அரட்டை – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 14,167 
 

ஒன்றாம் தேதி.

பணம் கொடுக்கச் சென்றால் கொடுத்தோமா, வந்தோமா என்று இல்லாமல் தொண தொணவென்று பேசிக் கொண்டிருப்பது கணவன் வழக்கம்.

“நீங்க போக வேண்டாம்,” என்றாள் கோமதி, “நான் கொடுத்துட்டு வந்திடறேன்”.

“இல்ல…இல்ல…நானே கொடுக்கறேன். என்ன…ஒரு அஞ்சு நிமிஷம் ஆகப் போவுது…” கிளம்பினான் கிட்டு.

அன்று மாலை ஷாப்பிங் சென்றிருந்தனர் கோமதியும், கிட்டுவும். அப்படியே வார பத்திரிகைகள் கொடுக்கும் லெண்டிங் லைப்ரரியில் பணம் கட்டி விடலாம் என்று நுழைந்தார்கள்.

முதல் தேதியானதால் கடையில் கூட்டம். கிட்டு இருப்பது ரூபாய் கட்டினான்.

“ஒரு இங்கிலீஷ், ஒரு தமிழ் பத்திரிகை கொடுத்தால் நல்லாயிருக்குமே … ஒரு இங்கிலீஷ் மாகஸினும் எடுத்துக்கலாமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் கிட்டு.

“அப்படிக் கட்டுப்படியாகாதுங்க சார். நீங்க இருபது ரூபாய் கொடுக்கறதுக்கு ஒரு பழசு, ஒரு புதுசு என்று தமிழ் மாகஸின் கொடுக்கறோம். நாப்பது காட்டுங்க… நீங்க சொல்றா மாதிரி இங்கிலீஷும் எடுத்துக்கிட்டுப் போங்க….” என்று சிரித்துக் கொண்டே பணத்தை வாங்கிப் போட்டுக் கொண்டார்.

அன்று….அதே கடை.

“அம்மா….உங்க நம்பர் பன்னெண்டு தானே? உங்க பேஜ்ல எண்ட்ரி ஆகலம்மா. நீங்க பணம் கட்ட மறந்துட்டீங்க போலருக்கு,” என்று கடைக்காரர் சொன்ன போது தூக்கிவாரிப் போட்டது கோமதிக்கு.

“ஐயையோ, கட்டிட்டமே… ஒண்ணாந்தேதியே.”

“கட்டியிருந்தா இங்க குறிச்சு வெச்சிருப்பேனே அம்மா?”

“நிச்சயமா கட்டிட்டோங்க… அன்னைக்கு நானும் எங்க வீட்டுக் காரரும் சேர்ந்து வந்து இருபது ரூபா குடுத்தமே….
ஞாபகமில்ல…? அவரு கூட இங்கிலீஷ் மாகஸின்ஸ் வேணும்னு கேட்டாரு… நீங்க கூட நாப்பது கட்டுங்கன்னீங்க…?

“அட….டே….ஆமாம்மா….ஸாரிம்மா. நாந்தான் கூட்ட சந்தடியில் எழுதிக்க மறந்துட்டேன்….மன்னிச்சுக்குங்கம்மா…”

கோமதி இனிமேல் கணவனை அரட்டை அடிக்கிறான் என்று சொல்லிக் கோபிக்க மாட்டாள். அதில் பலன் இருக்கிறது.

-குமுதம் ஒருபக்கக் கதை -10-10-1991ல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *