இப்படிப் பல நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 5,473 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காத்திருந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. வாசுதேவன் அறை பின் மேசை முன்னால் உட்கார்ந்து கொண்டு கதை எழுத ஆரம் பித்தான். எழுதியதைத் திரும்பத் திரும்ப வெட்டியதே ஒழியக் கதையோ வளரவில்லை. கற்பனையோ வளரவில்லை. கற்பனையோ ஊற் றெடுக்கவில்லை. சை! என்று பேனையை எறிந்துவிட்டு ஆழ்ந்த யோச னையில் இருந்தான். “என்ன, கதை எழுதவென்று தொடங்கினீர்கள். இப்படி ஒரே யோசனையில் இருக்கிறீர்களே” என்று கேட்டுக் கொண்டு அவன் மனைவி குமுதம் கையில் ஒரு தட்டு நிறைய மாம்பழத்துடன் வந்தாள் அவன் மாம்பழத்தில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு “அதெப்படி முடியும்? நான் ஒரு கட்டுரையோ கதையோ எழுதி வருசம் ஐந்தோ ஆறோ ஆகிறது. இதற்கிடையில் என் மனசிற் பாய்ந்து கொண்டிருந்த கற்பனை ஊற்றும், தூர்ந்து போய்விட்டதுபோல் தெரிகி றது. கதைதான் மனசில் உருவாகிக் கொண்டு வந்தாலும் அதை எழுத முடிகிறதில்லை. இதற்கு நான் யாரை நோக. “முன்னெல்லாம் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள முன்னர் நீங்கள் எத்தனை எத் தனை கதை எழுதினீர்கள். நீங்கள் எழுதிய “தேன்கூடு” என்ற சிறுகதையில் தானே நான் உண்மையில் உங்களை முதல் முதல் சந்தித்தது. அந்தக் கதையை வாசித்த நாள் முதல் அதன் ஆசிரியரைக் காண வேண்டுமென்று என் ஆவலோ சொல்ல முடியாது. என் அப்பாவுக்குச் சொல்லவும் வெட்கமாயிருந்தது. அதற்குப் பின்னர் நடந்ததுதான் எனக்கும் தெரிந்ததாயிற்றே. சும்மா இதைப் பற்றித் திருப்பித் திருப்பி எத்தனை தடவைதான் எனக்குச் சொல்லியிருக்கிறாய்” “ஓ… நம் ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது போல் தெரிகிறது. இல்லை, நான் அதைச் சொல்லவில்லை. பாருங்கள். எங்கள் மனசுக்குப் பிடித்த ஒரு இன்பமான விசயத்தைத் திரும்பத் திரும்ப எத்தனை தரம் சொன்னாலும் அதன் சுவை குறைகிறதேயில்லை. எனக்கோ அது எங்கள் “இந்துவைத் தழுவத் தழுவ இன்பம் அதிகரிப்பதுபோல் என்றும் இன்பமாய்த்தான் இருக்கிறது.

“அதெல்லாம் சரி, நீ இப்படியெல்லாம் சர்க்கரையாய்ப் பேசுவாய் என்று எனக்குத் தெரி யும். இப்ப என்னைக் கதை எழுத விடப்போகிறாயா, அல்லது இன்னும் ஏதாவது இருக்கா?” “நான் உங்கள் கையை வந்து பிடிக்கிறேன். நல்லாய் எழுதுங்கள். என்னைப் பற்றிப்… போவ தாகச் சொன்னீர்களே, ஞாபகம் இருக்கிறதா?”

“இங்கே பார் குமு. நீ இப்படி வந்து ஏதோ அளந்து கொண்டுபோனால், என்னால் ஒன் றுமே எழுத முடியாது. மன நிம்மதியாய் இருந்து சிறிதுநேரம்…” “சரி, நான் வந்துதான் உங்க ளுக்குத் தொல்லையாயிருக்கிறது. நான் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை . அந்தக் கத வைப் பூட்டிவிடுகிறேன். குழந்தைகளையும் அடுத்த வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன். பார்ப் போமே, எங்கள் ஆசிரியரின் சமத்தை” என்று சொல்லிக் கொண்டு கதவையும் பூட்டிவிட்டுப் போய்விட்டாள். வாசுதேவன் “அப்படி” என்று நெட்டுயிர்த்துக் கொண்டு கையில் பேனாவை எடுத்தான்.

சிறிது நேரத்தில் முன் கதவை யாரோ தடதடவென்று தட்டும் சத்தம் கேட்டது. குமுதம் சமையலறையிலிருந்து போய் யார் என்று விசாரித்துக் கொண்டு ஓடோடியும் வந்து கதவைத் திறந்து “உங்கள் நண்பன் ராகவன் வந்திருக்கிறார். இங்கேயே வரச் சொல்லட்டுமா?” என்றாள். “யார்? நம் ராகவனா?” என்று கேட்டு விட்டு வாசுதேவன் எழுந்துபோய் “அடே ராகவா, வா அப்பா இப்படி உட்கார்ந்துகொள். உன்னைச் சந்தித்து எத்தனை நாட்களாகின் றன? எங்களை மறந்தே போனாய் என்றிருந்தேன். எப்படி வீட்டில் எல்லோரும் சோமந் தானே. குழந்தைகள் வேறும் ஏதாவது… ராகவன் கதைத்த வண்ணம் இல்லை . அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை. என் ஒரே குழந்தைக்குத்தான் அடிக்கடி ஏதோ ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அதோடு கந்தோர் வேலை. யாரையும் போய் காணவென்றாலும் அவ காசம் கிடைக்கிறதேயில்லை” “நீ அதிகம் சொல்ல வேண்டாம் ராகவா. எனக்குத் தெரியா ததல்ல. குடும்பத் தொல்லைகள். அதிருக்கட்டும் நீ இப்பவெல்லாம் பத்திரிகைக்கு ஏதும் எழுது வதில்லையா? உன் கதைகளை வாசித்துப் பல நாட்களாகிறதே?” “எழுத வேண்டுமென்று அதிக ஆசை இருக்கிறதுதான். ஒரு கதையோ கட்டுரையோ மனதில் உருவாகி வருவதற்குள் ஏதாவது ஒரு தொல்லை வந்து மனநிம்மதியைக் குலைத்துவிடுகிறது. முன்னெல்லாம் பாருங்கள், நாங்கள் கல்லூரி விட்டு உத்தியோகம் தேடிக் கொண்டிருந்த நாட்களில் …”

“அதை ஏன் நினைத்து ஏங்குவான்? நாங்கள் இருவரும் கைகோர்த்த வண்ணம் எங்கள் ஊர் வயல்வெளியில் வெயிலையும் காற்றையும் பொருட்படுத்தாமல் உலகத்திலுள்ள கதைகளைப் பற்றியும் காவியங்களைப் பற்றியும் தர்க்கம் செய்து கொண்டு திரிந்த அந்தக் குதூகலமான நாட்கள் மீண்டும் வரப் போகின்றனவா? மூங்கிற் புதரிற் சென்று சலசலக்கும் காற்றுப்போலவும் விண்ணிலே சஞ்சரிக்கும் மேகம் போலவும் சர்வ தந்திரத்துடன் அலைந்து திரிந்த நாட்கள் என் ஞாபகத்துக்கு வருகிறது” அந்நாட்களில் தானே நாங்கள் முதன் முதல் காளிதாசரின் சாகுந்தலத்தைத் தமிழில் கண்டது”

“ஆம் அதை முதன் முதல் படித்த எங்கள் மனதில் கொந்தளித்த ஆர்வத்தையும் ரஸானுபவத்தையும் ஓர் இளம் பெண்ணைத் தொட்டது போன்ற ஒரு உணர்ச்சியையும் நினைத்தால் இன்று நான் இதைச் சொல்லும் போதும் மெய் சிலிர்க்கிறது. குமுதம் மெல்ல கத வருகில் வந்துநின்று வாசுதேவனை வரும்படி சைகை செய்தாள். அவன் எழுந்துபோய் “என்ன எங்களைக் கொஞ்சநேரம்தானும் – குமு – நாங்கள் எத்தனை நாட்களுக்குப் பிறகு சந்தித்திருக்கிறோம்…..” அவன் முடிக்கும் முன்னரே தாழ்ந்த குரலில் அவள் “இப்ப என்ன நேர மானது பாருங்கள். மணி ஒன்றாகப் போகிறது. இன்று சமையல் மிக அபூர்வம் என்று சொல்லப்போகிறீர்கள். உங்கள் நண்பரையும் சாப்பிட்டுப் போகும்படி சொல்லுங்கள்” என் றாள். அப்பொழுதுதான் இந்த உலக நினைவு வந்தது வாசுதேவனுக்கு. இலக்கிய நண்பரைக் கண்டுவிட்டால் நேரமே போகிறது அவனுக்குத் தெரியவில்லை. “அடே ராகவா! இன்று நீயும் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று என் குமு உனக்குக் கட்டளை போட்டிருக்கிறாள். எழுந்திரு” என்று சொல்லிக்கொண்டே “குமு இலையைப் போடு” என்றான்.

சாப்பாடு முடித்து ராகவனும் சிறிது நேரத்திற் போய்விட்டான். உண்மையில் குமுதம் பிரமாதமாகச் சமயல் செய்திருந்தாள். வாசுதேவனும் வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு ஒரு சிகறெற்றை எடுத்துப் புகைத்துக் கொண்டான். அயர்வும் தூக்கமும் சூழ்ந்துவர இரண்டு வரி யாவது எழுதலாமென்று மேசையின் முன் போய் உட்கார்ந்தான். அப்பொழுதுதான் நித்தி ரையில் இருந்து எழும்பிய குழந்தையையும் வைத்துக் கொண்டு கையில் வெற்றிலை பாக்குத் தட்டுடன் குமுதும் அவன் அருகே வந்து, “இன்று சமையல் எப்படி இருந்தது. உங்கள் நண்பர் என்ன சொன்னார்?” என்று கேட்டாள். இப்படி மோசமான சமையலை தான் எங்கும் பார்த்ததில்லை என்று உனக்குச் சொல்லச்சொன்னான்” என்றான் வாசுதேவன்.

“அப்படியானால் உங்கள் நண்பனை ஒருநாளைக்கு சமையல் செய்து காட்டும்படி நீங்கள் சொல்லவில்லையா?” வாசுதேவன் சிரித்துக் கொண்டே அதைப்பற்றிப் பின்னர் யோசிப் போம். இப்போ நீ போய் இந்துவுக்கு ஏதும் கொடு. நான் என்னசெய்யப் போகிறேன் என்பது உனக்குத் தெரியுந்தானே” என்றான். “தெரியாமல் என்ன, நீங்கள் வழக்கம்போல நித்திரை செய்யப்போகிறீர்கள்: கதையில் ஒரு பாரா எழுதுமுன்னர் – பார்ப்பமே” வாசுதேவன் அயர் கட்டிக் கொண்டிருந்த கண்களைத் துடைத்துக்கொண்டு “இல்லை நான் எழுதிக் கொண்டு தான் இருக்கப்போகிறேன்” என்று தீர்மானமாய்ப் பதில் சொல்லிவிட்டு எழுத ஆரம்பித்தான். நித்திரையோ கண்களைச்களைச் சுற்றிக் கொண்டு வந்தது. அவனால் இருக்கமுடியவில்லை போய்ப் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். குமுதம் வந்து பாரதத பொழுது கு டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்க அவளுக்கு இரக்கமாய் இருந்தது. “அவர் கொஞ்சநேரம் தூங்கட்டுமே” என்று நினைத்துக் கொண்டு தன் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மணி ஐந்து ஆகியும் வாசுதேவன் தூங்கிக் கொண்டிருந்தான். குமுதம் வந்து அருகிற்போய் “இன்னுமா தூங்குகிறீர்கள்? எழுந்திருங்கள் மணி ஐந்தும் அடித்துவிட்டதே” என்றாள். வாசுதேவன் “கதை எழுதி முடிந்ததா இல்லையா பார்” என்று சொல்லிக் கொண்டு எழுந்திருந்தான். முன்னால் குமுதம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு நின்றாள். மாலை வெய்யில் யன்னல் ஊடா வந்து அவன் படுக்கைமேல் வீழ்ந்து கொண்டிருந்தது. வெளி முற்றத்தில் அவன் குழந்தைகள் பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

“என்ன கனவா கண்டீர்கள்? எப்படியாவது கனவிலாவது கதை முடிவாகிவிட்டதே. அதேபோதும். தேநீர் வைத்திருக்கிறேன் மேசைமேல். எழுந்திருங்கள்” என்றாள் குமு. வாசு தேவனுக்கு எரிச்சலாய் இருந்தது. தன்னையே சபித்துக் கொண்டு, “சே, இவ்வளவு நேரமும் தூங்கி விட்டேன்” என்று சொல்லிய வண்ணம் எழுந்திருந்தான். அப்பொழுது அவன் மூத்த பையன் தலைதெறிக்க ஓடிவந்து “அப்பா, அப்பா, வாசலிலே கார் ஒன்று நிற்குது” என்று கத்தினான். வாசுதேவன் எட்டிப் பார்த்தான். அவன் தங்கையும் கணவனும் காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவன் தங்கை ஓடிவந்து “அண்ணா இன்று சந்திரலேகா படத்துக்குப் போகலாமென்று உங்களையும் கூட்டிப் போக வந்திருக்கிறோம். நேரம் ஆகிறது. நீங்களும் கட்டாயம் வரத்தான் வேணும். புறப்படுங்கள்” என்றாள். வாசுதேவனால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. சந்திரலேகா படத்தைப் பார்க்க வேண்டுமென்று அவனுக்கும் ஆவலாய்த்தான் இருந்தது. தன் தங்கையுடன் போனால் குமுவுக்கும் குழந்தைகளுடன் உதவியாயிருக்கும். ஆனால் அவன் ஆரம்பித்த கதை…. கொஞ்சம் யோசித்தான். “இரவு நீண்ட நேரம் இருக்கிறது. எப்படியும் வந்து கதையைச் சமாளித்துக் கொள்ளுவோம்” என்ற முடிவுக்கு வந்துதான். “அப்படியானால் நாங்களும் வருகிறோம்” என்று சொல்லிவிட்டு “குமு, இன்று உனது யோகம். நாங்களும் படத்துக்குப் போயிற்று வரலாம். நேரமாச்சு. சீக்கிரம் ஆயத்தமாகுங்கள்” என்றான்.

குமுதத்துக்குச் சினிமா என்றால் குழந்தைகள், புருசன். ஒன்றுமே வேண்டாம். அவ்வ ளவு மோகம் அவளுக்கு. “இதோ” என்று சொல்லிய வண்ணம் பம்பரம்போல” சுழன்று கூத்தடித்துக் கொண்டு தயாரானாள். சந்திரலேகா படமோ நீண்ட படம். அவர்கள் படம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பொழுது இரவு மணி 10 அடித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் சாப்பிட்டு நித்திரைக்குப் போக மேலும் ஒரு மணிநேரம் கழிந்தது. அறையின் யன்னலைத் திறந்துவிட்டு ஏகாந்தமாய் மேசை முன்னாலிருந்து கதையைப் பற்றித் தொடர்ந்து யோசித்து மனசில் உருவாக்கிக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

முன்னால் யன்னலுக்கு வெளியே ஜலத்தில் பிரதிபலிக்கும் சந்திரன் போல் விதானத்தில் மங்கிய நிலவு ஊர்ந்து கொண்டிருந்தது. முற்றத்தில் நின்ற மல்லிகைச் செடியிலிருந்து ஒரு குளிர்ந்த காற்று மல்லிகை மணத்தை அறை முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தது… வாசுதேவனுக்குத் தாகம் எடுத்தது. “குமு கொஞ்சம் ஜலம் கொண்டுவா” என்று எழுப்பினான். குமுதம் எழுந்து டம்ளரில் ஜலம் கொண்டுவந்து வைத்துவிட்டு “கதையில் இன்னும் அதிகம் எழுத இருக்கிறதா? இப்படி நித்திரை முழித்துவிட்டு நாளைக்குக் கந்தோர் போவதில்யைா ” என்றாள்.

அவனுக்கு முன்னால் இரண்டு “பரா” மாத்திரம் எழுதிய ஒரு காகிதம் கிடந்தது. “கதை ஓடவில்லையே, நான் இதற்கு என்ன செய்ய? நாளைக்கு தபாலுக்குச் சேர்க்க வேண்டுமே” என்றான். “என்னாலும் குழந்தைகளாலும் தான் நீங்கள் ஒன்றும் எழுதமுடியவில்லை என்றீர்களே. இது உண்மைதானா” என்று இரக்கம் நிறைந்த பார்வையுடன் கேட்டாள் குழு. வாசுதேவனுக்கு இதைக் கேட்டவுடன் நெஞ்சு குமுறியது. தளதளத்த குரலில் “இல்லை யில்லை குமு, இப்படியாக நீ நினைத்துவிட்டாயா? என் இல்லத்துக்கு ஒரு உயிர்க்காற்றுப் போல் நீ வந்தாய். என் வாழ்க்கையிலே புதுமையும் ஒளியும் வந்து நிரம்பியது. எங்கள் குழந்தைகளின் மழலையைக் கேட்டு இந்த வீடே கொந்தளித்துக் குதூகலிக்கிறது. நீங்கள் இல்லா விடில் உலகமே வரண்ட ஒரு பாலைவனமாகவல்லவா எனக்குத் தோன்றும். பார், குழு. முன்னெல்லாம் அதை எழுத வேண்டுமென்ற ஒரு தேவை இருந்தது. என் மனசுக்கு, அதில் அது ஒரு நிறைவையும் சாந்தியையும் கண்டது.

“அப்படியானால் இப்போ” “நீ இருக்கிறாய். எங்கள் குழந்தைகள் இருக்கின்றன. உன் தூய்மையான குழந்தைகளின் ஸ்பரிசத்திலே ஒரு சாந்தியையும் பூரிப்பையும் மனம் பெற்றுக் கொள்கிறது”

“நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் வளர்ந்துவர, என் தேகத்தின் எழில் குறைய” “இப்படி வா. குமு என்பக்கத்தில் நீ முதல் முதல் என்னிடம் வந்தபொழுது இருந்தது போலவா இப்பவும் இருக்கிறாய்? அன்றொருநாள் இப்படியான ஒரு ஏகாந்தமான இரவில். சந்திர கிரணங்கள் யன்னல் ஊடாக வீழ்ந்து கொண்டிருந்த படுக்கையில் உன்னை நான் தொட்ட பொழுது நீ நடுங்க, என் மெய் சிலிர்க்க” குமு அவன் வாயைப் பொத்திக் கொண்டாள்.

“சீ, உங்களுக்கு வெட்கமாயில்லையா? இப்பவெல்லாம் இதையேன்..”

“அந்த இன்பமான லாகிரி போன்ற மயக்கந்தரும் நாட்கள் அவைகளின் நினைவு நீ கிழவியானாலும் இன்பம் தந்து வரும். அதற்காகச் சொன்னேன்”

மணி இரண்டு அடித்தது.

“குமு நீ ஏன் உன் நித்திரை யைக் குலைத்துக் கொள்கிறாய்? போய்த் தூங்கு” என்றான். அப்பொழுது சின்னக் குழந்தை நித்திரை குழம்பி எழுந்து கத்தத் தொடங்கியது.

“சரி இனிக் கதை எழுதினாப் போலைதான். நீங்கள் வந்து தூங்குங்கள்” என்றான் குமுதம். வாசுதேவன் மெல்லப் படுக்கையை எடுத்து விரித்தான்.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *