கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 13,556 
 

“எடுத்த எடுப்பிலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? மொதல்ல கிழக்கப் பாத்து கும்புடு. போன வருசமே ஆன மயமாரி இல்லெ. கொல்ல நல்லாவும் வௌயல. இந்த வருசமாச்சும் நல்ல மய பேஞ்சி நல்லா வௌயனுமின்னு கீய வியிந்து கும்புட்டுட்டு மம்பட்டிய எடு” என்று மாரியம்மா சொன்னதும், ஒரு இலந்தை முள் செடியை வெட்டப்போன துரைசாமி மண்வெட்டியை கீழே வைத்துவிட்டு கிழக்கு முகமாக விழுந்து கும்பிட்டான். அவன் தரையில் விழுந்து கும்பிட்டதைப் பார்த்ததும், சங்கரும் ராணியும் யாரும் சொல்லாமலேயே விழுந்து கும்பிட்டனர். அவர்கள் கும்பிட்டதைப் பார்த்ததும் மாரியம்மாவுக்குச் சிரிப்பு வந்தது. “கிராக்குக்குப் பொறந்த அசல் கிராக்குவோதான்” என்று சொன்னாள்.

“கத வசனம் பேசாம வேலய பாரு. இந்த வருசம் என்னா கதயா ஆவப்போவுதோ? நாம்ப ஒண்ணு நெனச்சா காடு ஒன்னு நெனக்குது. மானம் பேஞ்சி கெடுக்கப் போவுதா காஞ்சி கெடுக்கப்போவுதா, யாரு கண்டா?” என்று சொல்லிவிட்டு மண்வெட்டியை எடுத்து இலந்தை முள் செடியை வெட்டினான் துரைசாமி. அதை அடுத்து கண்ணில் பட்ட புல், பூண்டு, நுனா செடிகள் என்று வெட்டிப்போட ஆரம்பித்தான். காவாளச் செடிதான் ஒரு அடி உயரத்திற்கு அதிகமாக வளர்ந்திருந்தது. அவன் வெட்டிப்போடுகிற செடிகளை எடுத்து ஒரே முட்டாகப் போடுவதற்கு சங்கரும் ராணியும் போட்டி போட்டனர். அதோடு “இந்த செடிய வெட்டுப்பா”, என்றும் “இந்த முள்ள வெட்டுப்பா” என்றும் சங்கரும் ராணியும் ஒவ்வொரு செடியின் முன் ஓடி சென்று காட்டினர். சங்கரும் ராணியும் ஓடுவதையும், துரைசாமியின் மண்வெட்டியின் முன் நிற்பதையும் பார்த்துவிட்டு “ஒரு நேரம் மாரி இருக்காது, கிட்டப்போவாதீங்க. மம்பட்டி ரத்தக் காவு வாங்கிப்புடும். எட்ட தள்ளியே நில்லுங்க” என்று சொல்லி மாரியம்மா கத்தினாள். அவள் சொல்வதை கேட்காமல் சங்கரும், ராணியும் முள் செடிகளைத் தேடி போட்டியிட்டு ஓடிக்கொண்டிருந்தனர்.

மாரியம்மா புல், பூண்டு, காவாளச்செடி, ஊனான் கொடிகளையும், இன்னும் கையால் பிடுங்க முடிகிற செடி, கொடிகளையும் பிடுங்கிப்போட்டுக்கொண்டிருந்தாள். தரை ஈரமாக இருந்ததால் செடி, கொடிகளைப் பிடுங்குவது எளிதாக இருந்தது. எந்த வருசமும் இல்லாமல் இந்த வருசம் அடை மழைக்காலம்மாதிரி கோடை காலத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை பெய்தது. ஆறு, ஓடைகளில்கூட வெள்ளம் புரண்டுவந்துவிட்டது. மழைவிட்டு இரண்டு நாளாகியும் நிலத்தில் நல்ல ஈரம் இருந்தது. ஈரமாக இருந்ததால் செடி கொடிகளை பிடுங்குவது எளிதாக இருந்தது.

“கிட்ட கிட்ட வராத. ஒரு நேரம்மாரி இருக்காது. மம்பட்டியோட எல கழட்டிக்கிட்டு வந்து மேல பட்டாலும் பட்டுடும். வெட்டுன பிறவு எடுங்க. வெட்டுறதுக்கு மின்னாடியே கிட்ட வராதீங்க” என்று துரைசாமி சத்தம் போட்டான். அவன் சொல்வதை காதில் வாங்காமல் முன்புபோலவே ஓடிஓடி செடி, கொடிகளை காட்டவும், வெட்டுவதற்குள்ளாகவே செடி, கொடிகளை எடுக்கவும் சங்கரும் ராணியும் போட்டியிட்டபடியே இருந்தனர்.

வரகு விதைத்து அறுத்திருந்த நிலம் என்பதால் வெறும் பூண்டு செடிகள்தான் அதிகமாக முளைத்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நுனா செடிகள், இலந்தை முள் செடிகள், ஓணான் கொடிகள் என்று முளைத்திருந்தது. எரு கொட்டி வைத்திருந்த பத்து இருபது இடங்களில் மட்டும் கோரை, அம்மக்காய் செடி என்று நாத்து நட்டு வளர்த்திருந்ததுமாதிரி குத்துகுத்தாக முளைத்திருந்தது. “ஒரு வருசமுமில்லாமல் நாத்து வுட்டமாரி அம்மக்காயும் கோரயும் முளச்சி வயசிக்கு வந்த பொண்ணாட்டம் தளதளன்னு வளந்துபோயி நிக்குதே. வுட்டா கொல்லப்பூராவும் பாய விரிச்சிப் போட்டாப்ல வளந்துடுமே” என்று சொல்லி புலம்பிக்கொண்டே கோரைப்புல்லையும் அம்மக்காயையும் வேரோடு பிடுங்கிப்போட ஆரம்பித்தாள் மாரியம்மா.

“நீங்க ஒண்ணும் செடிய காட்ட வாணாம். நானே பாத்து வெட்டிக்கிறன். நீங்க அம்மாகிட்டப் போங்க” என்று சொல்லி துரைசாமி விரட்டியதும் சங்கரும் ராணியும் ஓடிவந்து கோரைப் புல்லையும் அம்மக்காயையும் பிடுங்க ஆரம்பித்தனர். இருவரும் அவசர அவசரமாக பிடுங்கியதால் கோரையையும், அம்மக்காயையும் பாதி பாதியாகத்தான் பிடுங்கினார்கள். அதைப் பார்த்த மாரியம்மா “பாதி பாதியா புடுங்குனா திலுப்பியும் மொளச்சிக்கும். வேரோட புடுங்கனும். ரவ ஈக்கு இருந்தாகூட போதும் உசுரு பொழச்சிக்கும். அடிவேரோட புடுங்கனும். செடியோட தலயில புடிச்சிப் புடுங்கக்கூடாது. செடியோட சூத்துல புடிச்சிப் புடுங்கனும்” என்று சொன்னதோடு ஒரு சில செடிகளை பிடுங்கியும் காட்டினாள். அவள் பிடுங்கியது மாதிரியே சங்கரும் ராணியும் பிடுங்க ஆரம்பித்தனர்.

மூன்று தக்காளி செடியும், ஏழு எட்டு மிளகாய்ச் செடிகளும் நின்று கொண்டிருந்தன. அவற்றை ராணியும் சங்கரும் போட்டியிட்டு பிடுங்கினர். மிளகாய், தக்காளி செடிகளை மாரியம்மாவிடம் காட்டி “இதெ நான் எடுத்துக்கிட்டுப்போய் ஊட்டுக்குப் பின்னால நட்டு வைக்கப்போறன்” என்று ராணி சொன்னாள். சங்கர் “நானும்தான்” என்று சொன்னான் “ஊட்டுக்குப் போறதுக்குள்ளார வாடி வதங்கிப்போயிடும். நட்டு வச்சாலும் பொழைக்காது. தூக்கிப்போட்டுட்டு வேலயப் பாருங்க” என்று மாரியம்மா சொன்னதும் ராணிக்கும் சங்கருக்கும் முகம் வாடிப்போயிற்று. மிளகாய், தக்காளி செடிகளை இடது கையில் வைத்துக்கொண்டே குனிந்து கோரை, அம்மக்காய் செடிகளைப் பிடுங்கிப்போட ஆரம்பித்தனர். மாரியம்மா எரு கொட்டி வைத்திருந்த அடுத்த இடத்திற்குப் போனாள். போகும்போதே கண்ணில்ப்பட்ட பூண்டு செடிகளையும், சீலைப் புல்லையும் பிடுங்கிப்போட்டுக்கொண்டே போனாள். அவளோடு சேர்ந்துகொண்டு செடிகளை சங்கரும் ராணியும் பிடுங்க ஆரம்பித்தனர். “நீங்க எதுக்குப் புடுங்குறீங்க. இப்ப வரைக்கும் புடுங்கிப்போட்டத போயி அள்ளி ஒரே குமுக்காப் போடுங்க” என்று சொல்லி மாரியம்மா சங்கரையும், ராணியையும் பிடுங்கிப்போட்ட, வெட்டிப்போட்ட செடிகொடிகளை குவியலாக ஒரே இடத்தில் அள்ளிப் போட அனுப்பினாள்.

துரைசாமி கண்ணில்பட்ட முள்செடிகளையும், பிற செடி, கொடிகளையும் வெட்டிப்போட்டுக்கொண்டே போனான். நிலத்தின் சனி மூலையில் ஒரு தோட்டப்பாய் அளவுக்கு அருகு முளைத்திருந்தது. அருகு வெட்ட ஆரம்பித்தான். அருகுவின் வேர் படர்ந்திருந்த இடமெல்லாம் ஒரு அடி ஆழத்திற்கு வெட்டினான். ஒரு கணு அருகு இருந்தால்கூட போதும். முளைத்துவிடும். முளைப்பதோடு கொடிமாதிரி படர்ந்துவிடும். அதனால் சிறு துண்டு அருகுகூட இல்லாமல், வேர்கூட இல்லாமல் வெட்டி எடுத்தான். அப்போது “இங்க ஒரு எடத்தில் அருவம் புல்லு இருக்கு. வந்து வெட்டு” என்று மாரியம்மா கூப்பிட்டாள். “வட்டம் போட்டு அடயாளம் பண்ணி வை. வந்து வெட்டுறன்” என்று துரைசாமி சொன்னான். அருகு படர்ந்திருந்த இடம்வரை வட்டமாக காலால் வட்டமிட்டாள் மாரியம்மா. அவள் வட்டமாகப் போட்ட இடத்திலேயே சங்கரும் ராணியும் காலால் வட்டம்போட ஆரம்பித்தனர்.

ஒரு இடத்தில் வரகு பயிரும், அம்மக்காயும் கொசகொசவென்று தண்ணீர் உற்றி வளர்த்ததுமாதிரி வளர்ந்திருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மாரியம்மா “ஒரம் போட்டு வளத்தமாதிரி வளந்து நிக்குது பாரன்” என்று சொல்லிவிட்டு வரகு செடிகளை விட்டுவிட்டு அம்மக்காயை மட்டும் பிடுங்க ஆரம்பித்தாள். சங்கரும், ராணியும் வரகு செடியைப் பிடுங்கிப்போடுவதைப் பார்த்த மாரியம்மா “அதெ புடுங்க வாணாம். ஏர் ஓட்டும்போது தானாவே செத்துப்போவும்” என்று சொன்னாள். அப்போது பக்கத்து நிலத்துக்காரி கருப்பாயி வந்தாள். “என்னா மாரியம்மா விடிய விடிய வந்திட்டியா? கொல்ல வேல பாதி முடிஞ்சிப்போச்சே” என்று சொன்னாள். சங்கரும் ராணியும் புல், பூண்டு செடியைப் பிடுங்குவதைப் பார்த்துவிட்டு “பள்ளிக்கூடத்துப் புள்ளிவுள ஏண்டி கொண்டாந்து காட்டுலுப் போட்டு அடிக்கிற?” என்று கேட்டாள்.

“இப்பியே காடு எது, ஊடு எதுன்னு தெரிஞ்சிக்கிட்டா நல்லதுதான. பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டாப்ல சட்டியில சோறு வந்துடுமா. நம்ப காட்டுலதான செய்யுதுவோ” என்று மாரியம்மாள் சொன்னாள்.

“அதுவும் சரிதான். இப்பத்தான் பத்தாவது படிச்சவனே பெரிய படுப்புப் படிச்சாப்ல குனிஞ்சி நிமிந்து வேல செய்யமாட்டங்கிறான். காட்டுக்கு எதுக்கு என்னெ கூப்புடுறன்னு கேக்குறான்.”

“நீ என்னா வந்த? வேல முடிஞ்சிப் போச்சா?”

“அட நீ ஒண்ணு. நான் ஒருத்தியா எம்மாம் வேல செய்ய முடியும்? தண்ணீ கொண்டாந்தன். கால் தடுக்கி ஊத்திப்புட்டன். குடமும் ஒடுக்கு வியிந்துப்போச்சி. அதுக்காக சாயங்காலம் ஊட்டுல என்னா சண்ட நடக்கப்போவுதின்னு தெரியல.”

“வேணுமின்னா போட்ட? காலு தடுக்கிறதுக்கு யாரு என்னா பண்ண முடியும்? ஆனாலும் ஒம்மாமியாக்காரி இருக்காளே. யே அப்பா.”

“அந்தப் பாவியப் பத்தி பேசி எதுக்கு இந்த நேரத்தில வவுத்து எரிச்சல கிளப்புற? குதிரன்னு சொன்னா கழுதன்னு அர்த்தம் பண்ணிக்கிறவகிட்ட வந்து மாட்டிக்கிட்டன். எந்த நேரத்திலெ என்னப் புடிச்சி அந்த குருடி மவன்கிட்ட கொடுத்தாங்களோ அன்னாமுன்னா நான் படுறது சொல்லி மாளாது. நாக்க வறட்டுது. ரவ தண்ணீ கொடு” என்று கருப்பாயி கேட்டதும், மாரியம்மா தண்ணீர் எடுத்துக்கொண்டு வா என்று சொல்வதற்குள்ளாகவே வன்னி மரத்தின்கீழ் வைத்திருந்த தண்ணிர் குடத்தை நோக்கி சங்கர் ஒட்டமாக ஓடினான்.

“ஒனக்கு தேவலாம். வரவு வெறச்ச கொல்ல. வேல சட்டுன்னு முடிஞ்சிடும். எனக்கு அப்பிடி முடியுமா? சோளம் வெறச்ச கொல்ல. ரெண்டு காணி பூராவும் தட்டய இயித்து ஆவுனுமே” என்ற சலிப்புடன் சொன்னாள் கருப்பாயி.

“இந்த வருசம் என்னா பயிரு வுடப் போற?”

“இனிமே இந்த சோளம், வரவு மொகத்திலியே முழிக்கக்கூடாது. கல்ல, எள்ளுன்னு பணப்பயிறா வுட வேண்டியதுதான்.”

“சோத்துக்கு என்னாப் பண்ணுவ?”

“இந்த கலிகாலத்தில இன்னம் எம்மாம் நாளக்கித்தான் சோள சோத்தயும், வரவு சோத்தயுமே தின்னுக்கிட்டு இருக்கிறது. இப்பத்தான் ஒரு ரூவாயிக்கு ஒரு கிலோ அரிசிப் போடுறான் ரேசன் கடயில. அப்பறம் என்னா இருக்கு?”

“அதுவும் சரிதான்.”

தண்ணீரை குடித்து முடித்த கருப்பாயி “வெயிலுல புள்ளிவுளப் போட்டு வாட்டாத. சீக்கிரத்தில ஊட்டப் பக்கம் போ. மணி பத்துதான் இருக்கும். வெயிலு எப்பிடி அடிக்குது பாத்தியா?” என்று கேட்டுவிட்டு கருப்பாயி தன்னுடைய நிலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் போன மறுநொடியே மாரியம்மா குனிந்து ஒரு பூண்டு செடியைப் பிடுங்கினாள்.

நான்கு இடங்களிலிருந்த அருகை வெட்டினான் துரைசாமி. அதோடு கண்ணில்பட்ட இலந்தை, நுனா செடிகளையும் வெட்டினான். ஒன்றிரண்டு இடங்களில் முளைத்திருந்த எருக்கஞ்செடிகளையும் வெட்டினான். ஒரே இடத்தில் ஏழு எட்டு பனங்கன்று முளைத்திருந்ததை கண்டு “நடு கொல்லயில எப்பிடி மொளச்சியிருக்கும்” என்று சொல்லிவிட்டு பணங்கன்றுகளை வெட்ட ஆரம்பித்தான். அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் ராணி.

ஒரு இடத்தில் பெரிதாக பீ கருவை இருந்தது. அதை வெட்டினான் துரைசாமி. வெட்டிப்போட்ட பீ கருவை முட்களை அள்ளிக்கொண்டுபோனாள் ராணி. ஒரு இடத்தில் ஒரு தோட்டப்பாய் அளவுக்கு சுக்கங்காய் படர்ந்திருந்தது. முதலில் செடியை வெட்டாமல் அதிலிருந்த காய்களைப் பறித்தான். ராணியிடம் இரண்டு மூன்று காய்களை தின்னச்சொல்லி கொடுத்தான். தன்னுடைய வாயிலும் ஒரு காயைப் போட்டு மென்று தின்றான். சங்கரை கூப்பிட்டு அவனிடம் மூன்று நான்கு காய்களை கொடுத்தான். எஞ்சிய பத்து இருபது காய்களை துண்டில் போட்டு சிறு மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு செடியை வெட்டினான். வெட்டிய செடியை சுருட்டி அவனே எடுத்துக்கொண்டுபோய் குவியலாகப் போட்டிருந்த இடத்தில் போட்டான். புல், பூண்டு, செடி, கொடி, முள்செடி என்று இருக்கிறதா என்று அங்குலம் அங்குலமாகப் பார்க்க ஆரம்பித்தான். அவன்கூடவே சங்கரும் ராணியும் போனார்கள். “நிழலுக்குப் போங்க. சுக்கங்காய எடுத்துக்கிட்டுப்போயி தின்னுங்க” என்று சொன்னான். துரைசாமியினுடைய பேச்சை கேட்காமல் சங்கரும் ராணியும் அவன் பின்னாலேயே அலைய ஆரம்பித்தனர்.

தண்ணீர் குடத்துடன் பழம்புளி வீட்டு கோசலை “என்னாடி மாரியம்மா. வேல முடிஞ்சிட்டாப்ல இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள். “இதென்ன ஐம்பது காணியா நூறு காணியா? கோமணத்துணியாட்டம் ரவ நெலம். வேல முடியாம என்னா செய்யும்” என்று அலுப்புடன் சொன்னாள் மாரியம்மா. சங்கரும் ராணியும் எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தாள். பிறகு “தல சொமயோட நிக்குற. போ போயி நேரத்தோட ஆளுவுளுக்கு தண்ணீய கொடு” என்று மாரியம்மா சொன்னாள்.

“என்னாத்த பாத்து என்னாத்துக்கு ஆவப்போவுது? நாம்ப ஒண்ணு நெனச்சா மானம் ஒண்ணு நெனக்குது. பூமி ஒண்ணு நெனக்குது. பயிறு மொளக்கிறப்ப மழ பெய்யாது. தப்பி தவிறி மொளச்சா பயிறு அழுவுறமாரி மயபேஞ்சி தொலைக்கும். சாவுற முட்டும் இந்த கல்லு கருமாந்தரம்தான். இந்த வருசம் மானம் என்னாத்த செய்யப்போவுதோ. மொக்கப்பண்ண போவுதோ. யாரு கண்டா? எம்மாம் பாடுபட்டு என்னாத்துக்கு ஆவப்போவுது? நாலு புதுத்துணிய எடுத்து கட்டிப் பாக்க போறமா, ஒரு நக நட்டத்தான் எடுத்துப் போட்டுப்பாக்கப் போறமா? நம்ப சுயிநாதம் மண்ணுல கெடந்து பெரள வேண்டியதுதான்” என்று சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள். பத்து தப்படி தூரம் போன கோசலை “யே தண்ணீ குடத்துல காக்கா ஒக்காருது பாரு” என்று சொன்னாள். உடனே மாரியம்மா “யே தம்பி காக்காவ ஓட்டுடா” என்றாள்.

“யே – யேய்” என்று கத்திக்கொண்டே காக்காவை நோக்கி ஓடினான் சங்கர்.

“யே – இந்தா. வெயிலு ஏறுறது தெரியல. போயி கருப்பாயி ஊட்டு காட்டுல சோளத்தட்டயும் சருவும் கொண்டா. நெருப்ப வச்சி கொளுத்தி வுட்டுட்டுப் போவலாம்” என்று துரைசாமி சொன்னான். சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த மாரியம்மா “செடி கொடி, முள்ளு மெளாறலாம் வதங்க வாணாமா? பச்சயா இருந்தா எப்பிடி எரியும்?” என்று பதிலுக்கு கத்தினாள். “வதங்குனது போதும். போயி சோளத்தட்டய கொண்டா”” என்று வேகமாகக் கத்தினான். “சொன்னா கேக்கனும். மூள இருந்தாத்தான கேக்குறதுக்கு?” என்று சொல்லி முனகிக்கொண்டே மாரியம்மா கருப்பாயி நிலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் எங்கே போகிறாள் என்று தெரியாமல் சங்கரும ராணியும் அவளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

பிடுங்கிப்போட்ட, வெட்டி, கொத்தி போட்டிருந்த செடி, கொடி, முள் எல்லாவற்றையும் ஆறு ஏழு இடத்தில் குவியலாக குவித்து போட்டிருந்தனர். மாரியம்மா கொண்டு வந்திருந்த சருகையும், சோளத்தட்டையையும் வைத்து ஒரு குவியலில் நெருப்பை உண்டாக்கினான் துரைசாமி. சோளத்தட்டையும் சருகும் இருந்தவரைதான் எரிந்தது. செடி கொடிகள் பச்சையாக இருந்ததால் நெருப்புபற்றவில்லை. நெருப்புப் பற்றாததைப் பார்த்து “வதங்கனும் வதங்கனுமின்னு சொன்னத கேட்டாதான” என்று சொல்லி மாரியம்மா முனகினாள். அவள் முனகியதைப் பொருட்ப்படுத்தாமல் “இன்னம் ஒரு கொடங்க சோளத்தட்ட கொண்டா” என்று துரைசாமி சொன்னான். அவனை முறைத்துப பார்த்துவிட்டு வேகமாகப் போனாள் மாரியம்மா.

பெரும்பாடுபட்டுத்தான் நெருப்பை உண்டாக்கினான் துரைசாமி. “நெருப்புக்கிட்ட போவாதீங்க. நெருப்புப்பொறி கண்ணுல பட்டுடும்” என்று மாரியம்மா கத்திக்கொண்டேயிருந்தாள். அவள் கத்துவதைப் பொருட்ப்படுத்தாமல் சங்கரும் ராணியும் எரிகிற நெருப்பில் ஓரமாகக் கிடந்த செடி, கொடி, புல், பூண்டுகளை எடுத்துப்போட்டவாறு இருந்தனர். துரைசாமி ஒவ்வொரு குவியலாக நெருப்பு வைத்துக்கொண்டே போனான். கடைசி குவியலுக்குப் பக்கத்தில் ஒரு முறம் அளவுக்கு ‘அருகு’ முளைத்திருந்தது. மண்வெட்டியை எடுத்து வரச்சொல்லி வெட்டினான். மண்ணுக்குள்ளிருந்து மூன்று நான்கு பூரான்கள் வெளியே வந்து அங்குமிங்கும் ஓடின. ஒவ்வொரு பூரானாக அடித்துக்கொன்றான் துரைசாமி. செத்த பூரான்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் போடப்போவதுமாதிரி சங்கரும் ராணியும் பயமுறுத்தி பாசாங்கு செய்தனர்.

“சீ நாயிவுள. எதுல வௌயாடுறதின்னு ஒரு இது இல்லியா? வாங்க கயிதவுளா” என்று சொல்லி ராணியையும் சங்கரையும் அழைத்துக்கொண்டு வன்னிமர நிழலில் வந்து உட்கார்ந்தாள் மாரியம்மா. வன்னி மரத்தின் அடியில் ஒரு கூடை அளவுக்கு கட்டெரும்பு திரிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் “மரத்துக்கிட்டெ போவாதீங்க. ஒரே எறும்பா கெடக்கு. கடிச்சா தண்டிச்சிப்போயிடும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கர் மரத்திடம் ஓடினான். அப்போது ஒரு பொன்வண்டு பறந்து கொண்டிருப்பது தெரிந்தது. அதைப் பிடிப்பதற்காக ஓடினான். அவன் பொன்வண்டை பிடிக்க ஓடுவதைப் பார்த்ததும் ராணியும் ஓடினாள்.

ஒவ்வொரு குவியலாகப் பார்த்துக்கொண்டே வந்தான் துரைசாமி. எரியாமல் கிடந்த செடி கொடிகளை எடுத்து நெருப்பில் போட்டான். ஒரு சில குவியல்களை நன்றாக எரியும்படி கிண்டி கிளறிவிட்டான். தவறிப்போய் எதையாவது வெட்டாமல் விட்டுவிட்டோமோ என்று நிலத்தை ஒருமுறைச் சுற்றிப் பார்த்துவிட்டு வன்னி மர நிழலுக்கு வந்தான். தண்ணீர் குடித்தான். சங்கரும் ராணியும் பொன்வண்டு பிடிக்க ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். வியர்வையைத் துடைத்துக்கொண்டே உட்கார்ந்தான். அங்குமிங்கும் பார்த்துவிட்டு “கருப்பாயி வந்தாளே என்னா சொல்லிட்டுப்போனா?” என்று கேட்டான்.

“வரவு சோளமின்னு வெரைக்காம, எள்ளு கல்லன்னு வெரைக்கப்போறாளாம்” என்று சொல்லிவிட்டு துரைசாமியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள் மாரியம்மா. என்ன நினைத்தாளோ “நம்பளும் கல்ல எள்ளுன்னு இந்த வருசம் வெரைக்கலாமா” என்று கேட்டாள்.

“சோத்துக்கு ஒங்கப்பன் ஊட்டுலயிருந்து வருமா?”

“எங்கப்பன் ஊட்டெ எதுக்கு இயிக்கிற? இப்பத்தான் ஒரு ரூவாயிக்கு ஒரு கிலோ அரிசின்னு வந்துடுச்சி. வரவ அரச்சிச் சாவனும். சோளத்த துவச்சி சாவனும். இதுன்னா அரிசிய வாங்குனமா ஓலயில போட்டமான்னு போயிடும். நாலு ஜீவனுக்கு ஒரு வருசத்துக்கு எம்மாம் ஆயிப்பூடும்?”

“மாட்டுக்குத் தீனி?”

“இப்பத்தான் டாக்ட்டர வச்சி ஏறு ஓட்டுறாங்க. வரவு சோளம் நெல்லு அறுக்கவும் மிஷினு வந்துடுசசி.”

“அப்ப மாடு வாணாங்கிற? வாசல எதால தெளிப்ப? ஊட்ட எதால மொழுவுவ?”

“நீ வரவு சோளமின்னே வெரச்சிக்கிட்டு இரு. நானா வாணாங்கிறன். இந்தா, அடுத்த எட்டாம் நாளு மூட்டுத்தரன்னு காதுல மூக்குல கெடந்ததோட காலுல கெடந்த கொலுசயும் அடவுவச்ச. ஆச்சி, வருசம் அஞ்சி. போன பொருளு இன்னம் ஊடுதிரும்பல. கேட்டா வட்டியே சாப்புட்டிருக்கும். புதுசா வாங்கிப்புடலாம்ங்கிற. நான் செத்தாதான் வாங்குவ?” என்று சொல்லும்போதே மாரியம்மாவுக்கு கண்கள் கலங்கின.

“வித்து சாராயம் குடிச்சிட்டனா?”

“எனக்குத்தான் இல்லெ. அந்த குட்டிக்கி ஒரு பொருளு எடுத்து வைக்க வாணாமா?”

“பாலு குடிக்கிற புள்ளைக்காடி சீரு சேக்குற?”

“அவ அறியா புள்ளயா? ஆச்சி பதனாலு வயசி. வர எட்டாம் நாளு ஒம்பதாவதுக்குப் போவப்போறா. எந்த நேரத்திலயும் வயசிக்கி வந்திடமாட்டாளா? அன்னிக்கிப்போயி ஒவ்வொரு பொருளும் வாங்குவியா?”

“அதான் ஒந்தம்பி இருக்காரில்ல பட்டி பரூர் ஜமீன். அவுரு கொண்டாந்து வண்டி வண்டியா எறக்கிடமாட்டாரா?” என்று சொல்லிவிட்டு கிண்டலாக சிரித்தான். பிறகு “யே சங்கரு. அக்காள கூப்புட்டுக்கிட்டு நெயலுக்கு வாடா” என்று கூப்பிட்டான். துரைசாமியை எரித்துவிடுவதுமாதிரி பார்த்த மாரியம்மா “எந்தம்பிகிட்டெ போவலன்னா ஒனக்குத் தூக்கம் வராது. நேத்தா தாலி கட்டிக்கிட்டு வந்தன், எந்தம்பி கொடுக்கிறதுக்கு. எனக்கு இருக்கிறதே ஒரு தம்பி. அவனயும்தான் காணட்டன்னுட்டன். போன மொற வந்தப்ப ‘என்னா ஏதுன்னு கேக்கலன்னு கோவிச்சிக்கிட்டு போனவன் ரெண்டு மூணு மாசமா இந்தத் திச திரும்பாம இருக்கான்” என்று சொல்லும்போதே மாரியம்மாவின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

“வௌயுற கொல்லயும் வௌயாமப் போறதுக்கு அயிவுறியா?” என்று துரைசாமி கேட்டான். திடீரென்று கோபம் வந்ததுமாதிரி “நானே ஆத்தமாட்டாதவன் ஊத்த வெட்டி எறக்கிறமாரி இந்த மண்ணுல கெடந்து உருண்டு புரண்டுக்கிட்டு கெடக்குறன்” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து எரிந்துகொண்டிருந்த இடத்திற்குப் போனான். ஒவ்வொரு குவியலாக சென்று எரியாமல் கிடந்தவற்றை குவித்துப்போட்டு எரிய விட்டான்.

வன்னி மர நிலுக்கு வந்த ராணியும் சங்கரும் மாரியம்மா அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தனர். அதனால் சிரிப்பதையும், விளையாடுவதையும் நிறுத்திவிட்டு மௌனமாக உட்கார்ந்தனர். ராணியைப் பக்கத்தில் உட்கார வைத்து அவளுடைய தலையில் பேன் பார்க்க ஆரம்பித்தாள் மாரியம்மா. வன்னி மரத்துக்கு வந்த துரைசாமி “வௌயுற கொல்லயில எவளாவது பேனு பாப்பாளா?” என்று கேட்டதோடு “நேரம் என்னா ஆவுது? பொடி சுட ஆரம்பிச்சிடிச்சி. ஒரு மையிலு தூரம் போவ வாணாமா? புள்ளிவோ எப்பிடி இந்த பொடியில ஊடுப்போயிச் சேரும்?” என்று கேட்டான்.

“புள்ளிவோமேல ரொம்ப அக்கறதான்” என்று ஒரு தினுசாக சொன்னாள் மாரியம்மா.

“புள்ளப் பெத்தவனுக்கு தெரியாதாடி? புள்ளக்கி என்னா செய்யுறதின்னு?”

“தெரியும் தெரியும். தெரியாம என்னா கெடக்கு” என்று சொன்ன மாரியம்மாவுக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. “பள்ளிக்கூடத்துக்குப் போற எடத்தில ‘இந்தமாரி ஆயிப்போச்சின்னு வந்து நின்னா அன்னிக்கி ஆடுவியா?” என்று கேட்டாள். துரைசாமி பதில் பேசவில்லை. தூரத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“எதுனா கேட்டா ஒடனே எந்தம்பிகிட்டெ போயிடுற? காதுல மூக்குல ஒரு பொட்டு தங்கம் எம்பொண்ணு ஒடம்புல இருக்கா? காலுக்கு ஒரு கொலுசு இல்ல. எனக்கு இருக்கிறதே ஒரே பொட்டப்புள்ளெ. அதுக்கு இந்த வயசில போட்டுப் பாக்காம அப்பறம் எப்பப் போட்டுப்பாக்கறது? கிழவியானப்பறமா?”

“நீ நல்ல குடுத்தனக்காரியாடி? நாளக்கி ஏறு ஓட்டனும். பருவத்தில மய பேயனும். வெரைக்கனுமேன்னு கவலப்படாம துணிய எடு, நகய எடுன்னு என்னமோ பேசிக்கிட்டு இருக்கிறவ?”

“நல்லத்துணி கட்டாம, நல்ல சோறு திங்காததுக்கு எதுக்கு காட்டுல பாடுபடனும்?”

“நகதான எடுக்கனும்? எடுத்திடலாம். கொல்ல வௌயட்டும்.”

“கொல்ல என்னிக்கி நல்லா வௌயப்போவுது? நீ நக எடுத்து எம்புள்ளக்கிப் போடப்போற? ஒரு கருவ மணிகூட எடுத்துப்போடமாட்ட” என்று சொல்லும்போதே மாரியம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. “நான் போட்டுக்கிட்டு வந்தது இருந்தா நான் எதுக்கு ஒங்கிட்டெ கேக்கப்போறன்?” என்று சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தான் துரைசாமி. பிறகு சலிப்புடன் “ஒடம்புத்தெரியாமத்தான் பூட்டிவுட்டு அனுப்புனாங்க ஒங்க அப்பனும், அம்மாளும். ஏன்டி போக்கத்தப் பேச்ச பேசிக்கிட்டு கெடக்குற?”

“கட்டுன துணியோடதான் வந்தனா? ஏயி எட்டு பவுனு போட்டுக்கிட்டு வல்ல. எல்லாத்தயும் வித்துத்தின்ன வாயாலதான் சொல்ற ஒண்ணும் போட்டுக்கிட்டு வல்லன்னு. அதயும்தான் மண்ணாப்போன சாமிவோ பாத்துக்கிட்டு இருக்கு” என்று சொன்னாள். சட்டென்று வேகம் வந்தமாதிரி துரைசாமி பக்கம் திரும்பி “இன்னிக்கோ நாளைக்கோ எம்பொண்ணு தெரண்டு நிக்கப்போறா. அதுக்கு என்னாச் செய்யப்போற?” என்று எதிராளியிடம் கேட்பதுமாதிரி கேட்டாள். அதற்கு சிரித்துக்கொண்டே சகஜமாக சொன்னான் துரைசாமி: “அதான் ஒந்தம்பி இருக்காரில்ல, மந்திரி. அவுரு எடுத்துக்கிட்டு வரமாட்டாரா அக்கா மவளுக்கு கிலோ கணக்குல தங்கத்த.”

“எந்தம்பிய இயித்தா மானம் மரியாதப்பூடும். நீ பெத்தப் புள்ளக்கி எந்தம்பி எதுக்கு கிலோ கணக்குல தங்கம் போடனும்?” என்று சத்தமாகக் கேட்டாள். ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. கோபத்தில் அவளுடைய உடம்பு நடுங்கியது. மாரியம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சங்கர் வன்னிமரத்தைச்சுற்றி மூன்று நான்கு தட்டான்கள் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மெல்ல எழுந்து தட்டான்களை பிடிப்பதற்காகப் போனான்.

மாரியம்மா ஒரு தீர்மானத்திற்கு வந்தமாதிரி துரைசாமியிடம் கேட்டாள்: “இந்த வருசம் காட்டுல என்னா பயிர் வுடப் போற?”

“என்னாடி புது கேள்வியெல்லாம் கேக்குற? எப்பியும்போல வரவு சோளமின்னு தூவி வுட்டுட்டுப் போவ வேண்டியதுதான?”

“எள்ளு, கல்லப் போடு. மூணு மாச பயிறு. கார்த்திக ஐப்பசியில கையிக்கு காசி வந்துடும். எள்ளு கல்லயப் புடுங்குனதும் கொத்தமல்லிய தூவி வுடு. அதுவும் மூணு மாசம்தான். பொங்க கழிஞ்சி திருனா போடுற சமயத்தில கையிக்கு காசி வந்துடும். காரியம் எப்ப வந்தாலும் முடிச்சிடலாம். போன வருச பொங்க தீவாளிக்குக்கூட ஒரு சீட்டித்துணிகூட எடுத்துத் தரல. காடு வௌயட்டும்ன்னு சொன்ன. காடு என்னிக்கி வௌஞ்சி நீ துணிய எடுத்துத்தரப் போற? ஊரு ஒலகத்திலெ பொட்டச்சிவோ எல்லாம் எப்பிடி மேனி கொலயாம இருக்காளுவோ. நம்பளுக்குத்தான் எந்த கொடுப்பனயும் இல்லியே.”

“எள்ளு கல்லன்னு போட்டுட்டு சோத்துக்கு ரேசன் கடயிலப்போயி நிக்கப்போறியா?”

“ஊரே நிக்குதில்ல.”

“வெக்கம் மானம் இருந்தா நிக்கமாட்டானுவோ.”

“ஊரு நடப்பு தெரியனும். இல்லன்னா ஒலக நடப்பாவது தெரியனும். ஒண்ணுக்கும் ஒதவாத மன்னாந்தய வச்சிக்கிட்டு என்னாப் பண்றது?” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு ராணியைப் பார்த்து “யே குட்டி தண்ணி வேணுமின்னா குடிச்சிட்டுப்புட்டு மிச்சத்தண்ணிய கீய ஊத்திப்புட்டு கொடத்த எடு” என்று சொல்லிவிட்டு எழுந்தாள். தலைமுடியை அவிழ்த்து உதறி, தட்டிவிட்டு மீண்டும் சிண்டு போட்டாள். “வாடா பயல” என்று சங்கரை கூப்பிட்டாள். பிறகு விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள். சலிப்புடன் நிலத்தைப் பார்த்தான் துரைசாமி. எரிந்து கொண்டிருந்த இடத்திற்குப் போனான். ஒன்றிரண்டு செடிகளை எடுத்து நெருப்பின் மீது போட்டுவிட்டு மாரியம்மாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மாரியம்மா முதலில் நடந்து கொண்டிருந்தாள். அவளுக்கு அடுத்து சங்கரும், அவனுக்கு அடுத்து ராணியும் நடந்துகொண்டிருந்தனர். கடைசியில் துரைசாமி நடந்து கொண்டிருந்தான். வண்டிப் பாட்டைக்கு வந்தபோது யாரிடமோ சொல்வதுமாதிரி “வர எட்டாம் நாளு பயல கொண்டுபோயி ஆறாவதுல சேக்கனும். அவனுக்கு ஒரு புதுத்துணி எடுக்க வாணாமா?” என்று கேட்டாள்.

“தோளுல மாட்டுறமாரி பையும் வேணும்மா” என்று சங்கர் சொன்னான்.

“எனக்கும் புதுப்பாவாடயும் சட்டயும் எடுக்கனும்மா. யூனிபார்ம் கிழிஞ்சிப்போச்சி. புள்ளங்க கிண்டல் பண்ணுதுவோ” என்று ராணி சொன்னாள்.

“புதுப்பேனா, புது ஜாமண்டரி பாக்ஸ், செருப்பு எல்லாம் வாங்கித்தரனும். இப்பியே துணி எடுத்து கொடுத்தாத்தான் டெய்லரு தச்சி தருவான்” என்று ஆர்வம் பொங்க சங்கர் சொன்னான். அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ராணி “எனக்கும் புதுப்பேனாவும் ஜாமண்ட்ரி பாக்சும் வேணும்” என்று சொன்னதோடு திரும்பி துரைசாமியைப் பார்த்தாள். அவன் “பாதய பாத்து போம்மா” என்று சொன்னான்.

சங்கர் ஆர்வத்துடன் ஆறாம் வகுப்பு போவதுப்பற்றியும், என்னென்ன பொருள்களை வாங்கித்தர வேண்டும் என்பதுப்பற்றியும் நீண்டப்பட்டியலாகச் சொல்லிக்கொண்டே நடந்தான். ராணியும் தன்னுடைய பங்குக்கு தனக்கு வேண்டியப் பொருள்களின் பட்டியலை சொல்ல ஆரம்பித்தாள். அப்போது மிகுந்த சலிப்புடன் மாரியம்மா சொன்னாள் : “எங்கிட்ட சொல்லி என்னாப் பண்றது? எங்கையில தனியா காசி பணமா இருக்கு, வாங்கி தரதுக்கு?” அவள் அவ்வாறு சொன்னதும் சங்கரும் ராணியும் ஒரே நேரத்தில் திரும்பி துரைசாமியைப் பார்த்தனர். அவன் “எல்லாம் வாங்கித்தரன். காடு வௌயட்டும். மொதல்ல தடத்தப் பாத்து நடங்க” என்று சொன்னான். சிறிதுநேரம் பேசாமல் வந்த துரைசாமி “எல்லாத்துக்கும் மானத்து மகாராசன் மனசு வைக்கனும். கொல்ல வௌயனும்” என்று சொன்னான். திடீரென்று அவனுக்கு என்ன தோன்றியதோ இரண்டு கைகளையும் குவித்து வானத்தைப் பார்த்து கும்பிட்டான்.

“எல்லாம் வாங்கித்தரன்” என்று துரைசாமி சொன்னதை கேட்டதும் சங்கரும் ராணியும் தாங்கள் கேட்ட எல்லாப் பொருள்களும் கிடைத்துவிட்டதுமாதிரி மகிழ்ச்சியில் மாரியம்மாவைத் தாண்டி முன்னால் போட்டியிட்டு ஓட ஆரம்பித்தனர். நூறு இருநூறு மீட்டர் தூரம் முன்னால் ஓடியதும் சட்டென்று அடிவயிற்றைப் பிடித்துக்கெண்டு ராணி உட்கார்ந்தாள். உயிர் போவதுமாதிரி அழுதாள். “கால இடிச்சிக்கிட்டியாடி?” என்று கேட்டுக்கொண்டே ராணியை நோக்கி ஓடினாள் மாரியம்மா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *