கனவின் நிறம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 1,416 
 

“ரொம்ப சந்தோசம்மா”

“எனக்கு உன் சந்தோசம்தான்டா முக்கியம். ஊரு என்னவோ சொல்லிட்டுப் போகுது. அந்த பொண்ணுதான் உனக்கு நல்ல துணையா இருப்பான்னு நெனச்சா நான் ஏன் தடை சொல்லப்போறேன். எனக்கு என்ன.. இன்னும் ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ, அதுக்கப்புறம் உன்னைப் பாத்துக்கப்போறது அவதானே”

“ச்சீ… கம்முனு இரு.. எதெதோ பேசிகிட்டு”

“டேய், எனக்கு ஒரு ஆசைடா, சொன்னா கோவிச்சுக்க மாட்டியே”

“சொல்லும்மா..”

“உன்னோட கல்யாணம் முடிச்சதும் நம்ம வீட்டை கொஞ்சம் மராமத்து பண்ணிடலாம்டா. ஓடெல்லாம் ரொம்ப பழசாயிடுச்சி, எல்லாத்தையும் எடுத்துட்டு புதுசா போட்டுடலாம்டா”

“அம்மா.. அம்மா.. மேஸ்திரி அண்ணன்ட்ட ஏற்கனவே பேசிட்டேன். ஓட்டை எடுத்துட்டு தார்சு போட்டுடலாம்மா. நீயி கவலையே படாத. அப்புறம், வர்ற வழியில சங்கர் மாமாவைப் பாத்தேன். ஐப்பசி மாசம் காசிக்குப் பதினஞ்சு நாள் டூர் போட்டிருக்காராம். நீயும் சொல்லிட்டே இருக்குறியே. இந்த முறை போயிட்டு வந்துடு. சரிம்மா, நான் போயி அவ அப்பாட்ட பேசிட்டு வந்துடறேன்‌”

“சாப்புடுறதுக்கு வீட்டுக்கு வந்துடுறா, உனக்குப் புடிச்ச கருவாட்டுக் கொழம்பு செஞ்சி வெக்கிறேன்”


“உண்மையச் சொல்லணும்னா நீங்க இவ்வளவு ஈஸியா சம்மதிப்பீங்கன்னு நாங்க ரெண்டு பேருமே நெனக்கலை மாமா”

“ஏன் மாப்பிள்ள, அந்தஸ்தை காரணம் காட்டி வேணாம்னு சொல்லிடுவேனோன்னு நெனச்சீங்களா? இந்த சொத்தெல்லாம் நானே சொந்தமா சம்பாசித்ததில்ல, எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து சொத்து இது. சொல்லப்போனா நானெல்லாம் இதுக்கு ஒரு வாட்ச்மேன் மாதிரிதான். அதை என்னிக்குமே நானோ என் குடும்பமோ மறக்குறதே இல்ல”

“ஆச்சர்யமா இருக்கு மாமா”

“அது புரிஞ்சதுனாலதான் சின்ன வயசுலயே உங்க அப்பா மாதிரி நல்ல மனுசங்க ஃப்ரெண்ட்ஸா கிடைச்சாங்க. உங்களப் பத்தியும் உங்க குடும்பத்தைப் பத்தியும் முழுசா தெரிஞ்சதுனால உங்களவிட என் பொண்ணுக்கு நல்ல பையன் கிடைக்கமாட்டான்னு நம்புனதுனாலதான் இந்த கல்யாணத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன்”

“ரொம்ப நன்றி மாமா”

“பையனும் அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டான். பொண்ணுக்கு வரப்போறவன் என்கிட்ட இருக்குற காசுக்காக வர்றவனா இருந்துட்டா அவ வாழ்க்கை நரகம் ஆகிடும் மாப்பிள்ள. என்னால அதைத் தாங்க முடியாது. அவளை நல்லா புரிஞ்சுகிட்ட உங்களாலதான் அவளை காலம் முழுக்க நல்லா வெச்சிருக்க முடியும்னு நம்புறேன் நானு”

“கண்டிப்பா மாமா.. கவலையே படாதீங்க.. உங்க பொண்ணு கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம நான் பாத்துக்குறேன். போதுமா?”

“அந்த நம்பிக்கை உங்கள விட எனக்கு அதிகம் மாப்பிள்ள.. அவ மேலதான் இருக்கா, போய் பேசிட்டு இருங்க. நான் கடை வரைக்கும் போயிட்டு வந்துடறேன்”


“அப்புறம் உங்க அம்மாவும் எங்க அப்பாவும் குழந்தை பத்தி ஒண்ணுமே சொல்லைலியா? சொல்லியிருப்பாங்களே, கல்யாணம் ஆகி பத்து மாசத்துல ஒரு பேரன் வேணும்னு”

“ஒனக்கெல்லாம் நக்கலா இருக்கு, ஏன் கேட்டா என்ன தப்பு? கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குது, இப்பவே ஆரம்பிச்சா கல்யாணம் முடிஞ்சு எட்டு மாசத்துலயே அவங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ குடுத்துடலாம்ல‌”

“ஏய் ச்சீ, கைய எடு… கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் கழிச்சிதான் குழந்தையெல்லாம். முதல்ல நாம நம்ம வாழ்க்கையை வாழலாம்டா, காஷ்மீர்ல ஹனிமூன், சொந்தகாரங்க வீட்டுக்கெல்லாம் ஒரு வீடு விடாம விருந்து, நல்ல பெளர்ணமி நிலா வெளிச்சத்துல உன் தோள்ல சாஞ்சிட்டே தாஜ்மஹால் தரிசனம், கோவா பீச் ஹாலிடேஸ், அந்தமான் செல்லுலார் ஜெயிலுக்குள்ள உன்னை வெச்சி ஒரு ஃபோட்டோ, லட்சத்தீவுல ஸ்கூபா டைவிங்..”

“ஹேய்.. ஹேய்… இரு இரு.. நீ இன்னமும் கோடீஸ்வரர் வீட்டுப் பொண்ணுல்ல, ஒரு சாதாரண சென்ட்ரல் கவர்மென்ட் வேலைக்காரனோட பொண்டாட்டி. அதுக்குத் தகுந்த மாதிரி ஆசைப்படும்மா”

“அதுக்கென்னா? எங்க அப்பாவோட பாதி சொத்து எனக்குத்தான. குடுக்க மாட்டேன்னு சொன்னா எங்க அண்ணன் மேல கேஸ் போட்டுடலாம் கவலைப்படாத”

“அடிப்பாவி… உன்னையும் உங்க அண்ணன் நம்புறானே, அவனைச் சொல்லணும்”

“ஹா..ஹா.. சும்மாச் சொன்னேன். எனக்குன்னு கேட்டா மொத்த சொத்தையும் கூட அண்ணனும் அண்ணியும் குடுத்துடுவாங்க. நான் இதுக்கு முன்னால எடுத்த எல்லா ஜென்மத்துலயும் புண்ணியம் பண்ணிகிட்டே இருந்திருக்கணும்டா.. இப்படி ஒரு அப்பா, அண்ணன், அண்ணி, எல்லாத்தையும் விட என்னா நல்லா புரிஞ்சுகிட்ட உன்கூடயே கல்யாணம்…..”

“ஹேய்.. என்னாது இது? எதுக்கு அழுவுற? திடீர்னு உனக்குள்ள இருக்குற பட்டிக்காடு இப்படி வெளிய வந்துடுச்சி…”

“ச்சீய்.. போடா….”

“அம்மா… மாப்பிள்ள தம்பிக்கு ஃபோன்.. அவங்க அம்மா பேசுறாங்க‌”


“உன் வெக்கேஷனைக் கட் பண்ணி அவசரமா கூப்டதுக்கு ஸாரிப்பா”

“பரவாயில்லைங்க சார்.. நானே வெக்கேஷனைக் கட் பண்ணுற ப்ளான்லதான் இருந்தேன். கல்யாணத்துக்கு நல்ல நாள் ரெண்டு மாசம் கழிச்சிதான் கிடைச்சிருக்கு. அதனால அப்ப வெக்கேஷன் எடுத்துக்கலாம்னு இருந்தேன். நீங்க கூப்பிடலைன்னாலும் மே இருவத்தஞ்சாம் தேதி நானே வந்திருப்பேன்”

“குட்..குட்.. நான் உன்னைக் கூப்பிட்டது ரொம்ப முக்கியமான விசயத்துக்காக. இந்த மாசம் முழுக்கவே நமக்கு ரொம்ப வேலை அதிகம். எல்லா வி.வி.ஐ.பி.ங்களும் தீவிரமான பிரச்சாரத்துல இருக்காங்க. சமாளிச்சடலாம்னுதான் நெனச்சி உனக்கு லீவு குடுத்தேன். பட் ரெண்டு ஹையர் ஆபிஸர்ஸ் ஆஸ்பிடல்ல படுத்துட்டாங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு. அதனாலதான் உன்னைக் கூப்பிட வேண்டியதா போச்சி”

“ஓ.. ஓகே.”

“ரெண்டாவது, நீ டிபார்ட்மென்ட்ல சேந்ததுல இருந்து உன்னைக் கவனிச்சுட்டு வர்றேன். உன்னோட நேர்மை, வேலை மேல உனக்கு இருக்குற டெடிகேஷன், புது விசயங்களைக் கத்துக்குற ஆர்வம் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு அப்புறம் இந்த போஸ்டுக்கு வர்ற தகுதி இருக்குற ஆட்களா நான் நினைக்குற ஒரு சிலர்ல நீயும் ஒருத்தன். இந்த மாதிரி டஃப் சிச்சுவேஷன் எல்லாம் ஹேண்டில் பண்ணினாத்தான் உனக்கும் பின்னால உதவியா இருக்கும்”

“ரொம்ப நன்றி சார். இப்ப என்னோட அஸைன்மென்ட் என்ன?”

“வர்ற செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரு வி.வி.ஐ.பி.யோட பாதுகாப்பை நீ கவனிக்க வேண்டி இருக்கும். ப்ளான்படி அவரு செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஏர்போர்ட்டுக்கு வர்றாரு. அங்க இருந்து நம்ம டீம் சார்ஜ் எடுத்துக்குது. ஏர்போர்ட்ல இருந்து அன்னிக்கு ராத்திரி அவர் கூட்டம் முடிக்கிற வரைக்கும் நீதான் இன்சார்ஜ்”

“கவலையேப்படாதீங்க சார். அவர் சென்னைல வந்து இறங்குனதுல இருந்து மறுபடியும் ஃப்ளைட் ஏறுற வரைக்கும் அவரைவிட்டு நகர மாட்டேன். சென்னைய பொறுத்தவரைக்கும் நாந்தான் அவரோட நிழல்னு வெச்சிக்குங்களேன்”

“ஹ..ஹ..ஹ..ஹ..”

“நைட் பொதுக்கூட்டம் எங்க சார்?”

“ஸ்ரீபெரும்புதூர்”

– ஜூன் 2009, ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *