கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 8,864 
 

இப்போது பெய்கிற மழையை எதிர்பார்க்கவில்லை. வெயில் உச்சத்தைத் தொட்டுச் சரிந்த வேளையில் திறந்த வானின் மதகுகள் இன்னும் மூடாமல் பெய்கின்றன. ஊழிக்காலத்து உக்கிரம் இல்லை என்றாலும், நகரங்களில் பெய்கிற எந்தப் பெருமழையும் ஊழியை ஞாபகப்படுத்திவிடும். நகரத்தில் மழையை எதிர்பார்த்திருப்பவர் யார்? இருந்தாலும் பெய்து தொலைக்கிறது. உடை போட்டுக்கொண்டு தெருவில் நடமாட வாய்த்த ஜீவன்கள் அனைத்தும் நனைந்து, மழையின் துளிகளைச் சிறிதளவாவது உடையில் சேமித்துச் சென்றன. நனைந்ததால் கேசம் கற்றையாய் ஆகின. நாய்கள் கிடைத்த இடங்களில் ஒதுங்கின. உடலை உதறியதால் நீர் தெறித்து, அருவருப்புற்ற பக்கத்து மனிதனால் உதைபட்ட கறு நிற நாய் மீண்டும் மழையில் நனைந்தது. திரிந்துகொண்டு இருந்த இளைஞன் மீது காக்கையன்று பழைய பழியைத் தீர்த்துக்கொள்வது போல், உச்சந்தலையில் எச்சமிட்டுச் சென்றது. எச்சம் மழையில் கரைந்து கழுத்தில் வழிய, சுற்றுமுற்றும் பார்த்தபடி அருவருப்போடு அதைத் துடைத்துக்கொண்டான் அந்த இளைஞன்.

மழை அதன் சங்கீதத்தை நிறுத்துகிற அறிகுறிகள் ஏதுமில்லை.

பாய்லரின் மீதிருந்து எழும் வெண் புகையை வேடிக்கை பார்த்தபடி, எதிரில் மருந்துக் கடை வாசலில் நின்றுகொண்டு இருந்தான் அசோக். டீ குடிக்க குளுமையும் பசியும் உந்திய போதும், ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஐந்து நாட்களாக அல்சரால் அவதிப் படுவதால் அவ்வாசையை ஒழித்துப் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். எதிர்சாரிக் கடைகளில் தொங்கிக்கொண்டு இருந்த பலூனி லிருந்து வழியும் நீரை அம்மாவுக்குத் தெரியாமல் குடித்துக்கொண்டு இருந்தது, சீருடை அணிந்த பெண் குழந்தை ஒன்று.

அசோக்குக்கு ஆர்த்தி ஞாபகம் வந்தது. இந்நேரம் பள்ளி முடித்து வந்தி ருப்பாள். அவள் நனையாமல் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

அக்கா ஒரு மணிக்கு போன் செய்து, “அசோ, வேலை விஷயமா ஒருத்தரைப் பார்க்கப் போகணும்னு மாமா வரச் சொன்னார். நீ வந்து மூணு மணிக்குக் குழந்தையைப் பார்த்துக்கோ” என்றாள்.

தர்மசங்கடமாக இருந்தது அவ னுக்கு. இன்று அவனுடைய மேலாளர் சாய்ராமுடன் வேலை. மதியம் நெஞ்சக நோய் நிபுணர் ஒருவருடன் அப்பாயின்ட்மென்ட். முக்கியமான விஷயத்தை முடிக்கத்தான் சாய்ராம் வந்திருந்தார். எப்போது வந்தாலும் லேசில் விடமாட்டார் மனுஷன். காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால், மதிய ஓய்வு நேரத்திலும் அவரோடு இருந்து, இரவு அவரும் இவனும் குடித்து, அவருக்குப் போதை ஏறித் தூக்கம் வரும் வரை நாளைக் கழிக்க வேண்டும்.

இன்று காலை வந்ததுமே கேட்டார்… “டாக்டர் நவீன்குமாரை ஃபிக்ஸ் பண்றதுதான் முக்கியமான டார் கெட்! அப்பாயின்ட்மென்ட் வாங்கியாச்சா?”

“வாங்கிட்டேன் சார்! மத்தியானம் ரெண்டு மணிக்கு. அதுக்கு முன்னாடி மத்த கால்ஸ் முடிச்சிரலாம்.’’

அவனுடைய நிறுவனம் நவீன் குமாரை அவர் மனைவியோடு பட் டாயா மற்றும் பாங்காக் அனுப்பும். அதற்கு ஈடாக மாதம் தவறாமல் 30,000 ரூபாய்க்கு அவர்களுடைய நிறுவன மருந்துகளை இரண்டு வருடங்களுக்கு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும். இதே போல் மூன்று நிபுணர்களை அவனு டைய நகரத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். மற்ற இருவரை ஏற் கெனவே வேறு ஒரு போட்டி நிறுவனம் வளைத்துப் போட்டிருந்தது. அவர்கள் நாள் இல்லை எனச்சொல்லி விட்டார்கள்.

மீதமிருக்கும் நவீன்குமாரையும் நழுவவிடாமல் ஃபிக்ஸ் செய்யவேண் டிய கட்டாயத்தையும், அப்படி முடித்தால் விற்பனை எவ்வளவு உயரும் என சாய் சொல்லிக்கொண்டு இருந்தபோதுதான் அக்கா அழைத் திருந்தாள்.

“அக்கா! எனக்கு ரெண்டு மணிக்கு முக்கியமான வேலை இருக்கு. அது எப்ப முடியும்னு தெரியாது. வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கோ” என்றான்.

“இல்லடா, எனக்கு வேற யாரையும் தெரியாது. பக்கத்து வீட்லகூட யாரும் இன்னும் பழக்கமாகலை. இந்த ஒரு வாட்டி ஹெல்ப் பண்ணுடா… ப்ளீஸ்!”

யோசித்து, “கொஞ்சம் லேட்டா னாலும் பரவாயில்லைதானே?” என்றான்.

“மூணரைக்கு வந்துடுவா. வெளியே உக்காந்திருப்பா. நாலு மணிக்குள்ள போயிடுறா!”

“சரி” என்றுவிட்டு, தொடர்பைத் துண்டித்தான்.

நீரில் கவிழ்ந்து மிதந்து செல்கிறது ஒரு காகிதக் கப்பல். அதில் தாரணி என எழுதியிருந்தது. ஒரு குழந்தை மழை நீரில் விளையாடிய தைச் சொல்லிச் சென் றது அது. குறுமலை யின் சிகரச் சாயலில் இருந்த கல்லொன்றால் நிறுத்தப்பட்ட கப்பலிலிருந்த எழுத்துகள் மெள்ள அழிந்து, உருவமற்றுப் போகத் துவங்கின. ஆர்த்தியை மீண்டும் நினைத்துக் கொண்டான் அசோகன். இங்கிருந்து 3 கி.மீ. சென்றால்தான் வீட்டை அடைய முடி யும். கடிகாரத்தைப் பார்த்தான். புகை மூட்டம் மறைத்ததில், மணி தெரியவில்லை. திரும்பி மருந்துக்கடை சுவரில் கடிகாரம் தேடி மணி பார்க்க, அது மூணரை எனக் காட்டியது. இனியும் காத்திருப்பது சரியில்லை என நினைத்து, அங்கிருந்து கிளம்பினான். நீரோடிச் செல்லும் சாலையில் தயங்கித் தயங்கித்தான் பைக்கை ஓட்டினான். பசியின் வெம்மையில் தகிக்கத் துவங்கியது வயிறு. ஆடை நனைந்த குளிரையும் மீறி மகிழ்ச்சியுறும்போதும் துக்கமடையும்போதும் பசி கூடுகிறது. தான் இப்போது இருப்பது மகிழ்ச்சியிலா அல்லது துக்கத்திலா என யோசித்தான். காத்திருப்பில் மழையைக் கவனித்த பின்னான மூளை மந்த புத்தியில் தடுமாறியது. அனிச்சையாய் ஓடிக்கொண்டு இருந்தது வண்டி.

இரண்டு மணிக்குச் சற்று முன்பாகவே நவீன் குமாரின் கிளினிக்குக்கு அசோக்கும் சாய்ராமும் போய்ச் சேர்ந்தனர். மூன்று நோயாளிகள் காத்திருந்தனர். ஒருவருக்கு 20 நிமிடம் என மூவருக்கு ஒரு மணி நேரம் ஓடிவிடும். மூன்று மணிக்கு அவருடன் பேசத் துவங்கினால், எப்போது முடியும் எனத் தெரியாது.

அதன் பிறகு சாயியை விடுதி அறையில் இறக்கி விட்டுவிட்டு, ஏதாவது காரணம் சொல்லி உடனே கிளம்பினாலும், வீடு போய்ச் சேர ஐந் தாகிவிடும். பயந்தான். ஆர்த்தி சொந்த அக்காள் மகள். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அக்கா உதவி கேட்கும்போது மறுக்கவும் முடிய வில்லை; எரிச்சல் அடைவதைத் தவிர்க் கவும் முடியவில்லை. அவளும்தான் பாவம், என்ன செய்வாள்? நகருக்கு அவர்கள் வந்து இரண்டு மாதங்கள்தான் ஓடியிருந்தன. வேலை விஷய மாக அலையத் துவங்கி விட்டாள். மாமா… அவர் அப்பா, அம்மா, தங்கை, அக்கா, ஆர்த்தி அனைவருக் கும் சேர்த்துச் சம்பா திக்கும் இயந்திரம். அக்காவும் வேலைக்கு போனால்தான் இவர் களுக்கென்று ஏதாவது சேர்த்துக்கொள்ள முடியும். யாவரும் வாழ்வது வாடகை வீடுகளில். அசோக் மாத வாடகை விடுதியில்.

“உள்ளே கூப்பிடறாங்க” என்ற குரல், அசோக்கின் பிரக்ஞையை உசுப்பியது. அனிச்சையாய் நேரம் பார்க்க, மணி இரண்டே கால். நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் அழைத்ததற்கு மகிழ்ந்து, நவீனின் அறைக்குள் சென்றனர் இருவரும்.

“உக்காருங்க! அதிக நேரம் இல்லை. சீக்கிரம் முடிச்சுக்கலாம். ஏற்கெனவே அசோக் எல்லா விவரங்களையும் சொல்லிட்டார்” என்றார் நவீன் சாயியைப் பார்த்து.

“அசோக் சொன்னார் டாக்டர், நீங்க இந்த டிரிப்ல கலந்துக்க விருப்பம் தெரிவிச்சதா…”

“பெரிய விருப்பமெல் லாம் கிடையாது. பாங் காக் ஏற்கெனவே போய் வந்த இடம்தான். ஒரு மூணு நாள் ஓய்வு கிடைக்குமேன்னுதான் ஒப்புக்கிட்டேன்.”

“எனக்கு உங்க பாஸ் போர்ட் எண், உங்க மனைவி யோடது… ரெண்டு பேரோட வண்ணப் புகைப்படம் தேவையா இருக்கு டாக்டர், விசா வாங்க!”

மேஜையின் முதல் அறையைத் திறந்து அவருடைய பாஸ் போர்ட்டையும் புகைப் படத்தையும் எடுத்துப் போட்டார்.

“உங்க மனைவி சார்…”

“மனைவி எதுக்குங்க?” என்று கண்ணடித்தவாறு, “இந்த முறை அவங்க வரலை. சரி, உடனே உங்க புராடக்ட் லிஸ்ட்டைக் கொடுங்க. பிரிஸ்கிருப்ஷனைத் தொடங்கிடலாம்” என்றார்.

விஷயம் சுலபமாக முடிந்த மகிழ்ச்சியில், வெளியே வந்ததும் அசோக் கேட்டான்… “ஏன் சார் மனைவி வேணாம்னுட்டாரு?”

“தாய்லாந்து எதுக்கு பிரசித்தி பெற்றதுன்னு தெரியுமில்ல… அதான், வேணாம்னுட்டாரு. நமக்கென்ன, விடு. லாபம்தான்! சரி, என்னைக் கொண்டுபோய் ரூம்ல விடு. நான் கொஞ்சம் தூங்கணும். நீ சாயங்காலம் கால்ஸை ப்ளான் செய்துட்டு வா!” என்றார்.

பொய்யோ உண்மையோ சொல்ல அவசியம் இல்லாமல் போயிற்று. அவரை ரூமில் இறக்கிவிட்டு நகரத் துவங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் மழை துவங்கிவிட்டது. வேகமாக வீட்டை அடைய விரும்பி, நனைந்தா லும் பரவாயில்லையென நிறுத்தாமல் ஓட்டினான். துளிகள் கனக்கத் துவங் கின. ஹெல்மெட்டின் கண்ணாடியில் நீர்த்தாரை வழிய… துடைத்தபடி ஓட்டினான். ஒரு கட்டத்தில் தொடர்ந்து வண்டி ஓட்டுவதன் அசட்டுத்தனம் உணர்ந்து, ஒரு மருந்துக் கடை வாசலில் ஓரங்கட்டி நிறுத்தினான். சரி, எவ்வளவு நேரம்தான் ஒதுங்கி நிற்பது? கிளம்பிவிட்டான்.

வீடு இருக்கும் வீதியில் நுழைந்த துமே, ஆர்த்தி கேட்டில் ஏறித் தொங்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது. அசோக்கைக் கண்டதுமே அவள் கேட்டை விட்டிறங்கி ஓடி வந்து காலைக் கட்டிக்கொண்டாள்.

“போப்பா, நனை யாதே!”

“நீயும் வா” என்றாள் காலோடு ஒட்டிக் கொண்டு. அவள் நனைந்திருக்கவில்லை.

அவனிடமும் இந்த வீட்டுக்குச் சாவியுண்டு. திறந்த கதவை இடித் துக்கொண்டு ஆர்த்தி உள்ளே ஓடினாள். புத்தகப் பையைத் தூக்கிப் போட்டு விட்டுக் கேட்டாள்… “மாமா, விளையாட லாமா?”

“ஆனா, அதுக்கு முன்னாடி சாப்பிடணுமே..!”

“நான் மத்தியானமே சாப்பிட் டாச்சு!”

“சரி, நானும் முடிச்சுட்டு வந்தப் புறம் விளையாடலாம்.”

சுத்தமான சமையலறை. மார்பிள் பலகையின் மீது ஒன்றுமே இல்லை, எரிவாயு அடுப்பைத் தவிர. அதுவும் சுத்தமாக இருந்தது. அக்கா அவனுக் குச் சமைத்திருக்கவில்லை. மேல டுக்கில் மூடியிருந்த பாத்திரத்தைத் திறந்தான். ஒட்டிக்கொண்டு இருந்த எறும்பொன்றைத் தவிர, வேறொன்று மில்லை. பசி இன்னும் கூடியது. உடன் கோபமும்! அவ்வெறும்பு உயி ரோடு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அக்கறை ஏதுமில்லாமல், பாத்தி ரத்தை இருந்த இடத்தில் வைக்கப் போக… பிளாஸ்டிக் உறை சுற்றி யிருந்த ஆப்பிள் ஒன்று தெரிந்தது.

“மாமா, என்ன பண்றே?”

சமையலறை வாசலில் நின்றுகொண்டு ஆர்த்தி கேட் டாள். அவசரமாக ஆப் பிளை மறைத்தான். ஒரே ஆப்பிள்தான் இருக்கிறது. அவள் முன் எடுத்தால், முழுவதையும் அவளே கேட்பாள். அவளுக்குத் தெரியாமல் சாப்பிட் டால்தான், கொஞ்ச மாவது பசியாற முடியும்.

“ஆர்த்தி! உனக்கு கலர் பென்சில் தரேன். நீ வரைஞ்சுட்டு இரு” என்றான்.

“எனக்கு அஞ்சு கலர் வேணும்’’ என்றாள்.

இருக்கிற அத்தனை வண்ணங்களை யும் எடுத்துக் கொடுத்துவிட்டுச் சத்தமில்லாமல் கவரைப் பிரித்தான். அமெரிக்கன் ஆப்பிள். அளவில் பெரிது. கடிக்க முனைந்தான்.

“மாமா, எனக்குத் தெரியாம ஆப்பிள் திங்கிறியா?” என்றாள் ஆர்த்தி, இடது கையைப் பின்னால் கட்டிக்கொண்டு, வலது கையின் சுட்டு விரலையும் தலையையும் ஆட்டிக்கொண்டு.

சட்டென இச்சையின் கீழ்த்தளத்துக் குச் சென்றது போல் உணர்ந்தான். கருமையடைந்த முகத்தோடு ஆப்பிளை ஆர்த்தியிடம் நீட்டினான். அவள் வாங்கி முகர்ந்து பார்த்தாள். ஓரத்தில் கடித்த பின் வாயைக் கோணிக் கொண்டு சொன்னாள்… “இந்த ஆப்பிள் எனக்குப் புடிக்கவேயில்லை.” கடித்த துண்டைத் தரையில் துப்பினாள். “நீயே சாப்பிட்டுக்கோ” என்றுவிட்டு, அவனிடமே திருப்பித் தந்தாள்.

அசோக் அதை வாங்கி, கடித்த பகுதியில் முகர்ந்து பார்த்தான். சிறுமையின் நெடியேறிய ஆப்பிள்.

“எனக்கும் வேண்டாம்’’ எனச் சொல்லிவிட்டு, மேலடுக்கில் வைத்தான். நீரை முழுச் சொம்பளவு குடித்துவிட்டுக் கட்டிலில் படுத்தான். சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வந்த எறும்புகள், ஆப்பிளின் கடிபட்ட பாகத்தில் மொய்க்கத் துவங்கின.

– 07th பெப்ரவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *