சிறுகதை மன்னன் பெற்ற செல்வம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,201 
 

மொட்டை மாடியிலே காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்து, “ஓர் ஊரிலே ஓர் ராஜாவாம்…” என்று ஆரம்பிப்பாள் பாட்டி. அவள் நீட்டி காலில் படுத்தபடி, வானத்திலிலுள்ள நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே “ம்” என்பான் பேரன்.

“அந்த ராஜா ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடப் போனானாம்…”

“ம்”

“அந்தக் காட்டிலே ஒரு பறக்கும் குதிரை மேய்ந்து கொண்டிருந்ததாம்…”

“பறக்கும் குதிரையா அது எப்படி இருக்கும் பாட்டி?”

“அது சாதாரணக் குதிரையைப்போலத்தான் இருக்கும். ஆனால், அதன் முதுகிலே பறவைகளுக்கு இருப்பதைப் போல இரண்டு இறக்கைகள் முளைத்திருக்கும்!”

“அதிசயமான குதிரையாயிருக்கிறதே!…அப்புறம்?”

“அந்தக் குதிரையின் மேல் ஆசைப்பட்ட ராஜா, அதை அம்பெய்து கொல்லாமல் அப்படியே வலை வீசிப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டானாம்…..”

“வந்து…..?”

“அதை ஒர் அழகான கூண்டிலே அடைத்து வைத்து, அதைப் பராமரிப்பதற்கென்றே ஒர் ஆளையும் போட்டு வைத்தானாம்….”

“பாவம் ஏண்டா அகப்பட்டுக் கொண்டோம்? என்று இருந்திருக்கும் அதற்கு!”
“அகப்பட்டுக் கொண்ட பிறகு அதைப் பற்றி யோசித்து என்ன பிரயோசனம்? – நீ கதையைக் கேளு! – ஒருநாள் அந்த அதிசயக் குதிரையைப் பார்த்துவிட்டுப் போவதற்காக ராஜகுமாரி வந்தாளாம். அப்போது அந்தப் பொல்லாத குதிரை என்ன செய்ததாம், தெரியுமா? அவள் முந்தானையைத் தன் வாயால் கவ்விப் பிடித்து இழு, இழு’ என்று இழுத்ததாம்…..”

“பயந்து போனாளா, ராஜகுமாரி….?”

“இல்லை புலி, சிங்கமா பயப்பட? குதிரைதானே!” என்று ‘விடுவிடு என் முந்தானையை விடு!’ என்று தன் முன்தானையைப் பிடித்து இழுத்தாளாம் அவள். அதுவோ, ‘விடமாட்டேன், விடமாட்டேன்’ என்பதுபோல் தலையைத் தலையை ஆட்டிற்றாம். ‘இதென்ன வம்பு?’ என்று ராஜகுமாரி தன் தோழியைப் பார்க்க, அவள் சிரித்துக் கொண்டே, ‘குதிரை ராஜா, குதிரை ராஜா! பொன்னான முந்தானையை விட்டுவிடு; இந்தப் பெண்ணை உனக்கே கல்யாணம் செய்து கொடுக்கிறேன்!’ என்றாளாம் வேடிக்கையாக. அவ்வளவுதான்; குதிரை அவளுடைய முந்தானையை விட்டு விட்டு, ‘கக்கக்கக்கா’ என்ற ஒரு கனைப்புக் கனைத்ததாம்….!”

“மனிதனா சிரிப்பதற்கு? குதிரையாயிருக்கவே கனைத்த தாக்கும்! அப்புறம்…..?”

“தப்பினோம், பிழைத்தோம் என்று அரண்மனைக்கு வந்து சேர்ந்தாளாம் ராஜகுமாரி. அன்றிலிருந்து அந்தச் சமர்த்துக் குதிரை என்ன செய்ததாம், தெரியுமா? – கொள்ளும் தின்னாமல், புல்லும் தின்னாமல் எப்பொழுது பார்த்தாலும் ஒரே ஏக்கமாயிருந்ததாம்….”

“ஏக்கமா! அது என்ன ஏக்கம் பாட்டி, அப்படிப்பட்ட ஏக்கம்…?”

“அதுதான் தெரியவில்லை, ராஜாவுக்கு! ஒரு வேளை கூண்டில் அடைத்து வைத்திருப்பதால் அப்படி இருக்கிறதோ, என்னமோ என்று அதை உடனே அவன் திறந்து விடச் சொன்னானம். அப்போது தான் எதிர்பார்த்தபடி அது வெளியே பறந்து போகாமல் ராஜகுமாரிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு அவள் முந்தானையைக் கவ்விக் கவ்வி இழுத்ததாம். ஒன்றும் புரியாத ராஜா, ‘என்ன விஷயம்?’ என்று கேட்க, தோழி நடந்ததைச் சொன்னாளாம். ‘அப்படியா சமாசாரம்?’ என்று அந்த அசட்டு ராஜா, தன் அருமை மகளைத் தன்னுடைய ஆசைக்குதிரைக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டானாம்……!”

“அட, பாவி! அழவில்லையா ராஜகுமாரி…?”

“அழாமல் சிரிப்பாளா என்ன? அழுதாளாம், அழுதாளாம், அப்படி அழுதாளாம் அவள்! ஒரு நாள் குறிசொல்ல வந்த குறத்தி ஒருத்தி, ‘ஏன் அழுகிறாய், பெண்ணே ?’ என்று அவளைக் கேட்க, விஷயத்தைச் சொன்னாளாம் ராஜகுமாரி. ‘அப்படியா சமாசாரம்? அதற்காக நீ அழாதே! நான் சொல்கிறபடி செய்; எல்லாம் சரியாய்ப்

வி.க. -39 போய்விடும்’ என்று அவள் தன் பையைத் திறந்து ஏதோ ஒரு பொடியை எடுத்துக் கொடுத்து, ‘ஒரு தட்டு நிறைய நெருப்பை அள்ளிக் கொள்; அந்த நெருப்பில் இந்தப் பொடியைப் போடு, குபுகுபு வென்று புகை வரும், அந்தப் புகையைக் குதிரைக்குக் காட்டு; ராஜகுமாரனாகி விடும்!’ என்று சொல்லிவிட்டுப் போனாளாம். அவள் சொன்னபடியே ராஜகுமாரி செய்ய, குதிரை அழகான ராஜகுமாரனாகி விட்டதாம்….!”

“ரொம்ப சந்தோஷமாயிருந்திருக்குமே, ராஜகுமாரிக்கு…?”

“அதுதான் இல்லை; அந்த ராஜகுமாரன் என்ன சொன்னானாம், தெரியுமா? ‘ஐயோ பெண்ணே, மோசம் போனாயா!’ என்றானாம். ‘எது மோசம் குதிரையாயிருந்த உங்களை ராஜகுமாரனாக்கியதா மோசம்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டாளாம் ராஜகுமாரி. ‘ஆமாம் பெண்ணே , ஆமாம். குதிரையாயிருந்தாலும் நான் எப்போதும் உன்னுடன் இருந்து கொண்டிருப்பேன், இனி அப்படி இருக்க முடியாது, என்னால்!’ என்றானாம் அவன், ‘ஏன்?’ என்று கேட்டாளாம் அவள், ‘பொறுத்திருந்து பார்!’ என்று அவன் சொல்ல ‘இதென்ன தொல்லை?’ என்று அவள் அன்றிரவு பூராவும் தூக்கம் பிடிக்காமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாளாம். மறுநாள் பொழுது விடிந்ததும் அந்தக் குறத்தி வந்து “என்ன, ராஜகுமாரி! எப்படி இருக்கிறான் ராஜகுமாரன்?” என்று அவளை விசாரித்தாளாம். அவன் சொன்னதை அவளிடம் சொன்னாளாம் ராஜகுமாரி. ‘கவலைப்படாதே! உன்னுடைய பெயர் என்ன என்று நீ அவனைக் கேள்; அதைச் சொன்னதும் அவன் அப்படிப் பிதற்றுவதையெல்லாம் விட்டு விட்டு உன்னுடன் சந்தோஷமாக இருப்பான்!” என்று சொல்லிவிட்டுப் போனாளாம் குறத்தி. அவள் சொன்னபடியே அன்று மாலை நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்த போது, ‘உங்களுடைய பெயர் என்ன?’ என்று பேச்சோடு பேச்சாக ராஜகுமாரனைக் கேட்டாளாம், ராஜகுமாரி. ‘அதை மட்டும் கேட்காதே; என்னை நீ இன்றே இழந்து விடுவாய்!’ என்று அவன் அவளை எச்சரித்தானாம். அவன் சொன்னதை அவள் கேட்டிருக்கக் கூடாதா? – அதுதான் இல்லை; ‘சொன்னால்தான் ஆச்சு!’ என்று ஒரே பிடிவாதம் பிடித்தாளாம். ‘சரி நடப்பது நடக்கட்டும்’ என்று அந்த ராஜகுமாரன் ‘என் பெயர் ஜம்பு ராஜா!’ என்று சொல்லி விட்டானாம் – அவ்வளவுதான்; பரியாயிருந்த அவன் உடனே நரியாகி, ஊளையிட்டுக் கொண்டே ஓடினானாம், காட்டுக்கு! – அங்கே போய்ப் பார்த்தால் அந்த நரியுடன் விளையாடிக் கொண்டிருந்தது யார் என்கிறாய்? ராஜகுமாரிக்குக் குறி சொல்ல வந்த குறத்தி….!” கதை இப்படியாகப் போய்க்கொண்டே இருக்கும்; அவ்வளவு சீக்கிரம் முடியாது -அதற்காகத் தூக்கம் வராமல் இருக்குமா, என்ன? – வந்துவிடும்; இருவரும் தூங்கிவிடுவார்கள்!

இந்த வழக்கத்துக்கு விரோதமாக ஒரு நாள் இரவு பாட்டியைக் காணவில்லை – எப்படி இருக்கும், பேரனுக்கு? ‘எங்கே போயிருப்பாள்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு வெளியே வந்தான். அங்கே அவனுக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருந்த அவனுடைய அம்மா,”‘மணி எட்டு அடிக்கப் போகிறது, உன் அப்பாவை இன்னும் காணோமேடா!” என்றாள்.

“அவர் எங்கே இப்போது வரப்போகிறார்? எனக்கு இருப்பது போல் அவருக்கும் ஓர் அப்பா இருந்தால் அவர் நேரத்தோடு வீட்டுக்கு வருவார்! அது தான் இல்லையே? அவர் எப்போது வந்தால் என்ன, அவரை யார் திட்டப் போகிறார்கள், அவரை யார் அடிக்கப் போகிறார்கள்?” என்றான் பையன்.

“உனக்கு அப்பா மட்டுமா இருக்கிறார்? அம்மாவும் இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதே!” என்று ‘மாதிரி’க்கு அவன் காதைப் பிடித்துத் திருகினாள் அம்மா.

“அப்பாவுக்கு மட்டும் இல்லையா, அம்மா? அந்த அம்மாவுக்கு அப்பா எங்கே பயப்படுகிறார்? அதற்கும் பதிலாக அவளல்லவா அவருக்குப் பயப்படுகிறாள்!”

“கவலைப்படாதே, நீயும் பெரியவனானால் உன் அம்மா உனக்குப் பயப்படுவாள்!”

“அப்பா?”

“அவரும்தான்!”

பையன் பெருமூச்சு விட்டான். “ஏண்டா, பெருமூச்சு விடுகிறாய்?” என்று கேட்டாள் அம்மா.

“இருவரும் இப்போதே எனக்குப் பயப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?” என்றான் பையன்.

அம்மா சிரித்தாள்; “ஏன் அம்மா, சிரிக்கிறாய்?” என்று கேட்டான் அவன்.

“ஒன்றுமில்லை; நீ போய்த் தூங்கு!” என்றாள் அவள்.
“ஊஹும்; நான் தூங்க மாட்டேன்”

“ஏனாம்?”

“பாட்டி வரட்டும்!”

“அவள் எங்கே வரப் போகிறாள், இப்போது?”

“ஏன், வர மாட்டாளா?”

“ஊஹும், அவள் கதை கேட்கப் போயிருக்கிறாள், கதை!”

“கதையா, பாட்டியா! – ஆச்சரியம் தாங்கவில்லை, பையனுக்கு – தனக்குக் கதைமேல் கதையாகச் சொல்லும் பாட்டி, கதை கேட்கப் போயிருக்கிறாள் என்றால்? அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை, அவனால் – “நிஜமாகவா?” என்று மறுபடியும் கேட்டான்.

“ஆமாண்டா, ஆமாம். தெருவில் யாரோ ஒரு பௌராணிகர் ராமாயணம் சொல்கிறாரே, உனக்குத் தெரியாதா? அதற்குத் தான் போயிருக்கிறாள் அவள்!”

“நானும் அங்கே போகட்டுமா, அம்மா?”

“போனால் அவ்வளவுதான்; காலை ஒடித்துவிடுவார், உன் அப்பா!”

“நீ காதைத் திருகி எடுத்துக் கொண்டு விடுவாய்; அப்பா காலை ஒடித்துக் கொண்டு விடுவார்! இப்படியே ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு போனால் கடைசியில் நான் என்னதான் ஆவதாம்?”

அம்மா சிரித்தாள்; பையனோ அழுதான், பாட்டியிடம் போக முடியவில்லை என்று!

இந்தச் சமயத்தில் ஒரு கையிலே ‘ரோஜாப்பூ மாலை’ கனக்க, இன்னொரு கையிலே ‘சிறுகதை மன்னர், செல்வராஜா!’ என்று ஆரம்பமாகும் ‘வாழ்த்து மடல்’ பொன்னொழுத்திலே ஜொலிக்க, ‘இரவல் காரி’லிருந்து இறங்கிய அவன் அப்பா ‘ஏண்டா அழுகிறாய்?’ என்று கேட்டார் தம்முடைய மகனை அன்போடு அணைத்தபடி.

அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள், “அவனுக்கு என்ன வேலை? பாட்டி இல்லையாம் கதை சொல்ல; நீங்க வாங்க, சாப்பிட” என்றாள் அவனுடைய அம்மா குறுக்கிட்டு.

“அவ்வளவுதானே? இதோ நானே சாப்பிட்டு விட்டு வந்துவிடுகிறேன் – உனக்குக் கதை சொல்ல!” என்றார் அப்பா.

அவ்வளவுதான்; பையனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. இத்தனை நாளும் ஏதும் அறியாத பாட்டியிடம் கதை கேட்டுக்கொண்டு வந்த அவனுக்கு இன்று சிறுகதை மன்னன் செல்வராஜனே கதை சொல்வதென்றால்? – குதிகுதியென்று குதித்தான்.

அதற்குள் சாப்பிட்டுவிட்டு வந்த அவன் அப்பா, “மாடிக்குப் போவோமா?” என்றார் அவனிடம்.

“வேண்டாம், ஊஞ்சலிலேயே உட்கார்ந்து கொள்வோம்” என்றான் அவன், அப்பாவின் கால்கள் தனக்குப் படுக்கவா பயன்படப் போகின்றன என்ற எண்ணத்தில்.

“சரி!” என்று ஊஞ்சலிலேயே உட்கார்ந்த சிறுகதை மன்னர், தம்முடைய செல்வத்தைத் தூக்கித் தமக்குப் பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொண்டு கதையை ஆரம்பித்தார், கம்பீரமாக.

“அந்தி வானம் செக்கச் செவேரென்று இருந்தது – தீ, தீ! வானமெங்கும் செந்தீ…..!”

“வானத்திலாவது, தீயாவது! என்னப்பா இது? சுத்தப் பேத்தலாயிருக்கிறதே?” என்றான் பையன், ஏமாற்றத்துடன்.

‘”தீ என்றால் தீ இல்லை ; அந்தி நேரத்தில் வானம் செந்நிறமாக இருக்கிறதல்லவா, அதைச் சொல்கிறேன்” என்றார் அப்பா, அசடு வழிய.

“ஓஹோ , அப்புறம்?”

“அந்த நேரத்தில் பறவையினங்கள் ‘கா, கூ’ என்று கத்தியதுகூட, ‘தீ,தீ!’ என்று கத்துவது போலிருந்தது…!”

“அட, பாவமே! தீயணைக்கும் படையினர்கூட அதைத் தீயென்று நினைத்து, உடனே மோட்டார், பம்பு செட்டுகளுடன் கிளம்பிவிட்டார்களா, என்ன?”

“இல்லைடா, இல்லை; பறவைகள் மட்டும்தான் அப்படி நினைத்தன…”

“நல்ல வேளை, அப்புறம்?”

“சற்றுத் தூரத்திலிருந்த சாமுண்டீஸ்வரி கோயில் மணி ‘ஓம், ஓம்’ என்று ஒலித்தது, சந்தியா காலப் பூஜையை அறிவிக்க. அர்ச்சகர்கள் ‘அம்மன்’ மேல் ஒரு கண்ணும், அம்மனுக்கு அர்ச்சனை செய்யவரும் ‘அம்மாக்கள் கொடுக்கும் தட்சணையின் மேல் இன்னொரு கண்ணுமாகத் தங்கள் பூஜையை ஆரம்பித்தனர். அன்று வெள்ளிக் கிழமையாக இருந்ததால் கோயில் வாசலில் கூடியிருந்த பிச்சைக்காரர்களுக்குக்கூட நல்ல வரும்படி…”

“அவர்களுக்கு மட்டுமா? வெற்றிலை, பாக்கு வாலா, தேங்காய் வாலா, பழம் வாலா, பூ வாலா, ஐஸ்கிரீம் வாலா, மிட்டாய் வாலா, பட்டாணி வாலா, வேர்க்கடலை வாலா – இவர்களையெல்லாம் ஏன் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டான் பையன்.

“விடுவேனா? கொஞ்சம் பொறு! அவர்களில் ஒருவரைக்கூட விடாமல் உன்னுடைய கண் முன்னால் அப்படியே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறேன்” என்றார் அப்பா.

“ஐயோ, வேண்டாம்ப்பா! இப்போதே என் தலையை வலிக்கிறது; நீங்கள் அவர்களை விடாவிட்டால் நான் உங்களை விட்டுவிடுவேன்” என்று மிரட்டினான் செல்வம்.

சிறுகதை மன்னர் என்ன செய்வார், பாவம்! அவனுடைய விருப்பம் போல் அவர்களை அப்படியே விட்டுவிட்டு “அதோ வருகிறாள் பார், ஒருத்தி” என்று தம் கதையின் அடுத்த பகுதிக்குத் தாவினார்.

அப்போதாவது செல்வம் அவரை விட்டானா? – இல்லை “எங்கே வருகிறாள், அப்பா?” என்று தெருவை எட்டிப்பார்த்தான்.

“தெருவில் வரவில்லையடா, கதையில் வருகிறாள்?” என்றார் அவர்.

“சரி, வரட்டும் – அப்புறம்?” என்றான் அவன்.

“அள்ளிச் செருகிய கூந்தலிலே கிள்ளி வைத்த ரோஜா, “இதோ நானும் இருக்கிறேன்!” என்று எட்டிப் பார்க்க, நெற்றியிலே கற்பூரப் புகைக்கு மேல் வைத்திருக்கும் குங்குமப் பொட்டு, ‘நானும் தி.மு.க. வாக்கும்!’ என்று சொல்லாமல் சொல்ல, கண்களிலே இட்ட மை கரைந்து…”

சிறுகதை மன்னர் தம்முடைய . ‘படப்பிடிப்’பை முடிக்கவில்லை; அதற்குள் பாட்டி வந்துவிடவே, “நான் வருகிறேன் அப்பா உங்கள் கதாநாயகியை விட பாட்டியின் கதாநாயகியைத்தான் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது. ஏனெனில் வானம் பற்றி எரிந்த பிறகு, பறவைகள் பார்த்துப் பயந்த பிறகு, கோயில் மணி அடித்த பிறகு, குருக்கள் பூஜை செய்த பிறகு, பிச்சைக்காரர்கள் கூட்டம் கூடிய பிறகு அவள் வந்து என் பொறுமையைச் சோதிப்பதில்லை; எடுத்த எடுப்பிலேயே வந்துவிடுகிறாள் – கதை கேட்பவர்களின் நேரமும் பொன்னான நேரந்தான் என்று மதித்து!” என்று சுடச்சுடச் சொல்லிவிட்டு எழுந்தான் செல்வம்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *