என்னைப் பேசச் சொன்னால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 2,634 
 

சும்மா இருந்திருக்கலாம்.இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள்.எதிர்பார்க்கவில்லை.காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன்.கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது.ஒரியோ எங்களது செல்லப்பூனை.வந்து இரண்டுவருடமாகிறது.பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தியடைந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன்.இப்போது பிள்ளைகளுள் ஒன்றாகிவிட்டது.நாய்க்குட்டி ஒன்றிருந்தால் நன்றாக இருக்குமே என்கிறாள் கடைசிப்பெண்.முன்பென்றால் துணிந்து வாங்கிவிடுவேன்.இப்போது வேலைக்குப்போகாத நிலையில் வீட்டிற்குப்பாரமாகிவிட்டேனோ என்கிற நினைப்பு வர ஓய்ந்து போன ஒரு மனநிலையும் வந்துவிட்டது.கம்பீரமாக வேலை,வீடு,நண்பர்கள்,புத்தகம்,பிள்ளைகள் என வலம்வந்தவனை முடக்கிப்போட்டுவிட்டது இந்த கொறோனா…வேலைக்கு போகாமல் வீட்டினுள் முடங்க எல்லாம் இழந்ததுபோல…படுக்கை,கணினி என இந்த ஒருவருடம் ஓடிவிட்டது.

‘என்னப்பா…இண்டைக்குத் தேத்தண்ணி இல்லையோ?’

பதில் அவளிடமிருந்து கிடைக்கவில்லை.

‘நீங்க ரீமாஸ்டர் தனே..போடுங்கோவன்’ என்று சொன்னது மாதிரி

இருந்தது.அவள் சொல்லவில்லை.எண்டைக்கெண்டாலும் சொல்லலாம்.படியில் படுத்திருந்த பூனையும் எழுந்து என்னுடன் வந்தது.அதற்கு சாப்பாட்டைப்போட்டுவிட்டு தேநீர் தயாரிக்கத்தொடங்கினேன்.முந்தி அம்மா குசினிக்குள் வரவிடமாட்டாள்…தானே சமைக்கவேண்டும்..தானே தரவேண்டும்..என்று நினைப்பாள்.அப்பாவும் கண்டிப்பென்றாலும் வேலை ஒண்டும் செய்யவிடமாட்டார்..

‘போய் படிக்கிற வேலையைப்பார்’ என்பார்.

படிச்சாச்சு..வேலையும் ஆச்சு..கலியாணமும் ஆச்சு…பிள்ளைகளும் ஆச்சு…அகதியாய் வந்து இங்கும் செட்டில் ஆகியாச்சு..

‘இப்ப வேலையில்லை எண்டதும்தான் இடிக்குது…

மனுசி என்ன சொன்னாலும் கோபம் வருகுது..வாய்திறந்து கதைக்க முடியேல்ல.தாழ்வு மனப்பான்மை அதிகமாக வெளிப்படுது…’

பிள்ளைகள் படிப்பு முடிய நல்ல வேலையில் அமர்த்தவேண்டும்…அவர்களின் திருமணம் பற்றியும் சிந்திக்கவேண்டும்.தானே எல்லாம் செய்வதா என்று இபோதெல்லாம் இவள் சலித்துக்கொள்கிறாள்.எனக்கும் உள்ளுக்குள் உடைந்து போவதாய் உணர்கிறேன்.எனக்கும் உரிமை,பாத்தியதை இருக்கவே இருக்கிறதுதானே..அவளுக்கு என் மீது அன்பு இல்லை என்று சொல்லிவிடமுடியாது.அன்பு காதல் இருந்ததினால் தானே கேட்கும் போதெல்லாம் தன்னைத் தருவதில் பிரியமாய் இருப்பவள்தான்.வேலைக்குப் போகவேண்டும் அல்லது பிள்ளைகளின் தேவைகளையும் செய்பவள் இப்போது மட்டும் புறக்கணிப்பது போல நடந்துகொள்கிறாள்..ஒருவேளை எனது பிரமையோ..இயல்பாக நடந்துகொள்பவளிடம் நான் புறக்கணிக்கிறாள் என்று நினைக்கவேண்டும்.

உழைக்கும்போது தருகின்ற உற்சாகம் ஓய்வூதியம் பெறுகையில் எதையோ இழந்தது போன்று உணர்கிறேன்..ஒவ்வொரு முறையும் சம்பளத்தைக் கொண்டுவந்து இவளிடம் கொடுத்துவிட்டு ‘தேவையானதை வாங்கிக்கொள்கின்ற நீயே வாங்கிகொள்’என்ற எழுதாத விதியே கடந்த காலங்களில் நடந்திருக்கிறது.

இப்போது அவளிடம் செலவிற்குப் பணம் கேட்டகவும் கூச்சமாக இருகிறதே.எனது பென்சன் பணம்தான்..எனினும் அவளிடமிருந்து முன்னைப்போல துணிச்சலாக பெறமுடியாதபோது யாரோ சம்மட்டி கொண்டு அடிப்பதுபோன்ற வலி..

‘இருந்து பார் தெரியும்..வீட்டிலும்,வெளியிலும் யாரும் மதிக்கவில்லையே என வலிக்கும்’கண்ணாடி முன் நின்று புலம்பத்தோன்றும். நின்று நிதானமாக இன்றாவது பூனையை தூக்கிக் கொஞ்சவேண்டும் என்கிற பிரயத்தனம் கூட தோற்றுப்போனது.மகள் கெக்கட்டமிட்டுச் சிரித்தாள்

என்னைச் சுற்றித்தான் வரும்..நானே சாபாடு போடுவேன்..கடைகலுக்குச் சென்றாலும் பூனையின் நினைப்பில் அதற்கென்றெ எல்லாம் வாங்குவதுமுண்டு..ஆனால் தூக்கச் சொன்னால் ஒருவித பயம்..ஊரில் அம்மா ‘கோழியைப் பிடிச்சுத் தா’ என்றாலும் தோற்றுவிடுவேன்.ஆனாலும் குழந்தைகளைப்போலவே வளர்ப்புப்பிராணிகளிடம் அன்பு அதிகம்தான். என்னைச் சுற்றிக் கட்டியெழுப்பட்ட ஒரு பெரும் சுவர் உடைந்து நொருங்குவது போன்ற பிரமை..எனக்கு மட்டும்தானா? ‘அப்புவுக்கு வயசு போட்டுது’ வயதானவர்களைப்பார்த்து பகிடி பண்ணியது ஞாபகம் வந்தது.

ஒருவனின் தலை எழுத்தை ஒவ்வொரு நிமிடங்களும் தீர்மானிக்கின்றனவோ.ஒவ்வொரு கணப்பொழுதும் கடந்து போகையில் அது நடக்காமலேயே இருந்திருக்கலாம்…அவரைச் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம்.கடைசியில் பிறந்திருக்காமலேயே இருந்திருக்கலாமோ என்கிற சலிப்பும் வந்து நிற்கும்.எனக்கு மட்டும்தானா? இல்லை..இல்லை எல்லாருக்கும் ஒருதடவையாவது வந்து போயிருக்கும்.வேறு வேறு காரணங்களுக்காக சலிப்படைந்த நிகழ்வுகளும் நடந்திருக்காமல் இல்லை.தற்கொலை செய்துகொள்ளலாமோ எனவும் சிந்திக்கவைத்திருக்கும்.இப்போது பூதாகாரமாகத் தோன்றுகிறது..அவ்வளவே..நண்பர்களைச் சந்தித்தே மாதங்களாயிற்று.

அவர்களிலும் என் வயதொத்தவர்களெனில் என்றால் அனுபவம் வித்தியாசமாக இருக்கும்..

‘சீச்சி அப்படியில்லை..அனுபவம் எல்லார்க்கும் பொதுவானவையே’ சமாதானமாகவிடாது மனதும் அலைக்கழித்தது.

அப்பாவின் ஞாபகம் வந்தது.எப்படி வாழ்ந்தவர்?

அப்பாவும் சம்பளப்பணத்தை அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிடுவார்..பிறகு சொல்லுவார்…அவருக்கு இவ்வளவு…இன்னாருக்கு இவ்வளவு கொடுக்கவேணும்…என்பார்.அம்மாவும் முகம் சுழிக்காமல் அப்பா சொல்வதையே மௌனமாக செய்துவிடுவார்.எதிர்த்து கேள்வி கேட்டுப் பழக்கமில்லை.பென்சன் நாளும் வந்தது..ஒரு தொகையாக ஓய்வூதியப்பணம் வர அப்படியே அம்மாவிடம் கொடுத்தார்…அம்மாவிற்குத் தெரியும்..பிள்ளைகளின் பேரில் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துப்போட்டால்தான் அவர்களுக்குத் தேவையான போது பயன்படுத்தலாம்…காணிவிற்ற காசையும் வைத்து பிள்ளைகளின் திருமணமும் நடத்திமுடித்தார்.ஆசை ஆசையாக கட்டியவீட்டை மகளுக்கு சீதனமாகக் கொடுக்கையில் தான் நிலைகுலைந்து போனார்..அங்கு தான் இருக்கமுடியாது’ என்று வருந்தினார்.சீவிய உருத்துவைத்து எழுதலாமே என்றும் நினைத்தார்.யாரும் அப்போதைய சூழலில் ஒத்துழைக்கவில்லை..அப்பாவிற்கு அதில் வருத்தமும் இருந்தது.

எல்லாம் ஆயிற்று..

பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்த பெற்றவர்கள் இரண்டாம் பட்சமாக.,.அப்பா மேலும் உடைந்துபோனார்..

படுத்த படுக்கையானார்.

அனாதரவாக விடப்பட்டதாக உணர்ந்திருப்பார்.யாரிலும் தங்கியிருக்காத வாழ்வு வேண்டும் என்றிருந்தவர்.தன் நண்பர்களின் இழப்பை நேரில் கண்டவர்கள்.அவர்களின் துன்பங்களை நன்கு உணர்ந்தவர். பிறகு தன் நிலைகண்டு அருவருப்பு அடைந்தவர்களைகண்டு மனம் வெதும்பியிருப்பார்.படுக்கையிலேயே சலம்,மலம் போகும் நிலைமை பற்றிக் கேள்விப்பட்டதும் துக்கம் மேலிட்டது.பாவம் அப்பா..

எனக்குள்ளிருந்த ஆதங்கம் அவரின் கையில் காசைக்கொடுத்து முன்னர் போல கம்பீரமாக தானே விரும்பியதை வாங்கி,செலவழித்து யார் கையையும் எதிர்பார்த்து நிற்காமல் இருக்கட்டுமே என நினைத்து பணத்தை உண்டியல் மூலம் அனுப்பி அவர் கையில் கொடுக்கச் செய்தேன்.தொலைபேசி,அலைபேசி வசதிகள் இல்லாத ஒருகால கட்டத்தில் தொலைபேசி பூத்திற்குச் சென்றே தகவல்களை பரிமாறமுடியும்..மாறக,அப்பா நோய் முற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.கலங்கிப்போனேன்.பணம் கைக்கு வந்ததும் முகத்தில் பிரகாசம் தெரிந்ததாகச் சொன்னார்கள்.அவர் பட்ட கசப்பான அனுபவங்களும் தெரியவந்தது.சுகமாகி வீட்டிற்கு வந்துவிடுவார் என்று தைரியம் சொன்னவர்கள் மறுநாள் அவரின் மறைவு பற்றிய செய்தியே வந்து தூக்கத்தைக் கலைத்தது.ஆடிப்போனேன். அம்மாவும் தனித்துவிடப்பட்டதாகவும் உணர்ந்தேன்…

இப்படித்தான் அடிக்கடி நினைவுகள் எழும்.பிறகு அறுந்து போகும்..முன்பெல்லாம் மனச்சங்கடங்கள் ஏற்படுகையில் அல்லது சூழ்நிலைகளை சமாளிக்கவேண்டுமெனில் ஒவ்வொரு வாசிகசாலைகளையும் நாடிப்போய் பார்த்த பத்திரிகைகளை மீளவும் பார்ப்பது போல பாவனை செய்வது…காணும் நண்பர்களுடன் கதைப்பது…இருண்டதும் வீடுவந்துவிட எல்லாம் சரியாகிவிடும்.அங்கும் பலபேர் வந்து பத்திரிகை பார்ப்பதும்,அருகில் இருக்கும் அரைச் சுவரில் நித்திரை கொள்வதும் என்னைப் போலத்தான் இவர்களும் சூழ்நிலையைச் சமாளிக்க வந்தவர்களா?அப்பாவும் மத்தியானம் சாப்பிட்டதும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு வளவுக் கோயிலடியை நோக்கிப் போவார்.அங்கு துவாயை விரித்துப்போட்டுப் படுத்துக்கொள்வதுண்டு.

இங்கு நாம் எங்கு போவது?

புத்தகங்களுக்கிடையே இருந்து இவள் கூப்பிட்டாள்.

‘ம்’

‘இதென்ன கடிதம்..?அண்டைக்கு அந்த மனுஷியிடம் வாங்கிவந்து வாசியுங்கோ எண்டு தந்தனான்..அப்ப கடிதம் இருந்ததாகத் தெரியவில்லையே?’

ஒன்றும் புரியவில்லை.

தடுமாறினேன்.’என்ன கடிதம்?’

சொன்னாள்.

நிச்சயமாக எனக்குத்தெரியவில்லை.’இவளோட வாதித்து ஒண்டும் ஆகிவிடப்போவதில்லை.சும்மா ஒண்டுமில்லாததை பூதாகாரமாக்கப்போகிறாளோ?’

‘சத்தியமா எனக்குத்தெரியாது…இத்தனை வருசமா ஒரு தப்பு ஏதும் செய்தனானோ?அவையின் வீட்டில ஏதோ நடந்திருக்கும்..அது கைமாறி இந்தப் புத்தகதுக்குள்ள வந்திருக்கும்..பேசாமல் உதை தூக்கிவிட்டெறிஞ்சுபோட்டு பாக்கிற அலுவலைப்பார்” கோபமாகப் பேசவேண்டும்போலிருந்தது..இப்ப பேசினால் எல்லாம் பிரச்சினையாகிவிடும்..

தொட்டதுக்கெல்லாம் புறுபுறுப்பாள்தான்.இப்போது அதிகமாக உணரப்படுகின்றதோ?ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயிருக்கும் தாழ்வு மனப்பானமை சமயங்களில் மேலெழுந்துவருவதை யாராலும் தடுத்துவிடமுடியாது.ஆண்களுக்கு அதிகமாக உள்ளதுவோ?இவள் முந்தியும் கத்துறவள்தான்..அம்மா மாதிரி அடங்கிப்போகிற தலைமுறையும் இவள் இல்லை.அப்பா எப்படியெல்லாம் பிரச்சினைகளை சந்தித்திருப்பாரோ?என்ன செய்வது?

‘ஒண்டும் செய்யாதை..முதலில கத்துறத விடு…கடிதத்தை புத்தகத்திலிருந்து எடுத்துவிடு..புத்தகம் திருப்பிக் கொடுக்கேக்க கேட்டால் கடிதத்தைக் கொடுக்கலாம்..இல்லாட்டி விட்டுவிடு. சின்னப்பிரச்சினை..இவ்வளவு காலமும் நம்பினனீர் தானே…அப்படியே இருந்துவிடுமன்..எனி எனக்காக ஆரிட்டையும் புத்தகங்களை இரவல் வாங்கிவராதையும்.’

சொல்லியபடி,வேலைக்குப் போனால்தான் எனக்கும் ஆறுதலாக இருக்கும் என வேலைக்காக எனது சி வியைத்தேடத்தொடங்கினேன்.அவள் சாதாரணமாகக்கூட கேட்டிருக்கலாம்.நானும் பிழையாக கற்பனை பண்ணியுமிருக்கலாம்.நண்பனொருவனுக்கும் இப்படி நடந்திருக்கிறது…அவனின் நண்பர்களின் காதல் கடிதங்கள் மாறி புத்தகங்களுக்குள் வைத்துக்கொள்ள அப் புத்தகத்தை இரவலாக வாங்கிய நண்பனின் வீட்டிலும் பூகம்பமாயிற்று.இப்படியும் நடந்திருக்கலாம் தானே…இவளும் சந்தேகப்படாமல் சாதாரணமாகக் கேட்டிருக்க,நானும் அவள் சந்தேகிக்கிறாள் என்று நினைத்துத் தடுமாறியுமிருக்கலாம்.

அவள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழவேயில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *