ஒரு வாய்ப்பு வேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 9,913 
 

அம்மா அம்மா என்னோட லேப்டாப் பேக் கொஞ்சம் எங்க இருக்குன்னு பாருங்க. ஏய் கவி என்னோட ஷுவிற்கு பாலிஷ் போட்டியா?.

ஆமா காலைல எழுந்திருச்ச உடனே அண்ணன் செய்யற பந்தா தாங்க முடியல.

ஏய் கவி பேசாம வாய மூடு. அவன் காதில விழுந்தா உன்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுவான்.

எங்க கணேஷ் காணும். அவன சீக்கிரம் வண்டிய கிளீனா துடைக்கச் சொல்லு. ஐயோ ஆண்டவா உங்கள ஏவி ஒவ்வொரு வேலைய சொல்லறதுக்குள்ள எனக்கு வயசு ஆகிவிடும்.

பாவம் கமலாம்மா. இவங்களுக்கு இரண்டு பையன். ஒரு பெண். அவங்க வீட்டுகாரர் பேரு ரமணி. அவரு ஒரு கம்பெனியில் நல்ல போஸ்ட்ல இருந்தாரு. திடீர்னு அவருக்கு ஒரு நாள் ஆபீசில் இருக்கும் போது மயக்கம் போட்டு விழுந்துட்டார். கடைசில ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க . பின்னதான் தெரிஞ்சது அவருக்கு பக்கவாதம் வந்துடிச்சுன்னு. அதனால பெரியபையன் விக்னேஷ் மேல எல்லா பொறுப்பும் விழுந்திடுச்சு.

விக்கி நல்ல புத்திசாலி. எம்.சி.ஏ. கோல்ட் மெடலிஸ்ட் யுனிவேர்சிட்டியில். அவனுக்கு நல்ல சாப்ட்வேர் கம்பனியில் வேலை. மாசம் இரண்டு லட்சம் சம்பாதிக்கிறான். அதனால வீட்டில அவன் வச்சதுதான் சட்டம். யாரும் அவன கேள்வி கேட்க முடியாது.

விக்கி இந்தாப்பா மதியத்துக்கு சாப்பாடு.

எனக்கு வேண்டாம். நான் காண்டீனில் சாப்பிட்டுக்கிறேன்.

பார்த்து போப்பா. இந்தா ஹெல்மெட் போட்டுக்கிட்டு போ. அம்மா பேசாம இருங்க. இந்தா கண்றாவி எல்லாம் பயப்படறவங்களுக்குதான். எனக்கு இல்ல. வரட்டா.

இந்த காலனியில் வண்டி உறுமுகிற சத்தம் கேட்டாலே விக்கி கிளம்பிவிட்டான் என்று அர்த்தம். அவன் வீட்டில் உள்ளவர்களை எப்பொழுதுமே வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றதில்லை.

ஒரு வழியா அவன் ஆபீஸ் கிளம்பி விட்டான்.

ஏம்மா அண்ணன் மட்டும் வெளிய சாப்பிடுது. நானும் எங்க காலேஜ் காண்டினில் சாப்பிடவா?.

ஏய் கவி நீ அடி வாங்கப்போற?.

நீ நல்லா விக்கிக்கு சப்போர்ட் பண்ற.

சரிசரி சீக்கிரம் காலேஜ் கிளம்பு. எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு.

இரவு விக்கி வந்தவுடன் அவன் அம்மா கேட்டாள். ஏம்பா நாளைக்கு கணேஷ்க்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். பிளஸ்டூக்கு எல்லாரும் தனியா டியுஷன் போறாங்க. அவனும் போகணும். அதுக்கு சேர்த்து பணம் வேணும்பா.

சரி எவ்வளவு வேணும்னு சொல்லு. டேய் கணேஷ் ஒழுங்கா படிக்கல அப்பறம் இருக்கு உனக்கு.

நான் நல்லா படிக்கறேன்னா.

சரிசரி பார்க்கலாம்.

அப்புறம் அப்பபாவ டாக்டரிடம் செக்கப் கூட்டிகிட்டு போகணும்.

உங்களுக்கு காசு எவ்வளவு வேணும்னு சொல்லுங்க நான் தரேன். ஆனா என்னால எல்லாம் கூட்டக்ிகிட்டுப் போக முடியாது.

விக்கி வீட்டில் எல்லாரிடமும் அதிகாரத்துடன்தான் பேசுவான். அவன் குடும்பச் செலவுக்குப் போக மீதி பைசா எல்லாம் அவன் வைத்துக் கொள்ளுவான். வீட்டில் யாரிடமும் பிரியமாகப் பேசமாட்டான். அவன் அப்பா இப்படி இருப்பது அவனுக்கு அவமானமாக இருந்தது.

தங்கை, தம்பிக்கு பிறந்தநாள் என்றாலும் ஒரு வாழ்த்து சொல்லமாடடான். அவனுக்கு எல்லாமே நண்பர்கள்தான்.

தப்பித்தவறி வீட்டில் இருந்தாலும் இன்டர்நெட்டில் இருப்பான். யாரிடமாவது பேசிக் கொண்டு இருப்பான். அவன் வீட்டில் இருந்தால் வீடே அமைதியாக இருக்கும்.

அவனைப் பார்த்தாலே ஈகோ பிடித்த ஆள் என்று முகத்தில் தெரியும்.

நல்ல அறிவாளியாக இருந்தாலும், குடும்பத்தை மதிக்காமல் ஊர் சுற்றக் கிளம்பி விடுவான். அவன் அப்பாவிற்கு இவனிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால் இவன் மதிக்க மாட்டான். இப்படியே நாட்கள் கடந்தது.

ஒரு முறை ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் டிவி பார்த்துக் கொண்டு இருந்தான்.

கவிதா வெளியே போயிட்டு லேட்டாக வந்தாள். கண்டபடி திட்டினான். அவன் அம்மாவால் ஒரு வார்த்தை பேசமுடியவில்லை.

கடைசியில் யாருமே அன்று இரவு சாப்பிடவில்லை.

காலையில் விக்கி எழுந்து விட்டான். எதுவும் சாப்பிடாமல் அவசரமாகக் கிளம்பி விட்டான். அவன் அம்மா கவனமா போப்பா என்று சொன்னது கூட அவன் காதில் விழவில்லை. தலையில் ஹெல்மெட் மாட்டாமல் வேகமாக ஸ்பீடில் போனான். ஏதோ ஒரு யோசனையில் மெயின் ரோடில் திரும்பும் போது எதிரே வந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டான்.

ஒரு வழியாக ஹாஸ்பிடலில் சேர்த்து வீட்டுக்கு தகவல் சொல்லப்பட்டது.

அவனுக்கு கண்விழித்துப் பார்க்கும் போது ஒரு காலே இல்லை என்று தெரிந்தவுடன் கதறி அழுதான்.

அவன் குடும்பமே அவனைப் பார்த்து அழுதது.

ஐயோ அண்ணா உனக்குப் போய் இப்படி கடவுள் கொடுத்துட்டாரே. என் கால வேணா எடுத்துக்கட்டும்.

அவன் தம்பி அவன் கையை பிடித்துக் கொண்டு அழுதான். அவன் அம்மாவோ மயக்க நிலையில் இருந்தாள். அவன் அப்பா வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு கண்ணீர் விட்டார்.

விக்கி மனதில் நினைத்தான். ஐயோ இவ்வளவு பேரும் என்னிடம் பிரியமாக இருக்கிறார்களே, இவர்களை எல்லாம் மதிக்காமல் ரொம்ப அலட்சியப்படுத்தி விட்டேன். கவி உன்னைய எத்தினை நாள் திட்டி இருப்பேன். நீ என்னடான்ன உன் காலை கொடுக்கிறேன்ன்னு சொல்லுற. அப்பா ஒரு மூலைலே அழுகிறாரு. இந்தப்பக்கம் தம்பி வருத்தப்படுகிறான். சே எத்தனை நாள் இவங்கள மதிக்காம இருந்திருக்கிறேன்.

கடவுளே எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு. என் குடும்பத்தை சந்தோஷமா நான் வைக்கணும். என் தம்பி, தங்கையை வண்டியில் கூட்டிகிட்டுப் போகணும். அப்பா கூட மனசுவிட்டு பேசணும். அம்மா எவ்வளவு பாடுபடுத்தினேன். ப்ளீஸ் அம்மா என்னைய மன்னிச்சுடுங்க. இனிமே என்னால வண்டி ஓட்ட முடியாது.

கடவுளே கொஞ்சம் என்மேல் கருணை காட்டாகக் கூடாதா?. நான் செஞ்சது எல்லாமே தப்புதான். என் குடும்பத்தை மதிக்காமல் வெளியே நல்ல பெயர் எடுத்து என்ன பயன். எனக்கு இனிமேல் வாழ்வே இல்லை என்று கதறி அழுதான். அப்பொழுது அவன் அம்மா ரூமுக்கு ஓடிவந்து என்னப்பா ஆச்சு என்று கேட்டாள்.

அவன் அம்மா குரல் கேட்டு முழித்தான்.

அவன் அம்மா என்ன விக்கி ஏதாவது கனவு கண்டையா?.

அவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது.அவன் காலைத் தொட்டுப் பார்த்தான்.

அவன் அம்மாவிடம் கையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

அம்மா இவ்வளவு நாள் உங்களை எல்லாம் மதிக்காமல் இருந்தேன். என்னை மன்னித்து விடுங்கள். இன்னையிலேர்ந்து நாள் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வேன்.

என்னப்பா ஆச்சு. சரிசரி கிளம்பு. வேலைக்கு போகணும்ல.

இல்லம்மா ஒருவாரத்துக்கு லீவ் போட்டுட்டு உங்க கூட இருக்கப் போறேன்.

அவன் அம்மாவிற்கு புரிந்தது. இவனுக்கு மாற்றம் வந்துவிட்டது என்று.

என்ன நண்பர்களே விக்கி மாதிரி தான் பலபேர் இருக்காங்க. சந்தோஷத்தை வெளியில் தேடிக்கிட்டு… தயவு செய்து எல்லாரையும் சந்தோஷமா சிரிக்க வையுங்க. எல்லாருடைய வாழ்கையிலும் கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை தருவார். அந்த நேரம் வரும்னு காத்திருக்காமல் நாம எல்லாரிடமும் அன்பா இருந்தாலே போதும். வாழ்க்கை ஒரு குறைவில்லாமல் இருக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *