கல்யாண மாலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 2,551 
 

ஒரு விளம்பரம்:

மணமகன் தேவை
மணமகள் பெயர்: பவானி
ஊர்: சென்னை
தந்தை: நரசிம்ஹன்
தாய்: சிவகாமி
வயது: 36 DOB: ON REQUEST
வேலை: கணினி கம்பனி, சென்னை
படிப்பு:. பி டெக் ( கம்ப்யூட்டர் சயின்ஸ் ). எம் பி எ,
வருமானம்: ரூபாய்: 14 லட்சம் / வருடம்
உயரம்: 5.4
எடை: 55 கிலோ
உடன் பிறப்பு: இரண்டு சகோதரிகள்
மொழி: தமிழ்
எதிர்பார்ப்பு:
மணமகன் குறைந்தது ஒரு மேல் பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். வேலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தால் நலம். குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு கணவனாக இருக்க வேண்டும் அது அவசியம். (home maker )

வரதட்சினை எதிர்பார்க்க வில்லை நல்ல குணம், பார்க்க லக்ஷணம் அவசியம் தேவை. வீட்டு பெரியவர்களை அன்புடன் நடத்த வேண்டும். கூட்டு குடும்பம் எதிர் பார்க்க கூடாது. தனி குடும்பம் அமைக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள முகவரி: பவானி மொபைல்: XXXXXXXXXX

***

சம்பத்:நான் சம்பத் பேசறேன். பையனோட அப்பா. மடிபாக்கம் சென்னை. உங்க பொண்ணு ஜாதகம் கணேசன் மேட்ரிமொனியல்லே பார்த்தோம். ஜாதகம் பொருந்தியிருந்தது. அதுதான் மேலே பேசலாம்னுட்டு….உங்களுக்கு நேரமிருந்தா என் பையன் கல்யாண விஷயமா உங்க கூட பேச முடியுமா?

நரசிம்ஹன்: பேசலாமே! தாராளமா பேசலாம். பையன் என்ன பண்றான்?

சம்பத்: பையன் பேரு ராஜா. ஒரு பெரிய கம்பனியிலே சென்னையிலே தான் வேலை பண்றான். எம். டெக் மெகானிகல். எம் பி ஏ சம்பளம் ஒரு பதினைந்து லக்ஷம் வருஷம் வரும். இன்னும் கல்யாணம் ஆகலே. பொண்ணு பார்த்துண்டு இருக்கோம்.

நரசிம்ஹன்: அடடா! இது சரிபட்டு வருமா? என் பொண்ணு பதினாலு லக்ஷம் இப்பவே வாங்கறா. இன்னும் இரண்டு வருஷத்திலே 20 எட்டிடுவா. சரி பாக்கலாம். பொண்ணு கிட்டே பேசிட்டு சொல்றேன்!

சம்பத்: சரி சார்.

நரசிம்ஹன்:: பையனுக்கு என்ன வயசாறது?

சம்பத்: நாப்பது முடிஞ்சு 41 ஆரம்பம் சார்.

நரசிம்ஹன்:: கொஞ்சம் வயசு வித்தியாசம் அதிகம் போல இருக்கே. நாங்க 2 – 3 வயசு வித்தியாசம் தான் பாக்கறோம். சரி, பரவாயில்லே, பையனுக்கு சமையல் பண்ண தெரியுமா?

சம்பத்: தெரியாது சார். ஆனா, கல்யாணத்திற்கு முன்னாடி எல்லாம் கத்து கொடுத்திடுவோம்!

நரசிம்ஹன்: சரி போகட்டும், சீர் என்ன செய்யாலாம்னு இருக்கீங்க?

சம்பத்: நீங்க சொல்றபடி செஞ்சுடலாம் சார்.

நரசிம்ஹன்:: நல்ல கார் வாங்கி கொடுத்திடுங்க. மத்ததெல்லாம் உங்க விருப்பபடி.

சம்பத்: சரி சார்.

நரசிம்ஹன்: பையனுக்கு கார் ஓட்ட தெரியுமெல்லே?

சம்பத்: பையனுக்கு கார் நல்லாவே ஓட்டத்தெரியும் சார்.

நரசிம்ஹன்:: அப்புறம், சொல்ல மறந்திட்டேன்! பொண்ணு கல்யாணத்திற்கு பிறகும், அவ சம்பளத்தை எங்க கிட்ட தான் கொடுப்பா! நீங்க கேக்க கூடாது. சம்மதமா?

சம்பத்: தாராளமா! எங்களுக்கு ஓகே! ஆனா, எதுக்கும் பையனை ஒரு வார்த்தை கேட்டுக்கிறோம். அவன் என்னமோ பாதி பாதி என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

நரசிம்ஹன்:அப்படியா! இது பத்தி எங்க பொண்ணை கேட்டுண்டுதான் முடிவு சொல்ல முடியும். இந்த வரதட்சினை?

சம்பத்: பையன் கிட்டே ஒரு கோடி டெபாசிட் இருக்கு. அதை கொடுத்திடறோம்.

நரசிம்ஹன்:: பையனுக்கு சொந்தமா வீடு இருக்கா?

சம்பத்: இன்னும் வாங்கலே சார். சீக்கிரம் வாங்கிடுவான். பாங்க்லே லோன் போட்டிருக்கான். எப்படியிருந்தாலும், எங்க வீடு, எங்களுக்கு அப்புறம் அவனுக்கு தானே!

நரசிம்ஹன்:: ரொம்ப பழைய வீடோ?

சம்பத்: இல்லே! இப்போ தான் 2௦ வருஷமாகிறது. அது பேரிலே லோன் எதுவுமில்லே. புதுசு மாதிரி தான் இருக்கும். மூணு பெட்ரூம் ஹால் கிச்சன்.

நரசிம்ஹன்:: அது ஓகே. பையனுக்குன்னு தனி வீடு இருந்தா நல்லா இருந்திருக்கும். அப்புறம், கல்யாணத்திற்கு பிறகு பையனும் பொண்ணும் தனி குடுத்தனம் தான் போகணும். நீங்க போய் அங்கே நிக்க கூடாது.

சம்பத்: அப்படியே ஆகட்டும் சார். எங்க வீட்டை பையன் எடுத்துக்கட்டும். நாங்க ரிடைர்மென்ட் ஹோம்லே போய் செட்டில் ஆயிடலாம்னு இருக்கோம். குழந்தைங்க சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். இல்லியா!

நரசிம்ஹன்: சரி, அப்படின்னா, உங்க பையன் ஜாதகம், உங்க அட்ரஸ்,போட்டோ எல்லாத்தையும் வாட்சப்லே அனுப்பி வையுங்க. பார்த்துட்டு, ஒரு நல்ல நாளா பார்த்து, நாங்களும் பொண்ணும், உங்க பையனை, பிள்ளை பாக்க வரோம். பொண்ணுக்கு பிடிச்சிருந்தா, மத்த விஷயங்களை மேலே பேசலாம்.

சம்பத்: அப்படியே ஆகட்டும். ரொம்ப தாங்க்ஸ்.

****

நான்கு நாள் கழித்து:

நரசிம்ஹன் மொபைல் சிணுங்கியது. எடுத்தார்.

நரசிம்ஹன்: ஹல்லோ!

சம்பத்: நாந்தான் சம்பத் பேசறேன். நீங்க வரேன்னு சொன்னீங்களே?.. என்னிக்குன்னு சொன்னா, சௌகரியமா இருக்கும்.

நரசிம்ஹன்: சம்பத்தா! சொல்லுங்க! என்ன விஷயமா?

சம்பத்:. நாலு நாள் முன்னாடி என் பையன் ராஜா சம்பந்தமா உங்ககிட்டே பேசினேன். உங்க முடிவு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

நரசிம்ஹன்: ஒ! அதுவா? நான் பொண்ணோட பேசினேன். பொண்ணுக்கு இப்போ கல்யாணம் வேண்டாமாம். இப்போ தானே 36 வயசாறது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு சொல்றாங்க. பையனுக்கு வேறே 4௦ வயசாரதாம். கொஞ்சம் வயசு வித்தியாசம் ஜாஸ்தின்னு பீல் பண்றாங்க. இந்த சம்பந்தம் சரி பட்டு வராது போல் இருக்கு. நீங்க வேறே இடம் பாருங்க. ஆல் தி பெஸ்ட்.

சம்பத்: சரி! அப்போ வெச்சுடறேன்!

****

சம்பத்தின் மனைவி: என்னங்க ஆச்சு! என்னிக்கு வராங்களாம்?

சம்பத்: இந்த இடமும் அமையலே ஜானகி! இந்த பொண்ணு வீட்டுக் காரங்க, மேட்ரிமொனியல்லே போடறது ஒண்ணு. நேரக்க பேசறது ஒண்ணு. பையனை பிடிக்கல. நிறைய சம்பளம், வெளி நாட்டு வேலைன்னுட்டு ஏதோ எதிர்பார்க்கறாங்க போல. நம்ம கிட்ட சாக்கு போக்கு சொல்லி மழுப்பறாங்க. சரி விடு, வேறே வரன் பாக்கலாம். பொண்ணு கிடைக்கறது தான் குதிரை கொம்பா இருக்கு! பாப்போம்! கடவுள் விட்ட வழி.

சம்பத்தின் மனைவி: எவ்வளவு தான் பாக்கறது? என்னிக்கு நம்ப பையனுக்கு கல்யாணம் ஆகப் போறதோ தெரியலியே. இப்பவே நாப்பது வயசாச்சு! இப்படியே இருந்துடுவானோ? அன்னிக்கே சொன்னேன்! கம்ப்யூட்டர் படிடான்னு! கேக்கலியே! இன்னிக்கு கஷ்டப் படறோம்!

சம்பத்: கம்ப்யூட்டர் படிச்ச எல்லாரும் ஓஹோன்னு இருந்திடரதில்லை ஜானகி. ஒரு சில பேருக்கு தான் அந்த அதிர்ஷ்டம் அமையறது. அதையெல்லாம் பெருசு படுத்திக்காதே. ஏதோ ஜாதகம் பொருந்தி வரதேன்னு பார்த்தேன். இருக்கட்டும், வேறே தேடலாம். ஜாதகமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். பொறுத்திருந்து தேடுவோம். இப்போதான் ராஜாவுக்கு 4௦ ஆறது. இன்னும் காலம் இருக்கு. பொண்ணு கிடைக்கும். காலம் மாறும். நம்ம பையனுக்கும் நல்லது நடக்கும். கவலைப் படாதே.

சம்பத்தின் மனைவி: அதுவும் சரிதான்.எல்லாம் அவன் பார்த்துப்பான்.

நடப்பதை கேட்டுக் கொண்டிருந்த மகன் ராஜா,ஏதோ சொல்ல வந்தான்.அதை பார்த்த சம்பத் கேட்டார்.

சம்பத்: சொல்லு ராஜா, என்னவோ சொல்ல வந்தியே? என்ன விஷயம்?

ராஜா: ஒண்ணுமில்லேப்பா!இந்த காலத்திலே போய் சாதி, சமூகம், ஜாதகம் இதெல்லாம் பார்த்துகிட்டு. நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா?

சம்பத்: சொல்லு ராஜா.

ராஜா: எங்க ஆபீஸ்லே உமான்னு ஒரு பொண்ணு இருக்கா. நம்ம ஜாதி இல்லே. வேறே ஜாதி. என்னை விட ரெண்டு வயசு சின்னவ. பி டெக் படிச்சி என்கூட வேலை செய்யறா. அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு. எனக்கும் அப்படித்தான். எனக்குன்னு பொண்ணு தேடி அலையறதை விட்டு விட்டு, பேசாம அவளையே எனக்கு பேசி முடியுங்களேம்பா!

சம்பத்: அதுவும் சரி தான். அப்படியே செய்யலாம். ஜாதகத்தை தூர போடு. அந்த பெண்ணோட அப்பாவை போய் நாளைக்கே பாக்கலாம். என்ன சொல்றே ஜானகி?

ஜானகி: சரிங்க. ராஜாவுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான். ஜாதியாவது மதமாவது, எல்லாம் நம்ம மனசுதான்!

சம்பத்: அவன் பாத்துப்பான் அப்படின்னு நீ சொன்னது, ராஜாவை தானா?

ஜானகி: அட போங்க! நீங்க வேறே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *