கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2023
பார்வையிட்டோர்: 542 
 

(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லொறி நின்றது.

‘இங்கே’ருந்து நடந்து போகனும் என்றான் டிரைவர். குனிந்து, டிரைவர் புறத்துக்கதவு வழியாகப் பார்த்தேன் செங்குத்தான தேயிலை மலையில் தாறு மாறாகக்கிடக்கும் நூல் மாதிரி, ஒரு ஒற்றையடிப்பாதை சென்றது.

“ரொம்பத்தூரம் நடக்க வேணுமோ?’ என்றேன்.

“இல்லே, ஒரு காக்கட்டை!”

லொறியை விட்டு இறங்கினேன். எனக்கு வழிகாட்டுவ தற்காக ஒரு கிழவனும் வந்திருந்தான். அவனும் லொறியின் பின்புறத்திலிருந்து இறங்கினான். ஆள் நல்ல பழமை. கால மெல்லாம் உழைத்த பயன் போலும், வளர்ச்சி குன்றி பதி னாறு வயதுப்பையன் உயரம்தான். நெற்றிக்குமேல் உச்சியில் அரைச்சந்திரனாக முடிவைத்து, பின்னால் குடுமி. காதுகளில் அது என்னவோ தெரியவில்லை – பக்கத்துக்கு மூன்றாக. சிறுதங்க வளையங்கள். இடுப்பு வேஷ்டி கோவணமாக – காலையில் ‘பெரட்’டுக்குப் புறப்பட்டபோதே கட்டியது – ஒரு பக்கத்துத் தொடையை மட்டும் முழங்கால்வரை மறைத்துக்கொண்டு, மறுபக்கம் மேலேறி நிற்கிறது. காலைப்பரப்பி லொறியிலி லிந்து இறங்கும்போது சகிக்கவில்லை!

‘என்ன நடப்பங்களா?’ என்று கேட்டுக்கொண்டு வந்த வன், நான் மலையைப் பார்த்ததைக் கவனித்துவிட்டு “எப் படி ஏறுறதுன்னு யோசிக்கிறீங்களா?” என்று கேட்டுவிட் டுச் சிரித்தான். சிரிக்கும்போது பல்லில்லாத முரசு மட்டும் தெரிந்தது.

“சிரமம் இல்லாமே சுகம் ஏது? நடப்பம்” என்றேன். இருவரும் நடக்கத் துவங்கிறோம்.

“இந்த விஷயம் நடந்து ரொம்ப காலமா பெரியவரே?” என்றேன். “டேங்கப்பா! இது எங்க அப்பன் காலத்திலே நடந்ததுங்களாம். எனக்கே இப்ப அறுபது வயசுன்னா பாருங்களேன்.”

“அந்த சன்னாசிங்கிற ஆள் உங்க சாதிக்காரனா?”

“அப்படித்தான் வச்சுக்கங்களேன்” என்று கிழவன் சொல்லும்போது முகம் கொஞ்சம் அசடு தட்டியது. எத்தனை வருடங்கள் என்றால் என்ன? தன் சாதிக்காரன் ஒருவன் தன் ஆசாரத்தை மீறினான் என்பதை இன்றும் நினைக்கக் கிழவ னுக்கு சங்கடம் போலும். சற்று சிந்தித்துவிட்டு “கேவலம் தான் ஆனா பொய் சொல்லப்படாதில்ல” என்றான்.

“கேவலம்னு கொல்லாதீங்க, ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி இணையறது, கேவலமில்லை. அன்பு இருக்கிற இடத்திலே தான் ஆண்டவன் இருக்கிறான்” என்றேன். என் கட்சிக்கிழவனுக்கு ஒப்புதல் இல்லை போலும், மௌனமாக நடந்தான்.

“என்ன, பேசல்ல?” என்று தூண்டினேன்.

“ஆயிரந்தான் சொல்லுங்க, சாதி விட்டுச்சாதி போறது ஞாயமேயில்லை.மூளிக்கொரங்கா இருந்தாலும் சாதிக்கொரங் காயிருக்கனும்” என்றான். வேற்று சாதிப்பெண் மீது ஆசை வந்துவிட்டால் இரண்டாம் பேருக்குத்தெரியாமல் ‘வைப்’ பாகவேனும் வைத்துக்கொள்ளலாமே யொழிய பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற பழமைப்பிடிவாதம் லேசில் தீருகிற பிரச்சினையா?

வழக்கமான காதல் கதைதான். சன்னாசிக்கு நாவிதக் குலத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் மீது அடங்காக் காதல். அதுவும் ஜாதி இருள் நன்றாகக்கப்பிப் போயிருந்த அந்தக்காலத்தில்! ஆயினும் காலத்திற்காகக் காத்திருந்தார் கள். ஆனால் இவ்விஷயம் தோட்டத்தில் லேசாகப்பரவி, பஞ் சாயத்து சபையில் பேசி அந்த நாவிதக் குடும்பத்தையே தோட்டத்தை விட்டு விரட்ட நடவடிக்கைகள் நடக்கின்றன என்று தெரிந்ததும் அவளைக் கூட்டிக்கொண்டு மறைந்துவிட்டான் அவன்.

தோட்டத்தின் ஒரு மலையுச்சியில் ஒரு கற்குகை. அந்தக் குகையில் இவர்கள் தங்கியிருப்பதற்கான அறிகுறி தென்பட் டது. உடனே அவர்களைப் பிடிப்பதற்காக ஒரு கோஷ்டி புறப்பட்டது. ஆனால் அங்கிருந்தும் அவர்கள் தப்பிச்சென்று விட்டார்கள். எங்கு சென்றார்களோ, என்ன ஆனார்களோ இன்றுவரை யாருக்கும் தெரியாது.

அவர்கள் இரண்டொருநாள் தங்கி இருந்த அந்தக்குகை ‘சன்னாசிக் குகை’ யாக இன்றும் இருக்கிறது. அதைப்பார்க்கத்தான் போய்க்கொண்டிருந்தேன்.

– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *