கல்யாணீ…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 7,070 
 

பெரிய ஃபிளாஸ்க்குடனும் நான்கு டம்ளர்களுடனும் அறைக்குள் நுழையப் போன மங்களாம்பாள், ‘சட்’டென நின்று விட்டாள். உள்ளேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள் காதில் அறைந்தன.

“ஒண்ணு ஞாபகத்துலே வச்சுக்கோங்க… கல்யாணிக்கு சட்புட்டுனு ஒரு கல்யாணத்தை நடத்திப்புடணும்” – மூத்தவன் ரமேஷ்.

“என்ன அண்ணா… திடீர்னு சீர்திருத்தவாதியாயிட்டே” – நக்கலாக கேட்டான் இரண்டாமவன் ராமன்.

“இல்லேடா… கல்யாணிக்கு வேற கல்யாணம் ஆயாச்சுனா… சேகரோட பங்கை தர வேண்டியதில்லைல… அதான்!”

“ஓ… இப்படி ஒரு பிரச்னை இருக்குதா இதுல..?!” – ராமன் இழுத்தான்.

“போனவன்… 3 மாசம் முன்னாலயே போய்ச் சேர்ந்திருக்கக்கூடாதா…” – மூன்றாமவன் பாபு சலித்துக் கொள்ள, மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர்.

“… அவன் கல்யாணச் செலவும் மிச்சமாயிருக்கும். இப்படி அவ பொண்டாட்டிக்கும் நாம மறுகல்யாணம் பண்ண வேண்டிய தில்லாமப் போயிருக்கும். ஹே ஹே!” – பாபுவின் சிரிப்பு சத்தம் நாராசமாக ஒலித்தது. மங்களாம்பாள் வந்த சுவடு தெரியாமல் படியிறங்கினாள். ‘நான் பெத்த புள்ளைங்களா இதுங்க..?! கூடப் பிறந்தவன் அல்ப ஆயுசுல போனதப்பத்திகூட வருத்தப்படாம…’ – கண்ணீர் பொங்கியது.

அறைக்குள் நுழைந்தவளின் விழிகள், கணவரைத் தேடியது.

“ஏங்க… நம்ம பிள்ளைங்க மாடியில…” என்று துவங்கியவளை இடைவெட்டியது ராகவன் குரல்.

“பின்பக்க பால்கனியில நின்னு நானும் கேட்டுட்டுதான் இருந்தேன் மங்கா…”

அவள் கேவினாள். அவர் அவள் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார்.

சேகர்… மங்கா, ராகவன் தம்பதிக்கு கடைசிப் பையன். முதல் மூன்று பையன்களும் பள்ளியிறுதி வகுப்பை எட்டிப் பிடிப்பதில் நிற்க… வயிற்றில் தங்கிய கருவை, ‘இது பெண் குழந்தைதான்’ என்று ஆசை ஆசையாக பெற்றுக் கொண்டவளுக்கு ஏமாற்றம் தந்து பிறந்தவன். வயது வித்தியாசத்தால் அண்ணன்களிடம் அவ்வளவாக ஒட்டுதல் இல்லாமல் போனாலும், அம்மா பிள்ளையாக வளர்ந்து, படிப்பு, வேலை என்றானதும், மங்களாம்பாளின் விருப்பப்படியே கல்யாணியை கைப்பிடித்தான் சேகர்.

மணமாகி முழுதாக மூன்று மாதங்கள்கூட முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஜுரத்தில் விழுந்தவன், டாக்டர்களுக்கே என்ன நோய் என்று பிடிபடுவதற்குள் பறித்த பூ போல சட்டென்று வாடி விட் டான். மலர்ந்தும் மலராமல் அரும்பாக நிற்கிறாள் கல்யாணி.

“மாமா… மாமா…” – யாரோ கதவைத் தட்டியபடியே உள்ளே நுழைந்தார்கள். அப்போதுதான் லேசாக கண்ணயர்ந்த ராகவன் சட்டென விழித்தெழுந்து உட்கார்ந்தார்.

“அத்தே… மாமா… நீங்கதான் என்னையும் என் தங்கையையும் காப்பாத்தணும்…” என்றவாறே காலில் விழுந்தாள் நீலா, கல்யாணியின் அக்கா!

“என்னாச்சுமா..? எழுந்திரு…” – இருவரும் பதறினர்.

“மாமா… என் வீட்டுக்காரர் உங்ககிட்ட சண்டை போட்டு கல்யாணிக்காக சொத்தை பங்கு கேட்டு வாங்குவாராம்…”

“சண்டை எல்லாம் எதுக்கு நீலா..? கல்யாணிக்கு நாங்க செய்ய வேண்டிய கடமைதானே அது…” – மங்கா சமாதானமாக பேசினாள்.

“அய்யோ அத்தே… அது இல்லே! சொத்தை உங்ககிட்டே இருந்து பிரிச்சு வாங்கின பிறகு, சொத்து கை மாறாம இருக்க கொஞ்ச நாளானதும் கல்யாணியை அவரே கல்யாணம் பண்ணிக்கப் போறாராம். வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கற தங்கச்சிக்காக அழறதா… வாழ்க்கையை தொலைக்கப் போற எனக்காக அழறதானு தெரியல. கல்யாணியை தயவுசெஞ்சு எங்கூட அனுப்பி வச்சுடாதீங்க. இந்த வக்கிரபுத்திக்காரனால எந்த கெட்டதும் நடந்துடாம இருக்கணும்” என்றவாறே வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நீலா வெளியேற, மங்காவுக்கும் ராகவனுக்கும் நெருப்புக் குளத்தில் போட்டதுபோல மனது எரிந்தது.

“மங்கா… வக்கீலய்யா வந்திருக்கார்… காபி எடுத்தா…” – ராகவன் குரல் கேட்டதும், மகன்கள் மூவரும் ஆணியடித்தாற்போல சட்டென்று நின்று விட்டனர். கல்யாணியின் மாமா, அறைக்குள் இருந்து பாய்ந்து வந்து வெளியே நின்று கொண்டார். மகன்கள் மூவரும் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர். ஹாலில் திடீரென்று ஒரு நிசப்தம் கனமான கம்பளியாகக் கவிழ்ந்தது!

“பாருங்க ராகவன்… நீங்க சொன்ன மாதிரியே மூன்று மகன்களுக்கு, உங்க ரெண்டு பேருக்கு, கல்யாணிக்குனு சொத்தை ஐந்து பாகமா பிரிச்சாச்சு. கல்யாணியை நீங்க மகளாகத் தத்து எடுக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செஞ்சாச்சு…” என்று லாயர் முடிக்கும் முன்பே…

“என்ன நான்சென்ஸ் இது..?” என்று இடையில் சீறினான் ரமேஷ்.

“என்னப்பா இது… கல்யாணியைத் தத்து எடுக்கறீங்களா..?” – பாபு கேட்டான்.

“உங்களுக்கு தத்து எடுக்கணும்னு ஆசையாயிருந்தா, எங்க பிள்ளைகள்ள யாரையாவது தத்து எடுத்து வளங்களேன். அதை விட்டுட்டு சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு” – ராமன் படபடத்தான்.

குரல் உயர்த்திப் பேச ஆரம்பித்தார் ராகவன்.

“உஷ்! எல்லாம் யோசிச்சுதான் முடிவெடுத்து இருக்கேன். கல்யாணிக்கு பெற்றோரும் இல்ல. அக்கா வீட்டுல எத்தனை காலம் பாரமா அவ உட்கார முடியும்..?” – இடையில் குறுக்கிட வந்த கல்யாணியின் மாமாவை பேசவிடாமல் கையமர்த்திய ராகவன், தொடர்ந்தார்…

“கல்யாணி எங்க மருமகளா இந்த வீட்டுல தங்கறதைவிட, மகளா தங்கறதுதான் சரினு எங்களுக்குப் படுது. நாங்க அவளை சட்டப்படி மகளா சுவீகரிச்சுட்டா, எங்க காலத்துக்குப் பிறகும் இந்த சட்டரீதியான உறவு அவளுக்கு பாதுகாப்பா இருக்கும். யாருக்காகவும், எதற்காகவும் அவள் பயப்படவும் வேண்டாம்; சங்கோஜப் படவும் வேண்டாம். சேகரோட பங்கைத்தான் அவளுக்குக் கொடுக்கிறோம். அந்தச் சொத்து அவளோட மனசுக்கு பலமா, மாரல் சப்போர்ட்டா இருக்கும்” என்று பேசி முடித்த ராகவன், மேல்துண்டால் முகத்தை அழுந்தத் துடைக்க… துளிகூட சலசலப்பில்லாமல் நிசப்தமானது சூழல்.

கல்யாணி சாய்ந்திருந்த மேஜையில் இருந்த அந்தப் பெரிய புகைப்படத்தில் மந்தகாசமாக சிரித்துக் கொண்டிருந்தான் சேகர், ஊதுபத்தி வாசனையில்!

– ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *