எனக்கு நல்லா வேணும்..!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 10,581 
 

நேகமாகக் கார் வாங்கும் என்னுடைய ஆசை வெறும் கேட்டோடு முடிந்து போனது என்று சொல்லலாம். யானை வாங்குவதற்கு முன் அங்குசம் வாங்கிய முதல் ஆள் நான்தான். அந்த அளவு ஆசை இருந்திச்சு. அப்போ அதுல வந்த வினை இப்போ கேட்டின் இருபக்கமும் சுவரோடு தாங்கி நிற்கும் பக்கத்திற்கு இரண்டான கொண்டிகள் சிமென்ட் கான்கிரீட்டோடு நன்றாக இறுக வேண்டும் என்று, அடைத்து வைத்த முதல் நாளிலிருந்து இன்றுவரை அந்த கேட் திறக்கப்படவேயில்லை. தேவையிருந்தால்தானே? இப்பொழுது திறந்தால் நிற்குமா அல்லது பிடுங்கிக் கொண்டு வருமா என்பதைத் திறந்து பார்த்துத்தான் உறுதி செய்ய வேண்டும். கர்ர்ர்ர்… ட்ட்ட்ட்… டடடடட… என்று பழைய சினிமாவில் மலைக்குகை வாசல் திறப்பது போல் எனக்குள் பிரமை.

எனக்கு நல்லா வேணும்சரியாகப் பதின்மூன்றடி இடத்துக்குள் ஒரு சிறு மாருதியாவது வாங்கி நிப்பாட்டி விட வேண்டும் என்பது என் லட்சியம். அவ்வளவுதான் இடமும் என்பதால் அதற்கேற்றாற்போல் மனதில் ஆசை உதித்தது.

இன்று அந்த ஆசை இரும்பு கேட்டோடு நின்றுவிட்டது. கேட் போட்டு வருஷம் நாலாச்சு. ஆறின கஞ்சி பழங்கஞ்சி. விருப்பம் வடிந்து போனது. என்னத்தெ காரை? என்னத்தெ வாங்கி? கெடக்கட்டும், பார்க்கலாம்.

“”டிரைவிங் பழக சேர்ந்து போலாம் சார். நானும் வரேன்” என்ற நண்பர் ராமசாமியும் என்ன காரணத்தினாலோ, “”நா வரலை சார். நீங்க வேண்னா போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டார் ஒருநாள். மனைவியின் நச்சரிப்புத் தாங்காமல்தான் டிரைவிங் போவோம் என்றார். சரி, ஒரு துணை கிடைத்ததே என்று நானும் இருந்தேன். நாள் தள்ளுகிறதே, மனதில் பயமிருக்குமோ? என்று எண்ணி நானும் சும்மா கிடக்க, இப்போது எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது. இதுநாள் வரை தயக்கமாய் இருந்தது, பயம்தான் என்று இப்போது உறுதிப்படுகிறது.

இனிமே டிரைவிங் பழகி, லைசென்ஸ் எடுத்து, டவுனுக்குள்ள ஓட்டவா? இத்தனைக்கும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த விரிந்து பரந்த நகரத்தில் டூ வீலரில் பறப்பவன் நான். ஒரு முறை கூட ஒரு சிறு விபத்து என்று நிகழ்ந்ததில்லை. அதாவது நான் போய் எவனிடமும் முட்டியதில்லை. அதுவும் இதுவும் ஒண்ணாயிடுமா?

“”டூ வீலரை விட கார்தான் சார் ஈஸி. சேஃப்டியும் கூட. எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது. கியர் வண்டியச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு இன்றுவரை மொபெட் ஓட்டிக் கொண்டிருக்கிறார் எதிர் வீட்டு நண்பர். என் தோரணைக்கு கார்தான் சார் கரெக்ட் என்று உசுப்பேற்றி விட்டார். அவர் வைத்திருப்பது ஒரு செகன்ட் உறான்ட் ஃபியட். குழந்தையாய்ப் பராமரிக்கிறார். அம்புட்டுச் செல்லம் அது. புத்தம் புது ஏ.சி. கார் கூட அப்படியிருக்காது.

சொல்றவன் சொல்லத்தான் செய்வான். உனக்கெங்க போச்சு புத்தி?

நான் ஆக்ஸிடென்ட் பண்ணியதில்லையே ஒழிய, கார் வந்து இடித்த அனுபவம் உண்டு. நாம சரியா இருந்தாலும், எதிராளியும் அப்படியிருக்கணுமே?

பிள்ளையார்பட்டி போய் திரும்பிக் கொண்டிருந்த ஒரு அம்பாசிடர்காரன், தொடர்ந்த ஓய்வில்லாத டிரைவிங்கோ என்னவோ தூக்கக் கலக்கத்தில் ஸ்டியரிங்கை விட்டதனால் என் மீது வந்து இடித்தான். அது நான் சேடக் ஸ்கூட்டர் வைத்திருந்த நேரம். வலது காலை இடது பக்கம் விலக்கி வண்டியைப் போட்டுவிட்டு ஓடியே போய்விட்டேன். அடிச்ச அடியில் வண்டியின் பாகங்கள் டார் டாராய் பக்கத்திற்கொன்றாய்.

அன்று படு உஷார். நான் அதனால் தப்பினேன்.

“”ராஜேந்திரன், வண்டிக்காரன் நம்மள நோக்கித் தப்பா வர்றான். குதிச்சு ஓடிடுங்க” என்று பின்னால் உட்கார்ந்திருந்த நண்பர் எச்சரிக்க, அதே சமயம் நானும் கணத்தில் சுதாரிக்க மயிரிழையில் தப்பித்தோம் இருவரும். என்றும் வராதவர் அன்று பின்னால் வர நடந்து போன விபரீதத்தைப் பாருங்கள். சில எதிர்பாராத சம்பவங்கள் மனிதர்களை எங்கெங்கோ கொண்டு நிறுத்தி விடும். இப்டியெல்லாம் நடக்கும்னு யாரு நினைச்சா என்று சொல்லிக் கொண்டு பிற்பாடு தலையைச் சொறிவதில்லையா? இன்று பார்த்தாலும் நண்பர் அதைத்தான் முதலில் நினைவுகூறுவார். “”என்னைக்குமில்லாம நீங்க பின்னாடி உட்கார்ந்த கெரகம்தான்”னு நான் சொல்ல முடியுமா?

“”என்னா சார்? வண்டி இப்டிப் பார்ட் பார்ட்டா பக்கத்துக் கொண்ணாக் கிடக்கு. நீங்க பொட்டு அடி இல்லாம முழுசா நிக்கிறீங்க? ரொம்ப ஆச்சரியம். அதிர்ஷ்டக்காரர் சார் நீங்க.. ” பார்த்தவர்கள் பிரமித்தார்கள். நான் என் மனைவியை நினைத்துக் கொண்டேன். எல்லாம் அவள் தாலி பாக்கியம்.

அம்பாசிடர்காரன் கண்ணுக்கு முன்னால் ஒரு கட்டு நோட்டை எடுத்து கத்தையாய்க் கொடுக்க அதை அந்தப் போலீஸ் வாங்க, பறந்து விட்டான் அவன். என்ன ஒரு அருமையான இம்மீடியட் டீல். மாட்டிக் கொண்டது நாங்கள். எப்பவுமே அப்பாவி சப்பாவி தான மாட்டுவான்? அன்று என்னிடம் இன்ஸ்யூரன்ஸ் வேறு இல்லை. கடைசி நாள் லேப்ஸ் ஆகி இரண்டு தினங்கள் கடந்திருந்தன. அப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்லாமல் வாய் மூடி மெüனியானேன்.

“”ஏன் சார். ஒரு ஃபோன் அடிக்க மாட்டீங்களா? பறந்து வந்திருப்பனே? இப்டியா ஆள விடுவீங்க? வண்டி நம்பராச்சும் குறிச்சீங்களா? என்றார் ஒர்க்ஷாப் நண்பர் ஹமீது. அழைத்திருந்தால் நிச்சயம் ஏதாச்சும் நிவாரணம் தேடும் தில் அவருக்கு உண்டுதான். நமக்குத்தான் நம் பக்க நியாயம் உறுத்துகிறதே.

என்னவோ விட்டுவிட்டார் எங்களை அந்த எஸ்.ஐ. வண்டிச் செலவே இவங்களுக்குச் சரியா இருக்கும் என்று கணக்குப் பண்ணிட்டாரோ என்னவோ? கல்லுக்குள் ஈரம். அல்லது அதான் காசு பார்த்தாச்சே, என்றும் இருக்கலாம். எங்களிடமும் பிடுங்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? அதுதான் ஆச்சர்யம். இருப்பவனிடம் பிடுங்கிக் கொண்டு, இல்லாதவனை விட்டுவிடும் கொள்கையோ என்னவோ தப்புச் செய்வது தெரிந்து செய்வது.

ரிப்பேர் பார்த்து அதே வண்டியைப் பழையபடி கொஞ்ச காலத்திற்கு ஓட்டிக் கொண்டுதான் அலைந்தேன். “”ஆக்ஸிடென்ட் ஆன வண்டிய வச்சுக்காதீங்க சார்” என்றார்கள் பலரும். தீட்டுப் போல் பார்த்தார்கள். முன்னாடி கறுப்புக் கயிறு கட்டாத குறைதான்.

“”அவன் வந்து மோதினா அதுக்கு நானென்னய்யா பண்ணுவேன்? எதுக்கு வண்டிய மாத்தச் சொல்றீங்க?”

“”வாணாம் சார். சொன்னாக் கேளுங்க. பட்டகால்லயே படும்னு கேள்விப்பட்டதில்லையா?”

அடப்பாவிகளா, திரும்பவும் விபத்து நடக்கும்ங்கிறீங்களா? சொல்லுங்கடா வாய்விட்டு.

“”என்னய்யா சென்டிமென்ட் இது? நீங்களும் ஒங்க சென்டிமென்டும். தூக்கி ஒடப்புல போடுங்கய்யா” என்றவன், எதுக்கு வம்பு என்று கொஞ்ச நாளில் போன விலைக்குத் தள்ளிவிட்டு விட்டேன். புதுசோ, பழசோ கைமாறினால் மாத்து கம்மிதான்.

குடும்பங்களில், நடைமுறைகளில் இந்த சென்டிமென்ட் வகையறாக்கள் இல்லையென்றால் மனிதன் எவ்வளவோ நிம்மதியாய் இருக்கலாம். பாதி சண்டை இவற்றால்தான். பெரிய்ய்ய்ய கச்சடா விவகாரம்…

“”எனக்கு இந்த வண்டில உக்காரவே பிடிக்கல. பயம்மா இருக்கு. என்னவாது நடந்திருமோன்னுட்டு” பேய் வண்டி போலப் பார்த்தாள்.

மனுசன நிம்மதியா இருக்கவிட்டாத்தான? அப்புறந்தான் கார் ஆசை.

“”புதுஸô கேட்டைக் கட்டித் தூக்கி நிறுத்தி, இப்டி அடுத்தவங்களுக்கா அள்ளிக் கொடுப்பீங்க. உங்கள மாதிரி அசடு யாருமில்ல. ஒரு வார்த்தை ஏங்கிட்டக் கேட்க மாட்டீங்களா? என்னவோ பெரிய தர்மப் பிரபுன்னு நினைப்பு மனசுல. விஷயம் எங்க வந்து நிக்குது பாருங்க”

“”இருந்தா என்ன, பேசாம இரு.. சும்மாக் கெடக்குறதுக்கு அவுங்களுக்காவது பயன்படட்டும்”

“”என்னத்த பேசாம இரு. என்னை மதிச்சிருந்தா ஒரு பேச்சு கேட்கத் தோணியிருக்காதா? ராஜ பாட்டையா இப்டித் திறந்து விட்டுட்டீங்களே. அந்த ஷெட்டுல நம்ம சொந்த வண்டிய நிறுத்தி அழகு பார்க்கணும்னு இருந்தேன். அடுத்தவங்க வண்டியக் கொண்டுவந்து அடைக்கிறதுக்கா கட்டி வச்சிருக்கு? மாடு அடைக்கிற பட்டியா இது? இப்போ நீங்க உங்க டூவீலரை எங்க கொண்டு நிறுத்துவீங்களாம்?” மிகச் சரியாய்க் கொக்கியைப் போட்டாள்.

சுசீலா இப்படிக் கேட்க, முழித்துப் போனேன் நான். அதுவரையில் மூளையில் தோன்றவேயில்லை எனக்கு. மூடிய கார் கேட்டுக்குப் பக்கத்தில் வீட்டின் நுழைவாயில் சின்ன கேட். அது வழியே அசால்ட்டாய் வண்டியை உள்ளே நுழைத்து, அகன்ற பகுதியில் வசதியாய் இஷ்டம்போல் நிறுத்திக் கொண்டிருந்தேன். இப்போது எதிர்த்த வீட்டுக் காருக்கு விட்டாயிற்றா? துளி இடமில்லை. மாடிக்குப் போவதானால் கூட இண்டு இடுக்கில் நம்மைச் சுருக்கிக் கொண்டுதான் போயாக வேண்டும். கார் நிற்கும் அழகு ஐஸ்வர்யம் பொங்கி வழிவது போலிருந்தது. மூணாவது ஆள் பார்த்தால் அப்டித்தான் நெனைப்பான். ஆனா நம்ம காரில்லையே, பீத்தப் பெருமை எதற்கு?

“”பேசாம ரோட்டுல நிறுத்துங்க. அதுதான் உங்களுக்குச் சரி. ஆறெல்லாம் தண்ணியா ஓடினாலும் நாய்க்கு நக்கித்தான குடிக்கணும்?” சமயம் பார்த்துப் பொட்டில் அடித்தாள் சகதர்மிணி. எதுலடா இவன் மாட்டுவான்? என்று காத்திருந்தது போலிருந்தது.

“”சார் ஒரு சின்ன ஆப்ளிகேஷன். கொஞ்ச நாளைக்கு. நீங்க வண்டி வாங்குறவரைக்கும்தான். என் காரைக் கொஞ்சம் உங்க ஷெட்டுல நிறுத்திக்கட்டுமா?”

“”தாராளமா. சும்மாத்தானே கெடக்கு. நல்லா நிறுத்திக்கோ. இதுக்கு எதுக்குத் தயங்குறே?”

“”அப்பாடீ எம்புட்டுத் தாராள மனசு”

எனக்கே ஆச்சரியம்தான். வாழ்க்கையில் எப்பொழுது எதைத்தான் யோசித்திருக்கிறேன் நான் எல்லாத்துக்கும் உடனுக்குடன் பதில் உண்டு என்னிடம். ஏற்கெனவே முன் முடிவுகளோடு இருப்பவன்போல். அது நல்லதோ, கெட்டதோ. அதெல்லாம் தெரியாது. கல்யாணம் ஆகி குழந்தை குட்டி ஆகிவிட்டால் எல்லா முதிர்ச்சியும் வந்து கூடிவிட்டது என்று அர்த்தமா? மனித மனம் முதிர்ச்சி அடைவது என்கிற கதையே வேறு. அதற்கு ரொம்ப அனுபவம் வேண்டும். வாழ்வியல் அனுபவங்கள்தான் மனிதனை வடிவமைக்கின்றன. ஒரு சின்ன விஷயத்தில் கூட பெரும்பாலானவர்களுக்கு அறுபது, எழுபதுவரை என்றும் சொல்லலாம். பாந்தமாய்ப் பேச, செய்யத் தெரியாது.

“”என்னாடாது? சுத்த சின்னப்பிள்ளத்தனமா இருக்கு” வடிவேலுவின் கேலி என்னைக் கிண்டல் செய்தது.

“”நீங்க வண்டி வாங்குறவரைக்கும்னானே” கவனித்தீர்களா? நான் நிச்சயம் வாங்கப் போவதில்லை என்று உணர்ந்து கொண்டிருப்பானோ? இந்தக் காலத்துப் பசங்க புத்திசாலிகளாச்சே?

வருஷத்துக்கு இருபதாயிரத்துக்குக் குறையாம இன்ஸ்யூரன்ஸþக்கு அழணும். வண்டிய வெறுமனே நிறுத்தி வைக்கப்படாது. தினசரி கொஞ்ச தூரமாச்சும் ஓட்டணும். இல்லன்னா பேட்டரி வீக்காயிடும். வண்டி எப்பயும் மூவ்மென்ட்லயே இருக்கணும். அப்பத்தான் நல்லது. லிட்டருக்கு அதிகபட்சமா பன்னெண்டு, இல்லாட்டி பதினஞ்சு. அம்புட்டுத்தான் இங்கிருக்கிற கோயிலுக்குப் போயிட்டு வர்றதானாக் கூட குறைஞ்சது அஞ்சு லிட்டராச்சும் போட்டுத்தான் வண்டிய எடுக்க முடியும். அதுதான் சேஃப்டி. ரிசர்வ் வேற இருக்குது. அதையும் கணக்குப் பண்ணிக்கணும். அதுபாட்டுக்கு நடுவழில நின்னிடுச்சின்னா அதெல்லாம் கெடக்கட்டும். என்னத்தவோ பெட்ரோலப் போடுறோம், வண்டிய எடுக்கிறோம்னே வைங்க. கோயிலுக்குப் பக்கத்துல வண்டிய எங்க பார்க் பண்ணுவீங்க? முதல்ல அத டிசைட் பண்ணிக்குங்க. அங்க போயிட்டு எங்கிட்டுப் போகலாம்? எப்டித் திருப்பலாம்னு நோக்கித் தயங்கிட்டு நிற்கக் கூடாது. சார்ஜன்ட் வண்டியத் தூக்கிடுவான். க்ரேன் வேன் ரெடியா நின்னுட்டிருக்கும். மனசுல வச்சிக்குங்க. சிட்டிக்குள்ள போயிட்டு மீள்றதுங்கிறது சாதாரணமில்ல இன்னைய தேதிக்கு.

நான் மெüன சாமியாராகி வெகு நேரமாகியிருந்தது.

“”என்னத்துக்கு இப்பக் காரு? ஒரு கால் டாக்ஸியப் பிடிச்சா ஆச்சு. எத்தனையோ இருக்கு. தெனமும்தான் வீட்டு வாசல்ல நோட்டீச எறிஞ்சிட்டுப் போறானே. ஒரு ஃபோன் போட்டா அடுத்த நிமிஷம் வந்து நிப்பான். கார்ல போகுற ஆசய அதுல தீர்த்துக்க வேண்டிதானே? நாம என்ன பிஸ்னஸ்மேனா, கார் வச்சிக்கிறதுக்கு தெனமும் பணம் புரள்றவங்களுக்குத்தான் அது லாயக்கு. நாம அதுக்குத் தீனி போட்டு மாளாதாக்கும். உங்களுக்கு ஓட்டவும் தெரியாது. இம்புட்டு வயசுக்கு மேல கத்துக்கிட்டு, எங்கயாவது போய் முட்டி வைக்கவா நா வரலப்பா”

நீட்டி முழக்கி சுசீலா சொன்னதில் ரொம்பவும் கழன்று போனேன் நான்.

“”ஏன்டீ. அப்போ கேட் வைக்கும்போது எதுக்கு பார்த்திட்டு சும்மாயிருந்த? அப்பயே சொல்லியிருக்கலாமுல்ல? எவ்வளவு செலவு மிச்சம்?”

“”அந்த நேரம் எனக்கும்தான் ஆசையிருந்திச்சு. ஏன் இருக்கக் கூடாதா? நம்ம பையன் கார் வாங்க மாட்டானா? மெட்ராஸ்லேர்ந்து இங்க கொண்டாரப்போ, நிறுத்த வசதியாயிருக்கும்தானே, அதுக்காகச் சொன்னேன்”

“”இங்க கொண்டாந்து நிப்பாட்டிட்டு அவன் போயிடுவான். அதுபாட்டுக்கு வச்சமேனிக்கு அசையாம நிக்கும். தூசி, புழுதி ஏறாம நாந்தான் கெடந்து அதைத் துடைச்சுப் பராமரிக்கணும். இல்லன்னா வர்றப்ப சடைச்சுக்குவான். என்னைக்காவது அவன் வர்றைலதானே எடுக்க முடியும்? மாசா மாசமா வர்றான் மூணு மாசத்துக்கொருதரம், தவறினா நாலுன்னு ரெண்டு நாளைக்கு லீவுல வர்றான். அதுக்கு இது தேவையா? அந்தக் காசை எதாச்சும் ஃபிக்சட் டெபாசிட்ல போட்டாலும் பிரயோஜனம் என் பேர்ல சீனியர் சிட்டிசன் வட்டியாச்சும் வரும். நான் கத்துக்கறேன்னாலும் கேட்க மாட்டேங்கறே. உனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது. பிடிவாதமாக் கத்துண்டாலும், நீ உட்காருவியோ மாட்டியோ? நான் மட்டும் போய் செத்து வைக்கிறதுக்கா? போறதோ போறோம், ரெண்டு பேரும் ஒரேயடியாப் போய்ச் சேர்ந்தாலும் பையனாச்சும் நிம்மதியாயிருப்பான்”

“”அய்யோ, ராமா. நல்லதே பேசுங்களேன். எதுக்கு இப்படி அபத்தமா என்னமோ தோணியாச்சு. வச்சாச்சு. இப்ப அது எதுக்கு? கார் இல்லாட்டி என்ன? உள்ளே புழங்குறதுக்கு எடம் விசாலமா இருக்குல்ல. ராத்திரி ஒரு சேரைப் போட்டுட்டுக் காத்தாட உட்காரலாமில்ல. சுதாரிப்பா மேலே கொக்கி போட்ருக்கோம். ஊஞ்சல் போட்டு ஆடலாமுல்ல”

“” கார் வாங்கறோம், வாங்கல. அது நம்ம இஷ்டம். இப்டி எடத்தை அடைக்கிற மாதிரி வலியக் கஷ்டத்த வரவழைச்சி யாராவது அனுபவிப்பாங்களா? அந்த ஸ்பேஸ்ல துணி உலர்த்த கொடி கட்டியிருந்தீங்களே ஒரு மைலுக்கு? இப்போ நான் எங்க கொண்டு போய் என் புடவை துணிமணிகளை உலர்த்தறதாம்? வீட்டுக் காம்பவுன்டுக்குள்ள அது பாட்டுக்குக் காய்ஞ்சிட்டிருந்தது. ராத்திரிக் கூட எடுக்க மாட்டேன். க்ளிப்பப் போட்டுவிட்டா அக்கடான்னு தொங்கிட்டிருக்கும். என் வசதி போல வச்சிப்பேன், உருவிப்பேன். இப்ப எல்லாம் போச்சு. எதையாச்சும் அச்சுப் பிச்சுன்னு செய்து வைக்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு. உங்களோட சேர்ந்து நானும் படவேண்டியிருக்கு பாரத்த… கர்மம்”

இவள் பேசுவதைப் பார்த்தால் ராத்திரித் தூக்கம் போய்விடும் போலிருந்தது எனக்கு. என்ன தர்ம சங்கடம் இது? ஒருத்தருக்கு நல்லது செய்யப்போய் அதனால் இப்படியுமா கேடு விளையும்? இது நாள் வரை அந்த எதிர்வீட்டுக்காரப் பையனின் கார் ரோட்டில்தான் நின்றது. அகஸ்மாத்தாய் கவனமின்றி கொஞ்சம் ஒதுக்கி நிறுத்தத் தவறினாலும் கூட, நடு ராத்திரிக்கு மேல் வரும் மணல் லாரிக்காரன் கூட காது கிழிவதுபோல் ஏர் ஹாரனை அலறவிட்டு அத்தனை பேர் தூக்கத்தையும் கெடுத்தான். அங்கங்கே நடக்கும் கட்டட வேலைகளுக்கு எங்கள் தெரு வழியாய்த்தான் செங்கல், ஜல்லிகள், மணல், சிமின்ட் மூட்டைகள் இத்யாதி என்று சென்று கொண்டிருந்தன. மற்ற எல்லாத் தெருக்களுக்கும் லிங்க் ரோடு எங்கள் வீதிதான். ஒரே புழுதிமயம்தான். எந்நேரமும் போக்குவரத்து இருந்த மணியம்தான். ஆனால் அதுவே யார் வந்தது? போனது? என்று அறிய முடியாத நிலையும்.

எதுடா சாக்கு? என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் காத்திருந்தான் போலிருக்கிறது. கொஞ்ச நாளாவே யோசித்திருப்பான் போலிருக்கிறது. கேட்டேவிட்டான் என் மகன் வயசு. மரியாதையான பையன். கேட்டதும், இல்லை என்று மறுக்க மனசு வரவில்லை, நான் என்ன செய்ய? அவன் அப்பாவோ, அம்மாவோ வந்து கேட்கவில்லை. அது சரியல்ல என்ற எண்ணமிருந்திருக்கலாம். பையனே கேட்கட்டும், அமைந்தால் அமையட்டும் என்று விட்டிருக்கலாம். எங்களுக்குத் தெரியாது என்பதுபோல் இருப்பதும் ஒரு சாமர்த்தியம்தானே? சும்மாத்தானே கெடக்கு? எல்லாம் கொடுப்பாங்க… போய்க் கேளு என்று உசுப்பி விட்டிருக்கலாம்.

இப்போது என்பாடு திண்டாட்டமாய்ப் போயிற்று. என் யமஹாவை நான் எங்கே நிறுத்துவது? அதுதான் ரோட்டில் நிறுத்தச் சொல்கிறாளே இவள். நிறுத்தினால் கண்டிப்பாய் மறுநாள் வண்டி இருக்காது. மணல் லாரியில் அல்லது ஏதேனும் சின்ன வேனில் வண்டி திருப்பூர் தாண்டிப் போய்விடும். எங்கள் பகுதியில் திருடு போன டூவிலர்கள் சில அங்குதான் கிடைத்தன. முன்னூறு, நானூறு மைல் தள்ளி விற்றால்தானே சந்தேகமின்றி ஈஸியாய்க் காசு பார்க்க முடியும். திருடன் பெரிசா? காப்பான் பெரிசா?

“”சார் திரும்பத் திரும்ப உங்களத்தான் சங்கடப் படுத்த வேண்டியிருக்கு. ராத்திரி உங்களை டிஸ்டர்ப் பண்றது அவ்வளவு நல்லாயிருக்காது. இத்தன நாள் உள்ளே பூட்டிட்டிருந்தீங்க. இப்போதான் வண்டி வந்திருச்சே? நா வெளிலயே பூட்டிக்கிறேன். அப்பத்தான் காலைல எடுக்கைல உங்க தூக்கத்தக் கெடுக்காம, தொந்தரவு பண்ணாம இருக்க முடியும். நாம்பாட்டுக்கு வண்டிய சைலன்டா வெளில எடுத்திட்டு, பாதுகாப்பா திரும்பக் கேட்டைப் பூட்டிட்டுப் போயிடுவேன். அதுதான் உங்களுக்கும் நல்லதுன்னு நினைக்கிறேன். உங்க பூட்டுச் சாவிய நீங்களே வச்சிக்குங்க. வேறே எங்கயாச்சும் பூட்டிக்கலாம்ல? நான் புதுசு வாங்கிக்கிறேன்”

என்னவோ எனக்கு வசதி செய்து தருவது போலவும், ரொம்பவும் பொறுப்பானவன் போலவும், கச்சிதமாய்ப் பேசிக் கொண்டே போனான். ஏறக்குறைய ஆண்டு அனுபவிப்பதற்குத் தயாராகிவிட்டவன் போலிருந்தது. வெறும் பூட்டுச் சாவிதான் மிச்சம் எனக்கு. அடுத்தாற்போல் அந்தப் பெரிய கேட்டைத் திறக்க வேண்டுமானால் நான் அவனிடம் போய் சாவிக்கு நிற்க வேண்டும். பொறுப்பு விட்டது. அது ஒன்றுதான் கிடைத்த பலன்.

அன்று பல காரியமாய் வெளியே போய்விட்டுச் சற்றுத் தாமதமாய் நான் வீடு வந்த போது சுசீலா சொன்னாள்:

“”அந்தப் பையனோட அம்மாட்டச் சொல்லியிருக்கேன்.அவுங்க வீட்டுக் காம்பவுன்ட்டுக்குள்ள வண்டியக் கொண்டு போய் நிறுத்தி ஞாபகமாப் பூட்டிட்டு வாங்க. இனிமே அதுதான் இடம்” – கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டு மறு பேச்சுக்கு நில்லாமல் வேலையைப் பார்க்க உள்ளே போய் விட்டாள்.

அதானே பார்த்தேன். சும்மாயிருக்க மாட்டாளே. பதிலுக்கு பதில் எதாச்சும் செய்யாட்டா மனசு ஆறாதே என்று நினைத்தவாறே எதிர்வீட்டுச்சாரிக்கு வண்டியை உருட்டினேன். கொஞ்சம் ஒடுக்கமான நுழைவாயில்தான். கவனமாய்த்தான் வண்டியை உள்ளே நுழைக்க வேண்டும். திருடுபவனுக்குக் கூட வண்டியைச் செந்தூக்காகத் தூக்கி வெளியில் நிற்கும் ஆளிடம் கொடுத்தால்தான் முடியும். இல்லையென்றால் திருட்டுத் தொழில் வெறுத்துப் போகும். ஏறக்குறைய வெட்ட வெளியில் நிற்பது போலத்தான். வீதியில் செல்வோருக்குப் பார்வையில் நன்றாய்ப் படுமே? திருடு என்று தூண்டுமே? இனி இதற்கென்று அதற்கு ஒரு கவர் வாங்கிச் சாத்தி மூட வேண்டும். அதெல்லாம் கூடச் செய்துவிடலாம்தான். இவையெல்லாவற்றையும் மீறி இந்த நினைப்பில்லாமல் இரவில் நான் நிம்மதியாய்த் தூங்க வேண்டும். வண்டி வெளில இருக்கே… வெளில இருக்கே…. என்று நினைத்துக் கொண்டிருந்தால்பொழுது தானாய் விடிந்து போகும். அப்படி நிறுத்தியிருந்த சில வண்டிகள்தானே ஏற்கெனவே சில வீடுகளில் திருடு போனவை. இத்தனை நாள் இல்லாத புதிய பயம் ஒட்டிக் கொண்டது என்னிடம்.

இப்படி அநாவசியத்துக்கு நிம்மதியைக் கெடுத்துக் கொண்ட மனிதர்கள் எவரையேனும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதற்கு வயசெல்லாம் கணக்கில்லை. எந்த நேரமும் இப்படியான துன்பங்கள் வர சாத்தியம். இதற்குப் பெயர்தான் வருத்திக்கூட்டி அனுபவிப்பது என்பது முணுக் முணுக்கென்று செய்துவிட்டு, பிறகு கிடந்து திண்டாடுவது

சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டு அம்மாள் என்னைப் பார்த்துச் சொன்னார்கள்.

“”ராத்திரி சித்தச் சீக்கிரமே, பொழுதோட வண்டியக் கொண்டு வந்து வச்சிடுங்க. ஏன்னா எங்க வீட்ல, வழக்கமா ஒன்பது மணிக்கெல்லாம் கேட்டைப் பூட்டிட்டு லைட்டை அணைச்சிட்டுப் படுத்திடுவோம். சரியா?”

யாரோ சவுக்கைக் கொண்டு முதுகில் விளிச்சென்று வாரியது போலிருந்தது எனக்கு.

– ஜூன் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *