அண்ணனின் அறிவுரைகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 4,974 
 

மாலதிக்கு தன் கணவன் பாஸ்கரிடம் இந்த விஷயத்தை உடனே சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.

திருமணமான இந்த நான்கு ஆண்டுகளில் எதையும் அவள் இதுகாறும் தன் கணவனிடமிருந்து மறைத்ததில்லை.

ஆனால் இது கணவரின் தம்பி வித்யாதர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதனால் குடும்பத்திற்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விடும் என்று சற்று யோசித்தாள். எனினும் எதையும் மறைக்காமல் இருப்பதுதான் ஒரு நல்ல மனைவியின் அடையாளம் என்று முடிவு செய்து கொண்டாள்.

அலுவலகம் முடிந்து பாஸ்கர் வீட்டிற்கு வந்தான். அவன் கை கால்களைக் கழுவிக்கொண்டு ஊஞ்சலில் வந்து அமர்ந்தான். அவனுக்கு சூடாக காபி கலந்து எடுத்து வந்த மாலதி, “என்னங்க, உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும்… இதை இனி இப்படியே வளர விடக்கூடாது…” என்று பீடிகை போட்டாள்.

“நீ என்னன்னு சொன்னாத்தானே மாலு எனக்கு அதை வளர விடலாமா வேண்டாமா என்பது தெரியும்…”

“இது உங்க தம்பி சம்பந்தப்பட்ட விஷயம். நீங்கதான் அவர்கிட்ட சூடா நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கணும்..”

“சரி, விஷயத்துக்கு வா மாலு.”

“நீங்க ரொம்ப நல்லவன்னு நம்பி இருக்கிற உங்க அருமைத் தம்பி என்ன பண்ணார்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சா நீங்க கொதிச்சுப் போவீங்க…”

“மாலு ப்ளீஸ்… என் பொறுமையை சோதிக்காத.”

“பத்து நாள் முன்னாடி என்னோட ஒரு ப்ராவும், ஒரு ஜட்டியும் திடீர்ன்னு காணாமப் போச்சுங்க. இத்தனைக்கும் என்னோட உள்ளாடைகளை மட்டும் நம் அபார்ட்மெண்ட்டில் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக நம்ம பாத்ரூமுக்கு உள்ளேயே தோய்த்து ஜன்னல் வெளிச்சத்தில் எப்போதும் உலர்த்துவேன்…”

“………………………..”

“முதல்ல நம்ம வீட்டு வேலைக்காரி கல்யாணி மீதுதான் எனக்குச் சந்தேகம் வந்துச்சு…. என்னோடது ரொம்ப காஸ்ட்லி ஐய்ட்டம் என்கிறதுனால அவதான் திருடி இருப்பாளோ என்று நினைத்தேன்… ஆனா போன வாரம் மறுபடியும் என்னோட ஒரு ப்ராவைக் காணோம்.”

“நீ வேலைக்காரிகிட்ட ப்ளெய்னா கேட்டுவிட வேண்டியதுதானே?”

“கேட்டேங்க… அவ என்கிட்ட மூஞ்சியில அடிச்ச மாதிரி, அதைப்பற்றி ஒண்ணுமே தெரியாது என்று சொல்லிவிட்டு, என் சைஸ் என்னா, உன் சைஸ் என்னான்னு கேட்டுவிட்டு, இந்த அசிங்கமெல்லாம் திருடற விஷயமா? என்று என்னையே திருப்பிக் கேட்டா…. எல்லாமே எனக்கு ரொம்பப் பெரிசுன்னு அவ குத்திக் காண்பித்தது ரொம்பக் கேவலமா இருந்திச்சு…”

“சரி விஷயத்துக்கு வா.”

“அப்புறமா எனக்கு உங்க தம்பி மேலதான் சந்தேகம் வந்திச்சு. ஏன்னா சமீப காலங்களா அவர் என்னை அடிக்கடி வெறிச்சு வெறிச்சு பாக்க ஆரம்பிச்சிருக்காரு… அவரோட சேர்க்கை சரியில்லையோ என்னவோ, யார் கண்டது? இன்னிக்கி மத்தியானம் ஏதோ இண்டர்வியூவுக்கு போறதா என்னிடம் சொல்லிட்டு வெளிய போனாரு…”

“………………………………….”

“நான் உடனே வீட்டை உள்புறமா தாழ்ப்பாள் போட்டுகிட்டு அவரோட பெட்ரூமுகுள்ள புகுந்து வாட்ரோப் முழுதும் தேடினேன். ஒண்ணும் கிடைக்கல. அப்புறமா நிதானமா யோசிச்சு பார்த்தப்ப அவரோட சூட்கேஸ்களில் தேடிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது… பார்த்தா என்னோட ரெண்டு ப்ராக்கள், ஒரு ஜட்டி அவரோட சூட்கேஸில் பத்திரமா இருக்குங்க…”

“ஓ மை காட்…”

“இப்ப அவரு இண்டர்வியூ முடிஞ்சு வீட்டுக்கு வர்ற டைம்தான்… நீங்க இதுக்கு உடனடியா ஒரு முடிவு கட்டணும். ஒருவேளை இந்த வேலை கிடைச்சா ஏதாவது காரணம் சொல்லி அவரை நம்ம வீட்டை விட்டு உடனே காலி பண்ணச் சொல்லுங்க…”

“அவனுக்கு அம்மா அப்பா கிடையாது மாலு. எல்லாமே அவனுக்கு நான்தான். எடுத்தோம் கவுத்தோம்னு பேசி அவனை நான் ஹர்ட் பண்ண முடியாது. முதல்ல அவன் வரட்டும், பக்குவமா பேசி அவனுக்கு அவன் தவறுகளைப் புரிய வைக்கிறேன்…”

“தெரியுமே, உங்க தம்பியை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே… இதைக் கேட்டப்புறமும் ஏன் உங்களுக்கு கோபம் வரலை?”

காலிங்பெல் சத்தம் கேட்டது.

“உங்க தம்பிதான்… போய்க் கதவைத் திறங்க…”

முகத்தை ஒடித்துக்கொண்டு மாலதி உள்ளே சென்றாள்.

கதவைத் திறந்ததும் வித்யாதர் சந்தோஷத்துடன், “அண்ணா எனக்கு வேலை கிடைச்சிடுச்சு. ப்ராடெக்ட் இஞ்சினியரா செலெக்ட் பண்ணி ஆர்டரும் கொடுத்துட்டாங்க… அடுத்தவாரம் ஜாயின் பண்ணனும்…” என்று பாஸ்கர் காலில் விழுந்தான்.

“மன்னி…” என்று அழைத்தபடி உள்ளே சென்று மாலதியின் கைகளில் ஆர்டரைக் கொடுத்து அவள் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான்.

வீடு கலகலப்பானது.

மாலதி, “நீ பி.ஈ டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணவன் வித்யா. உனக்கில்லாமல் இந்த வேலை யாருக்கு கிடைக்கும்?” என்றாள்.

“நீங்களும் அண்ணாவும்தான் என்னை பி.ஈ படிக்க வைத்தீர்கள் மன்னி. நல்ல வேளையாக ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் நல்ல வேலையும் உடனே கிடைத்துவிட்டது. எல்லாம் உங்க ஆசீர்வாதம் மன்னி.”

அடுத்தவாரம் வேலையில் சேர்ந்து மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிட்டான்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை…

வீட்டில் அனைவரும் ரிலாக்ஸ்டாக இருந்தனர்.

மாலதியை உடன் வைத்துக்கொண்டு பாஸ்கர், “வித்யா நீ படிச்சு, நல்ல வேலையும் கிடைச்சாச்சு. அடுத்தது ஒனக்கு ஒரு கல்யாணமும் பண்ணி வச்சிட்டா என்னோட பொறுப்புகள் முடிந்தன…” என்றார்.

“இப்ப என்ன அண்ணா அவசரம்? நான் இன்னமும் பெண்களைப் பற்றி புரிஞ்சிக்கக் கூட ஆரம்பிக்கவில்லை…”

“இப்பவே ஜாதகம் பார்க்க ஆரம்பிச்சாத்தான் சரியா இருக்கும். பெண்களைப் புரிய வேண்டாம்… அவர்களிடம் இயல்பாக இயற்கையாக இருந்தால் போதும். மனித ஜாதியில் உயர்ந்த ஜாதி பெண்கள்தான். எல்லாப் பெண்களுமே அன்பானவங்க; பாசமானவங்க; வாஞ்சையானவங்க. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமான தங்கச் சுரங்கம்…

“பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பையும், பண்பையும், மரியாதையையும், உண்மையையும்தான். செக்ஸ் என்பது அவர்களின் கடைசி விருப்பம். அதுகூட, ஆண்கள் அதை விரும்பிக் கேட்டால் அவர்களை சந்தோஷப் படுத்தும் பொருட்டுதான் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள். ஆனால் மிகப் பெரும்பாலான ஆண்களுக்கு அவர்களின் இந்தப் பெருந்தன்மை புரிவதில்லை…

“உனக்குச் சின்ன வயது. அனுபவத்தில் நான் சொல்வது எல்லாம் உனக்குப் புரியும். நீ வேலைக்குப் போகிறாய். அங்கு நீ பார்க்கும், பேசும் எல்லாப் பெண்களிடமும் மரியாதையாய் இரு. அவர்களிடம் மிகவும் பண்பாக நடந்துகொள். அவர்களுக்கு பொய் சொல்லுவது, ஏமாற்றுவது என்பது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. பெண்கள் அனைவரும் ஒரு நேர்மையான மனிதப் பிறவிகள். இவ்வளவு உன்னிடம் சொல்கிறேனே, நான் உன் மன்னியிடம் இதுவரை பொய் சொன்னதில்லை. எதையும் அவளிடம் மறைத்துப் பேசியதில்லை…”

“நீங்க ஒரு நேர்மையான மனிதர் அண்ணா…”

“ஒரு உண்மை உனக்குத் தெரியுமா? பெண்கள் அனைவரும் தாங்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஆண்களை விட, மிக மிக மேலானவர்கள்.

“நீ ஒரு பெண்ணிடம் எதைக் கொடுத்தாலும் அவள் அதை பல மடங்காக அன்புடன் திருப்பிக் கொடுப்பாள். நீ உன் மனைவியிடம் ஒரு வீட்டைக் கொடுத்தால் அவள் புகுந்த வீட்டை அன்பு இல்லமாக மாற்றிவிடுவாள். நீ அவளிடம் காய்கறிகள்; மளிகைச் சாமான்களைக் கொடுத்தால், ஒரு பெரிய விருந்தையே உனக்குப் படைத்து விடுவாள். நீ அவளைப் பார்த்து புன்னகைத்தால் அவள் தன் இதயத்தையே உனக்கு கொடுப்பாள்.

கணநேர உசுப்புதலில் நீ அவளுக்கு ஸ்பர்ம் கொடுத்தால்; அவள் அதையே பல மடங்காக்கி உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள். இது எவ்வளவு பெரிய உன்னதமான விஷயம்?”

“அடேங்கப்பா, இவ்வளவு இருக்கா? சரி அண்ணா, உங்களோட விருப்பம்… எனக்குப் பெண் பார்க்க ஆரம்பியுங்கள்.”

அன்று மாலை மாலதி, “நல்ல வேளைங்க நீங்க என்னோட ஜட்டி, ப்ராக்களைப் பற்றி வித்யாவிடம் எதுவும் பேசவில்லை…” என்றாள்.

“சில விஷயங்களைப் பேசாமலே இருந்து விடுவது நல்லது மாலு. சில நேரங்களில் சில விஷயங்களை நேரிடையாகக் கேட்டுவிட்டால் மனஸ்தாபங்கள்தான் மிஞ்சும். பொறுமையைக் கடைபிடித்தால் நம் வாழ்க்கையில் எல்லாமே கடந்து போய்விடும். மற்றவர்களை அதிலும் குறிப்பாக ரத்த உறவுகளை எப்படி நாம ஹர்ட் பண்ண முடியும்? அவன் பண்ணியது தப்புதான். இனிமேல் அப்படி எதுவும் நடக்காது.”

இரவு சாப்பாட்டிற்கு முன்னால், “மன்னி, சாயங்காலம் என்னோட பெட்ரூமை ஒழித்தேன்… உங்களோட சில ஐட்டம்ஸ் என்னோட ட்ரஸ்ஸுடன் கலந்து வந்துவிட்டது. கல்யாணி சரியாகக் கவனிக்கவில்லை போல” என்று ஒரு பேப்பர் கவரை மாலதியிடம் நீட்டினான் வித்யாதர்.

மாலதி ஒரு அர்த்தத்துடன் பாஸ்கரை ரகசியமாகப் பார்த்துப் புன்னகைத்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “அண்ணனின் அறிவுரைகள்

  1. பெண்களைப் பற்றிய உண்மைகளைச் சொன்னதற்காக ஆசிரியர் கண்ணனுக்கு பெண்கள் சார்பாக என் நன்றிகள். லாவண்யா மேட்டூர் டேம், சேலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *