சின்னவங்க

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,344 
 

“டாக்டர். இனி நீங்கதான் இவளுக்கு ஏதாவது பண்ணணும்” நுழைந்ததும் நுழையாததுமாக நான் கத்துவதைப் பார்த்து டாக்டர் என்னவோ நினைத்திருக்க வேண்டும்.

பொருட்காட்சியில் வைத்த ஏதொ ஒரு வஸ்துவை பார்க்கிற மாதிரி என்னை மேலும் கீழும் பார்த்தார்.

அவசரமாய் புன்னகைத்தேன்.

அவர் சொல்லுமுன்னே அவர் மேசைக்கு முன்னே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து சாய்ந்து கொண்டேன். என் மனைவியையும் உட்காரச் சொன்னேன். அவள் பல்லை கடித்துக் கொண்டு முறைத்தாள்.இப்போது அவள் முகத்தை பாருங்கள்.பேய் பிடித்தவள் மாதிரி இல்லை?

“டாக்டர் இவளை நீங்கதான் எடுத்து சொல்லணும்” எனக்கே தெரிந்தது. முறையில்லாமல் துவங்குகிறேன்

“சரி சொல்லுங்க. இவங்க யாரு.”

“ஷீலா.. என் மனைவி..”

“ம். அவங்களுக்கு என்ன” என்ற போது ஷீலா எதுவோ சொல்ல வாய் திறந்தாள். நான் அவளுக்கு முந்திக்கொண்டு ஆரம்பித்தேன்.

பால்காரனின் மணியோசையில் ஷீலா எழுந்து போனதும் எனக்கு உறக்கம் போய்விட்டது.

படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து பொதிந்த ரோஜா போல தூங்கும் என் மகளை தட்டிக் கொடுத்தேன்.

‘அப்பா நான் எப்படிப்பா இருக்கேன்.’

‘என் கண்ணு என்னையே போல இருக்கேடா’

‘எல்லாரும் ஏம்பா அப்படி சொல்றாங்க’

‘என்ன சொல்றாங்க’.

‘என் கண் அப்படியாப்பா இருக்கு.’

‘எப்படி’

‘பேய் முழிக்கிற மாதிரி’

‘அப்படி யாரு சொன்னா’

‘எல்லாரும்…. அம்மாகூட.. ‘

ஓ! காயப்படுத்தியிருக்கிறாளா.

‘ஏண்டி.குழந்தைகிட்ட இப்படிதான் பேசறதா. அது மனசு எவ்வளவு கஷ்டபடுது பாரு.விவரம் கெட்டவளே. இனிமே இந்த மாதிரி நடந்துகிட்டேன்னா எனக்கு கெட்ட கோபம் வரும்’அநியாயத்துக்கு கத்துவேன்.

அதிகம்தான். ஆனாலும் அந்த குழந்தையின் மனதுக்கு இதமளிக்க இது தேவைதான் என்று தோன்றியது.

ஆரம்பத்தில் அவளிடம் அதிர்ந்து பேசியதேயில்லை. என் கோபம் லேசாக வெளிப்பட்டாலே நாலு நாளுக்கு அழுது தீர்ப்பாள்.

இப்போது மாறிவிட்டோம். முடிந்தவரை போராடிவிடுவது என்ற மூர்க்கம் அவளிடம் வந்திருக்கிறது. நானா விடுவேன். என் மகளின் சந்தோசத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டும்.கெட்ட கோபம் வரும் என்று அவளிடம் சொன்னதை அடிக்கடி மெய்ப்பிக்க வேண்டி வந்தது.

“சுசி எழுந்திரும்மா” என்றுதான் ஆரம்பிப்பாள். குழந்தையின் ஆழ்ந்த தூக்கத்தில் அது எட்டாமல் போகவே, “எழுந்திரு குரங்கே. மணி ஏழாச்சி. இனி எப்ப குளிச்சி கொண்டாடி, ஸ்கூலுக்கு அனுப்பி, எப்ப நான் ஆபீசுக்கு போறது.”

நிறைய தடவை செய்வது போல் இப்போதும் குறுக்கெ வருவேன்.குழந்தையிடம் அதிகம் அலுத்துக் கொள்ளாதே என்பேன்.எரிந்து விழுவாள்.

“உங்களுக்கென்ன. ஜோரா குளிச்சி,சாப்பிட்டு, போயிருவீங்க. நான்ல அவஸ்தை படணும்.”

நானும் கத்துவேன். அவளும் விடமாட்டாள். குழந்தை மிரண்டுபோய் உட்கார்ந்திருக்கும்.

அந்த சமயம் பார்த்துதானா பக்கத்து வீட்டு வாண்டு வரணும். சரியான வாலு. இன்னிக்கு என்ன புகாரோ…?

“ஆண்டி சுஜி இல்ல என் செடியை பிடுங்கி எறிஞ்சிடிச்சி.”

ஷீலா சாப்பாட்டில் கல் அகப்பட்ட மாதிரி பதறுவாள். சமர்த்தாய் படித்துக் கொண்டிருந்த சுஜியை இழுத்து வந்து புகார் கொடுத்த வாண்டு ரசித்து சிரிப்பதுவரை மாறி மாறி அறைந்து…..

இதையெல்லம்ம் பொறுத்துக் கொண்டு என்னால் எப்படி இருக்க முடியும்.

“ஏண்டி எருமை மாடே குழந்தையை இந்த அடி அடிக்கிறியே. தாங்குமா…”

நான் மூர்க்கமாய் ஆரம்பிப்பேன். அவள் அதை கவனிக்க மாட்டாள்.

‘பேக்கு முழிக்கிற முழியை பாரு. செய்றதை செய்திட்டு அப்பாவி மாதிரி…. பாரு இத்தனை அடிபட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வருதா. கல்லுளி மங்கன். எனக்குன்னு வந்து பொறந்திருக்கே.”

“ஏண்டி ஆவேசப்படற. இப்ப என்ன நடந்து போச்சி.”

“ நீங்க சும்மா இருங்க. புள்ளைன்னா ஒழுங்கா இருக்கணும்.ஸ்கூலுக்குப் போனா மானம் போகுது. ஒரு இழவும் படிக்க மாட்டெங்குதாம். மக்கு மாதிரி முழிச்சிட்டு நிக்குதாம். ஏண்டி முறைக்கிற…. படி…. படியேண்டி… சவமே…. கழுதை உன்னை உதைச்சாதான் சரிவரும்.”

“படி படின்னு கத்தற ஒரு நாளாவது உட்காரவச்சி படிச்சி குடுத்திருக்கியா…”

“ஆமா நீங்க மட்டும் என்னவாம்”

“ நானா.. நான் நாள் முழுக்க ஆபீஸ்ல உயிரை விட்டுட்டு இங்க வந்து நிம்மதியா இருக்கலாமுன்னா…. “

“ நாங்க மட்டும் என்னா ஆபிஸ்ல ஓடிபிடிச்சி விளையாடிட்டா வாரோம்.”

இது வளர்ந்து பெரிதாகி, நாங்களேஅடித்துக் கொள்ள, சுஜி பசியோடு இருந்த இடத்திலேயே சுருண்டு தூங்கியிருப்பாள்.

எனக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. ஷீலா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்.

அன்று என் ஆபீஸ் நண்பனின் திருமணத்துக்கு போயிருந்த போதுதான் விபரீதம் உணர்ந்தேன்.
விழாவுக்கு வந்திருந்த சுஜியையொத்த சிறிசுகள் எல்லாம் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க இவள் ஒரு பூந்தொட்டியின் முன் நின்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.

எனக்கு முதல் முறையாக அது வினோதமாகப்பட்டது. ஓசையில்லாமல் அவள் பின்னே போய் நின்றேன்.

சுஜி செடியைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தாள்.” ஏய். என்னா முறைக்கிற. கண்னை நோண்டிருவேன். அசையாம நில்லு.. சொன்னா கேட்க மாட்ட. கொன்னுடுவேன்..”

நான் அதிர்ந்து போய் நிற்கிற வேளையில் அசையும் அந்தச் செடியை வேரோடு பிடுங்கி காலுக்கு கீழே போட்டு நசுக்க…

வீட்டுக்காரம்மா ஓடி வந்தாள். “இது யார் புள்ள. இப்படி பண்ணிட்டதே குரங்கு….”

ஷீலாவும் வந்தாள். “சனியன். வந்த இடத்திலயும் கையை காலை வச்சிட்டு சும்மா இருக்கக் கூடாது. எழவு இதோட ஒரே தொல்லையாப் போச்சி.” என்ற போது ஓங்கி அவளை அறைந்து விட்டேன். “ வாயை மூடு…. எல்லாம் உன்னால வந்த வினைதான்.”

எல்லோரும் என்னை தரக்குறைவாகப் பார்ப்பதை உணர்ந்தேன். ஷீலா எதிர் பார்த்திருக்க மாட்டாள்.அவமானத்தில் குன்றி விட்டாள். ஆனாலும் என்ன. ஒரு குழந்தையிடம் இதமாக நடந்து கொள்ள முடியாத இவளை….

டாக்டர் என் ஆவேசத்தை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

” இப்ப சொல்லுங்க டாக்டர். இவளுக்கு மன நிலை சரியில்லைதானே”

“இப்படிதான் டாக்டர் இவர் கண்டதுக்கெல்லாம் கோபப்படறார். பொது இடத்தில எப்படி நடந்துக்கறதுன்னு தெரியலை. இவரோட நடவடிக்கையால குழந்தையும் பாதிக்கப்படுது.” ஷீலாவும் தன் பங்குக்கு சொல்ல..

விடுவேனா நான். “ குழந்தையை சும்மா சும்மா நச்சரிச்சா.. பாவம் அது என்ன செய்யும்..அதுக்க மனசும்…”

“நல்லயிருக்கே கதை. நீங்கதான்… …”

எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்து நீண்டு கொண்டே போன சண்டைக்கு இடையில்தான் கவனித்தேன்.டாக்டரைக் காணவில்லை. சுஜியையும்.

பதறிக்கொண்டு எழுந்து வெளியே வந்து பார்த்தால்….
அந்த கிறுக்கு டாக்டர் பொறுப்பில்லாமல் சுஜியுடன் தோட்டத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்.

– 23 ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *