கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 6,196 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள்போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிறாள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக் கொண்டே அவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். சில வேளைகளில் தனது சிறிய கால்களை நிலத்திலே உதைத்துத் தாயின் மார்பிலே தலையால் முட்டுகிறான். அப்படிச் செய்வது அவனுக்கு ஒரு விளையாட்டோ என்னவோ.

கண்ணாடியின் முன்னால் நின்று கண் புருவத்துக்கு மைதீட்டிக் கொண்டிருந்த வசந்தியின் பார்வை, கோடிப்புறத்து யன்னலின் ஊடாகக் கதிரியின் மேல் விழுகிறது. மைதீட்டுவதை நிறுத்திவிட்டு அவள் மெதுவாக யன்னலின் அருகில் வந்து கம்பிகளைப் பிடித்தவண்ணம் கதிரி பால் கொடுப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். அவளது பார்வை சிறிதுநேரம் கதிரியின் மார்பிலே மேய்கிறது. கதிரியின் உடலமைப்பைக் கவனித்தபோது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

வளவு கூட்டுவதற்காக மாதத்தில் இரண்டு தடவையாவது கதிரி இங்கு வருவாள். நெல் குத்துதல், மாவு இடித்தல் போன்ற வேறு வேலை களிலிருந்து சொல்லியனுப்பினாலும் அவள் வந்து செய்து கொடுப்பாள்.

வசந்தி கொழும்பிலிருந்து ஊருக்கு வந்திருந்த வேளைகளில், கதிரி அங்கு வேலைக்கு வரவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய் விட்டன. அதனால் கதிரியை ஐந்தாறு வருடங்களாக வசந்தியால் பார்க்க முடியவில்லை.

வசந்தி கல்யாணஞ் செய்து கணவனுடன் கொழும்புக்கு போவதற்கு முன் கதிரியை அடிக்கடி பார்த்திருக்கிறாள். அப்போது இருந்த அவளது இறுக்கமான உடலமைப்பும், அழகும் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றன.

‘நறுக்’கென்று அந்தச் சிறுவன் கதிரியின் மார்புக்காம்பில் கடித்து விடுகிறான்.

‘ஆ’ என்று ஒருவித வேதனையோடு அந்தச் சிறுவனைத் தூக்கி நிமிர்த்திய கதிரி, “ஏன்ரா கள்ளா கடிச்சனி?” என அவனிடம் செல்லமாகக் கடிந்து கொள்ளுகிறாள்.

அவன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனது கடை வாய்களிலிருந்து பால் வழிகிறது. கதிரி தன் சேலைத் தலைப்பினால் அந்தச் சிறுவனின் வாயைத் துடைத்துவிட்டு, நெஞ்சை மறைத்துக் ‘குறுக்குக் கட்டு’க் கட்டிக்கொள்ளுகிறாள்.

இப்போது அந்தச் சிறுவன் எழுந்து நிற்கிறான். அவனது உடல் முழுவதும் புழுதி படிந்திருக்கிறது. அவனது மெலிந்த உடலின் நெஞ்சு எலும்புகள் பளிச்சென்று தெரிகின்றன. அவனது தோற்றத்துக்குக் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பெரிதாக இருக்கிறது.

கொழும்பிலிருக்கும் மாதர்சங்கம் ஒன்றிற்கு வசந்தி அடிக்கடி செல்வாள். அந்தச் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் அவளது சிநேகிதிகளில் பலர், குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.

பால் கொடுப்பதனால் உடலுறுப்புகளின் இறுக்கமும் கவர்ச்சியும் குறைந்து விடுவதைப்பற்றி அவளுடைய சிநேகிதிகள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். சிறிது காலத்துக்கு முன்பு மாதர் சங்கத் தலைவி பால் கொடுப்பதை நிறுத்துவதற்கு இலகுவான முறைகள் எவை என்பதைப்பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள். இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வசந்தியின் நினைவில் வந்துகொண்டிருந்தன.

வசந்தியின் மனது துருதுருக்கிறது. வளர்ந்துவிட்ட குழந்தை யொன்றுக்குப் பால் கொடுக்கும் கதிரியின் உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது! வசந்தி கதிரியிருக்கும் இடத்திற்கு வருகிறாள்.

“பிள்ளை, எப்ப கொழும்பாலை வந்தது?” வசந்தியைக் கண்டதும் ஆச்சரியத்தோடு கேட்கிறாள் கதிரி.

“காலைமைதான் வந்தனான்; நான் வந்ததைப் பற்றி அம்மா உன்னட்டைச் சொல்லேல்லையோ?”

“இல்லைப் பிள்ளை, நான் வரேக்கை அவ அடுப்படியிலை வேலையாயிருந்தா, அவவையேன் குழப்புவான் எண்டு நான் பின்வளவுக்குக் குப்பை கூட்டப் போட்டன்.”

அந்தச் சிறுவன் இப்போது வசந்தியை ஆச்சரியமாகப் பார்க்கிறான். பின்பு பயத்துடன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான்.

“இவன்தான் பிள்ளை என்ரை கடைசிப் பெடியன், ஆள் வலு சுட்டியன். பிள்ளையை ஒரு நாளும் பார்க்கேல்லையெல்லே; அது தான் பயப்பிடுகிறான். அந்தச் சிறுவனின் தலைமயிர்களைத் தன் விரல்களினால் கோதியபடியே கூறுகிறாள் கதிரி.

“உவனுக்கு எத்தனை வயசு?”

“ஓ, இவன் பிறந்தது பிள்ளைக்குத் தெரியாது தானே. இந்த முறை எங்கடை அன்னமார் கோயில் வேள்வி வந்தால் இரண்டு முடிஞ்சு போம்.”

“இப்பவும் நீ உவனுக்குப் பால் கொடுக்கிறாய். ஏன் நிற்பாட்டேல்லை? நெடுகப் பால் கொடுத்தால் உன்னுடைய உடம்பு பழுதாய்ப் போமெல்லே.”

“என்ன பிள்ளை உப்பிடிச் சொல்லுறாய்? உவன் வயித்திலை வாறவரைக்கும் முந்தினவன் மூண்டரை வரியமாய்க் குடிச்சவன். பால் நிற்பாட்ட ஏலாமல் வேப்பெண்ணை பூசித்தான் நிற்பாட்டினனான். என்ரை நடுவிலாளும் அப்பிடித்தான்; இரண்டு வரியமாய்க் குடிச்சவள். பெத்த பிள்ளையளுக்குப் பாலைக் குடுக்காமல் அப்பிடியென்ன எங்கடை உடம்பைக் கட்டிக்காக்க வேணுமே?”

கதிரி சொல்லுவது வசந்திக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறையாமல் பால் கொடுத்திருக்கிறாள்!.

வீட்டினுள்ளேயிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது.

“பிள்ளைக்கும் போன பொங்கலுக்கையெல்லோ குழந்தை பிறந்தது. கொழும்பிலை ஆசுப்பத்திரியிலை தான் பிறந்ததெண்டு கொம்மா சொன்னவ. இப்ப குழந்தைக்கு ஏழு மாசமிருக்குமே?”

“இல்லை ஆறு மாசந்தான்”

“எடி வசந்தி, குழந்தை அழுகிறசத்தம் உனக்குக் கேக்கல் லையோ? அதுக்குப் பசிக்குதுபோலை. உங்கை கதிரியோடையிருந்து என்ன கதைச்சுக்கொண்டிருக்கிறாய்?”

வசந்தியின் தாய் அன்னம்மா, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிறாள்.

“ஏதோ கனாக்கண்டு அழுகுதாக்கும். காலைமை எட்டு மணிக்குத்தானே பால் கொடுத்தனான். இனி பன்னிரண்டு மணிக்குத்தான் கொடுக்கவேணும்.” வசந்தி தான் கூறுகிறாள்.

“இந்தா குழந்தையைப் பிடி, நீ என்னத்தையாவது செய். நான் போய்க் கதிரிக்குத் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” வசந்தியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அன்னம்மா திரும்புகிறாள்.

குழந்தையை இறுக அணைத்து, அதன் தொடைகளைத் தட்டி அழுகையைக் குறைக்க முயலுகிறாள் வசந்தி. குழந்தை வசந்தியின் மார்பிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுகிறது.

“அம்மா தொட்டிலுக்கை சூப்பி இருக்கு, அதையும் எடுத்துக் கொண்டு வாங்கோ.”

அன்னம்மா கதிரிக்குத் தேநீர் கொண்டு வரும்போது சூப்பியையும் மறக்காமல் எடுத்து வருகிறாள். வசந்தி அதனை வாங்கி குழந்தையின் வாயில் வைத்தபின்புதான் ஒருவாறு அதன் அழுகை ஓய்கிறது. குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தபடி அந்த றப்பரை ஆவலுடன் உமியத் தொடங்குகிறது.

கதிரி எழுந்து கோடிப்புறத்து வேலியிலே செருகியிருந்த தனது சிரட்டையை எடுத்துத் துடைத்து, அதிலே படிந்திருந்த தூசியை நிலத்திலே தட்டி நீக்கி விட்டு அன்னம்மாவிடம் நீட்டுகிறாள். அந்தச் சிரட்டையிலே செம்பு முட்டிவிடக்கூடாதே என்ற கவனத்துடன் அன்னம்மா அதற்குள் தேநீரை வார்க்கிறாள்.

“பிள்ளை, குழந்தைக்குப் பசிக்குதுபோலை; பாலைக் குடுமன்” வசந்தியைப் பார்த்துக் கதிரி கூறுகிறாள்.

“அழுகிற நேரமெல்லாம் பால் கொடுக்கப்படாது. பிறகு பால் நிற்பாட்டிறது கரைச்சல். நான் இப்ப பால் கொடுக்கிறதைக் குறைச்சுப் போட்டன்; வாற மாசத்தோடை நிற்பாட்டப்போறன். நேரத்தின்படிதான் பால் கொடுக்கவேணும்.”

அதைக் கேட்டபோது கதிரியின் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குப் பசிக்கிறது, அதற்குப் பால் கொடுக்காமல் ஏமாற்றுகிறாள் தாய். கதிரியின் தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருக்கிறது. தேநீர் உள்ளே இறங்க மறுக்கிறது.

“ஏன் கதிரி தேத்தண்ணியைக் குடிக்காமல் வைச்சுக் கொண்டிருக்கிறாய்? சுறுக்காய்க் குடிச்சிட்டுப் போய்க் குப்பையைக் கூட்டன். கையோடை ஒரு கத்தை வைக்கலையும் எடுத்துக்கொண்டு போய் மாட்டுக்குப் போட்டு விடு. காலைமை தொடக்கம் அது கத்திக் கொண்டு நிற்குது.”

கதிரியிடம் கூறிவிட்டு அன்னம்மா வீட்டுக்குள் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வசந்தியும் குழந்தையுடன் செல்கிறாள்.

கதிரியால் தேநீரைக் குடிக்க முடியவில்லை; அவள் அதனை வெளியே ஊற்றிவிட்டு சிரட்டையை வேலியில் செருகுகிறாள். பின்பு கோடியில் அடுக்கியிருந்த வைக்கோற் போரில் ஒரு கற்றை வைக்கோலை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குச் செல்லுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து அந்தச் சிறுவனும் செல்லுகிறான்.

கதிரியைப் பார்த்ததும் அந்தப் பசுமாடு உறுமுகிறது. கொட்டிலின் மறுபுறத்தில் கட்டப்பட்டிருந்த அதன்கன்று, பால்குடிப்பதற்காகக் கயிற்றை இழுத்துக் கொண்டு தாய்ப்பசுவின் அருகே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தாய்ப்பசு கன்றின் முகத்தைத் தன் நாவினால் நக்குகிறது. இப்போது பசுவின் முலைக் காம்பிலிருந்து பால் சுரந்து சொட்டுச் சொட்டாக நிலத்திலே சிந்துகிறது. கதிரி அதனை உற்றுப் பார்க்கிறாள். அந்தப் பசு நல்ல உயர்சாதிப் பசுவாகத்தான் இருக்க வேண்டும்.

கதிரி வைக்கோலைத் தொட்டிலுக்குள் போட்டு உதறி விடுகிறாள். பின்பு அதன் கன்றை ஆதரவாகத் தடவிவிட்டு அதற்கும் சிறிது வைக்கோலைப் போடுகிறாள்.

வெயில் உக்கிரமாக எறிக்கிறது. கதிரிக்குக் களைப்பாகவும் ஆயாசமாகவுமிருக்கிறது. தொடர்ந்தும் வேலைசெய்ய அவளால் முடியவில்லை. அருகிலிருக்கும் வேப்ப மரநிழலின் கீழ் தனது சேலைத் தலைப்பை விரித்து அதிலே சாய்ந்து கொள்ளுகிறாள். அவளது சிறுவன் தூரத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான்.

வசந்தி தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்குச் செல்வ தற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். வெகுநேரமாகக் கண்ணாடியின் முன்னால் நின்று ஒரு புதிய ‘பாஷன்’ கொண்டையைப் போடுவதில் அவள் முனைந்திருக்கிறாள்.

அந்தக் கொண்டை அவளது தோற்றத்துக்கு மிகவும் எடுப்பாகவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு நாள் அந்தக் கொண்டையோடு அவள் மாதர் சங்கத்துக்கு போயிருந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருமுகமாக அவளது அழகைப் புகழ்ந்தார்கள். அன்று அந்தக் கொண்டையை அடுத்த வீட்டிலிருக்கும் அவளது தோழிதான் போட்டுவிட்டாள்.

கொண்டை போட்டு முடிந்துவிட்டது. ஆனாலும் வசந்திக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஒருவாறாகத் தனது அலங்காரத்தை முடித்துக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள்.

வெகு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்த வசந்தியின் குழந்தை அழத் தொடங்குகிறது. அன்னம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்குகிறாள். அவளைப் பார்த்ததும் குழந்தை வீரிட்டு அழுகிறது. அதன் அழுகையை நிறுத்த எண்ணிய அன்னம்மா, சூப்பியை எடுத்து அதன் வாயிலே வைக்கிறாள். குழந்தையின் அழுகை சிறிது நேரம் அடங்குகிறது. அதனைத் தன் தோளிற் சாய்த்து, முதுகிலே தட்டி நித்திரையாக்க முயலுகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் வீரிட்டு அழுகிறது. அன்னம்மா எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அதன் அழுகையை நிற்பாட்ட முடியவில்லை. குழந்தை மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறது. அதன் வாயிலிருந்த சூப்பி நிலத்திலே விழுகிறது.

கண்ணயர்ந்திருந்த கதிரி எழுந்து உட்காருகிறாள். ஏன் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுகொண்டிருக்கிறது? குழந்தையின் அழுகை கதிரியின் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

“ஏன் கமக்காறிச்சி குழந்தை அழுகுது? பிள்ளையைக் கூப்பிட்டு பாலைக் குடுக்கச் சொல்லுமன்”அன்னம்மாவிடம் கூறுகிறாள் கதிரி.

“இனி ஆறு மணிக்குத்தான் பால் குடுக்கவேணுமெண்டு சொல்லிப்போட்டு அவள் எங்கையோ கலியாணத்துக்குப் போட்டாள். இங்கை குழந்தை கிடந்து பசியிலை துடிக்குது. அப்பவும் நான் சொன்னனான், குழந்தையையும் கொண்டுபோகச்சொல்லி; அவள் கேட்டால் தானே. பால் குடுக்கிற நேரத்துக்கு வருவனெண்டு சொல்லிப் போட்டுப் போட்டாள். இப்ப என்ன செய்யிறது? அழுதழுது இதுகின்ரை தொண்டையும் அடைச்சுப்போச்சு”.

அன்னம்மாவின் குரலையும் மீறிக்கொண்டு துடித்துத் துடித்து அழுகிறது குழந்தை.

அன்னம்மா விளையாட்டுப் பொருட்களைக் காட்டிக் குழந் தையின் அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஆனாலும் அதன் அழுகை அடங்கவில்லை. அன்னம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

வெகு நேரமாக அழுது களைத்துப்போன அந்தக் குழந்தைக்கு இப்போது அழுவதற்கே சக்தியிருக்கவில்லை. அது இப்போது முனகிக் கொண்டிருக்கிறது.

அன்னம்மாவின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடு ‘அம்மா அம்மா’ என்று குரல் கொடுக்கிறது. பால் கறக்கும் நேரம் வந்துவிட்டால் அது கத்தத் தொடங்கி விடும். மாட்டுடன் சேர்ந்து இடையிடையே கன்றும் குரல் கொடுக்கிறது.

இப்போது முனகுவதற்குக் கூடச் சத்தியில்லாமல் குழந்தை அன்னம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறது.

“கமக்காறிச்சி, குழந்தை இனித் தாங்கமாட்டுது; பசுப் பாலையாவது குடுமன்.” கதிரி அன்னம்மாவிடம் கூறுகிறாள்.

“குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள் கதிரி, நான் ஓடிப்போய்ப் பாலைக் கறந்து கொண்டுவாறன். ”

முற்றத்து விறாந்தையிலுள்ள திண்ணையில் பாயொன்றை விரித்துக் குழந்தையை அதிலே கிடத்திவிட்டு, செம்பை எடுத்துக் கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் போகிறாள் அன்னம்மா.

குழந்தை மீண்டும் அழத் தொடங்குகிறது. அது தன் பிஞ்சுக் கால்களால் நிலத்தில் உதைத்து, உடலை நெளித்துத் துடிக்கிறது.

கதிரி ஒரு கணம் கண்களை மூடிக்கொள்ளுகிறாள். அவளால் குழந்தைபடும் வேதனையைப் பார்க்க முடியவில்லை.

துடித்துப் புரண்டுகொண்டிருந்த குழந்தை திண்ணையின் ஓரத்திற்கு வந்து விடுகிறது.

ஐயோ! குழந்தை விழப்போகிறதே !

கதிரி ஓடிச்சென்று, திண்ணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிறாள்.

“அம்….. மா” குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது.

குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நிலத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி.

குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெஞ்சை விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக்கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது.

“அ….. ம்மா, அம்… மா ”

கதிரி தன்னை மறக்கிறாள்.

கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்துவிடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் கைகளால் அளைந்தபடி வாயை வைத்து உமியத் தொடங்குகிறது.

“ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக் குடுத்துப் போட்டுது”.

மாட்டுக் கொட்டிலில் இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிறாள்.

அவள் கூறுவதைக் கேட்கக்கூடிய நிலையில், அப்போது கதிரி இருக்கவில்லை.

கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வசந்தி, இப்போது தனது ‘ஹான்பாக்’கைத் திறந்து அதற்குள்ளிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரிசெய்து கொள்ளுகிறாள்.

– வீரகேசரி 1973

– கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *