கண்ணாடிச்சில்லு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 6,872 
 

அது தூறலா, பெருமழையா என்பது இன்னும் தெரியாமலேயே?

லேசாக பெய்ய ஆரம்பித்து உடல் நனைத்து, மனம் நனைத்து, வடு உண்டாக்கிய நிகழ்வாய் அது.

எனது நண்பர் பதவி உயர்வின் காரணமாக அவர் குடியிருந்த ஊரிலிருந்து 6 மணி நேர பிரயாண தூரத்திலிருக்கிற ஒரு ஊருக்கு மாற்றல் செய்யப்பட்டுவிடுகிறார்.

ஆசிரியை பணியை சுமந்து கொண்டிருக்கும் அன்பு நிறைந்த மனைவி.பள்ளி உயர் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகள்,சொந்த வீடு,சொந்த மண் பழகி மொட்டு விட்ட உறவுகள், நட்புகள், தோழமைகள், சம்பாத்தியம், சௌஜன்யமான குடும்பம், கொஞ்சம் கோபம்,கொஞ்சம் சந்தோசம்,கொஞ்சம் வருத்தம் என கூட்டுக்கலவையாய் வேர்விட்டு படர்ந்திருந்த படவைவிட்டு பிரிந்து போகிறார்.

புது இடம்,புது வேலை,புது மனிதர்கள்,புதிதான பூமியின் வேர்கள்,வாசம்,தனியான இருப்பு,ஹோட்டல் சாப்பாடு,தனித்து விடப்பட்ட மனம் என்கிற கூட்டுக்கலவையின் உருவமாய் பதவி உயர்வுடன் புதிதாக மாற்றலாகிப்போன ஊரில் தன்னை இருத்திக்கொள்கிறார் பற்றற்ற பிடிப்புடனும் கட்டாயத்துடனுமாய்/
ஒரு இட்லி 6 ரூபாய்,ஒரு தோசை 25 ரூபாய் மதியச்சாப்பாடு 55 ரூபாய் இரவு திரும்பவும் அதே விலையில் அதே அல்ல வேறு,வேறு இட்லி,தோசை என்கிறவற்றுடன் பத்தாயிரம் அட்வான்ஸீம், இரண்டாயிரம் மாத வாடகையுமாய் கொடுத்து தங்கியிருந்த ரூம் (வீடு)என்கிற அடையாளங்களுடன் தங்கியிருந்த அவருக்கு சாப்பாடு, தண்ணி துணிமணி எதற்கும் குறைவில்லை.

வேலை பார்க்க, சக வேலையாட்களுடன் உரையாட,அடைப்படை சம்பளம்,பஞ்சப்படி ,வீட்டு வாடகை,தான் சார்ந்து நின்ற தொழிற்சங்கம் என எல்லாவற்றையுமாய் பேசியவாரும், விதைத்தும், பதியனிட்டும், வேர்விட்டவாறும் , தன்னை பஞ்சாரத்துக் கோழியாக இருத்திக்கொண்டு,,,,,,,,,,,,, வார விடுமுறை நாட்களில் ஊருக்குப்போவதும் பின் வாரத்தின் ஆரம்ப நாளில் நடு இரவு இரண்டு மணிக்கு எழுந்து ஊரே ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிற் நடு இரவில் குளித்து ரெடியாகி வேலை பார்க்கிற ஊருக்கு செல்வதுமாக இருக்கிறார்.

ஒன்று,இரண்டு மூன்று,,,,,,,,என தடம் புறளாமல் நகன்ற மாதங்களின் இடைவெளியினூடாக நான்கறையாவது மாதம் அவருக்கு அவசரமாக தொலை பேசியில் ஒரு செய்தி வருகிறது.

பத்தாம் வகுப்புப்படிக்கிற அவரது மகன் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும் போது தீப்பெட்டி ஆபீஸ் வேன் இடித்துதள்ளியதில் இடதுகாலில் தொடை எலும்பு முறிந்து விட்டதாம்.ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்களாம். உடனடியாக கிளம்பி ஊர்வரச்சொல்லி செய்தி.

கிளம்பி விடுகிறார், பச்சை தண்ணீர் கூட பல்லில் படாமல் பையனுக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிற மருத்துவமனைக்கு சென்று விடுகிறார்.

அறுவைசிகிச்சைமுடிந்துசுயநினைவின்றி கிடந்த மகன்,அருகில் அரை தூக்கத்தில் கண்ணீர்மல்க அமர்ந்திருந்த தாய்,இருவரையும் மாறி,மாறி பார்த்தவாறும் கலங்கிய விழிகளுடனும்,மனதுடனுமாய் படுத்திருந்த தனது மகனின் தலைகோதியவாறும்,உடல் தடவிவிட்டவாறும் படுக்கையை சுற்றி,சுற்றி வந்த தந்தை.மருத்துவமனை,அதன் வாசம் மருந்து நெடிஎல்லாம் கடந்து வர ஒரு வாரத்திற்கும் மேலாகிப்போகிறது.

அந்த பத்து நாட்களில் தந்தையே மகனுக்கு தெம்பாய் இருந்திருக்கிறார்.அதற்கு மேல் அவரால் பிரியப்பட்டாலும் கூட இருக்க முடியவில்லை.

அவரது அலுவலகத்திலிருந்து அவசரமாய் ஒரு அழைப்புக்கடிதம். “தங்களது விடுப்பு முடிந்து விட்டது,அவசரமாய் கிளம்பிவரவும். தங்களது மகனது உடல் நலக்குறைவுக்காய் தாங்கள் இதுவரை எடுத்திருக்கிற விடுப்பே அதிகம். உடனே பணிக்கு வரவும்.

இல்லையேல் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,இப்படிக்கு நிர்வாக(எந்திரம்)ம்” என ஒரு கடிதம் அவரது சுய முகவரியிட்டு வருகிறது, என்னதான் செய்வார் ஒரு தகப்பன்,அவரது மனைவியும் விடுப்பு எடுக்க முடியாத சூழல், வயதான தனது தாயை
பையனுக்கு காவலாய் வைத்துவிட்டு கிளம்பி விடுகிறார் மனமில்லாமலும், அரைகுறை மனதுடனுமாய் அங்கிருந்தபடியே தினந்தோறும்பேச்சு,நலம்விசாரிப்பு,உடல்பற்றிய அக்கறை,
மருத்துவம் என தொலைபேசியில் விரிந்த பேச்சினது நாட்களின் ஊடான நகர்வுகளில் பையனைப்பற்றி அவனது தாயிடமிருந்து ஒரு செய்தி வருகிறது.

“சமீபநாட்களாக பையன் சரியாகசாப்பிட மாட்டேங்கிறான் என்றும், மதிய வேலையில் சுத்தமாக சாப்பிட மறுக்கிறான்” எனவுமாய் வந்த தகவலை பையனிடம் உறுதி செய்த அவர் ஏன் அப்படி என கேட்கிறார்,

“ஆமாப்பா,வயிறு நெறைய சாப்புட்டா,,,,,மத்தியான வேலையில சாப்புட்டா சாய்ங்காலம் “ஆயி” வருதுப்பா, அந்த நேரத்துல கோப்பை வைக்கிறதுக்குக் கூட ஆள் இல்ல, பாட்டியும் இப்ப ஒடம்பு சரியல்லாம படுத்துட்டாங்க,அதான் ரெண்டு மாத்தரைகளப் போட்டுட்டு படுத்துர்ரேன்ப்பா”,என்கிறான் பையன்.

பதவி உயர்வு,வெளியூர் வாசம்,புது இடம்,புது நண்பர்கள்,புது மனிதர்கள்,புது பழக்கம், கைநிறைந்த சம்பளம், பதவி உயர்வின் பலன் சமூகமரியாதை என எக்ஸட்ரா,எக்ஸட்ராவாய் எல்லாம் முளைத்து தெரிந்த போதும், அந்த நிமிடம் அந்த தகப்பனால் ஆழமாக அழமட்டுமே முடிந்தது.

தூறலாகவும்,பெருமழையாகவும் அற்ற அந்த நிகழ்வு அவரைப்பொறுத்து கனமான ஒரு இடியாகவே அந்த நேரத்தில,,,,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *