கண்ணனுக்கு வைரஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 5,293 
 

ஒரு அழகான குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஓர் ஆண் பிள்ளை என வீடே குதூகலம்தான். குட்டி கண்ணனுக்கு வயது ஒன்பதுதான் அவன்தான் வீட்டில் கடைக்குட்டிப்பிள்ளை. அவன் அக்காமார் அவனைவிட இரண்டும் மூன்றும் வயதே மூத்தவர்கள்.

கண்ணனுக்கு ஆருயிராய் ஓர் நண்பன் இருந்தான். அவன் பெயர் தீபன். இருவரும் சேர்ந்து கிற்றார் பழகுதல், காற்பந்து அடித்தல், கணனியில் விளையாட்டுகள் உருவாக்குதல், விதம் விதமான உருவங்களை கடதாசி, லெகோ போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்குதல் என்று தமது விளையாட்டு உலகில் மூழ்கடித்து மகிழ்வார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விளையாடி மகிழ்வதும் வழமையாக இருந்து வந்தது.

ஒரு நாள் திடீரென்று தீபன் பாடசாலைக்கு வரவில்லை. கண்ணன் தொலைபேசி அழைப்பு எடுத்துக் கேட்டதில் தீபனுக்கு காச்சல், இருமல், தொண்டை நோ, சுவாசிக்கக் கடினம் என்பதை அறிந்து கொண்டான். தீபன் காச்சல் குணமடைந்து விரைவில் வழமையான நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான், கண்ணன்.

நாட்கள் நகர்ந்தன. மூன்று கிழமைக்குப் பின் தீபன் குணமடைந்துவிட்டதாகவும், மீண்டும் பாடசாலைக்கு வருவதாகவும் அவனிடமிருந்து ஓர் குறுந்தகவலைப் பெற்றுக்கொண்டான் கண்ணன்.உடனே மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான். அடுத்த நாள் வியாழக்கிழமை பாடசாலைவிட்டதும் கண்ணன் தீபனை வீட்டிற்கு அழைத்துவர விரும்பினான். பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டான். இருவரும் நடந்து பத்து நிமிட நடைதூரத்தில் இருக்கும் கண்ணனின் வீட்டிற்கு வந்தனர். குளிர்காலம் என்பதால் வீட்டிற்குள் இருந்து விளையாடி மகிழ்ந்தனர். அன்று மாலை இருவரும் கிற்றார் வகுப்பிற்கு செல்ல இருப்பதால் இருவரையும் கண்ணனின் அப்பா மகிழூந்தில் கூட்டிச் சென்று விடுவதாகவும், வகுப்பு முடிந்ததும் தீபனின் அப்பா கூட்டிக் கொண்டு வருவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறே கண்ணனை அவனின் வீட்டில் இறக்கிவிட்டு தீபனும் தந்தையும் வீடு திரும்பினர்.

அன்றைய நாள் முழுவதும் கண்ணனும் தீபனும் அளவற்ற மகிழ்ச்சியோடு இருந்தனர். அன்று இரவு கண்ணன் தன் தொண்டைக்குள் ஏதோ கரகரப்பாக இருக்கிறது. எச்சில் கூட விழுங்க முடியவில்லை என்று சிணுங்கிக்கொண்டே இருந்தான். கண்ணன் இரவு முழுவதும் சரியாக நித்திரை கொள்ளவில்லை. அவன் தாயாருக்கும் நித்திரையில்லை. விடிந்ததும் தாயார் வேலைக்கு லீவு போட்டுவிட்டு கண்ணனையும் பள்ளிக்கு அனுப்பவில்லை. நாள் முழுவதும் கண்ணனும் தாயாரும் நிறையவே பேசியும் விளையாடியும் மகிழ்ந்தார்கள். கண்ணனுக்கு பெரிதாக வேறு எந்த அறிகுறியும் இருக்கவில்லை.

மாலை நேரம் வந்தது. கண்ணன் சோர்வடையத் தொடங்கினான். இரவுச் சாப்பாடும் வேண்டாம் என்று சொல்லி சாப்பிட மறுத்துவிட்டான். கண்ணனின் உடலின் வெப்பநிலை அதிகரிக்கத்தொடங்கியது. கண்ணனின் தாயார் அவனின் உடல் வெப்பநிலையை அளந்து பார்த்தார். இப்பொழுது அவனுக்கு காச்சல் 40 பாகை இருப்பதாகக் காட்டியது, கருவி. உடனே வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு தொலைத்தொடர்பு எடுத்து கண்ணனின் நிலைமையை கூறினார். மறுபக்கத்தில் மருத்துவர்களின் காரியதருசிதான் ( health secretary)பேசினார். “தண்ணீர் குடிக்கிறாரா? மூச்சு விடுதல் சாதாரணமாக இருக்கிறதா?” என்ற கேள்விகளை தொடுத்து எல்லாவற்றிற்கும் ஆம் என்று தாயார் பதிலளித்ததும். பனடோலை 6 மணித்தியாலத்திற்கு ஒருமுறை கொடுக்கவும். நன்றாக நீராகாரம் கொடுத்துக் கொண்டிருங்கள். நீர் குடிக்க முடியாமலோ அல்லது சோர்ந்து விழுந்தாலோ உடனே வைத்தியசாலைக்கு வரவும். மற்றும்படி இது ஒரு சாதாரண வைரஸ் காச்சல்தான் என்று கூற, நன்றி கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்தார் தாயார்.

6 மணித்தியாலத்திற்கு ஒருமுறை பனடோல் கொடுத்தும் காச்சல் குறைவதாகவே இல்லை கண்ணனுக்கு. அடுத்த நாள் சனிக்கிழமை. கண்ணனும் தாயாரும் வீட்டில் நிற்றக; தந்தை மற்ற இரு பெண்பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வாராவாரம் சனிக்கிழமைதோறும் நடைபெறும் தமிழ் பள்ளிக்குச் சென்றுவிட்டனர். கண்ணன் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டே இருந்தான். தண்ணீரைத்தவிர வேறு எதையும் அவன் உட்கொள்ளவில்லை. நாள்முழுவதும் மெத்திருக்கையில் படுத்துக்கொண்டு தலையை அம்மாவின் மடியில் வைத்தபடி அனுங்கிக் கொண்டே இருந்தான். தாயாரும் மகனின் தலையை கோதிவிட்டு, தேகத்தையும் தடவிக்கொண்டிருந்தார்.

சனிக்கிழமை இரவு கண்ணனின் அக்கா கீதாவிற்கும் உடல் சோர்வு ஏற்பட்டது. எதுவும் சாப்பிட விருப்பமில்லை என்று சொல்லி மெத்திருக்கையில் அம்மாவிற்கு பக்கத்தில் இருந்து கொண்டு தன்னையும் அணைத்து வைத்திருக்கும்படி கேட்டாள். அவளுக்கு 12 வயதுதான். நீண்ட மெத்திருக்கையில் நடுவில் இருந்துகொண்டு பக்கத்திற்கு ஒருவராக இருவரின் தலையையும் மடியில் வைத்திருந்தபடி இரவு முழுவதும் இருந்தவாறே தூங்குவதும் விழிப்பதுமாக இருந்தார் தாயார். அடுத்த நாள் காலையில் கீதாவின் தங்கை துளசிக்கும் தொற்றிக்கொண்டது காச்சல். அன்று ஞாயிற்றுக்கிழமை, யாரைப்பார்ப்பது என்ற நிலையில் செய்வதறியாதிருந்த தாயாரையும் விட்டுவைக்கவில்லை, இந்தப் பயங்கரக்காச்சல்.

மீண்டும் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, இது ஒரு சாதாரண வைரஸ் காச்சல்தான். நன்றாக நீரருந்துங்கள், 6 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை பனடோலையும் ஐபோபுறுவேனையும் மாறி மாறி கொடுங்கள் என்ற அதே புராணம்தான். இன்று மூன்று நாட்களாகியும் கண்ணனுக்கு காச்சல் குறைந்தமாதிரியில்லையே என்று கேட்டதற்கு; சரி நாளை காலை பத்து மணிக்கு வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருமாறு கூறினர்.

மறுநாள் காலை வைத்தியசாலையில் கண்ணனின் சலம், குருதி, எச்சில் என எல்லாவற்றையும் எடுத்து பரிசோதனை நடத்தினர்; பரிசோதனை முடிவுகளுக்காக சிறிது நேரம் காத்திருக்கச் சொன்ன பின்பு; எல்லாம் நன்றாகவே இருக்கிறது. இருமலுக்கு மருந்துச்சீட்டு இணையத்தினூடாக மருந்தகத்திற்கு அனுப்புகிறேன். நீங்கள் அங்கு சென்று இருமல் மருந்தை வாங்கிக் கொள்ளுங்கள், என்றார் மருத்துவர்.

இப்பொழுது வீட்டில் எல்லோருமே நோயாளர்கள். யாருக்கும் சாப்பிட மனம் இல்லை. மல்லி,நற்சீரகம் மற்றும் ஓரிரு மிளகும் போட்டு காச்சிய நீரை இளஞ்சூட்டில் சிறிது சீனியும் கலந்து எல்லோரும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை குடித்துக்கொண்டிருந்தனர். வீட்டில் சமைத்து இன்றோடு ஐந்து நாட்கள் ஆகிவிட்டது.

யாராலும் தலையைத் தூக்கக்கூட முடியவில்லை. தலையிடியும் தலைப்பாரமும் பிள்ளைகளையும் தாயாரையும் வாட்டி வதைத்தது. அப்பொழுதுதான் கண்ணனின் தாத்தாவின் ஆலோசனைப்படி வேது பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் தாயார். மெல்ல எழுந்து சென்று ஒரு பாத்திரத்தில் தேயிலையையும் தேசிக்காயையும் போட்டு அதில் நீரூற்றி மூடியதும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்தார். ஒரு போர்வையை எடுத்து தயாராக வைத்துக்கொண்டு அடுப்பில் இருந்து இறக்கியதும் போர்வையால் தன்னை முழுமையாக மூடிக் கொண்டு சூடான பாத்திரத்தின் மூடியை திறந்து அந்த ஆவி வெளியில் போகாதபடி போர்வையால் மூடிக்கொண்டு அதே நேரம் ஆவி முகத்தில் படும்படியாக தலையை பாத்திரத்தை நோக்கி சற்று குனிந்தபடி இரண்டு மூன்று நிமிடங்கள் இருந்திருப்பார்.

என்ன அதிசயம்; தலைப்பாரம் எங்கு சென்றது என்றே தெரியவில்லை. உடலும் சற்று புத்துயிர் பெற்றது போல் இருந்தது. உடனே கண்ணன், கீதா மற்றும் துளசிக்கும் அவ்வாறே செய்தார். எல்லோருக்கும் இப்பொழுது புத்துணர்வு வந்துவிட்டது. எழுந்து இருந்தார்கள், பேசத்தொடங்கினார்கள். மறுநாளும் அவ்வாறு காலையும் மாலையும் வேது பிடித்தபோது, இன்னும் உற்சாகமாக இருந்தது. இப்பொழுது சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள், நாட்கள் வழமைக்குத்திரும்பிவிட்டன…..

இத்தனை நாளும் எல்லோரும் ஒன்றாகவே நித்திரை செய்தனர். தேக அரவணைப்புத்தான் முதலில் மருந்தாக இருந்தது. வேது பிடித்தது தலைப்பாரத்தைக் குறைத்தது. உடலுக்கு புத்துயிர் கொடுத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *