கப்பி மண்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 6,886 
 

தொட்டுப்பார்த்தலட்டும் பிய்த்துப்பார்த்த மைசூர் பாகும் கிலோ 150 என்றார்கள்.

லட்டுக்கொஞ்சம் பதம் கூடித்தெரிந்தது.தொட்டுப்பார்த்தாலே கொஞ்சமாய் அமுங்கியது.மைசூர்பாகு அப்படியில்லை.பதமும் இனிப்பும் சரியான விகிதத்தில் இருந்தது.கேட்டதற்கு தீபாவளி நேரம் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.இவனுக்கு ஸ்வீட் எடுத்து சாம்பிள் காண்பித்த பெண்.

தவிர மொதமொத இந்த தீபாவளிக்குத்தான் ஸ்வீட் போடுறோம்,அதுதான் லட்டும் மைசூர்பாகும் போதும்ன்னு நிறுத்திக்கிடோம். அளவாத்தான் போட்டோம் பாத்துங்கிடுங்க.இங்க வழக்கமா சேவு மிக்சர் வாங்க வர்றவுங்க கிட்ட மட்டும் சொல்லி வச்சம்,ஆனா அடுத்தடுத்து ஆள்கள் வந்து கேக்க ஆரம்பிச்சிட்டாங்க/என்ன செய்ய அப்புறம்,அவதி அவதியா போட்டுத் தர்றோம்.

அப்பிடித்தரும்போது இப்பிடித்தான்கொஞ்சம் பெசகலாகிப் போகுது.அப்படியானதுதான்இந்த லட்டோட பதம்.

இதுக்கு ஸ்வீட் மாஸ்டர கொறசொல்ல முடியாது. அவரும் என்னதான் செய்வாரு பாவம்.நாலு நாளா ராத்திரி பகல்ன்னு பாக்காம பலகாரம் போட்டுக் குடுத்துக்கிடே இருக்காரு.எங்க கடையோட சேத்து அவரு பலகாரம் போட்டுக் குடுக்கிறதுநாலாவது கடை என்றாள்.

இந்த நேரத்துலஅவுங்க நாலுகாசு பாத்துக் கிட்டாத்தான் உண்டு எனச் சொன்னவளிடம் முதலில் சேவுப் பாக்கெட்டும் மிக்சர் பாக்கெட்டும் வாங்குவதற்காகத் தான்வந்தான்.

சாத்தூர் பஸ்டாப்பாலத் தின்அருகிலாய் இருந்த கடையில் டீ சாப்பிடப்போன ஒரு பொழுதொன்றில்தான் சேவுக்கடையைப் பார்த்தான்.

செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ்செண்டரும் ,டீக்க்கடையும், ஒயின் ஸாப்பும், பெட்டிக்கடையும்அதன் அருகாமையாய் இருந்த காம்ளக்ஸில் பிரிண்டிங் பிரஸ் ஸிமாய் சூழ்கொண்ட இடத்தில்தான் அந்த சேவுக் கடையுமாய் இருந்தது.

இவனது யூனியனில் மிக அவசரமாக ஒரு நோட்டீஸ்அடைக்கவேண்டும் எனச் சொன்ன ஒரு குளிர்கால மாலை நேரமொன்றில் பழனியப்பா ப்ரஸ் வாசலில் போய் நின்றான்.மணி ஐந்து முடிந்து ஆறைக்கூடசரியாகஎட்டித் தொட்டிறாத இரவுகனிந்துவருகிறநேரம்.

இவனுக்கானால் குளிர் ஒத்துக்கொள்வதில்லை சுத்தமாக வெயில் என்றால் சொல்லுங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஏறி விளையாடுவான் வைக்காத ஏணியில் ஏறி இல்லாத சூரியனை எட்டிப்பிடிப்பதாய் கற்பனைப் பண்ணிக் கொண்டு அருகில் போய் நிற்பான்.

இப்படித்தான் கிராமத்துகஅலுவலகக்கிளை ஒன்றில் பணிபுரிந்த ஒரு அக்னி நட்சத்திர வேனற்காலப்பொழுதுகளில் அலுவலகத்திற்குள் உட்கார்ந்து வேலை பார்க்க முடியாமல் வேர்த்து ஊற்றும்.உடலெல்லாம் வரி வரியாக இறங்குகிற வேர்வைக்கோடுகளை துடைத்தெடுத்த கர்சீப்க்கூட நனைந்து போகும். அப்படி யானசூழலிலும்கூட பெரிய அளவிலாய் ஒன்றும் தொந்தரவாக உணர்ந்ததில்லை. ஆனால் ஆர்வம் காரணமாகவோ அல்லது தேவை காரணமாகவோ இது போலான குளிர் நேரத்தில் கூடுதலாக கொஞ்சம் அலைந்து விட்டால் உச்சந்தலை எரிய ஆரம்பித்துவிடும்.இரண்டு காதுகளின் துவாரங் களின் வழியாக உள் செல்கிற காற்று முகத்தை சில்லிடப்பண்ணி தலையில் ஏறி அமர்ந்து விடும்.அப்படியாய் தலையில் ஏறிய அன்று உச்சந் தலை எரிந்து கொண்டு இரவெல்லாம் தூங்க விடாது.அட சண்டாளத்தனமே என இப்படி ஒன்றா என டாக்டரிடம் போய் கேட்டால் அவர் சொல்கிறார்.ஈர நேரத்திலும் குளிர் காலத்திலும் இரண்டு காதிலும் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள் என ப்ரஸ்க்காரர் கூடசொன்னார்,ஏன் சார் இப்பிடி, குளிர் ஒத்துக்காதுன்னு தெரியு மில்ல அப்புறம் ஏன் என, அதற்கு இவன் சிரித்தபோது பதிலுக்கு அவரும் சிரித்தார்.நோட்டீஸ் மேட்டரை வாங்கிப்பார்த்துவிட்டு அப்படியே மேஜை மீது வைத்து விட்டு வாருங்கள் டீ சாப்பிடப்போவோம் என்றார்.

பக்கத்திலிருந்த கடையில் டீசாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதுதான் தற்செயலாக அந்தசேவுக்கடையைப்பார்த்தான். அதுகடையாய்ப் படவில்லை. வீடாகவேபட்டுத் தெரிந்தது.இக்கட்டான வாசல்படியிலிருந்து காட்சிப்பட்டு விரிந்த தரையைக் கொண் டிருந்த வீட்டின் உள்ளேயே ஆபீஸ் ரூம் போல செக்ஷன் போட்டுப் பிரித்திருந்தார்கள்.

இம்மாதிரி மரச்சட்டம் போட்டு கண்ணாடி அடைப்பு போட்டிருக்கிற ரூமைப் பார்க்கிறபோதெல்லாம்சொல்லூசன்ராமநாதனைத்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

அண்ணே சொல்லூசன் வேணுமில்ல,ஏதாவது ஒரு விஷயம்ன்னா சும்மாவா இருக்கு.தீர்வு தெரியணுமில்ல என்பார்.சும்மா அள்ளிதெளிச்ச கதையா சொன்னா எப்பிடி.?நீயி சும்மாஇரின்னேன்,அவுங்க பேசுன மாதிரி நீயும் பேசிட்டு அலையாதண்ணே என்பார்.

பரம்பரை பரம்பரையா தச்சுத் தொழில் செய்கிற குடும்பம்.எங்க தாதாவுக் கெல்லாம் எங்க ஊர்ல அப்பிடி ஒரு மரியாதை உண்டு தெரிஞ்சிக்க என்பார்.

காலங்காத்தால ஆத்துல குளிச்சிட்டு நடந்து வந்தார்ன்னா ஊருக்குள்ள அழுகுற புள்ள கூட வாயமூடும்.தெரிஞ்சிக்க,

காலையில நாலரை மணிக்கெல்லாம் எந்திரிச்சுருவாருண்ணே.அப்படி எந்திரிக் கிறவரு நேரா ஆத்தங்கரையில போயிதான் நிப்பாரு,அங்க ஆத்துல குளிச்சிட்டு கரையில இருக்குற பிள்ளை யார் கோயில நாலு சுத்திச்சுத்திட்டு ஒடம்புல திருநீரு பூச்சோடயும், விரிச்சி விட்ட தலைமுடியோடயும்தான் வருவாரு பாத்துக்க, எதுத்தாப்லபாக்குற அத்தன பேரும்துண்டெடுத்து இடுப்புலகட்டிக்கிரு வாங்க, எனக்குநெனைவுதெரிஞ்சிஅவருதலைமுடிய என்னைக்கும் வெட்டுனது கெடையாதுண்ணே,எப்பவும் பாதிமுதுகுவரைக்கும் முடி தொங்கும்ண்ணே, அள்ளி முடிஞ்சிஒருகொண்டஊசிய சொருகிக்கிருவாருண்ணே, அந்த கொண்டஊசி அம்பாசமுத்துரத்துல மட்டும்தான் கெடைக்கும், அது மரத்தால செஞ்சதுண்ணே,ரொம்ப மெலிசா இருக்கும்,ஆனா ஒடைச்சா ஒடையாதுண்ணே,கல்ல தூக்கிப்போட்டு வம்படியா நச்சாத்தான் உண்டு.அது இவரு சின்னப்புள்ளையா இருக்கும் போது தொழில் கத்துக்கிட்ட தச்சுப் பட்ட றையிலஇருந்து கெடைக்குதுன்றாங்க. ஆத்துர அவசரத்துக்கு ஊசி கெடைக் காத நேரத்துல இவரு என்ன செய்வாருன்னா இவரே மரத்துல செதுக்கிருவா ருன்னா பாத்துக்கவேன்.

இவரு தச்சு வேலை பாத்த நாட்களவிட குறி சொல்லவும் ஜாதகம் எழுதவும் ஜோசியம்பாக்கவும் கல்யாணப் பத்திரிக்கை எழுதவுமா இருந்த நாட்கள்தான் அதிகம்.

இத்தனைக்கும் அவரு அம்பாசமுத்துரத்துல ஒரு பெரியஆள்கிட்ட ரொம்ப கஷ்டபட்டு தொழில் கத்துக்கிட்டாரு. சம்பளமெல்லாம் கெடையாது.சாப்பாடும் டீயும் மட்டும்தான்,இது போக பொங்கல் தீபாவளியன்னைக்கும்,உள்ளூர் கொடையன்னைக்கும் கண்டிப்பா போனஸ் புதுத் துணி உண்டு.ஆனா வேலை பெண்டெடுத் துருமாம்,சாப்பாட்டுக்கும் டீக்குமா வயித்த தொங்கப் போட்டு காத்துட்டிக் கெடக்கணுமாம். வேலையில ஏதாவது தப்பு நடந்தா பொசுக்கு ன்னு கை நீட்டிருவாங்க ளாம்.இதுக்கெல்லாம் இஷ்டப்பட்டு இருந்தா தொழில் கத்துக்கிடலாம்,இல்லையின்னா போக வேண்டியதுதான் வெரலச்சூப்பீட்டு. இத்தனிக்கும் இவரு ஒண்ணும் வசதியில்லாத குடும்பத்துல பொறந்தவரு இல்ல, பின் ஏன் இப்பிடிப்போயி இத்தனை செரமப்பட்டு தொழில்க் கத்துக்க ணும் ன்னு அவங்க அப்பாகிட்ட கேட்டப்ப அவுங்க அப்பா சொன்னாராம் உக்காந்து தின்னா மலையும் கரையும்பாங்க,கத்துக்கிடட்டும் ஏதாவது உருப்படியா, கை வசம் ஒரு தொழில் இருந்தா எங்க போனாலும் பொழச்சிக்கலாம்.அதுனாலதான் அவன் அவ்வளவு அவமானப் படுறான்னு தெரிஞ்சும் தொழில் கத்துக்க விட்டி ருக்கேன்,அங்க கத்துக்கிறத இங்க கத்துக்கிலாம்தான்,ஆனா என்ன இருந்தாலும் சொந்த யெடம்,சொந்த மொகம், செல்லம் வந்துரும்,கறார கத்துக்கிட மாட்டான் அதான் அங்க கொண்டோயி விட்டேன் என்றாராம்.

அப்படியாய் விடப்பட்ட அவர் அடிபட்டு அவமானப்பட்டு புடுங்குப்பெத்து டீக்கும், சோத்துக்குமா வயித்தக் காயப்போட்டுக்கெடந்து வேலை செஞ்சி பழகுனவரு, அந்ததொழிலகத்துக்கிட்டதுக்கு அப்புறமா அந்தத் தொழில உயிரா நேசிச்சிருக்காரு அவுங்கிட்ட தொழில் கத்துகிட்டு வந்ததுக்கப்புறம் எந்நேரமும் உளியும் கையுமாத் தான் அலைஞ்சிக்கிட்டு இருந்துருக்காரு.

அவரப்போல வேலை செய்ய அந்த ஊர்ல யாரும்இல்லைன்னு சொல்வாங்க, பெரும்பாலும்உழவுக்கலப்பவேலை பாக்க, டேபிள்மேஜைசெய்யங்குற வேலை களைத்தவிர்த்து வீடுகளுக்கு ஓடு வேயப்போவாரு,ஒரு முழு வீட்டுக்கும்ன்னாலும் சரி இல்லைன்னா ஒருபகுதி வீட்டுக்குன்னாலும் சரிஅவர் கைபட்ட அந்த ஓட்டுச்சாப்பு அப்பிடியே பாக்கப் பாக்க நம்மளோட அப்பிடியே பேசும்.

ஆமாம் அப்பிடி வேலசெய்வாரு, அப்பிடியெல்லாம் மரவேலைக்கும் அவருக்குமா இருந்த ஒறவு எப்பிடி கொறஞ்சிருச்சிஎந்த நேரத்துலஅதுலசரிவாச்சுன்னு தெரியல.

குறி சொல்ல,ஜோசியம் சொல்ல ஜாதகம் எழுத தீவிரமாயெறங்கீட்டாரு,இது மட்டும்ன்னு இல்ல மந்திரிக்க தாயத்துக்கட்ட கல்யாணப் பத்திரிக்கை எழுதுறதுன்னு… எல்லாம் செய்வாரு,

உள்ளூர்லமட்டும் இல்ல,சுத்துப்பட்டியிலயிருந்து கூடஆள்க வந்து போவாங்க, பாத்தா அந்நேரமெல்லாம் வீடே கோயில் மாதிரி தான் இருக்கும், நெறஞ்ச ஊதி பத்தி வாசனையும்,சாம்புராணி பொகையுமாத்தான் இருக்கும் .இது போக சந்தனம் குங்குமம்ன்னு வீடே ஜம்முன்னு இருக்கும்.

என்னதான் இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் கூட வாரத்துக்கு ஒரு தடவை உளியத்தொடலைன்னா தூக்கம் வராது அவருக்கு.

யாராவது ஒருத்தர்சுத்துப்பட்டியில வேலைக்குச்சொல்லிவச்சிகூட்டிட்டு போயிருவாங்க,இவருக்கும் மூக்குல வேர்த்த மாதிரி இந்த ஊர்ல இன்னார் வீட்லவேல காத்துக்கிட்டுக்கெடக்காம்லஎனப்போய் கேட்டுட்டுவந்துருவாரு சுத்துப்பட்டிக்கு எங்க போனாலும் நடைதான்.

இவருபோய்க்கிட்டு இருக்கும் போது ஏதாவது மாடு வண்டிஎதுனாச்சும் போயிக்கிட்டு இருந்துச் சின்னா நின்னு ஏத்திக்கிட்டுப் போயிருவாங்க, அப்பிடியும் ஏதாவது வரலைன்னாவெத்தலையமென்னுக்கிட்டுஇவரு வாட்டம் காட்டுப் பாதையில நடந்து போயிருவாண்ணே, அது பத்து கிலோமீட்டருக்கு மேல இருந்தாகூட சரிதான்.

அந்தமாதிரிவேலைகளுக்குபோறநாட்கள்லயாராவதுவர்ரேன்னு சொல்லீருந் தா வேணாம்ன்னுசொல்லீருவாருண்ணே, ஏன்னாவர்ரேன்னு சொன்னவுங்க சமயத்துல கார்ல வர்ற அளவுக்கு பெரிய ஆளாஇருப்பாங்க, இல்லைன்னா கார் வச்சி கூட்டீட்டு போற அளவுக்கு வருவாங்க,

இதுல பெரிய பெரிய பெரியஅதிகாரிகளும்அடக்கம். அவுங்கநம்பிக்கை பொய்யா போயிறக்கூடாதுங்குறதுக்காகஒரு டைம் டேபிள் போட்டு வச்சிருப் பாரு.

அப்பிடியெல்லாம் இருந்தவரு ஒரு நா திடீர்ன்னு தலை கீழா மாறிப் போயிட்டாரு.

வழக்கம்போல காலையில எந்திரிச்சு கொளத்துக்கு போனவரும்போது முடிய வெட்டீட்டு திருநீரு பூசாமத்தான் வந்தாரு. என்னனுன்னு கேட்டப்ப யாரு கிட்டயும் ஒண்ணும் சொல்லமாட்டேன்னுட்டாரு. அவருக்கு நெருக்கமான ஒருத்தர்கிட்ட மட்டும் சொல்லீருக்காரு, கல்யாணத்துக்காக நாளக் குறிச்சிக் குடுத்த ஒரு பையன் கூடாத சகவாசத்தால போயி கல்யாணமே நின்னு போச்சாம். அதக் கேள்விப்பட்ட அன்னைக்கில இருந்து இவரு குறி சொல்றது, கல்யாணத்துக்கு நாள்க்குறிக்கிறது மாதிரியான வேலைகளையெல்லாம் விட்டுட்டாரு. பழைய படிக்குமா உளிய கையெலெடுத்துட்டாரு.உள்ளூர்லயும் சுத்திப்பட்டியிலயும் வேலை கெடைக்கிற அன்னைக்கி பாப்பாரு, இல்லைன்னா வண்டி நேரா அம்பாசமுத்துரம் நோக்கி கொளம்பீரும் பாத்துக்க, கல்யாணத்துக்கு நாள் குறிச்சிவாங்கீட்டுப்போன அந்த……….கல்யாண நாள் வரைக்குமாவது ஒழுக்கமா இருந்து தொலைக்க வேண்டியது தான, அவனுக்கு அப்பபம் தண்ணி சாப்புடுற பழக்கம் உண்டுண்ணே,மொதல்ல கல்யாணம் காச்சி,யெழவுவீடுன்னுஇருந்த நாயி கொஞ்ச கொஞ்சமா ஒயின் ஷாப் வாசல்லயே குடி இருக்க ஆரம்பிச்சுட்டான்.விடுவாங்களா சும்மா, எப்பம்,எப்பம்ன்னு காத்துக்கிட்டு இருந்த நாதாறிங்க இவன் தோள் மேல கையப்போட ஆரம்பிச் சிட்டாங்க.

அப்புறம் என்ன,தண்ணிதான்,கடைச் சாப்பாடுதான் ஜாலியான சுத்தல்தான், பெரிய வீட்டுப்பையன் இதுல கல்யாணம் வேற முடிவாயி இருக்கவும் வீட்ல அவ்வளவா கண்டுக்கல,அது இதுன்னு கேள்விப்பட்டதக்கூட கல்யாணத்தக் காரணம் காட்டி தட்டிவிட்டுட்டாங்க, அது பையபுள்ள அவனுக்கு சௌகரியமா போச்சு. குடி கொண்டாட்டம்ன்னு இருந்தவன் அப்பிடியே மெள்ள மெள்ள நகந்து பொம்பள சகவாசத்துல கூடிப்போன பெறகு நிக்குமா அது, ருசி கண்ட ஒடம்பு .அலைய ஆரம்பிச்சுட்டான்,சும்மா சொல்லக்கூடாதுண்ணே அவனையும், அவன் யெடத்துல வேற ஒருத்தன் இருந்திருந்தா இந்நேரம் செத்து போயிருப்பாம் செத்து அரை பாட்ல உள்ள தள்ளீட்டு அப்பிடி யே அரைக்கிலோ ஆட்டுக்கறிய ஒத்த ஆளா திம்பாம்ண்ணே,குடிச்சாலும் குடி மொடாக் குடிதான். தின்னாலும் தீனி மாடுமாதிரி தின்னுவான். நம்ம கூட்டாளியெல்லாம் அவன் பக்கத்துல ஒக்காந்து சாப்புட்டா காய்ச்சல் கண்டு போகும்ன்னு நெனைக்கிற அளவுக்கு சாப்புடுவாண்ணே, பன்னிப்பய ஓட்டலுக்கெல்லாம் போனாம்ன்னு வையி மொதல்ல ஒரு முழுச் சோறுசுக்கா,கோழிச்சுக்கா, ஆம்ளேட்டு, ஆப்பாயிலு..

அதோடமுடிச்சிட்டு எந்திருப்பான்னு பாக்குறியா சாப்புட்டு முடிச்சிட்டு பழைய படிக்கும் அரை பிளேட் பிரியாணி வாங்குவான். திரும்பவும் கவுச்சி அயிட்டங்கள கொண்டு வரச் சொல் லுவான். சாப்புட்டு முடிச்சிட்டு வெளியில வந்த ஒடனே சிகரெட்டும் ஒரு பான் பீடாவோட போனான்னா ராத்திரி எங்கிட்டாவது சல்லாபத்துல கெடப்பாண்ணே, கெடப்பாம்ன்ணே.

விஷயத்தகேள்விப்பட்ட வீட்டுக்காரங்க கூப்புட்டு சத்தம் போடவும்மொதல்ல பயந்த மாதிரி பம்மி நடிச்சிட்டு இருந்தவன் நெருக்கிப்பிடிக்கவும் அப்பிடித்தான் செய்வேன்னு நி முந்துக்கிட்டான்.என்ன செய்ய பின்ன,அடிச்சா திருத்தமுடியும் கழுத போகட்டும் விட்ரலாம்ண்ணு பாத்தா கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சி.என்ன செய்ய இப்பன்னு கையப்பெசஞ்சி நின்னுக்கிட்டுஇருந்த வேளையாப் பாத்து பொண்ணு வீட்டுக்காரங்கவந்துட்டாங்க,

பொண்ணோட அப்பா பையனோட அப்பாவப்பாத்து பெரிசா ஒண்ணும் பேசிடல, இப்பிடி ஒரு பையன் ஒங்கபொண்ணுக்குமுடிவானா ஒத்துக்கிருவீங்களான்னு அவரு கேட்ட மறுநிமிஷம் அடிச்சிவச்சிருந்த கல்யாணப்பத்திரிக்கையை எடுத்து வந்து சம்பந்தகாரரு முன்னாடியே கிழிச்சிப் போட்டுட்டாராம் அழுதுக்கிட்டே அன்னைக்கி நைட்டு வீட்டு வாசல்லவச்சி ஊருக்கே கேக்குற மாதிரி கல்யாணம் நின்னுபோச்சின்னு சொல்லீட்டு பத்திரிக்கைய தீ வச்சி கொளுத்தீட்டாராம்.

அப்பிடி தீவச்சி கொளுத்துன மறுநா அம்பாசமுத்துரம் பஸ்டாண்ல எங்க தாத்தாவப் பாத்த அவரு அவருக்குள்ள கட்டி வச்சிருந்த வேகாளத்தையும் ஆத்திரத்தையும் கொட்டித்தீத்துக்கிட்டாராம்.

பையனோட அப்பா எங்க தாத்தாவப்பாக்க அம்பாசமுத்துரம் பஸ்டாண்டல வண்டி ஏறப் போக,எங்க தாத்தா ஊர்லயிருந்து தற்செயலா அம்பாசமுத்துரம் வந்து யெறங்க ரெண்டு பேரும் சந்திச்சி பேசுன விஷயம் நாரசமானதுன்னு போனதுக்குஅப்பறம் ரெண்டு பேரும் ஒண்ணும் பேசாம அவுங்கவுங்க வேலை யப் பாத்துக்கிட்டு திரும்பிப்போயிட்டாங்க.

அப்பிடிதிரும்பி வீடு வந்த அன்னைக்கு குடும்பிய அறுத்து எறிஞ்சிட்டு குறி சொல்றத நிறுத்துனவருதாண்ணே,அவருசாகுற நாள்வரைக்கும் யாருக்கும் ஒரு கல்யாண நாள்கூட குறிச்சிக்குடுக்கல,ஏங் கல்யாணத்துக்குக்கூட அவருகிட்ட தொழில் கத்துக்கிட்ட ஒருத்தர் கிட்டப்போயிதான் நாள் குறிச்சி பத்திரிக்கை எழுதி வாங்கீட்டு வந்தார்ண்ணே,அப்பேர்ப்பட்ட மனுசங்கள்லாம் நம்மகிட்ட இருக்கத்தான்செஞ்சாங்கண்ணேஆனா இன்னைக்கிப்பாத்தா எங்க தாத்தாகிட்ட தொழில் படிச்சவன் எப்பிடி இருக்காம்ங்குற. அவன் பேண்ட் என்ன, சட்டை என்ன, கையில அவன் போட்டுருக்குற காப்பும் மோதிரமும் கழுத்துலகெடக்குற மைனர்ச்செயினுமா…பாக்க அப்பிடி இருக்காம்ண்ணே., என்னத்தையோ ஒரு சொல்லூசன் இல்லாத வாழ்க்கையா வாழ்றோம்ண்ணே, அவ்வளவுதான் நான் சொல்லமுடியும் என தான் பேசுகிற எல்லாப்பேச்சின் முடிவிலும்சொல்லூசன் என்கிற வார்த்தையைகொண்டு வந்து விடுகிற சொல்லூசன் ராமநாதனை ஞாபகப்படுத்திய கதவருகே நின்றிருந்த பெண்தான் இவனிடம் வந்து என்ன வேணும் எனக்கேட்டாள்.

கண்ணாடிச்சட்டம் போட்டிருந்த ஆபீஸ் ரூமினுள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர்தான் முதலாளியாக இருப்பார் போலிருக்கிறது.இவனிடம் என்ன வேணும் எனக்கேட்டுவந்தவள் வேலையாளாக இருக்கலாம் அல்லது ஓனரின் மனைவியாக இருக்கலாம்.

நான்கு பேர் சரக்கை நிறுத்து பாக்கெட் போட்டுக்கொண்டிருந்தார்கள்,ஒருவர் சரக்கை நிறுக்க, ஒருவர் பாக்கெட் போட, ஒருவர் போட்ட பாக்கெட்டை பற்ற வைத்து அடுக்க என அவர்களுக்குள்ளாய் பகிர்ந்து கொண்ட வேலைகளை சரி பார்த்தவாறும், தானும்ஏதாவது ஒருவேலையைசெய்தவாறுமாய் இருந்தவள்தான் இவனிடம் என்ன வேணும் எனக்கேட்டாள்,ஒரு வேளை முதலாளியின் மனைவியாக இருப்பாளோ, வயதுமிகவும்வித்தியாசப்பட்டுத்தெரிந்தது.இவருக்கும் கிட்டத்தட்ட பதினைந்து வயதுக்கும் மேல் இருக்கலாம் வித்தியாசம்.

பளிச்சென வெள்ளை வேஷ்டி சட்டையில் தெரிந்த முதலாளிக்கு நேர்மாறாய் தெரிந்தாள் அவள்.குப்புக்கலர் சேலையும் அதற்கு ஏற்ற கலரில் ரவிக்கையும் அணிந்திருந்த அவள் கிட்டத்தட்ட கனகவல்லி அக்காவைப் போலவே இருந்தாள்.

அவளும் இப்படித்தான் அவள்பளிச்செனசேலைஉடுத்திஇவன் பார்த்ததில்லை என்னசெய்யச் சொல்றீங்க தம்பி.போட்டுருக்குற ட்ரெஸ்ஸீல அழுக்குப்படாம இருக்கநாங்க என்ன கவர்மெண்டு உத்தியோகமாபாக்குறோம்.ஏதோ வெந்ததத் தின்னுட்டு விதி வந்தாசாவோம்ன்னு நாட்கள நகத்துனாலும் கூட தல போயி சேர்ற வரைக்கும் பொழப்ப நடத்தணுமில்ல என்பாள்.

அவளைப்பார்க்கிற நாட்களிலும் அவளுடன் பேச நேர்கிற நாட்களிலுமாய் என்னக்கா எப்பிடியிருக்கீங்க சௌக்கியமா என அவளுக்கு இவன் முகமன் கூறுவதும்இவனுக்குஅவள்முகமன்சொல்வதுமாய்இருக்கும்.திருத்தங்கல்லில் பட்டாசுத்தொழிற்சாலையில் வேலை பார்க்கிறாள்.

அவளது கணவன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிப்போனது. அலுமினிய பேக்ட்ரியில் வேலைபார்த்த பொழுது பாய்லர் வெடித்து இறந்து போனான்.

அவன் இறந்த நாளன்றும் அதற்கு முந்தைய நாட்களிலுமாய் இவன் போயிருக்கிறான் அங்கு/இவன் வேலை பார்க்கிற தனியார் பைனான்ஸில் கடன் வாங்கியிருப்பவர்களைப்பார்க்கவும், அவர்கள் தவிர்த்து அங்கு வேலை பார்க்கும் இன்னும் சில பேரைப்பார்க்கவும்,அவர்களிடம் சீட்டுப்பணம் வாங்கவுமாய், அப்பொழுது கனகவல்லி அக்காவின் கணவனைப்பார்த்திருக்கிறான். பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருக்கும்,அவரை மட்டுமல்ல அவரது பேட்ச் ஒர்க்கர் எல்லாம் அப்படித்தான்இருப்பார்கள்.அவர்கள் பார்க்கும் வேலையின் சாட்சியாக அவர்களது உடல் முழுவதுமாய் அலுமினிய பெயிண்ட அப்பிப் போயிருக்கும்.

தலையிலிருந்து கால்வரை முழுக்கவுமாய் பெண்ட அடித்தது போலவும் உடலை பெயிண்ட்டால் மூடியது போலவும் காணப்படுகிற அவர்கள் அலுமினிய சிலைபோல்நடந்துவருவார்கள். இதுபோலசினிமாக்களில் தான் பார்த்திருக்கிறான். கதாநாயகன் அல்லது வில்லன் அலுமினியச்சிலைபோல் நடந்து வருவார்கள், அது போலான காட்சியை இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறான். அவர்களைப் பார்க்கிற போதெல்லாம் கேட்டால் வாழுறதுக்காக பீ திங்குற பொழப்பு சார் எங்களது, எங்க எழுத்து அப்பிடி,நீங்க வந்தவேலையப் பாருங்க, என அவர்கள் அந்தச்சூழலிலும் சிரிப்பும் பேச்சுமாய்இவனுடன் பேசுவார்கள்.அப்படியான ஒரு நாளில்தான் கனகவல்லி அக்காவின் கணவர் பேக்ட்ரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது பாய்லர் வெடித்து இறந்து போனான்.

அவனது இறப்புக்கு நஷ்ட ஈடாகக்கொடுத்த பணத்தை உள்ளூர்பேங்கிலேயே டெபாசிட் செய்திருந்தார்கள் பேக்ட்ரிக்கார்கள். டெபாசிட் செய்த கையோடு பேக்ட்ரிக்காரர்கள் பேங்கிற்கு எதிர்த்தாற் போலிருந்த கனகவல்லி அக்காவின் வீட்டிற்கு வந்து தங்களது கணவன் இறந்த இடத்திற்கு மாற்றாய் உங்களது குடும்பத்திலிருந்துஒருஆளுக்கு வேலைபோட்டுத் தருகிறோம். தங்களின் வாரிசு அல்லது தங்களதுகுடும்பவழியில் யாராவது இருந்தால் சொல்லுங்கள் செய்துதருகிறோம் என்றார்கள். கனகவல்லி அக்காதான் வேண்டாம் எனச் சொல்லிவிட்டாள்.

இப்பொழுது வளர்ந்து நிற்கிற பையனைப் பார்க்கிற போது அந்த வார்த்தைகள் ஞாபகம் வருகிறது. பையன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான். அவனின் படிப்பு ஊரறிந்த ரகசியம். படிப்பதைவிடஅம்மாவுடன்வேலைக்குப்போவதையே விரும்புகிறான். காரணம் ஒன்று அம்மாவின் பாரத்தை பகிர்ந்து கொள்ளவும் இரண்டாவது இப்பொழுதிலிருந்தே கொஞ்சம் காசுசேர்த்தால்தான் கல்யாணம் சேமிப்பு என்கிறவிஷயமும்காசின்அருமையும் தெரியும் எனச்சொல்கிற அவன் மூன்றாவதாய் தலையைச் சொறிந்து கொண்டு சொல்கிற விஷயம் கொஞ்சம் வெளியே போய் சம்பாதிக்க ஆரம்பித்தால் வீட்டில் கொடுக்கிற காசு போகக்கொஞ்சம் மிச்சம்பிடித்து மனதுக்கு பிடித்ததை கடையில் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிறான்.

ஏண்டாபடிக்கிற பயலுகள்லாம் இப்பிடி நெனைச்சா ஊருக்குள்ள ஒரு திண்பண் டமும் மிஞ்சாது போலிருக்கே, புரோட்டா சால்னா உட்பட என அவள் தனது மகனைசப்தம்போட்டாலும்தலையில்தட்டி பொய்யாய் அடிக்ககை ஓங்கினாலு ம் கையோடு அவனை இழுத்து அணைத்துக் கொள்வாள் வாஞ்சை யோடு, சும்மா இருடா கிறுக்குப்பயலே, ஒத்தப்புள்ளைய வச்சிருக்கேன், நீயி என்னடான்னா, படிப்பு வேண்டாம் வேலைக்கிப் போறேன்னுநிக்கிறவேண்டாண்டாஇந்த நாறப்பொழப்புமொதலாளிசூப்பர் வைசரு, கூட வேலை பாக்குறவுங்கன்னு ஏகப்பட்ட கண்ணு எங்க மேல விழும்.அந்த அடியில இருந்து தப்பிச்சி கரணம் தப்பினா மரணம்ங்குற கதையில நாட்கள தள்ளிக்கிட்டு இருக்கம். இதுல நீ வேற வேலைக்குப் போறயாக்கும் வேலைக்கு, என நீட்டி முழக்கியவள் இப்பிடித்தான் போகுது எங்க பொழப்பு என்பாள்.

மழை நேரங்களில் போனால் சூடாக டீயும் ,வெயில் நேரங்களில் போனால் மோரும்தந்துஉபசரிக்கும்கனகவல்லி அக்கா ஒரு லீவு நாளின் மதிய வேளை யில்சலித்துக்கொண்டு சொன்னாள்.என்ன பொழப்பு தம்பி இது.நாறப்பொழப்பு, நாலு நல்லயெடங்களுக்குப் போக முடியல,வர முடியல விருதாப்பயலுகப் பாக்குற பார்வையும் சரியில்ல.

நேத்து இப்பிடித்தான் ஒரு பைய தண்ணி கேட்டு வந்தான்,அவன்வந்த வேளை சாய்ங்காலம் ஒரு ஆறு ஆறரை மணி இருக்கும்ன்னு வையி தண்ணி வாங்கிக் குடிச்ச நாயி செம்பக்குடுக்கும்போது கையப் புடிச்சிக்கிட்டு வம்பு பண்ண ஆரம்பிச்சிட்டான்.

நான் அவன ஓங்கி தள்ளி விட்டுட்டு கதவச் சாத்திக்கிட்டேன். என கனகவல்லி அக்கா சொன்னதும் ஏன் அப்பிடி செஞ்சீங்க,கீழ தள்ளிவிட்ட கையோட வெளக்க மாத்தக் கொண்டு நாளு சாத்து சாத்தீட்டு நாலு மிதி மிதிக்கிறத விட்டுப் புட்டு கதவப்பூட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளபோயி இருந்தா என்ன அர்த்தம்.

சொல்லுங்க., என இவன் சொல்லவும் அப்பிடி அடிக்கிறதா இருந்தா எத்தன பேர அடிக்குறது. எத்தன வெளக்குமாற வாங்குறது. சொல்லு, இப்ப அது இல்ல பிரச்சன, என்ன மாதிரி இருக்குறவ கையப்புடிச்சி கூப்புட்ட ஒடனே வந்துருவாங்குற கப்பி நெனைப்பு தம்பி அவனுக்கு,புருசனா இருந்தாலும் சம்மதப்பட்டாதான இல்லை யா..,? என்னமோ ஓடுது தம்பி எங்க பொழப்பு, குடியிருக்குற ஊர்லயே இப்பிடின்னா வேலைபாக்குறயெடத்துல எப்பிடி இருக்கும்ன்னு நெனைச்சிப் பாத்துகங்க தம்பிஎன்றாள். கனகவல்லி அக்கா அவள் எப்பிடி இவனுக்கு அக்கா முறையானாள். அல்லது அவள் பேசுவதை இவன் எப்படி காது கொடுத்துக்கேட்கும்அளவிற்கு இவனை நிர்பந்ததிற்குள்ளாக்கியது எது என்கிற வித்தை இன்னும் புரியாமலேயே, இவன் அவளிடம் தனதுகம்பெனிக்காய் சீட்டுப்பணம் வசூல்ப் பண்ணப்போகிற நாட்களில் ஏற்பட்ட பழக்கம்தான் இதை சாத்தியப்படுத்தியது எனலாம்.

இதை இவன் ஆலந்தூரைக் கடக்கிற ஒவ்வொரு முறையுமாய் இன்னும் நினைத்துக் கொள்கிறதுண்டு தான்

தொட்டுப்பார்த்த லட்டையும் பிய்த்துப்பார்த்த மைசூர் பாகையும் கிலோ ரூபாய் 150 எனச்சொன்னவரிகளின் சொல்லும் விலையும் சரியானதுதானா, இன்னும் நான்கைந்து கடைகளில் கேட்க வேண்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *