சங்கம வேளையில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 5,730 
 

சனிக்கிழமை விடியற்காலை மணி 5.30. மூச்சு இரைக்க ஓடி வந்த வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் எழும்பூர் ஸ்டேஷனில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. ராஜரத்தினமும் சிவகாமியும் தம்முடன் கொண்டு வந்த லக்கேஜ்களுடன் கீழே இறங்கினார்கள். இனி, அவர்கள் பஸ் பிடித்து திருவொற்றியூர் செல்ல வேண்டும்.

சரவணனும் சங்கீதாவும் போர்வைக்குள் வெற்றுடம்புடன் முடங்கி கிடந்தனர். உடுத்தி இருந்த லுங்கியும், நைட் கவுனும் கட்டிலிலிருந்து நழுவி தரையில் விழுந்து கிடந்தன. சங்கீதா வலது புறமாக ஒருக்களித்து காலை மடக்கி தூக்கம் கலைந்தும் கலையாமலும், உறங்கியும் உறங்காமலும் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.

சரவணன் தூக்கம் களைந்து, அவளுக்கு பின்னால் உடலோடு உடலாக ஒட்டி, உரசியபடி அவளைப் போலவே படுத்திருந்தான். அவனின் மூச்சுக் காற்று உஷ்ணமும், மீசை முடி உராய்வும் அவளை புழுவாய் நெளிய வைத்தது.

போர்வையை கீழே தள்ளி மெல்ல விலக்கினான். போர்வையை இழுத்து திறந்த தோளையும், திரண்ட மார்பையும் மூடிக்கொண்டு சற்று கவிழ்ந்த நிலையில் படுத்தாள் சங்கீதா.

கொஞ்சம் தாவி, கொஞ்சும் விதமாக, காது மடலிலும் தோளிலும் இதழ்களால் வருடிக் கொண்டே சங்கீதா என்று ராகமிட்டான்.

அவள் ம்ம்.. என்று நெளிந்து கூச்சத்தை சிதைத்தாள். மீண்டும் காதுமடலை வருடிக் கொண்டே சங்கீதா என்று இசைத்துக் கொண்டு தம் கைவிரல்களை மெல்லிடை வழி நுழைத்து வயிற்றில் படர விட்டான்.

அவனின் கையைப் பிடித்து லாவகமாக மார்பின் குறுக்கே கிடத்தி கொண்டு, பிளீஸ் என்னை தூங்க விடுங்களேன் என்று சிணுங்கினாள்.

சும்மான்னு தான் இருக்க நினைக்கிறேன் ஆனா ‘விழிப்பு’ தூங்க விடலை, உனக்கு விழிப்பு வரலையா என்று இருபொருள் பட கேட்டான்.

ராத்திரி பூரா சரியா தூங்க விடாமல் ‘பண்ணிவிட்டு’, இதென்ன கேள்வி.?

பொழுது விடியப் போகுதுடீ,

விடியட்டும், எனக்கு தூக்கம் வருது.

கையை மார்போடு இழைத்து நீட்டி கன்னக்கதுப்புக்களை தடவி, தாவாகட்டையை பிடித்து தன் பக்கமாக திருப்பி, கண்ணைத் திறந்து என்னைய பாரேன் நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியும் என்றான்.

அவனது கையை தடுத்து மார்புடன் இறக்கி வைத்து கொண்டு, கண் திறந்து பார்த்தாள், பின் எனக்கு ‘ஒண்ணும் புரியலை’, என்று சொல்லி திரும்பி கொண்டாள்.

வளைந்த இடுப்பின் கீழ் குழைந்த பின் பகுதியின் கதகதப்பு அவனை மேலும் உசுப்பி விட, மசிய மாட்டேன்கிறாளே என்ற எதிர்ப்பார்ப்பில், பாசாங்கு பண்ணாதேடீ., இந்த நேரத்தில சுகம் கண்டால் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குமாம் உனக்கு தெரியாதா.,?

தெரியாது. . .

ஆனால் அது அப்படித்தான் இருக்கும் முரண்டு பிடிக்காதே, புருஷனை கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன் . .

முகத்தை திருப்பி அவனைப் பார்த்து தூங்கறத்துக்கு ஒண்ணு, தூங்கி எழுந்தரிச்சதுக்கு ஒண்ணுன்னு இருந்தால் ஒழுங்குப் பட்டு வராது மாமா, நீ தான் புரிஞ்சுக்கனும். வார்த்தையில் கண்டிப்பும் கறாறும் இருந்தாலும், பார்வையின் பரிவு ஆசையைத் தூண்டியது.

வீக் எண்ட், சாட்டர்டே, சன்டே எந்த டிஸ்டிரப்பன்ஸும் கிடையாது. ஏன் எந்திரிக்கலை.? ஏன் எதுவும் செய்யலை.? என்று உன்னை கேள்வி கேட்க யாரும் இல்லை . .

அதுக்காக எல்லாம் அப்படியே விட்டு விட முடியாது, கண்எரிச்சல், கண்ணைக் கட்டுற தூக்கம், தாள முடியலை, ஒரு பத்து நிமிஷம் தள்ளிப் படுத்து என்னை தூங்க விடு மாமா..

சொன்னவள் ‘பற்றிய’ கைகளை பிரித்து தள்ளி விட்டாள்.

சற்று முன் வரையில் அவளால் அனுமதிக்கப்பட்ட செயலாதலால், சுகத்தை இழக்க விரும்பாதவனாய், விடாப்பிடியாக மீண்டும் அவள் நெஞ்சின் குறுக்கே கையை வைத்து கொண்டான்.

அதிகபட்ச இரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு . .

இங்க பாரு நெஞ்சு இரண்டும் வேர்த்து பிசுபிசுன்னு இருக்கு, ஏன் இப்படி இழுத்து போர்த்தி கிட்டு படுத்திருக்கே கொஞ்சம் ஃப்ரீ யாகத்தான் இர்றேன் என்று சொல்லி போர்வையை முழுவதுமாக விலக்கினான்.

நிமிர்ந்து கால்களை நீட்டி படுத்தவள், விழிகளை மலர்த்தி இப்ப உனக்கு என்ன வேணும்.? ஏன் இப்படி தூங்க விடாமல் படுத்தி எடுக்குற, நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா.? இல்லையா.? என்று கேட்டாள்.

அவள் சௌகரியமாக படுக்க இடவசதி கொடுத்து பெருமாள் சையன கோலத்தில் இருப்பது போல தலையை கையால் தாங்கி கொண்டு அவளின் பிறந்த மேனியை ரசித்தான். சங்கீதா உயரத்துக்கு ஏற்ற உடல்வாகுடன் சற்று உருண்டு திரண்ட மார்புடன் அழகாக இருந்தாள்.

இவ ஏன் ‘வெறுமனமே’ன்னு படுத்துக் கிடக்கிறாள், எழுந்திருச்சு போய் வேலையை பார்க்க வேண்டியது தானே., தூக்கம் என்ன வேண்டி கிடக்குன்னு படுத்தி எடுக்குற., அப்படி தானே., என்று கேட்டாள்.

அவன் சிரித்தான்.

நான் என்ன சொல்லிட்டேனு இப்ப நீ சிரிக்கிற.?

குறு குறுத்தப் பார்வையுடன், இல்லடி., நீ படுத்திருக்குற வாட்டத்தை பார்க்கிற போது இவன் ஏன் இன்னும் ‘எதுவும்’ செய்யாமல் படுத்துருக்கான் என்ற தோரணையில் இருக்கு என்றான்.

ச்சீ.. நீ ரொம்ப கெட்டுப் போயிட்ட மாமா என்றவள் பிறந்த மேனியை கவிழ்த்துக் கொண்டாள்.

எழுந்து உட்கார்ந்தவன் அவளை தூக்கி நிமிர்த்தி தன் மடியில் படுக்க வைத்தான், அவளின் செவ்விதழை குவித்து விரலால் வருடியபடி என்னய கெடுத்ததே நீ தானடீ.. என்றான்.

ம்.. சொல்லுவாங்க..! சொல்லுவாங்க..!!

மத்தவங்க சொல்லாட்டியும் உண்மை அதானே, சரி இப்ப நீ சொல்லு ஓ.கே.. தானே.,?.,!

அவளின் இசைவை விரும்பாத காலிங் பெல் சத்தமிட்டு அலறியது.

யாரோ கூப்பிடுறாங்க, யாருன்னு போய் பாருங்க.

பால்காரன் வந்து பாலை வைத்து விட்டதாக அறிவிச்சுட்டு போறான் என்றவன் கொம்பில்லாமல் தவிக்கும் முல்லைக் கொடி போல அவள் மீது படர்ந்தான்.

மாநகராட்சி எல்லையிலிருந்து திருவொற்றியூர் நகராட்சிக்கு பேசின் பிரிட்ஜ், வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை தாண்டி பேரூந்து சென்று கொண்டிருந்தது. புற நகர்ப் பகுதிக்கு செல்வதாலும், காலை வேளையாதலாலும் பஸ்ஸில் நெரிசல் அவ்வளவாக இல்லை. ராஜரத்தினமும் சிவகாமியும் சௌகரியமாக பயணித்தனர்.

சங்கீதா, சிவந்த மேனியாதலால் வெட்கத்தில் அவள் முகம் மேலும் சிவந்திருந்தாள். கலைந்த கருங்கூந்தலின் முன் கற்றைகள் ஒன்றிரண்டு வேர்வையின் ஈரத்தில் தோளிலும் மார்பிலும் அழகாய் காட்சி தர, சொர்க்கம் கண்ட சுகத்தில் கண்கள் சொருக, அவளின் உதடுகள் ஏதோ சொல்ல துடித்தது.

தீராத வேட்கையை தீர்த்துக் கொண்டவனாய், விஷமப் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி என்ன என்று பார்வையாலே கேட்டான்.

குழந்தையை போல இரண்டு பக்கமும் தலையை ஆட்டி ஒன்றுமில்லை என்று உணர்த்தியவள் ‘தாங்க்ஸ்’ என்று சொல்லி கணவனை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த அவன், கன்னத்தோடு கன்னம் வைத்து நெஞ்சுக்குள்ள இவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு ஏன்டீ.. வீம்பு பண்ணினே. . என்று கேட்டான்.

நான் சொன்னேனா எனக்கு நிறைய ஆசை இருந்துச்சுன்னு. .

நெஞ்சு துடிப்பை தெரிஞ்சுக்க ஒரு ஸ்டெதாஸ்கோப்புன்னா, உன் நெஞ்சை புரிந்து கொள்ள நீ உச்சரிக்கும் ‘தாங்க்சும்’, ஒரு அளவுகோல் தான்.

இன்றையப் பொழப்பை கெடுத்தாச்சு. . நான் எழுந்திருச்சு எதுவும் செய்ய போறதில்லை.

மனைவியானவள், கஷ்டப்படும் நேரத்தில் தோழியாக, கவலை கொள்ளும் வேளையில் மந்திரியாக, கண்ணீர் விட்டு கலங்கும் போது தாயாக, கட்டிப் பிடித்து கலவி செய்யும் போது தாசியாக, காரியத்தை செய்து முடிக்க எஜமானியாக என்னன்னமாய் அவதாரம் எடுக்கிறாள் என்பதை நான் உன் வடிவில் தான் பார்க்கிறேன். இருந்தாலும் நான் உன்னை கஷ்டப் படுத்துறேன் இல்ல.,?

ச்சீ. . என்ன பேச்சு பேசுறே.? நீ என் கிட்ட ‘கேட்காம’, வேறு யாருகிட்ட போய் கேட்பே. . இந்த நினைப்போடு இருந்து, நீ வேற எவகிட்டேயும் போகாமல் இருந்தால் சரி.

நீ மனம் சலிக்காமல் இப்படியே கம்பனி கொடுத்தால், இன்னும் இருபது வருஷமல்ல, அறுபது வயசு வரைக்கும் நான் யாரையும் மனதால் கூட நினைக்க மாட்டேன்.

காலிங் பெல் அலறி அழைத்தது.

இருவர் முகத்திலும் வினா புருவம் நெளிந்தது. இப்ப யாரு.?

தெரியலை போய் பாருங்க..

எழுந்த சரவணன் லுங்கியை ஏற்ற இறக்கமாகக் கட்டிக்கொண்டு, ஹாலை கடந்து மெயின் டோரின் குவிலென்ஸில் கண் பதித்தான். கேட்டிற்கு வெளியே மாமனார் ராஜரத்தினமும், மாமியார் சிவகாமியும் நின்று கொண்டிருந்தார்கள்.

அச்சோ என்று பதறியவன், லுங்கியை அவிழ்த்து சரியாக கட்டிக் கொண்டு சோஃபாவில் கிடந்த டர்க்கி டவலை இரண்டு தோளிலும் பரப்பிக் கொண்டு கதவை திறந்தான். விரைந்து நடந்து வாங்க மாமா, வாங்க மாமி என்று அழைத்தப்படி கேட்டின் பூட்டை திறந்தான்.

மாமனார் குனிந்து இரண்டு கட்டைப் பைகளை எடுக்க, அதை இப்படி கொடுங்கள் மாமா என்று கேட்டு வாங்கிக் கொண்டு, உள்ளே வாங்க மாமா, வாங்க மாமி என்று மீண்டும் கூப்பிட்டு முன்னால் சென்றான்.

மூவரும் ஹாலில் பிரவேசித்து கைச் சுமைகளை ஓரமாக வைத்தனர். வாசக்கதவை திறக்கலை, வந்த பாலை எடுத்து வைக்கலை, அவ இன்னும் தூங்கிட்டிருக்காளா என்று கேட்டு கிச்சனுக்குள் சொன்றாள் சிவகாமி.

இல்ல மாமி, முழிச்சுக்கிட்டுத்தான் இருந்துச்சு., தோ. . இப்ப வந்துடும்.

தூங்கட்டும் லீவு தானே, பொறுமையா எழுந்திருக்கட்டும் என்ற ராஜரத்தினம் காமன் பாத்ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

பெற்றவர்களின் குரல் கேட்ட சங்கீதா இன்ப அதிர்ச்சி அடைந்தாள். பதறியடித்து எழுந்து கலைந்த கேசங்களை சேர்த்து அள்ளி கொண்டை போட்டுக் கொண்டாள். அறையின் நிலைக்கண்ணாடி நிர்வாண கோலத்தை ‘வெளிச்சம்’ போட்டுக் காட்ட, இதயம் படபடக்க, கலைந்து கிடந்த போர்வைக்குள் பாவாடையை தேடி எடுத்து கட்டிக் கொண்டாள். அவசரக்கதியில் கூ(ட்)டுக்குள் கொங்கைகளைப் பொருத்தி பிரேஸியர்சை போடும் போது ஹூக்குகள் தகராறு செய்து பொறுமையை கடைபிடிக்க சொல்லியது.

ச்சே. . என்று அண்ணாந்து கழுத்தை சரி செய்யும் போது, அருகில் வந்த சரவணன் ஹூக்கை பொருத்தி, அவளை அணைத்து கழுத்தின் பின்புறம் முத்தமிட்டான். அவள் முழங்கையால் லேசாக இடித்து அவனை தள்ளி விட்டு, பாடியை முன் பக்கம் இழுத்து சரிசெய்து கொண்டு, இப்படி வந்திருக்காங்கன்னு ஒரு குரல் கொடுத்திட்டு போய் இருக்கலாமுல்ல என்று கேட்டாள்.

அவன், அட, ஆமாம். . சொல்லி இருக்கலாமுல்ல.? ஏன் தோணாம போச்சு.? என்றவன் நைட்கவுனை எடுத்து, அதை உதறி கசங்களை சரிப்பண்ணி கொடுக்க, பிடுங்கி மாட்டிக் கொண்டு அவசரக்கதியில் பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த சங்கீதா, அப்பா.,! வாங்கப்பா. . எப்படி இருக்கீங்க என்று விசாரித்து அவரின் மார்பில் தஞ்சம் புகுந்தாள். வாஞ்சையுடன் அணைத்து கொண்டு நல்லா இருக்கேன்டா என்றார்.

குடும்பம் நடத்துற பொண்ணு இப்படி எட்டு மணி வரையில் தூங்குனா வீடு விளங்குமா.,? அடுப்பு துடைக்கலை தொட்டிக்குள் போட்ட சாமான்கள் எல்லாம் போட்டபடி கிடக்குது என்று சொன்னபடி காபியுடன் வந்தாள் சிவகாமி.

வாம்மா, நீ எப்படி இருக்கே, உடம்பு நல்லா இருக்கியா என்று கேட்டு காபியை எடுத்து தந்தைக்கு கொடுத்தாள். பின் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தாள்.

ஏய்.. மாப்பிள்ளைக்கு கொடுக்காமல் உட்கார்ந்துட்டே. . என்று கேட்டு இந்தாங்க மாப்பிள்ளை நீங்கள் எடுத்துக்குங்க என்று காபி தட்டை நீட்டினாள்.

எடுத்துக் கொண்டு சோஃபா சேரில் உட்கார்ந்தான்.

காபியை ஒரு மிடறு குடித்து விழுங்கிக் கொண்டு ஊர்ல அப்பா அம்மா எல்லோரும் நல்லா இருக்காங்களா மாப்பிள்ளை, என்று கேட்டார்.

சங்கீதா, சோஃபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்து, இரண்டு கைகளின் கட்டை விரல் ஆட்காட்டி விரல் கொண்டு டம்ளர் விளிம்பை பிடித்து, காபியை ஊதி உறிஞ்சி குடிக்கும் அழகும், கழுவிய முகத்தை சரியாக துடைக்காமல் விட்டதினால், காதோரம் நனைந்த கார்குழலும் சிந்தையை கவர்ந்தது.

பதில் ஏதும் வராததினால் ராஜரத்தினம் சரவணனை ஏறிட்டு பார்த்தார்.

. . . சிந்தனையின் ஊடே விடியற்காலை சங்கமம் நினைவுக்கு வர, ராட்சசி.. கழுதை முண்ட . . என்று மனதுக்குள் செல்லமாக திட்டினான்.

மகிழ்ச்சியாக இருந்தது மாமனாருக்கு.

தன்னையே பார்த்து கொண்டிருக்கும் சரவணனை கடிந்து, அப்பா கேட்கிறாரல்ல பதில் சொல்லுங்கள் என்று பல்லை கடித்தாள்.

அஆ. . என்ன மாமா.,?

ஊர்ல அப்பா அம்மா எல்லோரும் நல்லா இருக்காங்களா ன்னு கேட்டேன்.

ஆங் இருக்காங்க மாமா, என்று பதில் சொன்னவன், எழுப்ப எழுப்ப எந்திரிக்காமல் . . பாரு மாமியை காபி போட வச்சுட்டே என்று வருத்தப்படுபவனாய் அநாகரீகத்துக்கு இங்கிதம் பூசினான்.

‘புரியுது’ மாப்பிள்ளை, ஆனது ஆச்சு விடுங்கள்.

ஏன் உங்களுக்கு என்ன ஆச்சு.? அம்மா தானே போட்டுச்சு . . நீங்க ஒன்னும் போடலையே.

சட்டாம்புள்ள மாதிரி பேச்சைப்பாரு. . இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.

ஓரக் கண்ணால் அவனை பார்த்து குறை வச்சிருக்கனும் அப்போ தெரியும் ஐயா பாடு என்றாள்.

என்னடி இது.? பேச்சுக்கு பேச்சு எதிர் பேச்சு பேசிக்கிட்டு.

பின்ன என்னம்மா அசதியா படுத்திருக்கிறாளே, என்று இருக்காமல் மேல மேல தொல்லை கொடுக்கிறாற் போல . . . எழுந்திரு, எழுந்திரு ன்னு மூச்சுக்கு முந்நூறு வாட்டி நொய் நொய்யுன்னா எரிச்சல் வராதா பின்னே.?

அடி கில்லாடி. . கள்ளீஈ . . இதுக்காகவாயினும் உன்னை புரட்டி போட்டு எடுக்கனும் . .டீ. என்று நினைத்தான்.

சரி. . என்ன டிபன் பண்ண.? தோசை மாவு ஏதும் இருக்கா.? என்று சிவகாமி கேட்கவும்,

தோசை மாவெல்லாம் இல்லை. இடியாப்ப சேவை செய்துக்கலாம், புளி காச்சல் கொஞ்சம் இருக்கு, வெங்காயம் தாளிப்பு ஒண்ணு, தயிர் போட்டது ஒண்ணு, இது போதாதுன்னா வெல்லம் போட்டு கொஞ்சம், லெமன் சேர்த்து கொஞ்சம் செய்துக்கலாம் என்றாள் சங்கீதா.

வெல்லம் போடும் போது தேங்காய் துருவல் சேர்த்து செய்யுடி.

அதென்ன மரியாதை இல்லாமல் மாமியாரை வாடி போடின்னு சொல்றீங்க, அப்பா உங்களுக்கு கோபம் வரலை.?

ஏய் சங்கீதா நான் உன்னைய தான் சொன்னேன்.

ஆனால் செய்யப் போறது அம்மா தானே.

இங்க பாரு அவுங்க டிராவல்ல டயர்டாகி வந்திருப்பாங்க, ரெஸ்ட் எடுக்கட்டும் நீ டிபன் பண்ணு நான் வேணுமின்னா ஒத்தாசை பண்றேன்.

என்னால முடியாது. அம்மா, பிளீஸ் அம்மா, இப்ப மட்டும் நீ செஞ்சுடு மத்தியானம் நான் உனக்கு வடை பாயாசம் சமைச்சு போடுறேன்.

அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ போய் குளிச்சுட்டு வா, அதுக்குள்ள நான் டிபன் பண்ணிடுறேன், சாப்பிட்டு போய் நீ தூங்கு மதியமும் நானே சமைச்சிடுறேன்.

பாத்தீங்கள்ள எங்க அம்மாவ, உங்களைப் போல வாட்டி வதைக்க மாட்டாங்க.

ராஜரத்தினம் சிரித்துக் கொண்டார்.

காலை டிபன் சாப்பிட மணி பத்தாகியது.

ஆமாம் ரெண்டு நாள் முந்தி போன்ல பேசற போது நீங்க இங்க வர்றதை பத்தி ஒரு வார்த்தை சொல்லலை, திடீர்னு வந்து ஷாக் கொடுக்கிறீங்க.?

அப்போதெல்லாம் வர்ற தோது இல்லம்மா, உன் அம்மா தான் உங்களைப் பார்க்கனுமின்னு சொன்னா அழைச்சுட்டு வந்துட்டேன்.

சிவகாமி, கொண்டு வந்த அதிரசம், ரவா லட்டு, போளி அயிட்டங்களில் ஒன்று ஒன்று எடுத்து பிளேட்டில் வைத்தாள்.

ஏம்மா இந்த வேண்டாத வேலை எல்லாம், உனக்கு தான் முடியலைல்ல, இப்போ இதை செஞ்சு எடுத்து வரலைன்னா என்ன.? என்று கேட்டு ரவாலட்டை ருசித்தாள்.

அது மட்டுமல்லடா தேன் குழல் முறுக்கு, மகிழம்பூ முறுக்கு கூட செஞ்சிருக்கா, எல்லாம் மாப்பிள்ளைக்கும் உனக்கும் பிடிக்குமின்னு தான் பிரயாசைப் பட்டு செய்தாள்.

நான் ஒண்டியா செய்யலை, உன் அப்பாவும் சேர்ந்து ஒத்தாசை பண்ணினார். எனக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல நேத்து தான் கூட மாட இருந்து உதவி பண்ணினார்.

வெர்ரி குட் டாடி. .

மாப்பிள்ளைக்கு பிடிக்கும், பிடிக்குமின்னு போளியும், அதிரசமும் முழுக்க முழுக்க அவரே தட்டினார் என்றால் பாரேன்.

ஈஸ். . இட்.?

எதுக்காக உடம்பை வருத்தி கிட்டு இதற்காக கஷ்டப் படனும். வெறும் கையுடன் வர்ற சங்கடமாக இருந்தால் ஸ்வீட் ஸ்டால்ல ஒரு அரைக்கிலோ ஸ்வீட்டும், அரைக்கிலோ காரமும் வாங்கிட்டு வந்திருக்கலாமுல்ல என்றான் சரவணன்.

வாங்கி திங்கிற காசுக்கு பொருளை வாங்கி நாம செஞ்சா, கூட ஒரு நாலஞ்சு நாள் வைச்சுக்கிட்டு திங்கலாம். பதார்த்தமெல்லாம் எப்படி இருக்கு.? வாய்க்கு ருசியா இருக்குல்ல.?

மம்மி சான்ஸே இல்லை. செம டேஸ்ட்., எல்லாம் சூப்பரா இருக்கு.

எல்லாம் நல்லா இருக்கு தேங்க்ஸ் மாமா, தேங்க்ஸ் மாமி.

மூன்று பேருக்கும் சிவகாமி பரிமாறினாள். சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, அம்மா அவருக்கு புளி போட்ட இடியாப்பம் வைக்காமல் தயிர் போட்டதை வைக்கிறே.

என்ன சிவகாமி கவனமாக பார்த்து பறிமாறு . .

நான் பார்த்து தான் செய்றேன். புளி போட்ட, புளி காச்சல் பழசு, அதனால அதை தனியே வச்சுருக்கேன். மாப்பிள்ளை இன்றைக்கு சனிக்கிழமை விரதம், விரதத்தில் அது சேரக்கூடாது.

சரவணனும் சங்கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அம்மா அவரு விரதத்தை எல்லாம் விட்டுட்டாரு, நீ வை சாப்பிடுவாரு, புளி போட்டது அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

விரதத்தை விட்டுட்டீங்களா.? ஜென்ம விரதமாகத்தானே எடுத்தீங்க., ஏன் மாப்ளே நிறுத்திட்டீங்க.?

அது எல்லாம் சரிபட்டு வரலை, நான் கூட வெள்ளிக்கிழமை விரதத்தை விட்டுட்டேன்.

என்னடி சொல்றே.,?

ஆமாம் நிறுத்தி மூணு மாசமாகுது.

குளிச்சு மூணு மாசம் ஆச்சுன்னு சொன்னால் சந்தோஷப் படலாம். விரதத்தை விட்டு மூணு மாசமாச்சுன்னு சொல்றே.? கேட்க மனசுக்கு கஷ்டமாக இருக்கு.

அதான் சரிபட்டு வரலைன்னு சொல்றேனல்ல பேசாம விடுவியா., என்றாள் சங்கீதா.

மாலை வேளை.ஸ்வீட் காரம் காபி சாப்பிடுகிற நேரம்.

சங்கீதா, சிவகாமியின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு நொறுவலை தின்று கொண்டிருந்தாள்.

ஏய் தீனி பண்டாரம், திங்கிறது தான் திங்கிறே எழுந்திருச்சி உட்கார்ந்து தின்னேன், ஏன் அவங்க மடியில படுத்துக் கிட்டு அறக்கி எடுக்கிறே அரக்கி, ஏற்கனவே உனக்கு மண்டைக் கனம் ஜாஸ்தி இதுல இது வேறையா.. எழுந்துருடீ.

மாமா வேண்டாம் என் கிட்ட வாங்கி கட்டிக்காதீங்க.,

நீ படுத்து இருக்கிறதால உன்னை ஒண்ணும் சொல்ல முடியாமல் வலி அவஸ்தையில் தவிக்கிறாங்க மாமி.

படுத்திருந்த வாக்கில் தாயை ஏறிட்டு பார்த்த சங்கீதா ஏம்மா உனக்கு வலிக்குதா என்று கேட்க, இல்ல நீ படுத்துக்கு என்றாள்.

தாயின் கன்னத்தை வருடி கைக்கு முத்தமிட்டு கொண்டு, அம்மான்னா அம்மா தான், உனக்கு பொறாமை மாமா அதான் என்னய திட்டுறே.

அது என்னடி உனக்கு, எனக்குன்னு மரியாதை இல்லாமல் பேசறது.,

அத விடும்மா மூடுக்கு ஏத்தாற் போல சமயத்தில வந்திடும், அதுக்கெல்லாம் மாமா கோச்சுக்காது, என்றவள், எழுந்தாள். அம்மாவுக்கு வலித்தது அவளுக்கும் தெரியும்.

சரி இப்ப கேட்கிறேன், ரெண்டு பேரும் சொல்லுங்கள். ஏன் விரதத்தை விட்டீங்க.,?

நல்ல புருஷன் அமையனுமின்னு நீ விரதம் இருந்தே, நல்ல பொண்டாட்டி கிடைக்கனுமின்னு நான் விரதம் இருந்தேன். அதான் நமக்கு நிறைவேறிடுச்சே . . பிறகெதற்கு இந்த விரதமெல்லாம், அதனால நம்ம சந்தோஷம் பாதிக்குதல்ல என்று மாமா அடிக்கடி சொல்லவும், சரிதான்னு மனசில பட்டுச்சு அதான் விரதத்தை விட்டு விட்டோம்.

அடி பாதகி, ஒரு சுமங்கலி பொண்ணு பேசற பேச்சா இது. இது உனக்கு ஞாயமா படுதா.? விரதம் எடுக்காமல் இருந்தால் பாதகம் கிடையாது. எடுத்துக் கொண்டு இப்படி பாதியில் விட்டால் பொல்லாப்பு வந்து சேரும்.

இல்ல மாமி. . அது, சொன்னது மட்டுமல்ல, வேற காரணங்களும் இருக்கு, ஆபிஸ்ல, வெளியில போய் சாப்பிடுற இடத்தில சில சங்கடங்கள் எல்லாம் சேருது விரதத்துக்கு பங்கம் வந்து விட கூடாது என்ற காரணமும் உண்டு.

இல்ல மாப்பிள்ளை, கல்யாணத்துக்கு முன்னாடியும் நீங்க வேலைக்கு போயிட்டு தான் இருந்தீங்க, அப்போதெல்லாம் நெறி தவறாமல் பக்தி மாறாமல் கடுமையா இருந்து வந்தீங்க, மாலை போட்டு ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை போய் வந்து கொண்டிருந்த நீங்க, இப்போ சொல்றது ஏதோ சாக்கு போக்குனு தோணுது.

அம்மா.,? என்ன பேசற நீ.?

அவர் தான் வேலைக்குப் போறாரு, எதுவும் சரிபட்டு வரலைன்னு பேசுறாரு, உனக்கு என்ன வந்தது.? நீ வீட்டில தானே இருக்க, நீ ஏன் விரதத்தை விட்டே.,?

சங்கீதா சங்கடமாய் சரவணனைப் பார்த்தாள்.

பொண்ணு புள்ளைங்க விருப்பத்தை நிறைவேற்றனும்மின்னு, ஜாதக பொருத்தம் எதுவும் பார்க்காமல் கல்யாணத்தை பண்ணி வச்சுட்டோமே என்ன ஆகுமோ.? ஏது ஆகுமோ.? என்று தவிச்சுக்கிட்டு கிடக்கிறோம், வவுத்துல இன்னும் சூல் வைக்கலையேன்னு வேதனைப் பட்டுகிட்டு இருக்கோம். நீங்க விவரங்கெட்ட தனமா பேசுறீங்க.

பாரு சிவகாமி, கடவுளுக்கு தெரியும் யாருக்கு, எதை, எப்போ, எங்கே கொடுக்கனுமின்னு., நீ ஏன் கிடந்து அடிச்சுக்கிறே, சம்மந்தி வீட்டு வம்சாவளியிலும் சரி, நம்ம வம்சாவளியிலும் சரி சந்தான பாக்கியம் இல்லாமல் இல்லை. கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் தானே ஆகுது. சின்னஞ் சிறசுகள் கொஞ்ச நாள் சந்தோஷமாக இருக்கட்டும். குழந்தை இல்லை என்று சொல்லி அவங்க மனசை கஷ்டப் படுத்தாதே.

தாங்க்ஸ் மாமா.

நாம மட்டுமா குறைபட்டுக்கிறோம்.! சம்மந்தி வீட்டுலேயும் குறை பட்டுக்கிறாங்க இல்ல.?காலாகாலத்தில பெத்துக்கிலைன்னா காலத்துக்கும் பொண்ணுக்கு பழிச் சொல் வந்து சேரும்.

ஏன் மாமி, எங்க வீட்டிலிருந்து, யாராவது சங்கீதாவை குத்தம் சொல்லி பேசினாங்களா.,?

குத்தமா சொல்லலையின்னாலும், ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதம் மனசை பதறவைக்கிறது. பெத்த மனசில்லையா.?

இப்போதைக்கு பாப்பா வேண்டாமுன்னு பிளான் பண்ணி இருக்கோம், நீயா எதையாவது நினைத்து இருக்கிறவங்களுக்கு குடைச்சல் கொடுக்காதேன்னு நான் ஏற்கனவே அம்மாகிட்ட சொல்லியிருக்கேன்.

ஏன் மாப்பிள்ளை அப்படி ஏதும் நீங்க திட்டம் வச்சுருக்கீங்களா.?

அம்மா. . இரண்டு மூன்று வருஷம் பிள்ளை இல்லாமல் இருந்து, ஃபேமிலி ஸ்விட்சுவேஷன், ஃபினான்ஸ் சப்போர்ட் எல்லாம் கூடி வந்ததும் பிறகு பெத்துக்கலாம் என்று நினைத்தது நிஜம் தான். இருந்தாலும் அதுக்காக நாங்க எந்த கருத்தடையும் எடுத்துக்கலை. தள்ளிப் போறது தானாக நடக்குது.

மேலோட்டமாக பார்க்கிற போது எனக்கு ஒண்ணு புரியுது மாப்பிள்ளை, நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒண்ணு சொல்லட்டுமா.?

இல்ல மாமா. நீங்க சொல்லுங்க.

ஊசி இடங்கொடுத்தால் ஒழிய நூல் நுழையாது. ஊசியும் நூலுமா இருக்கிற உங்க இரண்டு பேருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன்.

சமயம், வழிபாடு, பூஜை, புனஸ்காரம் எல்லாம் வெறும் வார்த்தை இல்லை. அது வாழ்க்கையை சொல்லி கொடுக்கும், வாழக் கற்றுக் கொடுக்கும். பண்பாடு கலாச்சாரம் எல்லாம் வாழ்க்கை முறையை நெறிப் படுத்தும். அல்லாமல் ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி காட்டுதலாகவும் இருக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்கனும், வாரத்துக்கு இரண்டு தடவை எண்ணெய் தேய்த்துக் குளிக்கனும், மாசத்துக்கு இரண்டு தடவை உடல் உறவு வச்சுக்கனும், வருஷத்துக்கு இரண்டு முறை பேதி சாப்பிட்டு உடம்பை சுத்தமாக வைத்திருக்கனும் என்று வாழ்க்கை முறை வலியுறுத்துது. இதுல மூன்றாவது கருத்து பலவீனம் கொண்டது. ஏன்னா ஈருடல் சார்ந்த விஷயம். ஈர்ப்பு சக்தி வல்லமை கொண்டது. கட்டுக்கடங்காத ஆசை கட்டுத்தறியை தகர்த்து விடும் என்பதை மறுக்க முடியாத விஷயம். இருந்தாலும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது மிக முக்கியம். ஒரே சீரான நிலையில் இருந்தால் காலம் முழுவதுக்கும் சல்லாபித்து இருக்கலாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, ஆசைகள் நிறைவேற நிறைவேற அதிலே ஊறிப் போன புத்தி ஒரு கட்டத்தில் பேதலித்து போவதுண்டு.

‘மூணு நாள்’ தனிமையை வெறுத்து தகாது உறவு வைத்து ஜன்னிக் கண்டு இறந்தவர்களும் இருக்கிறார்கள். நாள் தவறாமல் உடல் உறவில் லயித்து போனவர்கள் என்ன செய்தாலும் எத்தனை பேருகிட்ட போனாலும் திருப்தி அடையாமல் பைத்தியம் பிடித்து அலைந்தவர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கு தானே தவிர சிதைத்து சித்தம் தடுமாறுவதற்கில்லை.

மனசு கட்டுப்படவும், பக்குவப்படவும் விரதம் அனுஷ்ட்டிக்குறது முக்கியம். அவரவர்களுக்கான வாழ்க்கையை அவரவர்கள் வாழ வேண்டும் என்பது மனு தர்மம். செக்ஸ் அத்தியாவசிய மாகவும் வடிகாலாகவும் இருப்பது உண்மை தான். ஆனால் அதுவே வாழ்க்கை ஆகிவிடாது. அதற்கும் மேல ரத்தபந்தம், சொந்த பந்தங்கள், உறவுகள், சமூக அந்தஸ்து, தலைமுறை, முன்னேற்றம், பேரு, புகழ், சம்பத்து இப்படி பல அடுக்குகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவிக்கனும்.

இந்த பருவத்தில் மனம் சார்ந்து

உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுவதையே விரும்புவதுண்டு. அவ்வாறு செயல்பட விரும்புகிற போது மனம் எல்லைகள் இல்லாமல், கட்டுப்பாடற்று தன் போக்கில் பயணப்பட விரும்பும். தன் விருப்பத்துக்கு தடையாக இருப்பவற்றையெல்லாம் தகர்த்தெறியவும் துடிக்கும். தடைகளை விதிப்போர் மீது வெறுப்பையும் உமிழும். ஆனால், அத்தடைகளை உண்மையில் எதற்காக பெரியவர்கள் நமக்கு விதிக்கின்றனர். அவர்களின் எச்சரிக்கையில் பொதிந்துள்ள உள்அர்த்தம் என்ன என்பதை அலசி ஆராய்வது பார்க்க வேண்டும்.

சொல்லும் போது கசப்பாகவும் ஏரிச்சலாவும் இருக்கும். இதனை அறிவு பூர்வமாக தெரிந்து கொள்ள ‘நெட்ல’, மேம்பட்ட வசதிகள் நிறைய இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் உல்லாசம், கொஞ்சம் சல்லாபம், கொஞ்சம் தேடல் என்று இருந்து பாருங்கள். நிறைய விஷயங்கள் புரிய வரும்.

இந்த தலைமுறையினருக்கு எல்லாமும் தெரியும் ஆரம்பம் எது.? நடைமுறை எது.? முடிவு எது.? என்ற குழப்பத்தில் தவிக்கிறார்கள். அதனால் சித்திரமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் சிதிலமடைந்து விடுகிறது.

ஒரு நிறுவனத்துக்கு நல்ல ஒரு வேலைக்காரனாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல் குடும்பத்துக்கு நல்ல வீட்டுக்காரனாக இருப்பதும் முக்கியம். நிறுவனத்தில் உங்கள் குறையை சுட்டி காட்ட உங்கள் மேலாண்மையினருக்கு எவ்வளவு கடமையும், உரிமையும் உண்டோ அது போல குடும்பத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கு அந்த பொறுப்புகள் உண்டு. அதை ஏற்றுக் கொண்டு அனுசரிப்பது போல இங்கேயும் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். அது தான் உலக மறபு.

அறிவுரை வேறு ஆலோசனை வேறு. நாங்க சொல்றதை ஆலோசனையா எடுத்துக்குங்க. அதை வழிமுறை படுத்துவதும் படுத்தாதும் உங்கள் இஷ்டம். எதுவும் கட்டாயமில்லை. குழந்தையின் ஆரோக்கியத்துக்காக, கையை காலை அமுக்கி, அதை கஷ்டப்படுத்தி மருந்து போடுவது, எப்படி சாத்தியமோ, அது மாதிரி சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்லுவதும் அவசியம் தாம்.

பொது விஷயங்களில் தப்பு பண்ணிட்டால் பிராயச்சித்தம் தேடுவது போல் சாமி விஷயத்தில் நடந்தால் அதற்கு பரிகாரம் இருக்கமுல்ல அதை சொல்லுங்கள் சரி பண்ணிக்குறோம் என்று கேட்டாள் சங்கீதா.

விட்ட விரதத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். பரிகாரமாக சஷ்டி விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக வாரத்துக்கு ஒரு நாள் ஆணாக இருந்தால் சனிக்கிழமையும், பெண்ணாக இருந்தால் வெள்ளிக்கிழமையும் மாசத்துக்கு ஒரு நாள் ஆணும் பெண்ணும் சேர்ந்து சஷ்டி விரதமும் அது போல வருஷத்துக்கு ஒரு நாள் ஏகாதசி விரதமும் இருந்து வந்தால் நல்லதே நடக்கும்.

சரி அம்மா நீங்க சொல்றதை கேட்டு நடந்து கொள்கிறோம். இரட்டை பிள்ளையா பெத்து மாமியார் கையில ஒண்ணும் உன் கையில ஒண்ணுமாய் பெத்துக் கொடுத்துடுறேன். ஓ.கே.வா என்று கேட்டு தாயை பரிவுடன் அணைத்துக் கொண்டாள

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *