எதிர்வீட்டு ஜன்னல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 4,638 
 

ராகவ், ரமா தம்பதியர், அந்தஅடுக்கு மாடி குடியிருப்புக்கு குடிவந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. ரமாவின் கணவர் ராகவ் தாம்பரம் மெப்சில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். ஒரே மகன் கணேஷ் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாலாம் வகுப்பு படிக்கிறான்.

தாம்பரம் கிழக்கில் அமைந்துள்ள “முல்லை ” அடுக்கு மாடி குடியிருப்பில் 16 வீடுகள் உள்ளது. இவர்களது வீடு முதல் தளத்தில் உள்ளது. மேலும் இரண்டு வீடுகள் இத் தளத்தில் அமைந்திருந்தது. இதேபோல எதிர் ப்ளாக்கிலும் எட்டு குடியிருப்புகள் அமைந்துள்ளன.

குடியிருப்பில் 16 வீடுகள் இருந்தாலும் அனைவரும் வேலைக்கு செல்வதால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதுகூட கிடையாது. எந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட ஒருவருக்கும் சரியாக தெரியாது.

ராகவ் மதுரையிலிருந்து சென்னைக்கு மாறுதலில் வந்தவன். அவன் மனைவி ரமாவுக்கு ஆரம்பத்தில் மிகவும் சிரமமாக இருந்தது. நல்லவேளையாக மகனுக்கு கிழக்கு தாம்பரத்திலேயே ஒரு தனியார் பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது.

காலை 7.30 மணிக்கு தெரு முனையில் வரும் பள்ளி பேருந்தில் மகன்ரமேஷை ஏற்றி அனுப்பிவிட்டு,

9.௦௦ மணிக்கு கணவன் ராகவுக்கு டிபன் தயார்செய்து கொடுத்தும், மதியசாப்பாடும் கட்டி கொடுத்து அனுப்பி வைத்தபிறகு, தான் டிபன் சாப்பிட்டபின் சற்று ஓய்வு எடுத்துக்கொள்வாள். பிறகு அருகில் உள்ள கடைக்கு சென்று தேவையான காய்கறிகள், மாளிகைப்பொருட்களை வாங்கி வருவாள்.

இக்குடியிருப்புக்கு வந்து நான்கு மாதங்களுக்கு பின்னரும் அங்குள்ள யாரும் சகஜமாக பேசவில்லை என்பதில் ரமாவுக்கு வருத்தம். எப்போதாவது நேரில் பார்க்கும்போது ஒரு புன்சிரிப்புடன் நகர்ந்து செல்வார்கள். குடியிருப்பின் நிர்வாகி மட்டும் எப்போதாவது மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வசூல்செய்ய வரும்போது பேசுவார்.

பொதுவாகவே இதுபோன்ற புறநகர் பகுதிகளில் காலை 11. ௦௦ மணியளவிலேயே தெருக்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிப்போய் விடுகிறது. இவர்கள் இருக்கும் பகுதியிலும் பெரும்பாலோர் வேலைக்கு சென்று விடுவதால் தெருக்கள் ஆள் நடமாட்டமின்றி கானப்படும். ஆனால் தெருமுனையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஒன்றிரண்டு ஆட்டோக்கள் மட்டும் நின்றுகொண்டிருக்கும்.

ரமா வீட்டு ஹாலிலிருந்து பார்த்தால் எதிர்வீட்டு ஜன்னல் தெரியும். அந்த ஜன்னலிலிருந்து எதிர்வீட்டு பெண்ஒருவர் தினமும் காலையில் அங்கு அமர்ந்துகொண்டு போன்பேசியபடி இவர்களது வீட்டை பார்த்துக்கொண்டிருப்பாள்.இவ்வாறு அந்த பெண் தன வீட்டையே பார்த்துக்கொண்டிருப்பது ர்மாவுக்கு உறுத்தலாகவும், சற்று எரிச்சலாகவும் இருந்தது. எனவே ராமா கணவரிடம் அந்த ஜன்னலை மூடி திரைசீலை போட துணி வாங்கி வருமாறு சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால், ராகவோ வாங்கி வராமல் நாள் கடத்திக் கொண்டிருந்தான்.

அன்றும் எப்போதுபோல் கணவன் ராகவ் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றபிறகு ரமா டிபன் சாப்பிட்டுவிட்டு, சிறிதுநேரம் ஓய்வு எடுத்தாள். பின்னர் அருகிலுள்ள மளிகை கடைக்கு சென்று சில பொருட்களை வாங்கிய பின்னர் மேலும் சில காய்கறிகளையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிய ரமா பூட்டை திறந்து கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைய முயன்றபோது சார், என கூப்பிட்டுக்கொண்டே படியேறி வந்தான் ஒருவன், திரும்பி பார்த்த ரமா ஏய், யார் நீ ?உனக்கு என்ன வேண்டும் என கேட்டாள்.

பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருள் இருந்தா போடுங்கம்மா நல்ல விலை கொடுத்து வாங்கிக்கிறேன், என்றான். அவன் கையில் சாக்கு பையொன்று வைத்திருந்தான்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீ முதல்ல வெளியபோ, என்றாள் ரமா.

கோச்சுக்காதீங்கம்மா, சார்தான் நேத்தைக்கு பக்கத்துத்தெருவில பாத்து வர சொன்னார் என்று சொல்லியபடியே அவளை நெருங்கினான், பயந்துபோன ரமா, மரியாதையா நீ வெளியில போ, என கூறிக்கொண்டிருக்கும்போதே அவன் அவளை வீட்டினுள் தள்ளிக்கொண்டு சென்றான், அவளிடம் கத்தியை காட்டி, மரியாதையா நகையெல்லாம் கழட்டி கொடு, சத்தம் போட்ட குத்தி கொலை பண்ணிருவேன், என மிரட்டினான். சுதாரித்துக்கொண்ட ரமா, திருடன், திருடன், என சத்தம் போட்டாள், அவன், உடனே ரமாவின் நெற்றியில் கத்தியை வைத்து லேசாக கீரல் போட்டான், அவள் பயத்தில் மேலும் கதறினாள். அவள் சத்தம் போடமலிருக்க வாயில் துணியை திணித்தான் அவன்.

அவள் கையில் போட்டிருந்த வளையல்களை பறித்துவிட்டு, கழுத்தில் போட்டிருந்த சங்கிலியை பறிக்க முயலும்போது கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த நான்கு ஆண்கள் அவனை சுற்றிவளைத்து தாக்கி அவனை கட்டிப்போட்டார்கள். அப்போது குடியிருப்பின் நிர்வாகியும், எதிர்த்த வீட்டு பெண்மணியும் அவசரமாக உள்ளே நுழைந்தனர். அந்த பெண்மணி ரமாவுக்கு ஆறுதல் கூறி அவளது காயத்துக்கு முதலுதவியும் செய்தாள். ரமாவும், அந்த பெண்மணியை கட்டிக்கொண்டு அழுதாள் குடியிருப்பு நிர்வாகி இங்கு வரும் முன்பாகவே போலீசுக்கும், ரமாவின் கணவருக்கும் போன் செய்து தகவல் தெரிவித்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் ரமாவின் கணவன் ராகவ் பதட்டத்துடன் வந்து சேர்ந்தான். அவன் மனைவிக்கு ஆறுதல் கூறி, நடந்த சம்பவங்களை விசாரித்தான். அவளும் அழுதுகொண்டே நடந்தவைகளை எடுத்துக்கூறினாள்.

அப்போது உள்ளே வந்த போலீசார் ரமாவிடம் விசாரணை நடத்திவிட்டு, புகார் ஒன்றினை எழுதி வாங்கிக்கொண்டனர். பின்னர் அந்த திருடனை கைது செய்து அழைத்து சென்றனர்.

அப்போது எதிர்வீட்டு பெண்மணி பேச ஆரம்பித்தாள், என் பெயர் வனஜா, நான் எதிர்வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். தினமும் சமையல் வேலைகள் முடிந்தவுடன் எனது படுக்கை அறையில் ஜன்னலுக்கு நேராக உட்கார்ந்துகொண்டு என் பெண்ணிடம் போனில் பேசுவேன், இன்றும் அதுபோல போனில் பேச ஆரம்பித்தபோது, உன் வீட்டில் யாரோ ஒருவன் உன்னை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைவதையும், நீ திருடன், திருடன் என கூச்சல் போடுவதையும் கவனித்த நான் நிலைமையை புரிந்துகொண்டு குடியிருப்பு நிர்வாகியையும், தெருமுனையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களையும் அழைத்துக்கொண்டு வந்தேன்,நல்லவேளையாக திருடவந்தவன் கதவை சரியாக மூடவில்லை, அதனால்தான் உன்னை காப்பாற்ற முடிந்தது என்றாள்.

ராகவும்,ரமாவும் அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், குடியிருப்பு நிர்வாகி,எதிர்வீட்டு பெண்மணி அனைவருக்கும் கைகூப்பி நன்றிதெரிவித்தனர். ரமாவும் அந்த எதிர்வீட்டு பெண்ணின் கைகளை பிடித்துக்கொண்டு, உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல, நீங்க மட்டும் சமயோஜிதமா செயல்படாம இருந்திருந்தா என் நிலைமை மிகவும் மோசமா போயிருக்கும், உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கேன் என நெகிழ்ச்சியுடன் கூறினாள். அதெல்லாம் பரவாயில்லை, இதுக்கெல்லாம் நன்றியெல்லாம் சொல்லாத, என்னால முடிஞ்சா உதவியை நான் செய்தேன் என்று கூறினாள் அந்த பெண்.அனைவரும் விடை பெற்றுக்கொண்டு சென்றனர்.

ரமா கணவனிடம் அந்த ஜன்னலுக்கு திரைசீலை போட வேண்டாம், நான்தான் அந்த அம்மாவை தப்பா புரிஞ்சுக்கிட்டேன் என்றாள். அது திறந்து இருந்ததால்தான் அந்த அம்மாவால எனக்கு ஓடிவந்து உதவி செய்ய முடிஞ்சது, அதனால நாம திரைசீலை போடவேண்டாம் என்றாள். ரமாவை அனைத்தபடி சரி என்பது போல் தலையை அசைதான் ராகவ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *