அவமானம் பலவகைப்படும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 11,394 
 

சின்னச் சின்னச் சிணுங்கல்களில் தொடங்கி வாழ்க்கையை வெறுக்கிறவரை அவமானம் ஏகப்பட்ட பரிமாணங்களில் மனதிற்கும் வாழும் சூழ்நிலைக்கும் ஏற்றமாதிரி ஒவ்வொருத்தனுக்கும் மாறுபடும்.இருக்கதிலேயே நான்பட்ட அவமானம் இன்று நான் சுமைதுனம் செய்ததை என் அப்பா பார்த்தது. .(இதை கைஅடிக்கிறதுன்னு சொல்லும்போது அசிங்கமா இருக்கதாலும் சுயமைதுனம்ன்னு சொல்லும்போது எதோ புனிதமான செயலை செய்யுற தோரணை இருக்கதாலயும் அதையே பயன்படுத்திக்கிறேன் ஏன்னா இந்த கதையில இந்த வார்த்தை அடிக்கடி வரும் என்கிறதால் தான்…)

சுயமைதுனம் ஒன்னும் அத்தனை தப்பில்லைன்னாலும் நம்ம உச்சக்கட்டத்தை அடையும்போது நம்மெதிரில் நம்ம அப்பா நிற்கிறதை என்னால் நினைச்சுக் கூட பார்க்க முடியலை.அன்னையில் இருந்து அப்பா என்முகத்தை பார்த்துக்கூட பேசுறதில்லை ஆனா அன்னைக்கு ஒன்னும் அவர் என்முகத்தை பார்க்கலை.இதைப்பத்தி இத்தனை தெளிவா பேசுறதில் இருந்து இதுதான் எனக்கு முதல் அவமானம்ன்னு தப்பா நினைச்சுடாதீங்க ..!

மத்த விஷயங்களில் நம்ம எத்தனை அவமானபட்டிருந்தாலும் காமமும் அது ஏற்படுத்துற அவமானங்களும் என்னைக்கும் மறக்கறது இல்ல..

அவமானம் எண் 1:

இன்டர்நெட் அப்போது எனக்கு அறிமுகமானப் புதிது ஒருநாள் அண்ணன் பிரவுசிங் சென்டருக்கு அழைத்துச் சென்று இதுதான் கூகுள் இதில் எதைப் பற்றி தேடினாலும் வரும் என்றான்.காமம் முளைத்த நாட்கள் அவை.அண்ணன் சொன்ன எதைப்பற்றி என்ற வார்த்தை எனக்கு மட்டும் ஏதோ புதிராய் அர்த்தம் தொனித்தது.

அடுத்தநாள் அம்மாவிடம் காசை வாங்கிக்கொண்டு நான்மட்டும் தனியே பிரவுசிங் சென்டர் சென்றேன்.காமத்தின் வேகம் எத்தனை நுட்பமாக இருந்தாலும் இன்டர்நெட்டில் எதை அடித்து தேடுவது?.காமம் பழக்கமான அளவிற்கு அது தொடர்பான வார்த்தைகள் எதுவும் பரிச்சயமாகவில்லை.அதுவும் ஆங்கிலத்தில் சுத்தம்.ஒருமணிநேரமும் சும்மாவே உட்கார்ந்துவிட்டு வீடு வந்துசேர்ந்தேன்.

மறுநாளிலிருந்து அண்ணன் நண்பர்களுடன் உரையாடுவதை அரைகுறையாக ஒட்டுக்கேட்க தொடங்கியதிலிருந்து mute என்ற வார்த்தை மனதில் பதிந்தது.டிவி ரிமோட்டில் உள்ள mute பட்டன் டிவியில் சத்தம் ஒன்றுமில்லாமல் செய்வதை வைத்து mute என்றால் ஆடை ஒன்றுமில்லாமல் மொட்டைக்குண்டியாக இருப்பது என்ற முடிவுக்கு வந்து அடுத்து பிரவுசிங் சென்டருக்கு செல்ல காசை சேர்க்க தொடங்கினேன்.ஒருவழியாக சேர்த்து சென்டருக்கு சென்று கூகுளில் mute என்று அடித்தால் எதேதோ பொம்மை படங்களைத் தவிர வேறெதுவும் வரவில்லை.தொடர்ந்து இன்றுவந்துவிடும் இன்று வந்துவிடும் என்று தினமும் mute ஐ பற்றி இன்டர்நெட்டில் தேட தொடங்கினேன்.தினமும் செல்வதற்கு பணம்?.அண்ணன் அப்பாவிடம் திருடும் பணத்திலிருந்து அவனுக்கு தெரியாமல் அவன் பாக்கெட்டில் இருந்து நான் திருடிக் கொண்டிருந்தேன்.எப்போதும் போல ஒருநாள் இருக்காதே! மாட்டிக்கொண்டேன்…

அண்ணன் சட்டையிலிருந்து எடுக்கும்போது வசமாக அவனிடம் மாட்டிக்கொண்டேன்.இத்தனை நாட்களாக அப்பாவின் பாக்கெட்டில் இருந்து பணம் திருடுபோவதற்கு நான்தான் காரணம் என்று அவன் மாட்டிவிட அன்றிலிந்து நான் பணத்தையும் திருடுவதில்லை பிரவுசிங் செண்டருக்கும் செல்வதில்லை,.நாட்கள் ஓடி அன்று அண்ணன் அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்ட வார்த்தை mute இல்லை nude என்பது எனக்கு தெரிந்தபோது நான் பள்ளிப்படிப்பை முடித்திருந்தேன்..முகத்தில் மீசை முளைத்திருந்தது.

அவமானம் எண் 2:

நான் கல்லூரியில் சேர்ந்த நாட்களில் மொபைல் போன்களின் ஆதிக்கம் ரொம்பவே அதிகமாக இருந்தது.விளைவு கல்லூரிகளில் மொபைல் போன்கள் தடை செய்யப்பட்டன.அந்த நேரத்தில் தான் நான் அப்பாவிடம் அடம்பிடித்து புதிதாக ஒரு கேமரா போன் வாங்கியிருந்தேன்.மண்டையில் கொட்டி கொட்டி படித்த 1100 மார்க் அதற்கு உதவியது.செல்போனில் அட்டு படங்கள் என்பது அப்போது ஒருபரம சுகம் (இப்போது அது நித்திய ஆனந்தம்).எனது விடுதி அறையில் என்னிடம் மட்டும்தான் கேமரா போன் இருந்தது.ரூமிலிருந்த ஐந்துபேரும் ஒருநாளை சமமாக பிரித்து அதன்படி தினமும் அந்த அட்டு வீடியோக்களை பார்த்துக்கொண்டிருப்போம்.அதனால் தினமும் 24 மணிநேரமும் போனும் இயங்கிக்கொண்டிருக்கும் நாங்களும் இயங்கிக் கொண்டிருப்போம்.

அன்று காலை கல்லூரியில் கணேசனின் கோட்டா,விரிவுரையாளர் ஜான்சன் நடத்துவது யாருக்குமே புரியாது,சிலசமயம் அவருக்கே கூட புரியாது..அதனால் அவரை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு நினைச்ச கணேசன் போனை எடுத்து படம்பார்க்க ஆரம்பிச்சிட்டான்.அவன் செய்த சின்ன தவறு போனில் சத்தத்தை குறைக்காமல் பார்த்தது.நொடியைக் கொள்ளையடிக்கும் மௌனத்தில் அந்த சத்தம் அறையை நிரப்பினால் எப்படி இருக்கும்.ஜான்சன் அருகில் வந்தான் போன் யாருடையது? வேறொன்றும் கேட்கவில்லை.

வீட்டிற்கு கடிதம் பறந்தது.வகுப்பறையிலேயே ஆபாசப் படம் பார்த்த காரணத்திற்காக உங்களது மகன் கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார்.அவனையும் அவனுடைய அந்த போனையும் வந்து கொண்டுசெல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று.அதன்பிறகு அப்பா கல்லூரி முதல்வரிடம் ஏதேதோ பேசி கண்ணீர்விட்டு மறுபடியும் என்னைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு போனைமட்டும் எடுத்துச் சென்றார்.அதன்பிறகு இரண்டு தீபாவளி ஊருக்கு செல்லாமல் விடுதிக்குள்ளேயே முடங்கியதற்கு இது ஒரு காரணமாக அமைந்தது….கணேசன் மட்டும் எண்ணெயில் செய்த பலகாரங்களைக் கொண்டுவந்தான்……

அவமானம் எண் 3:

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறேன் என்று வீட்டில் சிலகாலம் இருந்தேன்.இது இருந்தா தான் வேலைக் கிடைக்குமாம் என்று சொல்லி புதிதாக ஒரு லேப்டாப் வேறு வாங்கியிருந்தேன்.அட்டு படங்களைப் பார்க்க இன்டர்நெட் கனெக்ஷன் மூலம் புதுவழி பிறந்தது.எப்போதும் வீடியோவை பதிவிறக்கம் செய்துவிட்டு தெளிவாக அதை மறைத்துவைத்திருப்பேன்.வீட்டில் வெட்டியாக இருந்தால் ஏதாவது ஒருவகையில் தினமும் அப்பாவிடம் திட்டுவாங்கிக் கொண்டுதானே இருக்க வேண்டும்.அப்படித் தான் ஒருநாள் தினமும் இந்த லேப்டாப்பை நோண்டிக்கிட்டு தானே இருக்க உன் தங்கச்சிக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுத்தா என்னடா என கேட்க நானும் ஆர்வமாக அவளுக்கு சொல்லிக்கொடுக்க தொடங்கினேன்.வரிசையாக எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட்டு மறைத்துவைத்திருக்கும் பைல்களை எப்படி பார்ப்பதுவரை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட்டு வீராப்புடன் வெளியே கிளம்பினேன்.வெகுதூரம் சென்ற பிறகுதான் மறைத்துவைத்திருந்த அர்த்தமுள்ள படங்களின் ஞாபகம் வந்தது.ஓட்டமும் நடையுமாக வீடு வந்துசேர்ந்த போது இனிமே இவன் இந்த கருமத்தைத் தொடவேக் கூடாது என அப்பா வீட்டை ரெண்டாக்கிக் கொண்டிருந்தார் ..லேப்டாப்பில் மறைத்துவைத்திருந்த அட்டு படங்களுடன் என்மானமும் சேர்ந்து போனது…

அவமானம் எண் ஆயிரத்தி…:

இன்று சுயமைதுனம் செய்து மாட்டிக்கொண்டது எத்தனையாவது அவமானம் என்று எனக்கும் நினைவில்லை.இத்தனை நாட்களில் ஒருமுறைக் கூட மாட்டிக்கொண்டதில்லை.இந்தமுறை தான் ஆர்வத்தில் அறையை தாழிட மறந்துவிட்டேன்..மற்றொருநாள் உள்ளாடையில் கறையைக் கண்டதிலிருந்து அம்மாவும் என் துணியை துவைப்பதில்லை…அவமானங்கள் தொடர்ந்தது…

அப்பாவை பொறுத்தவரை அவர் ஒரு ஆல் இந்தியா ரேடியோ.ஊர்முழுக்க இதைப்பற்றி சொல்லி கருத்துக் கேட்க ஆரம்பித்துவிடுவார்.இவனுக்கு கல்யாணம் செய்துவைத்தால் சரியகிவிடுவான் என்று எல்லாரும் கூடி முடிவுக்கு வந்து தூரத்து சொந்தத்தில் பெண்ணை பார்த்து வரதட்சணை பேசி கல்யாணத்தையும் முடித்து முதலிரவுக்கு ஒருஅறைக்குள் அடைத்துவைத்தனர் அத்தனை நாட்களாக என்னை அருவருப்பாக பார்த்துவந்த அப்பாவின் முகம் இன்று விறுவிறுப்பாக மொய்பணத்தை எண்ணிக்கொண்டிருந்தது.இத்தனை நாட்கள் எதை தவறென முகம் சுளித்தார்களோ அதற்காக இன்று ஒரு முன்பின் தெரியாத பெண்ணுடன் என்னை அடைத்துவைத்திருக்கிறார்கள்.

தன்அறையில் இருந்துகொண்டு இப்போது இங்கு என்ன நடக்கும் என்று தங்கை நினைத்துக்கொண்டிருப்பாள்.அம்மா இனிமேல் அந்த கால்சட்டைகளை அத்தனை அழுத்தி துவைக்க வேண்டியதில்லை என பெருமூச்சு விட்டிருப்பார்.இத்தனை வருடங்களாக எனக்குள் இருந்த காமமெல்லாம் முற்றிலும் அமிழ்ந்துபோய் இருந்தது.இவர்களையும் என்னுடைய இந்த சூழ்நிலையையும் நினைக்கும்போது அவர்களுக்கு அவமானமாக இருந்ததோ இல்லையோ எனக்கு அவமானம் கழுத்தை நெறித்தது.வியர்த்துக் கொட்டி ஆடை நனைய அந்த அறையில் இருந்து தலைதெறிக்க ஓடினேன்.அடுத்தநாள் அந்தபெண் அதான் என் மனைவி எனக்கு ஆண்மையில்லை எனக்கூறி அவள் பெற்றோர் வீட்டிற்கு பெட்டிப்படுக்கையுடன் கிளம்பிவிட்டாள்.தலைகுனிந்து நடக்க ஒன்றும் தோன்றவில்லை எதோ முதுகில் கட்டியிருந்த சுமையை இறக்கிவைத்ததுபோல் இருந்தது..நான் அறைக்குள் சென்று சுயமைதுனம் செய்ய துவங்கினேன் அறையை தாழிட்டுவிட்டு…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *