொழில்களை குறைத்துக் கொண்டால், நாட்டின் பொருளாதாரம் சீரழியுமே என வேதனிக்கிறேன்…
“”சீனாவில், கொரியாவில் மனித சக்தி வீண் செய்யப்படுவதில்லை. இங்கோ, தினம் கோடிக்கணக்கான மனித வேலை நாட்கள் வீணடிக்கப்படுகின்றன. இயங்கிக் கொண்டிருந்த உழைக்கும் வர்க்கம், தேங்கி துருப்பிடித்து போகிறது.”
“”நீ பேசுறது நல்லதோ, கெட்டதோ எனக்கு தெரியாது. என்னை வற்புறுத்தாதே… நானும், என் பொஞ்சாதியும், வேலை செய்ய வர்ல, வர்ல வர்ல… உன்னோடு பேசி, போதை குறைஞ்சு போச்சு. இரண்டாவது பாக்கட்டை அடிச்சுட்டு வர்றேன்…”
குடித்துவிட்டு, ஊறுகாயை நக்கினான்.
தனக்கு பின்னால், காலடி அரவம் கேட்டுத் திரும்பினார் பற்குணன். குத்தகை விட்ட குளத்தில், திருட்டுத்தனமாய் பிடித்த விரால் மீன்களை, கம்பியில் கோர்த்தபடி நின்றிருந்தாள் சடையாண்டியின் மனைவி அன்புமலர்.
“”யாருய்யா இது… நம்ம குடிசை வாசல்ல கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு?”
விவரித்தான் சடையாண்டி. கேட்கும் வரை சாந்தமாய் இருந்த அன்புமலரின் முகம், ரவுத்திரம் பூத்தது. “”அட சண்டாளப்பாவி… எங்களை உழைக்கச் சொல்ல, கார் பிடிச்சு வந்திருக்கியா?”
“”அம்மா, நானும் ஒரு காலத்ல உங்க கணவர் மாதிரி கூலித்தொழிலாளியாதான் இருந்தேன். சிந்திச்சு உழைச்சு, நேர்மையான முறையில கோடீஸ்வரன் ஆனேன். என் வழில, உங்க கணவனும் கோடீஸ்வரனாகட்டும்ன்னு விரும்புறேன். இது தப்பா?”
“”ஒருத்தனோட தலைவிதியை, உலகத்தோட எந்த கொம்பனாலும் மாத்த முடியாது. இருக்கறதை விட்டுட்டு, பறக்கிறதை பிடிக்கச் சொல்றியா… நாளைக்கு கிடைக்கிற பலாக்காயை விட, இன்னைக்கி கிடைக்கிற களாக்காய்மேல். அரசனை நம்பி, புருஷனை கைவிட்டு, அரசனும், புருஷனும் ஆத்தோட போன கதை ஆகிவிடக் கூடாது எங்க கதை. இதோ இன்னும் கொஞ்ச நேரத்ல, இந்த விராமீனை வித்திட்டு, நானும் என் புருஷனும் சாராயம் குடிக்க ஆரம்பிச்சிடுவம். எங்க சந்தோஷத்தைக் கெடுக்காதே. கிளம்பு கிளம்பு!”
“”உங்கள் சோம்பேறித்தனமான சுயநலத்தாலே, உங்கள் ரெண்டு பிள்ளைகள் வாழ்க்கை பாழாகுது!”
“”கானல் நீரால் பாசனம் பண்ணுவதை விட, சும்மா கிடப்பதே மேல்!”
தூரத்தில் மொபெட்டில் போய்கொண்டிருந்த ஒரு கரைவேட்டி, காட்சியமைப்புக்குள் புகுந்தது. “”இன்னாப்பா சடை, இன்னா பிரச்னை?”
சொன்னான் சடையாண்டி.
கரைவேட்டி மீசையை முறுக்கியபடி திரும்பியது. சட்டைப் பையில் கரைவேட்டியின் கட்சித் தலைவர் புகைப்படம் தெரிந்தது.
“”நான்தான் இந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர். கடனவுடன வாங்கி, செலவு செய்து ஜெயிச்சு வந்திருக்கேன். என் பெயர் பவளசம்பத். கொஞ்சம் தனியா வாங்க… பேசுவோம்!”
இருவரும் ஒதுங்கினர்.
“”உங்க பெயரு?”
“”பற்குணன்!”
“”எந்த கட்சியிலும் இருக்கீங்களா?”
“”இல்லை!”
“”அப்றம் என்னத்துக்கு வந்து வீணா பிரச்னை பண்றீங்க… சடையாண்டி மாதிரியான மடபசங்க எல்லாம் மடபசங்களாகவே இருந்தாதான், என்னை மாதிரி ஆளுக முன்னேறி அமைச்சர், கிமைச்சர் ஆகி, நாலுகாசு பார்க்க முடியும். அடுத்த தடவை உங்களை இந்தக் கிராமத்துக்குள்ள பார்த்தேன், எங்க கட்சி தலைமைகிட்ட சொல்லி, உங்களை படாதபாடு படுத்திடுவேன். நீங்க, எங்க கட்சிக்கு மட்டும் எதிரி இல்ல; இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் எதிரி. கிளம்புங்க!”
பற்குணன் தளர்வாய் கிளம்பினார். கார் பின்னுக்கு ஊர்ந்து இடப்பக்கம் திரும்பி பறந்தது.
குடிசைக்குள் எட்டினான் கரைவேட்டி. சடையாண்டி குடித்துவிட்டு வைத்திருந்த பாதி சாராய பாக்கட்டை வாய்க்குள் கவிழ்த்தான். அன்புமலர் கொண்டு வந்திருந்த விரால்களில் ஒன்றை உருவி, பாலிதீன் பையில் போட்டு சுருட்டிக் கொண்டான்.
“”தி டர்ட்டி பிக்சர் பாக்றியா… சீன்கீனெல்லாம் இருக்கா… பாத்துட்டு சாயங்காலம் கொடுக்கிறேன் எடு. சும்மா கிடப்பதே சுகம் கண்ணா… எவன் பேச்சையும் கேக்காம, இப்படியே இரு!”
பாரதத் தாய் கண்ணிலிருந்து, ரத்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *