ஏன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 6,199 
 

இரவு, பகல் பாராமல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் உழைத்துப் பணம் ஈட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றும் கணவருக்குத் துரோகம் செய்யத்துணியும் மனைவியரைப் பற்றி சற்று முரண்பாடான அதே சமயம் உணர்ச்சிப்பூர்வமான விசயம் இது. கலாசாரம் சம்பந்தப்பட்டது.

என்னதான் நாம் பண்பாடு, கற்பு, தனிமனித ஒழுக்கம் இவைபற்றியெல்லாம் பேசினாலும் ஏராளமானோர் வாழ்க்கையில் நடைபெறும் இந்தத் துரதிஷ்டவசமான நிகழ்வுகள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் நமது வீட்டு அமர்வறை (ஹால்)வரை வந்துவிட்ட தொலைக்காட்சிதான் முக்கியப் பகுதியை எடுத்துக்கொள்கிறது. இதில் சில உண்மைச்சம்பவங்களின் பிரதிபலிப்பு இருப்பதை மறுக்கமுடியாது. சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கே திரும்பி வராமல் தன் தாய், தந்தையர், மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், சுற்றத்தார் போன்றவர்களின் மரணத்திற்குக் கூட வராமல், விரக்தியுற்று அவர்கள் பணிபுரியும் வெளிநாடுகளிலேயே வாழும் எத்தனையோ நண்பர்களை நான் அறிவேன். இது எல்லோருக்கும் பொருந்துவதல்ல.

சில நண்பர்கள் வெட்கத்தைவிட்டுச் சொல்லி அழுததை இங்கே வேதனையோடு நினைத்துப்பார்க்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் இந்த விசயங்களை வெளியில் வேறுயாரிடமும் சொல்லக்கூடாதென்று என்னிடம் வேண்டிக்கொள்ளும்போது நான் ஆயிரம் முறை செத்திருக்கிறேன். அவர்களின் மனப்போராட்டத்தை அதே அலைவரிசையில் அனுபவித்து அவர்களோடு சேர்ந்து நானும் கண்ணீர் வடித்திருக்கிறேன்.

எப்படி என்னிடம் சொன்னார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றும் மாயமோ, மந்திரமோ இல்லை. அது என் வேலையும் இல்லை. நான் எல்லோரிடமும் நன்றாகப் பேசுவேன். எப்போதும் கலகலப்பாக இருப்பேன். எளிதில் எனக்கு நண்பர்கள் கிடைத்துவிடுவார்கள். இது சில வேளைகளில் அபத்தமாகவும் முடிந்ததுண்டு. அவ்வாறு நான் எல்லோரிடமும் அன்பாகப் பழகும்போது, அவர்கள் என்னிடம் பேசினால் சற்று மனதுக்கு ஆறுதலாக இருப்பதாகவும், கவலை மறந்து சிரிப்பதாகவும் சொல்வார்கள். பிறகு அப்படியென்ன உங்களுக்குக் கவலை என்று எதார்த்தமாகக் கேட்டால், சந்தர்ப்பம் வரும்போது பேச ஆரம்பித்து, பிறகு தன் சோகக்கதைகளைச் சொல்லி வேதனைப்படுவார்கள்.

அவர்களோடு நானும் சேர்ந்து அவர்களுக்காகக் கண்ணீர் விட்டதுண்டு. மனித மனம் எவ்வளவு இதமானது? பாவம்? அது எப்படியெல்லாம் வேதனைப்படுகிறது? ஒரு சின்ன ஏமாற்றத்தைக்கூடத் தாங்கிக்கொள்ளமுடியாமல் அது தவிக்கும்போது அது தேடும் தேடலை யார் உணர்ந்து மருந்திடுகிறார்களோ, ஆறுதலாக நான்கு வார்த்தைகள் கூறுகிறார்களோ அவர்கள் தெய்வத்திற்குச் சமமாகத் தெரிவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அப்படித் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் போசும்போது அவர்களின் சுமை பாதியாகக் குறைவதோடு, நமது மனமும் எவ்வளவு இலகுவாகிறது என்பதை நான் உண்மையாகவே உணர்ந்திருக்கிறேன். இன்னும் அந்தப்பணியைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன். இன்னும் செய்வேன்.

ஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்? எப்படி அவள் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள் என்பதுதான் இங்கே பிரச்சினை. சாதரணமாகப் பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்கிறார்களா? இது யார் குற்றம்? போன்ற ஆராய்ச்சிக்கு நான் வரவில்லை. வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கக்கூடிய நம் அப்பாவி இந்தியச் சகோதரர்கள் சந்திக்கும் பிரச்சினையை நான் இங்கே எனக்குத் தெரிந்த கோணத்தில் உங்கள் முன் வைக்கிறேன்.

முக்கியக் காரணம் அவர்களுக்கு குடும்ப அந்தஸ்து, அதாவது குடும்பத்தோடு வசிக்க அந்த நாடுகளில் அனுமதி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பெண்கள் அதிகபட்சம் தன்னைப் பர்தாவால் மூடிக்கொண்டுதான் (சவூதியில் நூறு சதவிகிதம்)வெளியே வரவேண்டும். தனியாகப் பெண்கள் வெளியே வர அனுமதியில்லை. அங்கு நமது பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களும் குறைவு. இது நம் இந்தியப்பெண்களுக்குச் சாத்தியப்படாது. தனியாக மனைவியை வீட்டில் இருக்க வைத்துக் கணவன் மட்டும் அலுவலகம் செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. மேலும் முக்கியக் காரணம் வளைகுடா நாடுகளில் ஊதியம் மிகக்குறைவு. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரு ஆண்மகன் என்ன நினைக்கிறான்? தான் சிரமப்பட்டாலும் பரவாயில்லை, நமது சந்ததிகள், நம்மைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாவும் சந்தோசமாகவும் இருக்கட்டும் என்கிற தியாக மனப்பான்மையில் அனைத்தையும் அர்ப்பணித்துவிட்டு அயல்நாடு தேடிச் செல்கிறான்.

மேலும் சாதாரணத் தொழிலாளி மற்றும் இடைநிலைப்பதவியில் இருக்கும் நண்பர்களுக்கு விடுமுறை என்பது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான். அப்படிக் கிடைத்தாலும் அதிகபட்சம் ஒரு மாதம், விரும்பினால் ஊதியமற்ற விடுமுறையாக ஒரு பதினைந்து நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆகமொத்தம் 45 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும். இதில் அவன் என்ன செய்வான். அப்படிக் கஷ்டப்பட்டு, அங்கு வீசும் பேய்த்தனமான மணற்புயலில் தன் வாழ்நாட்கள் முழுமையும் இழந்து தவிக்கிறான். அந்தச் சகோதரனுக்கு இல்லறம் என்பது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொலைபேசியில் மட்டுமே நடக்கிறது. கொஞ்சும் மகனும் மகளும் ‘அப்பா! எப்பப்பா வருவீங்க?’ என்று கேட்கும்போது அவன் இதயம் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறும், ஆனாலும் அதற்குள் இருந்த தொகை தீர்ந்துவிடுமே என்று அனைவரிடமும் இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கடைசியாகக் கண்ணீரோடு காத்திருக்கும் மனைவியிடம் போன் கைமாறும்பொது “கட்” ஆகிவிடுகிறது. மறுபடியொரு வெள்ளிக்கிழமைக்காக என் சகோதரி இங்கே விரதம் இருக்கவேண்டும். இப்படியெல்லாம் உணர்வுகளைச் சாகடித்து வாழும் எனதருமைச் சகோதரன் அங்கு வீசும் மணற்புயலில் பாதி உயிரோடுதான் அலைகிறான்.

மணற்புயல் என்றால் அது மரணப்புயல்தான், சாலையில் நடந்து செல்கிற இந்தியனைக் கண்டால், காரில் செல்லும் இந்திய நண்பர்கள் வேகமாகச் சென்றுவிடுவர். ஆனால் மற்ற எந்த நாட்டு நண்பர்களும் அப்படிச் செல்லமாட்டார்கள். நின்று அவர்களையும் ஏற்றிக்கொண்டுதான் செல்வர். நாமெல்லாம் பாரம்பரியம் மிக்க இந்தியப் பிரஜைகள் என்று மார்தட்டிக்கொள்ளலாம். சரி அது போகட்டும்! மாதம் முழுவதும் ரத்தம் சிந்தித் தன் குடும்பத்துக்குத் தேவையான பணத்தை அனுப்பக்கூட அங்கு அவ்வளவு சிரமப்படவேண்டும். அங்கு அந்த நாட்டு குடிமக்களுக்கே முன்னுரிமை. நாம் எத்தனை பேர் வரிசையில் நின்றாலும், அவர்கள் நேராக வங்கிக் காசோலைக் கவுன்டருக்குச் சென்று காசோலை பெறும் தைரியம் அவர்களுக்குண்டு. நாம் அங்கு எதுவும் பேசமுடியாத ஊமைகளாக்கப்படுவோம். இது அங்கு வாழும் ஒவ்வொருவரும் சந்திக்கும் வெட்கப்படவேண்டிய உண்மை. அப்படியே அனுப்பும்போது காசோலையில் எழுத்துப்பிழையிருந்தால்கூட ஏதாவது நாம் கேட்டால் வங்கியிலிருந்து வெளியில் அனுப்பப்படுவோம். காரணம் அவர்களுக்கு ஆங்கிலமோ வேறு மொழியோ தெரியாது. அவர்களுக்கு அது அவசியமும் இல்லை. அவர்கள் தாய்மொழி மட்டுமே பேசுவார்கள். அதன்மீது அதீதப்பற்றுக் கொண்டவர்கள்! வெளிநாட்டவர்களைக் கண்டால் வரிந்துகட்டிக்கொண்டு வேண்டாத பதிலையும், கேட்காத உதவிகளையும்கூட முன்னின்று செய்வதற்கு அவர்கள் இந்தியர்களா என்ன?

சரி! இப்படியெல்லாம் வாழ்க்கையையே அடமானம் வைத்து உழைத்து ஓடாகி இரண்டு வருடங்களுக்கொருமுறை வீட்டுக்கு வந்தால், இங்கு சகோதரிகளின் லீலைகள் அப்பப்பா! அங்கு படும் வேதனைகளனைத்தும் தெரிந்தே கணவர்களுக்குத் துரோகம் செய்யும் மனைவிப் பத்தினிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாளடைவில் இது அவனுக்குத் தெரிய வரும்போது, நொந்து நூலாகி, செத்துச் சுண்ணாம்பாகி வேதனையோடு திரும்பவும் அந்த நாட்டுக்கே சென்றுவிடுகிறான். போகப்போக விரக்தியின் உச்சத்தில் இவனும் அங்கு தவறு செய்ய ஆரம்பித்து விடுகிறான். அதற்கும் அங்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் வெளியில் தெரிவதில்லை.

குறிப்பாக சவூதி அரேபியா போன்ற நாடுகளில் வாழும் நண்பர்கள் தவறு செய்வது மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. துபாய் போன்ற நாடுகளில் சற்றுச் சுதந்திரமாகத் தவறு செய்கிறான். இவ்வாறு வேதனை அனுபவிக்கும் நண்பர்கள் இருபத்தைந்து சதவீதம் இருக்கிறார்கள். இரண்டு வருடத்திலிருந்து ஐந்து வருடம் அங்கு இருக்கலாம் என்று செல்லும் என் பாவப்பட்ட இந்தியத் தோழன், ஐந்து வருடங்கள் பூர்த்தி செய்யும்போது குடும்பத்தில் தன்னிறைவு அடைகிறான். எனக்குத் தெரிந்து எத்தனையோ நண்பர்கள் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லாவிட்டால் ஒரு மாதச் சம்பளம் அதிகமாகக் கிடைக்கும் என்றும், பாதி விடுமுறையை ஓவர்டைம் பார்த்துச் சாம்பாதிக்கலாம் என்றும் விடுமுறைக்கே வராமல் பணம் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகள், தேவைகள், ஏக்கங்கள் அங்கே சாகடிக்கப்படுகின்றன.

கடன்கள் அடைபட்டு விடுகிறது. பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் சேர்க்கப்பட்டு ஒரு தரமான கல்வி அவனால் கொடுக்கப்படுகிறது. அதுவரை கணவனை நினைத்து, வேதனைப்பட்டும், கடன், குடும்பச் சுமை இவற்றை நினைத்து கவலைப்பட்டும் காலம் கடத்துகிறார்கள் நமது சகோதரிகள். கணவனின் பிரிவும், குடும்பச் சுமைகளும், கடன்களும் தவிர வேறு விதமான தவறான எண்ணங்கள் அவளுக்குள் வருவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் ஒரு ஐந்து வருடங்கள் ஆகும்போது ஓரளவு எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரத்தில் வீட்டில் தேவையான தொலைக்காட்சி, கேபிள்இணைப்பு, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், குளிர்சாதனம் போன்றவையெல்லாம் நிறைந்த ஒரு அத்யாவசியம் கலந்த ஆடம்பர நிலைக்கு வந்துவிடுகிறது அந்தக் குடும்பம். அனைத்து அடிப்படை வசதிகளும் தன்னிறைவு பெற்றுவிடுகின்றன. கவலைப்பட அவ்வளவாக விசயம் இல்லை. சகோதரிகள் சந்தோசமாக இருக்கவேண்டுமென்று சகோதரன் ஒவ்வொரு முறை வெளிநாட்டிலிருந்து வரும்போதும், அவன் அங்கு கற்றுக்கொண்ட சில நல்ல விசயங்களையும், அதே சமயத்தில் நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத சில தகாத செயல்களையும், வெளி உலகம் தெரியாத மனைவிக்கு அறிமுகப்படுத்துகிறான். வசதிகள் பெருகப் பெருகத் தேவைகள் நியாயங்களாகி மீண்டும் சில வருடங்களாவது அங்கு சம்பாதிக்கலாம் என்ற ஒரு நல்ல நோக்கத்தில் மறுபடியும் செல்கிறான். ஆனால் குடும்பத்தேவைகள், பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து சகோதரிகள் எதைப்பற்றியும் சிந்திக்கவோ, கவலைப்படவோ அவசியமில்லாததால், மனம் உல்லாசத்தைத் தேடுகிறது. எல்லாம் நிறைந்த சொகுசான வீட்டில் இல்லாத ஒன்று என்றால் ‘அது’ மட்டும்தான். அந்தத் தேவைக்காக இன்னொருவரும் வந்து சொகுசாக நுழைந்து கொள்கிறார். எனவே பெண்மணிகள் சுலபமாக இதுபோன்ற தவறுகள் செய்யத்துணிகின்றனர்.

இதுவே பல வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நண்பர்களுக்குப் பழகிப்போய், எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு விழுங்கி, ஒரு நடைபிணமாக ஒவ்வொரு விடுமுறைக்கும் இங்கு வந்து செல்கிறான். வேறு வழியில்லாமல் இந்த வாழ்க்கையையே ஏற்றுக்கொள்ளக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

வேறு என்ன செய்யமுடியும்? ஏனெனில் தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அவன் அதைத் தெரிந்தும் தெரியாதவன் போல், ரணமான மனதைக் கல்லாக்கி அந்தக் கொடுமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலைக்கைதியாகிவிடுகிறான். ஆனால் இதையெல்லாம் பார்த்து வளரும் குழந்தைகள் மனதில் இவை பசுமரத்தாணிபோலப் பதிந்து விடுகிறது.

வாய்ப்புக்கள் ஏற்படும்போது அந்த இளம் பிஞ்சுகளும் திசை மாறிப்போகும் கொடூரம் நடக்கத்தான் செய்கிறது. அங்கே கற்பும், கலாசாரமும் என்ன செய்யமுடியும்? தன் பங்கிற்குத் தவறை நியாயப்படுத்தும்! அவ்வளவே! என்னுடைய கோணத்தில் மட்டுமல்ல, எவருடைய கோணத்திலும் இது தவறுதான். ஆனால் மனிதன் இந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம் பொருளாதாரத் தன்னிறைவும், தொலைக்காட்சி போன்ற வெளியுலகத் தொடர்புகளும்தான். இவற்றைச் சரியான அலைவரிசையில், கோணத்தில் புரிந்துகொண்டு நல்ல வாழ்க்கை நடத்தும் தோழிகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நான் சொல்லும் இந்தக் கருத்துக்களுக்குச் சிலர் மறுப்புத் தெரிவிக்கலாம். இது உங்கள் கோணத்தில் சற்று மாறுபடலாம். ஆனால், பின்னனியில் ஏராளமான உண்மைச்சம்பவங்கள் ஒளிந்துகிடக்கின்றன என்பதை ஒளிவு மறைவின்றி உங்கள் முன் வைக்கிறேன்.

– அக்டோபர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *