கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 7,809 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப் போடுவான்.

சீக்கிரமே இருட்டிவிட்டது. அரை நிலா பனையுச்சியி லிருந்து எட்டிப் பார்த்தது. கால்வாயின் எதிர்க்கரைக்கப்பா லிருந்து வயல்களில் பச்சைக்கதிர்களின் ரகசியங்கள் காற்று வாக்கில் மிதந்து வந்து எட்டின. கதிர்களின் பேச்சை இரைந்து அடக்குவது போன்று க்ரீச் … க்ரீச்” என்று அலறும் ஆந்தையின் அகவல், நிசப்தத்தை துண்டு துண்டாய் வெட்டிற்று. புதர்களில் சலசலப்பு …..

கண்ணன் தன்னந்தனியனாய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இது கூட அவ்வளவு பயமில்லை. வீட்டுக்குப் போனால் மாமாவிடம் பயத்துக்கு எதிரே இந்த பயம் என்ன பயம்?….

கல்லெரிந்து அலுத்த பின், கண்ணன் முட்டிக்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் ஆடினான். வளையம் வனையமாய்ச் சுருண்ட மயிர்த் திருகுகள் காற்றில் அலைப் புற்று. கண்ணிலும் நெற்றியிலும் மோதின. வாய் சிறிதே மலர்ந்து, முன்னிரண்டு பற்கள் மாத்திரம் சற்றே எட்டிப் பார்க்க, அவன் அழகாயிருந்தான்.

கண்ணன் பரீக்ஷையில் ‘பெயில்’. தன் ஸ்லேட்டை நேரே பார்க்கத் தைரியமில்லை. ஓரக் கண்ணால் பார்த்தான். வயிறு ‘பகீர்’ என்றது. வெள்ளைச் சாக்கில் 10 கீழே போட்டு, மேலே ஒரு கோடு கிழித்து அதன் மேல் பட்டதும் படாததுமாய் ஒரு பூஜ்யம் உட்கார்ந்திருந்தது. சுத்தமாய், வட்டமாய். வழவழப்பாய். கோழி முட்டை மார்க்கைப் பார்க்காமலே வாத்தியாரிடமிருந்து ஸ்லேட்டைத் திருப்பி வாங்குகையில் ‘சார், நான் பாஸா?” என்று கேட்டான். ‘தொண்டை பக் பக் பக் பக் –

“பாஸா? பாப்பாஸ் தாள்! நீ எங்கேடா பாஸ் ஆறது? எங்கேயே செவித்தைப் பார்த்துண்டு யோசனை பண்ணிண் டிருக்கே! ஒன்னைக் கோவிச்சுக்கவும் பயமாயிருக்கு . அடிக் கறத்துக்கு அதைவிடப் பயமாயிருக்கு. அப்படியே செத்து விழுந்துடுவே போல் நடுங்கறே. ஹும்,ன்னா அரையோட போயிண்டுடறே!

‘வா, வா, எந்த ஐ. ஸி. எஸ். பரிக்ஷை தட்டுக் கெட்டுப் போறது? இன்னும் ஒரு வருஷம் இங்கேயே இருந் துட்டுப்போ. அப்புறம் நானே இரண்டாவதுக்குத் தூக்கிப் போட்டுடறேன்…”

அவனுக்கு அதெல்லாம் புரியவில்லை. இப்போ ஒன்று தான் புரிந்தது. அவன் ‘பெயில்’.

வீட்டுக்குப் போனால் மாமா அடிப்பாரா? தெரியாது. இதுவரைக்கும் அடிச்சதில்லை. ஆனால் மாமா முழிச்சுப் பார்த்தாலே போருமே…. நடுமுதுகிலே ‘ஐஸ்’ வெச்சாப் போலே சில்லுன்னு , அப்புறமும் கீழே இறங்கி வழியறது. அப்பா , அதுக்கு பதிலா குதிரை சாட்டையிலே இருவத்தி யெட்டு அடி சேர்ந்தாப்போல் வாங்கிக்கலாம்- அந்த முழியை வாங்கிக்க முடியாது. மாமா எப்பவும் அப்படித்தான் இருக்கா… அன்னிக்குக்கூட அப்படித்தான் ….. அம்மாவும் அவனும் மொத மொதல்லே , மாமா ஆத்துக்கு வந்தானே, அன்னிக்கு …..

தலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக் கொண்டு, கண்ணன் மெல்ல மரத்தடியில் சாய்ந்தான். இப்போ ஞாபக. மில்லை. கொஞ்சம் கொஞ்சந்தான் ஞாபகமிருக்கு,

மழை ‘ஜோ’ வென்று கொட்டித்து ராத்திரி .

அம்மா ஒரே தெப்பம். இத்தனை ஈரத்திலும், அவள் அவனை அணைத்துக் கொண்டு, தன் மார்பின் உஷ்ணத்தை அவனுக்கு ஊறவைக்க முயன்றும்– குளிரில் அவனுக்கு தூக்கிப் போட ஆரம்பித்து விட்டது. அதோடு பசி…பசி யான பசி. எவ்வளவு தான் வரவழியெல்லாம் தண்ணி குடிச் சுட்டு இருக்க முடியும்?

கதவு திறந்தது. மாமாவை முதல் முதலாப் பார்த்தது அப்போத்தான். ஒருகையில் ராந்தலைத் தூக்கிப் பிடிச் சுண்டு, இன்னொரு கையை கதவின் மேல் வெச்சுண்டு, பின்னால் இருட்டில் மூஞ்சியை மாத்திரம் நீட்டிண்டு மாமி.

“அண்ணா -” மாமாவுக்கு முகம் அப்படி மாறுவானேன்? மாமா முழி யைப் பார்க்கறதும் அப்போத்தான் முதல் முதல் . மாரிலே ஐஸ் வெச்சாப்போல ஏற்கனவே எனக்கு ரொம்ப குளிர்ரது.

மாமா அப்போ மூஞ்சிக்கு என்ன பண்ணிக்கறா? தெரி யல்லே. என்னமோ முகமூடி போட்டாப் போலே. அன்னிக்கு , டம்பக் கூத்தாடி ஆடினானே அது மாதிரி என்னமோ ஆயிடறது. நெத்தி சுருங்கி, கண்ணும் வாயும் கடுகடுத்து; ஒரு புருவம் இன்னொரு புருவத்து மேலே துக்கிண்டு கோணிண்டு –

“அண்ணா!” – அம்மா குரல் கேக்கவே மாட்டேன் கறது.

“யாரு நீயா?”

மாமா உரக்கவே பேசவில்லை. இருந்தாலும் அன்னிக்கு அம்மா பாதி தூக்கி, பாதி நடத்திக் கூட்டி வந்தப்போ காலில் முள் குத்தித்தே, அது மாதிரியிருந்தது – அதைவிட சுறீல் –

“ஆமாண்ணா, எங்கேண்ணா போவேன்? குழந்தையும் கையுமாய் நிக்கறேன் -”

“பேஷ் சுமை வேறையா?”

“அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாறது …”

அப்புறம் அதிகமாய் ஞாபகமில்லை. ஏதோ உள்ளே போய் ஒரு கந்தையை அம்மா அவன் மேல் சுற்றினாற் போலிருந்தது…. அப்புறம் சாப்பிட்டாற்போலிருந்தது பழையது. அப்புறம் தூக்கக்கலக்கம். கூடம் தூண், கூடத் திலே மாட்டியிருக்கிற படமெல்லாம் ஒரே சுத்தல். நடுவில் நடுவில் மாமாவுக்கும் அம்மாவுக்கும் வார்த்தைகள் – துணுக்குகள் — தண்ணியிலே பேசறாப்போல …

“சரி, இந்த ருக்மிணியைத் தூக்கிண்டு போன அந்தக் கிருஷ்ணன் எங்கே? இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா?”

அம்மா ஏன் தேம்பி தேம்பி அழறா? அம்மா அழா தேம்மா, எனக்கும் அழுகை வரது பயமாயிருக்கு அழாதேம்மா –

“அண்ணா சொல்லாலே வதைக்காதே அவா போயிட்டா. ஒரு நாள் சாயந்திரம் வேலை செஞ்சுட்டு மாரடைக்கறதுன்னு உட்கார்ந்தா . தீர்த்தம் கொண்டு வரத் துக்குள்ளே அப்படியே தூணிலே சாஞ்சுட்டா -”

“மாப்பிள்ளை எந்த ஆபீசுக்குப் போயிட்டு வந்தாரோ?”

“ஹோட்டல்லே வேலை.” அம்மா குரல் கொஞ்சம் வெடிப்பாத்தான் வந்தது. “வேறே உத்யோகம் கிடைச்சிருந்தால் தேவலைதான்-”

“ஆங்காரத்தைப் பார். ஆங்காரம் என்ன வேண்டிக் கிடக்கு? எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி! பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா நீ இப்படி நடுத் தெருவிலே நிப்பையா? நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகணுமா?”

*அண்ணா ஒனக்கு எப்படித்தான் மனஸு வந்தது. அந்தக் கிழவனுக்கு என்னை நிச்சயம் பண்ண?”

“ஆமாண்டி. இப்போ மாத்திரம் ரொம்ப வாழறையா?” அப்புறம் தெரியவில்லை. அம்மாவினுடைய அழு குரலைத் தவிர, அதுவும், கொஞ்சங் கொஞ்சமாய் விசித்து விசித்து…அப்புறம் ஞபாகமில்லை . மூடின கண்ணுக் குள்ளே மெத்து மெத்துனு ஒரே ரோஜா சிவப்பு . அதுக் குள்ளே அமுங்கிப் போனது தான் தெரியும். அவ்வளவுதான்.

அப்புறம் ராத்ரி ராத்ரி நான் தூங்கிப்போய்விட் டேன்னு அம்மா நினைச்சுண்டிருக்கும் பொழுது மறுபடியும் விக்கி விக்கித் தேம்பி தேம்பி அழுகை. என் கன்னத்தில் கண்மேல் ஒண்ணு ரெண்டு சுறீல், சுறீல்’ நெருப்புப் பொறி.

அம்மா ஏன் அழறாள்? அம்மாவுக்கு மார் வெடிச் சுடுத்தா? அவனுக்கு துக்கம் தொண்டையை அடைக்கும். ஆனால், ஏன் அழறேன்னு கேட்க பயமாயிருக்கும். கேட்க லாமா வேண்டாமா? என்ன கேக்கறது. எப்படி கேக்கற துன்னு யோசனை பண்ணிக் கொண்டிருக்கையிலேயே கண்ணுக்குள்ளே, மெத்து மெத்துனு ரோஜா சிவப்புலே குளு குளுன்னு நீலம் கலந்து அதன் உள்ளே. ஆழமே தெரியாமல் அமிழ்ந்து போவான்.

அம்மா ஒவ்வொரு சமயம் ஆவேசம் வந்தாற்போல் இறுகத் தழுவிப்பாள். மூச்சுகூடத் திணறும். அது பிரியமா. அல்லது எதையாவது பார்த்துப் பயந்து. நான் அவளைக் கட்டிக்கிற மாதிரி என்னைக் கட்டிக்கறாளா? கால் சறுக் கிட்டா கை எதைவேணாப் பிடிச்சுக்கத் தவிக்கிறதே, அம்மா அதுமாதிரி என்னைப் பிடிச்சுக்கறாளே!

ஆனால் அம்மா எங்கேயும் விழல்லையே முழிகிப் போய் முழி பிதுங்கின மாதிரி ஏன் என்னைப் பிடிச்சுக்கறா? இன்ணொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன்? எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா? தோள் பட்டையைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொள்வான். ஒன்றும் தெரியவில்லை. அம்மா சரியாத்தாளே தோச்சுப் போட்டிருக்கா?

பள்ளிக்கூடத்தில் கூட அவனுக்கு ஒதுக்கு இடம் தான். இதே கிசு கிசுப் பேச்சு. ரகசியச் சிரிப்புத்தான். ஒண்ணும் புரியல்லே. முதல் நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன், அம்மாவைக் கேட்டான்.

“என்னம்மா! என் முதுகிலே கரி ஒட்டிண்டிருக்கா, பாரு; எல்லாரும் சிரிக்கிறாளே?”

அதுக்குள்ளே மாமா குறுக்கிட்டு : “மூஞ்சியிலே நீங்கள் பூசிய கரி உன் முதுகில் தெரியுதடா அது தான் காக்ஷி”. இதென்ன பாஷையோ? அம்மாவுக்குக் கன்னத்தில் கண்ணீர் மாலை மாலையா வழியறது. அம்மா பேசாமல் இருக்கா. அவனை அவள் அப்பொழுது அணைத்துக் கொண்டால் தேவலை. நடுக்கூடத்தில் நடுக்காட்டில், தனியாக நிற்கி றான். ஆனால் அம்மா தன் மூலையை விட்டு நகரவில்லை.

அப்புறம் இன்னொண்ணு. அம்மா நாளாக ஆக அழகா யிண்டே வந்தாள். ஆனால் அது ஒரு விதமான அழகு ; அவளைப் பார்த்தால், ஒரு பக்கம் சந்தோஷமாயிருக்கும். மறு பக்கம் பயமாயிருக்கும்; இன்னொரு பக்கம் துக்கமா யிருக்கும். முகம் சுண்ணாம்பாய் வெளுத்துப்போய் மூக்கு , முழி. வாய் எல்லாம் செதுக்கிவிட்டாற்போல், கோவிலில் ஸ்வாமிக்கு இருப்பது போல். சுத்தமாய், எடுப்பாயிருக்கும். முகத்தைச் சுற்றி மாலை போட்டாற்போல் அடுக்கடுக்காய் அடர்த்தியாய் மயிர், பேப்பர் கூண்டுக்குள்ளே அகல் விளக்கு மாதிரி வெள்ளை வெளேரென்று கன்னத்துக்குள்ளேயிருந்து சிவப்பு டால் அடிக்கும். அம்மா ரொம்ப ரொம்ப அழகாய்ப் போயிட்டா. அம்மா இப்போல்லாம் அழறதில்லை. பேசற தில்லை. தூங்கறது கூட இல்லை. அவனுக்கு ராத்திரி முழிப்பு வரப்போல்லாம் அவள் உட்கார்ந்திருக்காள் தூணிலே சாஞ்சிண்டு முழங்கால் மேல் கையைக் கோத் துண்டு ஆகாசத்தைப் பார்த்துண்டு ….

சாப்பிடுவது கூட இல்லை. மாமா ஒரு ஒருநாள் கத்து வார். “பண்ற அக்ரமமெல்லாம் பண்ணிப்பிட்டு இப்போ சாப்பாட்டு மேலே ராங்கி வந்துடுத்தோ? தவிடு தின்கற திலே ஒய்யாரம் வேறயா?”

ஆனால், அம்மா பதில் பேசறதில்லை.

அப்புறம், ஒருநாள், அவள் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் நேரத்தில் அம்மா ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.

‘கண்ணா, வா-” என்று கூப்பிட்டாள். போனேன். ஆசையாய்க கட்டிண்டு இரண்டு கன்னத்திலும் கண்ணிலும் முத்தமிட்டு, ‘போ’ன்னாள்.

ஒரு நாளைக்கும் இந்த மாதிரி அணைச்சுக் கட்டிண்டு முத்தங் கொடுக்க மாட்டா. தினம் ‘போயிட்டுவா’ என்பாள். இன்னிக்கு ‘போ’ன்னு மாத்திரம் சொன்னாள்.

அவன் வீட்டிற்குத் திரும்பி வரும் பொழுது வாசலில் ஒரே கூட்டம். மாமா அவனைத் தூரத்தில் கண்டதுமே அவசரமாய் ஓடி வந்து, “அம்மங்கா, அம்மஞ்சி எல்லோரும் விளையாடிண்டிருக்கா. நீயும் போய் விளையாடு” என்று அழைச்சுண்டு போய், மேலத்தெருவில் ஒரு வீட்டில், தன் குழந்தைகளுடன் சேர்த்து விட்டுட்டு போயிட்டார். அப்புறம் மறுநாள் காலையில் தான் கூட்டிண்டு வந்தார். அன்னி ராத்ரி பாயஸம் இருந்தது. ஜவ்வரசி பாயஸம்; அப்புறம் பத்து பண்னிரண்டு நாள் பொறுத்து, பக்ஷணம் எல்லாம் இருந்தது. ஆனால், அன்னி மொதக் கொண்டு அம்மா இல்லே .

என் அம்மா எங்கே? அம்மா எங்கே மாமா?

கொஞ்ச நாளைக்கு “இதோ கொல்லைப்புறம் போயிருக்கா. இதோ எதிர்த்தாத்துக்குப் போயிருக்கா. இங்கே போயிருக்கா அங்கே போயிருக்கா” எல்லோரும் சாக்கு சொல்லி அப்புறம் கேக்கறதுக்கே பயமாயிருந்தது. நானும் கேக்கலே . அவாளும் சொல்லல்லே. அம்மா போன இடம் தெரியல்லே. யாரும் சொல்லாமலே அம்மா இனி வரமாட் டான்னு தெரிஞ்சுபோச்சு. அப்புறம் கேக்கல்லே. தெருவில் போனால் ஒருத்தர் ரெண்டுபேர் ‘த்ஸோ, த்ஸோ’ங்கறா. ரெண்டுபேர் “சரிதான்; நாடோடி பயலுக்கு ‘த்ஸோ!’ என்ன வேண்டியிருக்கு” என்கறா.

‘குழந்தை என்ன பண்ணுவான்? பெத்தவா பாவம் அவா பெத்ததன் தலை மேலேங்கறது சரியாய் போச்சு”, இப்படி ஒரு பாட்டி சொல்றா. இப்போதான் நிஜமாப் பயமாயிருந்தது. இத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தும் நடுக்காட்டில் தன்னந் தனியாய் விட்டு விட்டாற்போல் இருந்தது….அம்மா சொல்வாளே ராஜகுமாரன் கதை, அது மாதிரி…

“அம்மா!-” என்றான் கண்ணன். ஒரே இருட்டு…

“அம்மா!”

அம்மா கிட்டதான் ராத்ரி படுக்கற வழக்கம், காலைத் தூக்கி, அம்மா மடிமேலே போட்டுண்டா எவ்வளவு இதம் மாயிருக்கும்! தலைகாணியைவிட அம்மா தோள் தான் பஞ்சாட்டமிருக்கும். அம்மாவின் ஸன்னமான மூச்சு, முகத்தில் பட்டுண்டே இருந்தால் தான் தைரியமாயிருக்கும்.

“அம்மா!” துக்கத்தின் இத்தனை நாள் ஊமையடி இன்று தான் நெஞ்சு வீங்குகிறது.

“அம்மா!”

மலை மலையா மேகத்தின் நடுவிலிருந்து நிலா எட்டிப் பாக்கறது. என்ன ஆச்சர்யம் நிலா நடுவில் அம்மா முகம்!

“அம்மா! அம்மா!” ஒரே அலறல், ஒரே துள்ளு. அம்மா ‘நிலாவிலிருந்து’ குதித்து ஓடி வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.

“இதோ இருக்கேனடோ கண்ணா! அட அசடே, என் னடா இப்படி அழறே?….நான் எங்கேயும் போகலேடா – நிஜமாத்தான் – எதித்தாத்துக்குத்தான் போயிருந்தேன். நீ என்னைக் கண்டு பிடிக்கறையா பார்க்கலாம்னு கண்ணா மூச்சி விளையாடினேன். அதுக்குள்ள நான் காணாமே போயிட்டேன்னு கனாக் கண்டிருக்கே. இதோ வந்துட் டேனே, பாரு, என்னைப் பாரு…”

‘கண்ணா’வுக்கு அருமையாய்த் தூக்கம் வந்தது; காலைத் தூக்கி அம்மா மடியில் போட்டுக் கொண்டான். அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டான். ‘கண்ணா’வுக்கு சிரிப்பா வந்தது. அழுது கொண்டிருந்ததை நினைச்சால் வெக்கமா இருந்தது. இன்னும் சிரிப்பு அதிகமா வந்தது.

மறுநாள் பொல பொலவென விடியும் நேரத்தில் அவனைத் தேடி வந்தவர் கண்டனர். அவன் மரத்தின் வேர் மேல் காலைப் போட்டபடி, வேரை இறுகத் தழுவிக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாமா தோளைப் பிடித்துக் குலுக்கினார்.

“கண்ணா – கண்ணா – டேய், எழுந்திருடா.” ஆனால் அவன் எழுந்திருக்க மாட்டான். அவன் தூக்கம் – அம்மாவைக் கண்டு பிடித்து விட்ட தூக்கம். இஷ்டப்பட்டாலும் எழுந்திருக்க முடியாது.

முடிந்தாலும் இஷ்டப்பட்டிருக்க மாட்டான்.

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *