இன்னொரு முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 547 
 

சமையலறையில் இருந்த புவனேஸ்வரி ஈரக்கரங்களைப் புடவைத் தலைப்பில் துடைத்தபடி வெளியே வந்தாள்.

“யாரது?”

கதவைத் திறந்தாள். எதிரே நின்றவளைப் பார்த்ததும் திகைப்பும் மலர்ச்சியும் வந்தன.

“நீயா!” என்றாள் ஆச்சர்யமாய்.

இருக்காதா பின்னே? போனவாரம் பெண் பார்த்து… அதே இடத்திலேயே மருமகளாக ஏற்க சம்மதம் என்று சொல்லிவிட்டு வந்தவளுக்கு… அதே பெண் இன்று வீடு தேடி வந்தால்…?

“வா…வனிதா…என்ன இது…திடீர் விஸிட்…”

ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தவளிடம் புன்முறுவலுடன் கேட்டாள்.

“…என்ன சாப்பிடறே…?”

வனிதா பேசவில்லை. சங்கடத்துடன் சிரித்தாள்.

“முதமுதல்வே நம்ம வீட்டுக்கு வந்திருக்கே. ஏதாவது சாப்பிட்டே தீரணும். உன்னை நான் சும்மா விடமாட்டேன்” வனிதா ஏதோ சொல்ல முயன்றதைக் கவனிக்காமல் வேகமாக உள்ளே போனாள். மாலை டிபனுக்காகச் செய்திருந்த பஜ்ஜியை ஒரு தட்டிலும் ஒரு டம்ளரில் தண்ணீரும் கொண்டு வந்து எதிர் டீபாய் மேல் வைத்தாள்.

தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“சாப்பிடும்மா…”

புவனேஸ்வரியை நிமிர்ந்து பார்த்தாள்.

“வந்து… உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு…”

“எதைப் பத்தி?”

“எப்படி சொல்றதுன்னு புரியலே…” என்று இழுத்தவள், மெல்ல தன் கைப் பையைத் திறந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாள்.

“நேத்து தபால்ல இந்தக் கவர் எனக்கு வந்தது… பிரிச்சுப் பாருங்க உங்களுக்கே புரியும்…”

புவனேஸ்வரி பதற்றத்துடன் வாங்கிப் பிரித்தாள். உள்ளே ஒரு போட்டோ. அதன் பின்புறம் சிவப்பு மையில்… ‘இதற்கு மேலும் அத்தாட்சி வேண்டுமா? புத்திசாலித்தனமாக முடிவெடு..உன் நலம் விரும்பி…” என்று எழுதியிருந்தது.

புகைப்படத்தினைத் திருப்பியதும் பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் மகன் சதீஷும் வேறொரு பெண்ணும்… மிக நெருக்கமாக….

வனிதா மௌனமாய் புவனேஸ்வரியைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

புவனேஸ்வரியின் முகம் மெல்ல இயல்பானது.

“…இந்த ஃபோட்டோ நேற்று தபால்ல வந்ததா…”

“ஆமா…ஆனா…அதை யார் அனுப்பினாங்கன்னு எனக்குத் தெரியலே…”

“உங்க வீட்டுல காண்பிச்சுட்டியா…?”

“இல்லே…”

“…ஏன்…?” ஆராய்கிற பார்வையுடன் கேட்டாள் புவனேஸ்வரி.

“எனக்கு முதல்லே என்ன செய்யிறதுன்னே புரியலே…நீங்க என்னைப் பெண் பார்த்து…உடனேயே சம்மதம்னு சொன்னதும்…எங்க வீட்டுல எல்லோருக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சுப் போச்சு…கணவரை இழந்த நீங்க…கைக்குழந்தையோட வாழ்க்கையில் ரொம்ப போராடி…உங்க மகனைப் பெரியவனாக்கி படிக்க வச்சு… நல்ல வேலையிலும் வச்சுருக்கீங்க… அதுவுமில்லாம… ‘போய் பதில் போடறோம்’னு சொல்லிட்டு எதுவும் சொல்லாம விட்டுடற மனுஷங்களுக்கு மத்தியில… ரொம்ப வித்தியாசமான பெண்மணியா தெரிஞ்சீங்க… இந்த நிலைமையிலதான் இப்படி புதுசா ஒரு குழப்பம். உங்களிடமே சொல்லி தீர்வு காணணும்னு வந்திருக்கேன்…”

“இப்ப நான் என்ன செய்யணும்…”

வனிதா தீர்க்கமாய் அவளைப் பார்த்தாள்.

“…உங்க மகனோட இன்னொரு முகம்… இப்ப இந்த போட்டோவில் தெரிஞ்சுபோச்சு. அடுத்த வாரம் நடக்கிறதா இருக்கிற நிச்சயதார்த்தம்… நின்னு போச்சுன்னா… ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்விகள் வரும். பழியை இப்ப யார் மேலப் போடறது…? நீங்களா…வரதட்சணை…அது…இதுன்னு புதுசா பிரச்சனை பண்ணி நிறுத்திட்டிங்கன்னா… நல்லதாப் போயிரும்…”

புவனேஸ்வரியின் முகம் இறுக்கமாகியது.

“…அது மட்டும் முடியாது…..வனிதா…”

“…என்ன…ஏன்…?”

“…தப்பு என் மகன் மேல..அதை ஏன் மறைக்கணும்…? நானே நேரா உங்க வீட்டுக்கு வரேன். இந்த போட்டோவைக் காட்டி… வேற நல்ல எடத்துல… உனக்குக் கல்யாணம் பண்ணச் சொல்றேன்…வரதட்சணை கேட்கக் கூடாதுங்கிறது என்னோட கொள்கை… அதை ஏன்… பொய்யா… உங்க வீட்டு மேல திணிக்கணும்…” என்றாள் உறுதி பூர்வமாய்.

“ஆம்பளைன்னா கல்யாணத்துக்கு முன்னால கொஞ்சம் அப்படி… இப்படித்தான் இருப்பான்… நீதான் அனுசரிச்சுப் போய் அவனைத் திருத்தணும்னு… என்னை வற்புறுத்திக் கல்யாணம் செஞ்சுவச்சா…?” என்றாள் வனிதா.

“…நான் விடமாட்டேன்…! அதற்கு சம்மதிக்கவும் மாட்டேன்… நீயும் ஒரு பெண்… என்னைப் போல சக மனுஷிக்கு ஓர் அநீதி நிகழ சம்மதிக்க மாட்டேன்… முதல்லே நான் ஒரு மனுஷி… பிறகுதான் தாய்…” என்றாள் புவனேஸ்வரி.

“…நான் தோத்துட்டேன்…” என்றாள் வனிதா.. சிரிப்பும் கண்ணில் நீருமாக.

“…நீ…என்ன சொல்றே?..”

“…இந்த போட்டோ… பொய் அம்மா… எல்லா மாமியார்களும் மருமகளை அடிமைப்படுத்துகிற ரகம்தான்னு… என்னோட நினைப்பு… சதீஷைத் தற்செயலா சந்திச்சபோது என்னோட கருத்தைச் சொன்னேன். எங்கம்மா நீ நினைக்கிற மாதிரி இல்லேன்னு…சிரிச்சாரு… ரெண்டு பேருமா… ஆடின நாடகம் தான் இது… மன்னிச்சிருங்க.. நிச்சயமா… உங்களைப் போலவே… ஒரு பெருமை வாய்ந்த பெண்ணா… நானும் இருப்பேன்…”

“….முதல்லே இந்த போட்டோவை கிழிச்சுப்போடு…” என்றாள் புவனேஸ்வரி சிரிப்புடன்.

(இதுவும் எப்பவோ எழுதினது)

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *