காணாமல் போன கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 6,743 
 

முடி கலைஞ்சு போய் கண்ணு ரெண்டும் கருவளையமிட்டு முகமெல்லாம் சோர்ந்து உதடுகள் வறண்டு ரொம்பவும் சோர்வுடன் குணமாகி வரும் காய்ச்சலில் படுத்திருந்தாள் விந்தியா.

ஜாப் டிரெயினிங்க்காக பெங்களூரு சென்று வந்த கல்பனா, தோழி விந்தியாவை பார்க்க வந்தவள், துணுக்குற்று உடம்புக்கு என்ன ஆச்சு.,? என்று விசாரித்தாள்.

ஏன் உனக்கு ஒன்னும் தெரியாதா.? யாரும் உனக்கு சங்கதி சொல்லலையா.? என்று கேட்டாள்.

உம் மாமியாரண்ட உன்னை பற்றி கேட்டதற்கு, மூஞ்சியை தூக்கி வைச்சுக் கிட்டு உள்ள இருக்கா போய் பாருன்னு அலுத்துக்கிறாங்க.

நீ தப்பா புரிஞ்சிருக்க, அத்தை ஒண்ணும் வேண்டா வெறுப்பா சொல்லலை, கவலையில் சொல்லி இருப்பாங்க.,

என்ன கவலை அவங்களுக்கு.? உன் உடம்பு துரும்பா வேறு இளைச்சு போயிருக்கு, என்ன நடந்துச்சு.?அன்பு இதையெல்லாம் கண்டுக்கிறதில்லையா.,?

அவர் காணாமல் போயிட்டார். போய் பதினைஞ்சு நாளாச்சு, என்ன ஆனார் எங்க போனார் என்று ஒரு தகவலும் தெரியலை, என்று விந்தியா வருத்தம் தொய்ந்த குரலில் சொல்லி, எழுந்து சாய்வாக உட்கார்ந்தாள்.

அதிர்ந்து போனாள் கல்பனா. அன்பழகன் அப்படி பட்டவன் இல்லையே. ஒரு போதும் யாரையும் எதுக்காகவும் தவிக்க விடமாட்டானே என்று நினைத்தவள் என்ன சொல்றே நீ? அவன் என்ன சின்னப்பிள்ளையா காணாமல் போவதற்கு? உனக்கும் அவனுக்கும் ஏதாவது சண்டையா.? என்று கேட்டாள்.

இல்லை அதெல்லாம் எதுவும் இல்லை.

வீட்டிலிருக்கிற அப்பா, அண்ணன் இப்படி மத்தவங்க கிட்ட ஏதேனும் மனஸ்தாபமா.? அதனால கோச்சுக்கிட்டு எங்கேயாவது போயிட்டானா.?

அதெல்லாம் ஒண்ணும் இல்லை கல்பனா, குடும்பத்துக்குள்ள எப்பவும் எதுக்கும் சண்டை சச்சரவு வந்ததில்லை, ஒத்துமையின்னா அப்படி ஒரு ஒத்துமை, கண் திருஷ்டி படுற ஒத்துமை, இதுல கருத்து வேறுபாட்டுக்கு எங்க இடமிருக்கு, இவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை ஏதும் இருக்கிறதா தெரியலை, கேட்டால் இவளும் ஒன்னுமில்லைன்னு தான் சொல்றா.? என் புள்ள எங்க போய் தொலைந்தானோ.? என்ன மாதிரி கஷ்டப்படுறானோ.? எல்லாம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் என்று புலம்பிக்கொண்டே வந்தாள் மாமியார் மரகதம்.

ஒன்னும் புரியலை, வேலை பார்க்கிற இடத்தில் இசகுபிசகா ஏதேனும் ஆகி இருக்குமோ என்று விசாரித்தால் அங்கும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தான் சொல்கிறார்கள் என்றாள் விந்தியா.

யாரு வச்ச சூனியத்தால இந்தக் கொடுமை எல்லாம் நடக்கிறதோ தெரியலை, என்று மூக்கை சிந்திய மரகதம், இந்தா நொய்யரிசி கஞ்சி வச்சு கொண்டாந்துருக்கேன், ஊறுகாய் எடுத்துக் கிட்டு கொஞ்சம் கொஞ்சமா குடி களையடங்கும் என்ற மரகதம் கையில் எடுத்து வந்ததை நீட்டினாள்.

அதை வாங்கிய கல்பனா நீங்க போங்க ஆன்டி, இவளுக்கு நான் ஆத்திக் கொடுக்கிறேன் என்றாள்.

மாமியார் சென்றதும், என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்கிற நினைப்பே என்னை வாட்டி வதைக்குது. அவரைப் பார்க்காமல் நான் செத்துப் போயிடுவேனோ என்று எனக்கு பயமாக இருக்கு.

ச்சீ. . பைத்தியம் மாதிரி தத்து பித்துன்னு உளறாதே, நான் கேட்பதற்கு பதில் சொல்லு, உனக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. உன் கிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டான். கடன் தொல்லையா.? கந்து வட்டிக்காரன் ஏதேனும் நெருக்கடி கொடுத்தானா.? என்று கேட்டாள்.

கடன் விவகாரமெல்லாம் அவரோட அப்பா அண்ணனோடு தான் இருக்கும், அவங்க பிசினஸ் விவகாரத்தில் இவர் ஈடுபட மாட்டார், உதவி தான் செய்வார், பாங்கில நகைக்கடன் வாங்குவதற்கு ஒத்தாசை யாக நான் கொண்டு வந்த நகையை கூட என்கிட்ட இருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஒரு வேளை அடகு வச்ச நகையை மீட்டுக்கொடுன்னு அன்புக்கு தொல்லை கொடுத்து வந்தியா.,?

ஐய்யோ அப்படி எதுவும் கிடையாது. எனக்கு இஷ்டம் இல்லேன்னா நான் நகையை கொடுக்க மாட்டேன். சும்மா இருக்கிறது சுகப்படட்டுமே என்று தான் எடுத்துக் கொடுத்தேன். அதுக்காக நான் சண்டை ஏதும் போடலை.

அவனுக்கு கிடைக்கிற சுகத்துல நீ எதுவும் குறை வைக்கவில்லையே, ஏன் கேட்கிறேன்னா எல்லாம் பர்பெக்டா நடக்கனும் என்று இருப்பவன், அதானால கேட்கிறேன்.

அந்தரங்க விஷயத்தை நாசுக்கா கேட்கிறே, நீ நம்பக்கூடிய விதத்தில் தெளிவா சொல்லிடுறேன். அந்த விஷயத்தில் அவர் கேட்கும் முன் நானாகவே எடுத்துக்க சொல்வேன், சில சமயம் அடுக்களையில் எல்லா வேலையை முடித்து விட்டு படுக்கைக்கு செல்ல நாழி ஆகும் என்று இருந்தால் கூட தூங்கிடாதீங்க, அப்புறம் என்னய குத்தம் சொல்லக் கூடாதுன்னு உஷார் படுத்தி சொல்வேன்.

ம். . நீ யும் பயங்கர உஷார்பார்ட்டி தான், மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது என்கிற கதையாயில்ல இருக்கு. அப்போ அவன் தலை மறைவா இருக்க வேண்டிய அவசியமென்ன.?

நான் ரொம்ப கன்ப்யூஷன்னா இருக்கேன் கல்பனா., நீ எனக்கொரு உதவி செய்யனும்.

என்ன.. உதவி, அது இது ன்னு கேட்டுக்கிட்டு இருக்கே. நான் உன்னோட உயிர்த்தோழி. உனக்கு செய்யாமல் நான் வேற யாருக்கு செய்யப் போறேன் சொல்லு என்ன செய்யனும்.?

ரொம்ப தூரத்தில எங்கேயாவது

போயிருக்க மாட்டாருன்னு என் உள் மனசு சொல்லுது. கணவராக அவர் எனக்கு தெரிந்ததை விட, ஒரு ஃபிரண்ட்டா உனக்கு அவரை நல்லாத் தெரியும். உன் ஃபிரண்ட்ஸ்ங்க கிட்டச் சொல்லி எப்படியாவது தேடிக் கண்டுப்பிடிக்க சொல்லு கல்பனா.

பார்க்கலாம் விந்தியா, விமானம் ஏறி வைகுந்தம் போய் இருந்தாலும், கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்றிருந்தாலும், வராக அவதாரம் கொண்டு பூமிக்குள்ள மறைஞ்சு இருந்தாலும் எப்படியாவது கண்டு பிடிச்சுடுலாம், நீ மனசு உடைஞ்சு போகாதே, நம்பிக்கையா இரு நான் போய் வர்றேன் என்று சொல்லி விடை பெற்றாள்.

மறுநாள் கல்பனா தன் நண்பர்களான அர்ஜுன், ராகவன், கார்த்திக்குடன் கலந்து பேசினாள். அன்புவை குறை சொல்லும் விதமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேச்சாக பேசினார்கள்.

என்ன சொல்றே கல்பனா அன்புச்செல்வனா ஓடிப் போயிட்டான்.?

அவனுக்கு துணிச்சலை கொடுத்து கூட்டிப் போனவள் யாராக இருக்கும்.?

விந்தியா அந்த அளவுக்கு கொடுமைக்காரி இல்லையே.? எதுக்காக வீட்டை விட்டு ஓடிப்போனான்.?

பைத்தியக்காரன்டா அவன். திடுதெப்புன்னு ஏதாவது ஒரு அற்புதம் பண்றேன்னு மாயா ஜாலம் கத்துக்கப் போயிருப்பான்.

கல்யாணத்துக்கு முந்தி எல்லாம் அவன் அப்படி இருந்தவன் தான். இப்போ அவன் ஒழுங்கா குடும்பத்தை கவனிச்சுகிட்டு இருக்கான். உங்களைப் போலெல்லாம் உதவாக்கரை கிடையாது என்று கல்பனா சொன்னாள்.

யேய் இங்க பாருங்கப்பா, இப்போ உள்ள உயிர் போற பிரச்சினை கொரொனா வைரஸ் தான். அதுக்கு மருந்து கண்டுப்பிடிக்கிற ஆராய்ச்சில இறங்கி இருப்பானோ.?

அதுக்கு மூலிகை பண்ணையில போய் தான் அவனைத் தேடனும்.

ச்சே. . பாவம்டா விந்தியா, புருஷனை தொலைச்சுட்டு தவிக்கிறாள் கொஞ்சம் சீரியஸா திங்க் பண்ணுங்கடா. கண்டுப்பிடிக்க வழியை சொல்லுவீங்களா? அதை விட்டிட்டு ஆளாளுக்கு கருத்து சொல்றீங்க.?

விந்தியா தொலைச்சுட்டாள்ன்னா ? அவளா கூட்டிக்கிட்டுப் போனாள்.?

கும்பமேளாவுக்கா.? இல்ல கும்பகோணம் மாமாங்கத்துக்கா.? இல்ல இந்திர விழாவுக்காக.? எங்க கூட்டிப் போய் தொலைச்சாள்.?

நீ கொஞ்சம் அடங்குறியா.?

இல்ல கல்பனா எதையும் தொலைச்ச இடத்துல தானே தேடனும் அதுக்காக கேட்டேன்.

சங்கர், நீ ரெஸ்பான்சிபிள் பர்சன் உனக்கு தெரியும் பிரிவு என்ன மாதிரி சம்பவத்தை எல்லாம் உண்டாக்குமென்று. நீயும் இவனுங்கக்கூட சேர்ந்து கிட்டு கூத்தடிக்காதே, என்று கல்பனா கடுப்படித்து சொல்லவும் நண்பர்கள் ஆளுக்கொரு பக்கமாக தேட ஆரம்பித்தனர்.

தேடலில் ஒரு நாள் நீ என் கூட வா, நாம் போய் ஒரு இடத்துல விசாரிப்போம் என்று சங்கரை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் கல்பனா.

போகும் போது எனி ஐடியா கல்பனா.?

எஸ். . ஒன்னு இருக்கு. அன்பு வேலையை விட்டுட்டு குடும்பத்தை விட்டுட்டு பர்டிக்குலரா விந்தியாவை தவிக்க விட்டிட்டு எங்கேயும் ஓடி போறவன் கிடையாது. மனசு வெறுக்கிற அளவுக்கு வீட்டிலேயும் சரி, ஆபிஸ்லேயும் சரி, சீரியசா மேட்டர் எதுவும் நடக்கலை. எதிலேயோ சிக்கிக்கிட்டான் போல தெரியுது.

எதுல.,?

சொல்றேன் நீ நேரா ஆஸ்பத்திரிக்கு வண்டியை விடு.

அங்க போய்.,?.,!

விசாரிப்போம்.

புரியலை.

நீ சொன்னாயே., மூலிகை பண்ணை. . அது இதுன்னு. .

சத்தியமா எனக்கு ஒன்னும் புரியலை.

இல்லேடா., கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு பதிலா, அவன் கொரானாவால பாதிச்சுருந்து டீரிட்மெண்ட்ல இருக்கலாமில்ல.,

மெ..பீ..

என்கொயரில விசாரிப்போம்.

அலவ் பண்ணமாட்டாங்க. கொரோனாவால பாதிக்கப்பட்டவர்களை ஸ்பெஷல் வார்டில் தனிமைப் படுத்தி தீவிர சிகிச்சை கொடுக்கிறாங்க, உறவுக்காரர்கள் நண்பர்கள் யாரையும் அருகில் இருக்க விடறதில்லை.

எஸ்., கரெக்ட்.

இருவரும் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து விசாரிக்கின்ற போது, சங்கரின் தோளை தொட்டு திருப்பி நீங்க இரண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க என்று கேட்டான் அன்புச் செல்வன்.

வியப்பும் அதிர்ச்சியும் மேலிட, ஹேய் அன்பு உன்னை தான் தேடுகிறோம் என்றாள் கல்பனா.

அன்பு சோகமாக சிரித்தான். தெரியலை எப்படி தொற்றுச்சு, எங்கிருந்து தொற்றுச்சுன்னு எனக்கு தெரியலை. கொரோனா என்னை புடுச்சுக்கிச்சு. சாதாரணமாக டீரிட்மெண்ட்டுக்கு வந்த போது வைரஸ் சால பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். தனி வார்டில் படுக்க வைத்து விட்டார்கள். யாருக்கும் தகவல் சொல்ல முடியலை. அப்படியே சொன்னாலும் வீணாக பயந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள். இப்போ குணமாயிட்டு வெளியில் வர்றேன் என்றான்

சங்கரும் கல்பனாவும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டு ஹை-பை செய்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *